ஸ்டாலின் தலைவராகலாமா? குஷ்புவின் சர்ச்சைப் பேட்டி!


தமிழ் திரையுலகில் குஷ்பு அன்றே சர்ச்சைக்குரிய நாயகிதான்! நடிக்க வந்த புதிதில் இருந்து பல கிசுகிசுக்களில் வலைய வந்தவர். குமுதம் பத்திரிக்கை கூட இவர் பாலச்சந்தரை மணக்க இருப்பதாக ஏப்ரல் ஃபூல் பண்ணி சர்ச்சைகளில் சிக்கி கொண்டது. அதன் பின்னர் பிரபுவுடனான கிசுகிசுக்கள் களை கட்டின. இறுதியில் சுந்தர் சியை மணந்து  சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சினிமாவில் நடிப்பதை குறைத்து டீவி சீரியல்களில் ஆர்வம் காட்டினார். ஜெயா டீவியின் ஜாக்பாட் இவர் அணிந்து வந்த ஜாக்கெட்டுகளுக்காகவே பார்க்கப் பட்டது. இந்த நிலையில் கற்பு குறித்த சர்ச்சையில் சிக்கி கோர்ட் வரை சென்றார். இதுவரை நல்லாத்தான் போய்கிட்டிருந்தது. இதற்கப்புறம் தான் ஆரம்பித்தது அரசியல் விளையாட்டு.
   கோர்ட் வழக்கிலிருந்து தப்பிக்க அப்போதைய ஆளுங்கட்சி திமுகவில் சேர்ந்தார். ஜெயா டீவி இவரை விலக்கியது. ஆளுங்கட்சியின் பிரச்சார பீரங்கியாக வலம் வந்தார். சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று கூட கூறப்பட்டது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் மிக்கவராக இருந்த அவர் வாயில் இப்போது சனி புகுந்து விட்டது போல! விகடனுக்கு அளித்த பேட்டி மூலம் கழக கண்மணிகளின் எதிர்ப்புக்கு ஆளாகி கல்லடி பட்டு வருகிறார்!
  கலைச்சேவையோடு இருந்திருந்தால் இந்த கஷ்டங்கள் வேண்டாமே! தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் இவர்! இவரது அரசியல் செயல் பாடுகள் அவர் மீதிருந்த நன்மதிப்பை கெடுத்து விட்டது.  அவர் விகடனுக்கு அளித்த பேட்டி இதோ!
இதோ... அவர் இந்த வார ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்: ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, திமுகவில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குஷ்பு. ''திமுகவுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?'' ''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். திமுக தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக்கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்'னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.'' ''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?'' 'நான் இதை ஏத்துக்க மாட்டேன்'னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்சனைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.'' ''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... திமுக தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?'' ''திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும். தலைவர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப்பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். திமுகவில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப்பாங்க. ஆனா, என்வழி தலைவர் வழிதான்!'' ''அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்'தான்னு திமுக தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?'' ''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனா இருப்பவங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டாரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமா இருப்பாங்களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுப்பாங்க.'' ''சமீப காலமா திமுகவில் இருந்து உங்களை ஒதுக்கிவெச்சிருக்காங்கன்னு சொல்றாங்களே?'' ''சம்பந்தம் இல்லாம யாரோ பேசுற பேச்சுக்குஎல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும்? இந்தப் பேச்சு எப்படி வந்திருக்கும்னு நான் சொல்லவா? திமுகவின் வீர வணக்க நாள் கூட்டத்தில் நான் கலந்துக்கலை. அன்னிக்கு எங்க வீட்ல முக்கியமான விசேஷம் ஒண்ணு இருந்துச்சு. இந்த விஷயத்தைத் தலைவர்கிட்டயும் தளபதிகிட்டயும் நேர்லயே சொல்லிட்டு வந்துட்டேன். உலகத்துக்கே தெரியும்... எனக்குக் கட்சி, சினிமாவைவிடக் குடும்பம்தான் முக்கியம்னு. அன்னிக்கு என் பொண்ணுக்கு ஒரு விசேஷம். அதனால, அந்தக் கூட்டத்தில் நான் கலந்துக்கலை. இதை மட்டுமே வெச்சு என்னைக் கட்சியில ஒதுக்கிட்டாங்கன்னு சொன்னா, அதை ஏத்துக்கவே முடியாது. முன்னாடி வள்ளுவர் கோட்டத்துல மின்வெட்டுக்கு எதிரா நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துல தலைவர் முன்னிலையில் பேசினப்ப, சிறப்பு முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னு பேசுனாங்க. இப்ப, ஒரே ஒரு கூட்டத்துக்குப் போகாததால், ஒதுக்கிவெச்சுட்டாங்கன்னு சொல்றாங்க. குட் ஜோக்!'' ''நீங்க கோபாலபுரத்துக்கே வரக் கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கறதா...'' (கேள்வி முடிவதற்குள்ளாகவே) ''இதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க எனக்கு நேரம் இல்லை.'' ''நாடாளுமன்றத் தேர்தலுக்காக விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வரப்போறதா பேச்சு அடிபடுதே?'' ''எதிர்காலத்துல நடக்கப்போறதைப் பத்தி இப்பவே ஏன் பேசணும்? வரட்டும். அப்புறம் பார்க்கலாம். தலைவரோ, விஜயகாந்தோ அதிகாரப்பூர்வமா அறிவிக்கிற வரை பொறுமையா இருப்போம். விஜயகாந்துடனான கூட்டணி பத்தி தளபதி எதுவுமே பேசலை. ஜனநாயகரீதியாக எதிர்க் கட்சித் தலைவருக்குத் துணையா இருப்போம்னு மட்டும்தான் சொன்னார்.'' ''நாடாளுமன்றத் தேர்தலில் நீங்க போட்டியிடுவீங்களா?'' ''தெரியலையே! இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கே. கட்சித் தலைமைதான் இதை முடிவு பண்ணணும். ஒருவேளை நான் போட்டியிடலைன்னா, 'குஷ்பு கேட்டாங்க... ஆனா, தலைமை மறுத்திடுச்சு'னு எழுதுவாங்க. போன சட்டமன்றத் தேர்தல் சமயமே எல்லாமே பார்த்துட்டேன். சேலம், ஆயிரம் விளக்குனு பல தொகுதிகளில் நான் போட்டியிடப் போறதாச் சொன்னாங்க. நான் தேர்தல்ல நிக்கணும்னு கட்சியில் சேரலை. யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தா சரியா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும்.'' ''உட்கட்சிப் பூசல் பழிவாங்கும் கொலைகளில் முடியும் விபரீதப்போக்கு திமுகவில் அதிகரிச்சுட்டே இருக்கே?'' ''சும்மா... பரபரப்புக்காக அப்படி வர்ற செய்திகள் உண்மை ஆகிடாது. ஒன் ப்ளஸ் ஒன்... பதினொண்ணுனு எழுதுவாங்க. ஆனா, எனக்கு ஒன் ப்ளஸ் ஒன் ரெண்டுனு நல்லாவே தெரியும். உட்கட்சிப் பிரச்னை ஏன் வருது? திமுக ஜனநாயகரீதியில் செயல்படும் கட்சி. மத்த இடங்களில் கட்சித் தலைமைக்குப் பயந்துகிட்டே செயல்பட வேண்டிய கட்டாயம். ஜன நாயக மரபுகளைக் கடைப் பிடிக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரியுது. இதை விட அதிகமான உட்கட்சிப் பூசல்கள் மத்த கட்சிகளில் இருக்கும். ஆனா, அதெல்லாம் வெளியே தெரியாது. ஏன்னா பயம்! இன்னொரு விஷயம், உட் கட்சிப் பூசல்கள் ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு மைனஸ் கிடையாது. ஒரு குடும்பமா செயல்படும்போது, அதுல இருக்கிறவங்க தங்களோட வருத்தங்கள், கோபங்களை உள்ளேயே வெச்சுட்டு இருக் கிறது நல்லது இல்லையே. ஓப்பனாப் பேசினாத்தானே பிரச்னைக்கு ஒரு முடிவு வரும்.'' இவ்வாறு பேட்டியளித்துள்ள குஷ்பு, விஸ்வரூபம் பட விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவையும் தாக்கியுள்ளார்.

 நன்றி: தட்ஸ் தமிழ் , ஆனந்த விகடன்.

Comments

  1. எதுக்கு இதெல்லாம்!

    ReplyDelete
  2. தம்பீ எப்படி இருக்கே! நான் சொன்ன படி விளம்பரங்களை அறவே ஒழிச்சிட்டே..... ஆனா கட் அண்ட் பேஸ்ட் மட்டும் குறையலேயே அப்பூ... அதனால தான் சென்னை வரும் போது என்னால் பார்க்க முடியலை... சமீபத்தில் ஒர் அஞ்சலி பதிவில் ஆழ்ந்த இரங்கல்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பதிவிலும்.. நெடுன் குழைகாதன் என்ற ஸ்பெல்லிங் மிஸ்டேக்-டன் என் நண்பர் குழுமத்திலும் போட்டிருந்தாய். என் தம்பியின் தளத்தில் அவரை இப்போதான் படிக்க ஆரம்பித்தேன் என்று எழுதியிருந்தாய்.

    உன் கட் அண்ட் காப்பி மோகத்துக்கு காரனம் அப்ப தான் தெரிஞ்சுது கண்ணா! உனக்கு படிக்கிற அனுபவம் கம்மி. டோண்டு சார் மாதிரி தரமான பதிவுகள் அதிகம் படி .... தி.ஜா.ரா. ல.சா.ரா. கல்கி கு.ப.ரா. மாதிரி எழுத்துக்களைத் தேடித் தேடிப் படி தண்ணால எழுதும் திறமை கைகூடும். டோண்டு அண்ணா தளத்திலும் அவர் பொழுதுபோக்குக்கு எழுதினதை விட்டுட்டு அவரின் அற்புதமான அனுபவப் பதிவுகளைப் படி . அது வாழ்விலும் உன்னை உயர்த்தும்.

    அன்புத் தம்பீ நான் அடிக்கடி பின்னூட்டம் இடாவிட்டாலும் உன்னை எட்ட இருந்து கண்கானிச்சுக்கிட்டே இருப்பேன்.

    கொன்றைவானத்தம்பிரான்

    ReplyDelete
    Replies
    1. அன்பு அண்ணனுக்கு! அப்படி அழைக்கலாம் இல்லையா? முதலில் நீண்ட நாள் கழித்து வந்து மீண்டும் பின்னூட்டம் மூலம் அறிவுரை வழங்கியமைக்கு நன்றி! உண்மைதான்! படிக்கிற வயதில் 15 முதல் 25வரை நிறைய புத்தகங்கள் படித்துள்ளேன்! கல்கியின் நாவல்கள் வாசித்துள்ளேன். தி.ஜா.ரா, லா.சா.ரா, கு.ப.ரா போன்றவர்களை வாசித்தது குறைவு. சிலரை வாசித்ததும் இல்லை ஒத்துக் கொள்கிறேன். அதே போல் வலைப்பூவிலும் ஆரம்பித்தது முதல் பலரது தளங்களை சென்று வாசித்தது இல்லை! என் பொருளாதாரச் சூழல் அப்படி! இப்போதுதான் பல நல்ல தளங்களை கண்டு வாசித்து வருகிறேன்! காப்பி பேஸ்ட் தவிர்க்க முயன்றாலும் தொற்றுநோய் போல தொடர்ந்து வருகிறது. இதற்கு உண்மையான காரணம் செய்தியின் சுவாரஸ்யம் மற்றும் தளத்திற்கு அப்போதுதான் நிறைய பேர் வருவார்கள் என்ற ஆசை! கூடிய விரைவில் தவிர்த்துக் கொள்கிறேன்! இன்னும் உங்களை அடையாளம் காண முடியவில்லை! உங்கள் பெயரை அறிந்து கொள்ள நண்பர் வட்டாரத்தில் சில தினங்கள் செலவிட்டேன்! திரு டோண்டு ராகவன் பதிவுகளை சில மாதங்களாகத்தான் வாசித்து இருந்தேன்! உண்மையில் அவரது இழப்பு வருத்தம் தந்தது. ஆகவே அவரது அஞ்சலி பதிவுகள் என் கண்ணில் பட்டவை அனைத்தும் வாசித்து அவரை அறிந்து கொண்டேன்! ஒரு பதிவில் நெடுன் குழைக்காதன் என்று தவறாக என்று தட்டச்சு செய்திருந்தேன் அவசரத்தில் நிகழ்ந்த எழுத்துப் பிழை! சோம்பேறித்தனம் காரணமாக சரி செய்ய வில்லை! விரைவில் இது போன்ற பிழைகளை தவிர்த்து விடுகிறேன்! காப்பி பேஸ்ட் தவிர்த்து எனது ஹைக்கூக்கள்,போன்றவை உங்கள் கண்ணில் படவில்லையா? அவற்றை பற்றி ஓரிரண்டு வார்த்தைகள் கூறினால் மகிழ்ச்சி அடைவேன்! உண்மையில் உங்கள் வருகை என்னை மகிழ்ச்சி படுத்தும்! தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது சில குட்டுக்களை வழங்க ஆவலோடு காத்திருக்கிறேன்! மிக்க நன்றி!

      Delete
  3. அண்ணனை அண்ணா என்றழைப்பதற்கு எதற்கு அனுமதி....

    ஒரு குடம் நிறைய பாலை நிரப்பி அதில் ஒரே ஒரு துளி விஷத்தை போட்டுவிடு........ஊரார் அதை விஷமென்றே அழைப்பர்... 10 லிட்டர் பாலிருக்கே அது கண்ணுக்கு தெரியலையா என்று கேள்.... அப்ப தெரியும் சேதி.....சரியான ஆர்வகுட்டித்தனமாக கேள்வி கேட்காதே....

    //அப்போதான் நிறைய பேர் வருவார்கள் என்ற ஆசை// மலிவான விஷயங்களில் மனம் செல்லத்தான் செய்யும் அதை நிறுத்தி நிதானப்படுத்துவது தானே தம்பி நம்ம வேலை. இந்த ஆசையிடமிருந்து விடுபட்டுவா.......அது வரை என்னை யாரென்று அறிய


    அண்ணனிடம் பாராட்டு நிறைய உண்டு ஆனால் இப்ப உனக்கு கிடையாது.

    ReplyDelete
  4. உண்மைதான் குடம் பாலில் துளி விஷம் கலந்தாலும் விஷம்தான்! நாலைந்து தினங்களாக விஷம் தவிர்த்து வருகிறேன்! தளிரில் கலந்துள்ள விஷங்களை சிறிது சிறிதாக களையெடுத்து விடுகிறேன்! தளிர் ஒரு அமுதமாக மாறும் நாள் விரைவில் என்பது என் நம்பிக்கை! மிக்க நன்றி அண்ணா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!