விஸ்வரூபம்! எனக்கு புஸ்வரூபமானது!


விஸ்வரூபம்!  எனக்கு புஸ்வரூபமானது!

தமிழ் திரையுலகின் ஜாம்பவான், மிகப்பெரிய நடிகர், அறிவு ஜீவி இயக்கி நடிக்கும் வித்தியாசமான படம் விஸ்வரூபம் என்றதும் பார்க்கும் ஆவல் தூண்டியது. பின்னர் சர்ச்சைகளில் சிக்கி வெளியிட தாமதம் ஆகி வருகையில் சினிமாவிற்கு போய் இவ்வளவு எதிர்ப்பா? ஏன் இப்படி இஸ்லாமிய சகோதரர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்று வருத்தமும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. பின்னனியில் நிறைய அரசியல் சங்கதிகள் வேறு.
  இதையெல்லாம் கடந்து விஸ்வரூபம் தமிழகத்தில் வெளியாகும் முன்னரே தமிழ்நாட்டு சினிமா விமர்சன அப்பாடக்கர் பதிவர்கள் ஆந்திரா, கர்நாடகா கேரளா என்று  படத்தை பார்த்துவிட்டு ஆகா ஓகோ என்று புகழ்ந்திருந்தார்கள். ஒருவர் மட்டும் சி செண்டரில் படம் எடுபடாது. என்று கூறியிருந்தார்.
      தசாவதாரம் பார்த்தே சற்று ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.  அது மட்டுமில்லாமல் கமலின் நடிப்புக்கு ரசிகனாக இருந்தாலும் அவரது செயல்பாடுகளிலும் அவர் பிராமணராக இருந்து கொண்டே சக பிராமணர்களை நக்கலடித்து டயலாக் பேசுவதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. தீவீர முற்போக்கு வாதியாக அவர் இருந்து விட்டு போகட்டும். ஆனால் ஒவ்வொரு படத்திலும் இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கேவலப்படுத்துவதை கைவிட வேண்டும். இல்லையேல் இஸ்லாமியர்கள் கொதித்தெழுந்தது போல ஒரு நாள் பிராமணர்களும் போராட்டத்தில் குதிப்பார்கள் என்றே நம்புகிறேன்.
    நிற்க, ஒரு காலத்தில் வெளிவரும் படங்களை தியேட்டரில் முண்டியடித்து டிக்கெட் வாங்கி பார்த்து அலுத்து போய் நண்பர்கள் தரும் திருட்டு விசிடிகளில் பார்த்து நொந்து போய் இப்படி படம் பார்ப்பதற்கு  பார்க்காமலேயே இருந்து விடலாம் என்று தவிர்த்து வந்தேன். விஸ்வரூபம் தியேட்டரில் பார்க்க நினைத்திருந்தேன். ஆனால் விதி வலியது அன்றோ எனது நண்பர் பென் டிரைவில் காப்பி பண்ணி வந்து கொடுத்து தியேட்டருக்கு போய் வேஸ்ட் பண்ணாதீங்க இதுலேயே பார்த்துருங்க என்று வற்புறுத்தினார்.
    வேண்டாம் என்றாலும் நேற்று எங்கள் பகுதியில் கேபிள் கட் ஆகி ஒரு சேனலும் இல்லை! அதனால் மாலையில் டிவிடியில் பென் டிரைவை சொருகி ஆன் செய்தேன். விஸ்வரூபம் எங்கள் 18 இஞ்ச் டீவியில் சின்னதாகத்தான் தெரிந்தது. முதலில் கமல் கதக் நடனம் ஆடுவது அவரை உளவு பார்க்க பூஜாகுமார் ஆள் அனுப்பி அவன் மாட்டிக் கொள்வது. பின்னர் பூஜாவின் பாஸ் கமல் பூஜாவை வில்லன்களிடம் அழைத்து சென்று மாட்டி விடுவது வரை நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது.
     ப்ரேயர் பண்ணவேண்டும் என்று கேட்டு விட்டு வில்லன்களை கமல் பந்தாடுவது வரை ஜோர் அதற்குபின் அவர் ஆப்கனில் முல்லா உமரிடம் ஒன்றாக இருப்பது  போன்ற காட்சிகள்  ஒன்றவில்லை! ஏதோ ஆங்கில டாகுமெண்டரி பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. காட்சியமைப்பு லொகேஷன் காமெரா என்று அனைத்தும் சிறப்பாக இருந்தும் படத்தோடு ஒன்ற முடியவில்லை!
    சென்சாரில் நிறைய வெட்டி விட்டார்களோ என்னவோ?  அமெரிக்க படைகளுடன் ஆப்கன் தீவிரவாதிகள் மோதிய பின்  கமல் எப்படி தப்பிட்த்தார் அது காட்டப்படவில்லை! கமல் இந்திய உளவாளி என்பது எப்படி முல்லா உமருக்கு தெரிந்தது போன்றவை படத்தில் காட்டப்படவில்லை! பாதி வசனங்கள் புரியவில்லை! ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்ததனால் தமிழ் வசனங்கள் மிக குறைவு.உண்மையில் கமல் ஏன் இந்த கதையை தேர்ந்தெடுத்தார் என்று புரியவில்லை! என் வீட்டு பெண்மணிகள் பத்து நிமிடத்திலேயே எழுந்து சென்றுவிட்டனர். இத்தனை கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் பலருக்கு புரியவில்லை!
   தமிழக வரலாறு எவ்வளவோ இருக்க ஹாலிவுட் படமாக எடுக்க வேண்டும் ஆஸ்கரை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உலக நாயகனின் கனவே இந்தபடமாக இருக்க வேண்டும். உண்மையில் எனக்கு இந்தபடம் சுத்தமாக பிடிக்கவில்லை!  இந்திய ஜனத்தொகையில் அறிவு ஜீவிகள் குறைவு. பாமரன்கள் தான் அதிகம். பாமரன்களே தங்கள் களைப்பை போக்கிக் கொள்ள ரிலாக்ஸ் செய்ய திரையரங்குகளுக்கு வந்து தாங்கள் சம்பாதிக்கும் குறைந்த சம்பளத்தில்  நிறைய செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த படம் பெரிதும் ஏமாற்றம் அளித்து இருக்கும் என்றே நம்புகிறேன்.பொன்னியின் செல்வன் போன்ற கதைகளை இன்னும் அழகாக இதைவிட குறைவான செலவில் எடுத்திருந்தால் நிச்சயமாக பாராட்டி இருப்பேன். இந்த படத்தை பாராட்ட தோணவில்லை! ஆனால் இது தமிழ் சினிமா வரலாற்றில் மைல் கல் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நமக்கு நம் கலாசாரத்தில் படம் எடுத்து சாதிக்க வேண்டும். அந்நிய விருதுக்காக அவர்கள் கலாசாரத்தில் படம் எடுப்பதில் நம் தமிழர் பெருமையை  எப்படி  காத்திட முடியும்?
   பாக்ஸ் ஆபீஸ் வசூல்! எந்திரனை மிஞ்சிவிட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் பாமர மக்களை திருப்தி படுத்தாத சினிமாவே விஸ்வரூபம்.  இதில் இஸ்லாமியர்கள் ஏன் கோபப்பட்டார்கள் என்பதும் புரியவில்லை! இது ஆப்கனில் நடக்கும் கதை. அங்கு இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் அவர்களைத்தானே காட்ட முடியும். உண்மையில் இந்த படத்தை பிராமணர்கள்தான் எதிர்த்து இருக்க வேண்டும்.
    பிராமணர்களை பிராமண பெண்களை மிகவும் கொச்சைப் படுத்தி உள்ளது படம்! வெளிநாட்டில் வாழும் பிராமணர்கள் இப்படித்தான் இருக்கிறார்களா என்ன? வேறு சமூகத்தினர் அப்படி இருப்பது இல்லையா? ஏன் எப்போதும் பிராமணர்களை வம்புக்கு இழுக்கிறார் கமல்?
    இந்த பதிவு கட்டாயம் சர்ச்சையை எற்படுத்தினாலும் கமல் ரசிகர்கள் வெகுண்டு எழுந்தாலும் சரி! என் மனதில் தோன்றியதை எழுதி விட்டேன்! விஸ்வரூபம்! எனக்கு புஸ்வ ரூபமாகிவிட்டது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சுரேஷ் உங்ககளது கருத்தே என்னுடைய கருத்தும், இந்தப் படம் ஒரு மரண மொக்கை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது போல் பிராமண சமுதாயம் வெகுண்டேலுமா என்பது சந்தேகமே... அந்த தைரியத்தில் தானே அவர் அவர்களை மட்டும் சீண்டுகிறார்

    ReplyDelete
  3. கமல் வரும் முதல் நடனக் காட்சி முடிந்தபின், தான் செய்திருக்கும் அசைவ உணவை வெளியே எடுத்து, 'பாப்பாத்தி நீ முதலில் சாப்ட்டு பாரு' என்பார். நீங்கள் சொல்வதுபோல பிராம்மணர்கள் தான் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் - ஒவ்வொரு படத்தில் ஒரு பிராம்மண விதவையை காண்பிப்பது என்று தான் சார்ந்த சமுதாயத்தையே நக்கல் அடிக்கிறார்.

    நான் தியேட்டர் போய்தான் படம் பார்த்தேன். பல இடங்கள் சம்பந்தமே இல்லாமல் இருந்தன. தமிழ் டப்பிங் என்று புரியாமல் தமிழ் பேசியிருப்பது நன்றாகவே இல்லை.

    உங்களின் விமரிசனத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!