பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் இல்லை மழலையர் வகுப்புகள் உள்ள 7,000 பள்ளிகளில்

எல்.கே.ஜி., மாணவன் ஹரிஷ் சாய்நாதன், வாழைப்பழம் சாப்பிடும்போது, தொண்டையில் சிக்கி, உடனடி மருத்துவ உதவி இல்லாமல், நேற்று முன்தினம், பள்ளியில் இறந்த துயர சம்பவம், பெற்றோரை உலுக்கியுள்ள சமயத்தில், மாநிலம் முழுவதும் மழலையர் வகுப்பு உள்ள 7,000 பள்ளிகளில், அவசர மருத்துவ உதவி வசதிகள் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை, கல்வித் துறை அதிகாரிகளும், கல்வியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அக்கறையில்லை: தனியார் பள்ளிகள், ஆண்டுக்கு பல ஆயிரம் ரூபாயை, சுளையாக கட்டணமாக பெறுகிறது. எனினும், போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தாமலும், முதலுதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு, அடிப்படை மருத்துவ பயிற்சிகளை அளிப்பதற்கு உரிய பணியாளர்களை நியமிக்காமலும் இருப்பது, இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவம் நடந்த வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளி, மிகப்பெரிய கல்விக் குழுமத்தைச் சேர்ந்தது. பிரீகேஜி முதல் பிளஸ் 2 வரை, 4,500 மாணவர்கள் படிக்கும் பள்ளியில், முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதி கூட இல்லை என்பது, வேதனையான விஷயம். தமிழக அரசும், சி.பி.எஸ்.இ., நிர்வாகமும், "பள்ளிகளில் முதலுதவி சிகிச்சை பெட்டியை கட்டாயம் வைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளது. ஆனால், இந்த குறைந்தபட்ச வசதி கூட, பெரும்பாலான பள்ளிகளில் கிடையாது என, கல்வித் துறை அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர்.

அதிர்ச்சித் தகவல்: இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில், சி.பி. எஸ்.இ., மற்றும் மாநில அரசின் அங்கீகாரத்துடன், பிரீகேஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., ஆகிய மழலையர் வகுப்புகள் அடங்கிய, 7,000 பள்ளிகள் இயங்கி வருகின்றன. குழந்தைகள், நாணயங்களை விழுங்கும் சம்பவங்களும், உணவுப் பொருட்கள் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும், பள்ளிகளில் அடிக்கடி நடக்கக் கூடியவை. இதுபோன்ற சமயத்தில் உதவ, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் போதே, அவர்களுக்கு அடிப்படை மற்றும் அவசர நேரத்தில் முதலுதவி அளிப்பதற்கான பயிற்சியை அளிக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் உட்பட எந்தப் பள்ளிகளிலும், இது பின்பற்றப்படுவதில்லை. மாவட்ட அளவில் உள்ள கல்வித் துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. விழிப்புணர்வு மற்றும் முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் தான், இதுபோன்ற உயிரிழப்புகளை, வரும் காலத்தில் தடுக்க முடியும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

எளிய முதலுதவி: இது குறித்து கல்வியாளர் சதீஷ் கூறியதாவது: மாநிலத்தில், 300 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வருகின்றன. அனைத்துப் பள்ளிகளிலும், பிரீகேஜி, எல். கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் செயல்படுகின்றன. பள்ளிகளில், முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக, முறையான பயிற்சி பெற்ற ஆயாக்களோ, நர்ஸ்களோ கிடையாது. எளிய முதலுதவி சிகிச்சை முறைகளை உருவாக்கி, அதை ஆயாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாம். இதன்மூலம், உயிரிழப்புகளை தடுக்க முடியும். இவ்வாறு, சதீஷ் கூறினார்.

இது போதாது: தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மாநிலத்தில், 6,700 நர்சரி, பிரைமரி பள்ளிகளும், 4,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில், 100 பெரிய பள்ளிகளைத் தவிர, மற்ற பள்ளிகளில், போதிய மருத்துவ வசதிகளோ, முறையாக பயிற்சி பெற்றவர்களோ கிடையாது. ஒரு சில பள்ளிகளில், டாக்டர்கள், நர்சுகள், ஆம்புலன்ஸ் என, அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், முதலுதவி பெட்டிகள் பெரும்பாலும் இருக்கின்றன. ஆனால், அவற்றில், பஞ்சு, டிஞ்சர், காயத்திற்கான களிம்பு மற்றும் காய்ச்சல் மாத்திரைகள் மட்டுமே இருக்கும். இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.

பயிற்சி அளிக்கப்படும்: பள்ளிக் கல்வி இயக்குனர் மணி கூறும்போது, ""அவசர நேரத்தில், குழந்தைகளை காப்பாற்ற எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுகாதாரத் துறையுடன் இணைந்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

ஜீரண மண்டல மருத்துவ நிபுணர் டாக்டர் சந்திரசேகர் கூறியதாவது:
* குழந்தைகளுக்கு, பெரிய அளவிலான தின்பண்டங்களை ஒருபோதும் கொடுக்கக் கூடாது.
* அசைவ தின்பண்டங்களை கொடுக்கும்போது, எலும்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* கூர்மையான முனைகளைக் கொண்ட தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம்.
* கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிட கற்றுக் கொடுக்க வேண்டும். அவசர, அவசரமாக சாப்பிட, ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
* சாப்பிடும்போது, அவ்வப்போது தண்ணீர் குடிக்கச் செய்ய வேண்டும்.

முதலுதவி:
* ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை என்றால், தலைகீழாக பிடித்து, முதுகு, பிடறியில் தட்டினால், தொண்டையில் இருக்கும் பொருட்கள் வெளியே வந்து விடும்.
* 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தை என்றால், நம் கைகளை கொண்டு, குழந்தையின் பின்புற வயிற்றுப் பகுதியை, மேல் நோக்கி அழுத்த வேண்டும். அப்போது, நுரையீரலில் உள்ள காற்று, உணவுக் குழாய் வழியாக வெளியேற முயற்சிக்கும். இதனால், இருமல் ஏற்பட்டு, தொண்டையில் உள்ள பொருள் வெளியே வந்துவிடும். இவ்வாறு, டாக்டர் சந்திரசேகர் கூறினார்.

நன்றி தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!