குரங்குகள் உடல் அடக்கம்: விபத்து ஏற்படுத்தியவருக்கு ரூ.1,20,000 அபராதம்

வேலூர் : டிராக்டர் மோதி நான்கு குரங்குகள் இறந்தன. பேண்ட், வாத்தியம் முழங்க, வாண வேடிக்கையுடன், உடல் அடக்கம் செய்ய வேண்டும், என, விபத்து ஏற்படுத்தியவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த நெடும்புலியில் உள்ள வாரச்சந்தை நடக்கும் மைதானத்தில், நேற்று முன் தினம் (டிச.,1) மதியம், 3 மணிக்கு ஒரு ஆண் குரங்கு, ஒரு பெண் குரங்கு, இரு குட்டி குரங்குகள் விளையாடி கொண்டிருந்தன. தாய் குரங்கு ஒன்று, அந்த பகுதியில் இருந்த சாலையை கடக்க முயன்ற போது எதிரே சண்முக சுந்தரம் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் குரங்கு மீது மோதியது. இதில், குரங்கு சம்பவ இடத்தில் இறந்தது.மோதிய வேகத்தில் டிராக்டர் வேகமாக சென்று விட்டது. இதை பார்த்த மற்ற குரங்குகள் அழுது தீர்த்தன. பின், ஒரு பெரிய குரங்கு, இரு குட்டி குரங்குகள் அதே போல வாகனம் வரும் நேரம் பார்த்து சாலையை கடந்து, தற்கொலை செய்து கொண்டன.
நேற்று இரவு ஊர் பஞ்சாயத்து கூடியது. குரங்கை டிராக்டரில் ஏற்றி கொன்றதை, சண்முக சுந்தரம் என்பவர் ஒப்புக் கொண்டதால், சண்முக சுந்தரத்தை கண்டித்தும், இறந்த நான்கு குரங்குகளை பேண்ட் வாத்தியம், வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று புதைக்க வேண்டும் என்றும், இதற்காகும் செலவை சண்முகசுந்தரமே ஏற்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.

இதை சண்முகசுந்தரம் ஏற்றுக் கொண்டார். நேற்று காலை, 11 மணிக்கு இறந்த நான்கு குரங்குகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. பொது மக்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து அழுது புலம்பினர். பின்னர் நான்கு குரங்குகளையும் ஒரே பாடையில் வைத்து பேண்ட், வாத்தியம் முழங்க வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக கொண்டு சென்று சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்தனர். இதற்கு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவானது.

நன்றி தினமலர்

Comments