மனு(ஷ) நீதி!
மனு(ஷ) நீதி!
‘நாளைக்கு நம்ம குறைகளை கேட்க அதிகாரிங்க வரப்போறாங்க! யார் யாருக்கு என்ன குறைன்னுஎழுதிக் கொடுக்கலாம் அவங்க குறைகள தீர்த்து வைப்பாங்க” என்று தலைவர் கூறை முடிக்க குழுமியிருந்த மக்கள் கூட்டம் முணுமுணுத்தது.
“இது ஒன்னுதான் நம்ம ஊருக்கு கொறச்சல்”. மனு நீதி நாளாம்!. மனுவை வாங்கி குப்பை தொட்டியில போட்டுட்டு போயிடுவானுங்க இத மாதிரி எத்தனையோ நாள பாத்தாச்சி
பெரிசா என்னத்த வெட்டி முறிச்சிட போறானுவ என்று சலசலத்தபடி கலைந்தது கூட்டம்.
“ஏல முனியம்மா! மேய்ச்சலுக்குப் போன கடாக்குட்டி வந்துடிச்சாடி?”
‘கொட்டகையில கட்டி போட்டுருக்கேன் மச்சான் எதுக்கு கேக்குறீங்க?’
“நாளைக்கு நம்ம ஊருக்கு அதிகாரிங்க வரப்போறாங்களாம் அவங்களுக்கு கறிச்சோறுக்கு நம்ம ‘கடா’ தான்.
கொட்டகையிலிருந்த தாய் ஆடு பதறியது. ‘இதற்காகவா நம்மை மனுஷர்கள் வளர்க்கிறார்கள்?’. இந்த குட்டிகளை கஷ்டப்பட்டு ஈன்றது நாம். பாலூட்டி வளர்த்த நான் அதை பறி கொடுத்து நிற்கவா ஈன்றேன்.
ஊரில் திருவிழா என்றாலும் விசேஷம் என்றாலும்தான் பலியிடுவார்கள். ஆனால் நாளைக்கு எதற்கு? ஆட்டின் கேள்விக்கு முனியன் பதில் கூறிக்கொண்டிருந்தான்.
“அதென்னமோ மனுநீதி நாளாம்!,அதிகாரிங்க நம்ம சனங்க கிட்ட குறைகேட்டு வராங்களாம்! அவங்க சாப்பாட்டுக்குத்தான் நம்ம ஆட்ட பிரசிடெண்ட் கேட்டாரு அதிகாரிங்க கட்டாயம் கறிச்சோறு வேணுமின்னு சொல்லிட்டாங்களாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3u5506zuuQz8twkyj6VQZftM-acBN_GzhtxfYKV3VTPghZaDBmyHbaGnWgfdUTUcjXrkqHjGUUOY3Z810AsnSAxao7F8fMTmVt1ZOHCJ7bTVxb7EyXU-LkEsPlPKj2XpHRE_G5jXWLr4/s400/aadu1.jpg)
மறுநாள் மனுநீதி கேட்ட மனுஷர்கள் மகா சந்தோஷமாய் கறிச்சோறு உண்டு கொடிருந்த போது ஆடு பாவம் தன் குட்டியை இழந்த சோகத்தில் தழை கூட உண்ணாமல் தளர்ந்து கிடந்தது.
அது நினைத்தது இது மனு நீதி அல்ல மனுஷநீதி. இதை மனிதர்கள் அவர்களுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள் என்று.
தங்கள் வருகைக்கு நன்றி! கதை பற்றிய கருத்துக்களை பதியலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment