கோபம் நம் எதிரி! தளிர் பாப்பா மலர்!

கோபம் நம் எதிரி!

ரமேஷ் பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். அவன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்சிறுவன். திடீரென அவன் ‘அம்மா.. என்று கத்தினான், ‘என்ன ரமேஷ் எதுக்கு இப்படி கத்தறே?’ என்றவாறே சமையல் கட்டிலிருந்து ஹாலுக்குள் நுழைந்தாள் அவனது அம்மா கோமதி.
  ‘அம்மா என் ஷூவை துடைச்சு பாலிஷ் போடச் சொன்னா நீ போடவேயில்லையா?’ ‘ஒரே அழுக்கா இருக்கு இதை எப்படி ஸ்கூலுக்கு போட்டுட்டு போறது?’ என்று கத்தியபடி அதைத் தூக்கி தாயிடம் எறிந்தவன் வேறு ஷூவை போட்டுக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினான். அவனது செயலைக்கண்டு விக்கித்து நின்றாள் கோமதி..
   ரமேஷுக்கு சிறுவயதில் இருந்தே முன்கோபம் அதிகம் அவனை எப்படியாவது திருத்தி விடவேண்டும் என்று அவனது பெற்றோர் முயற்சித்தனர். ஊகும் அவன் திருந்துவதாக தெரியவில்லை.
  அன்று மாலை வீட்டிற்கு வந்த ரமேஷ் சாப்பிடவே இல்லை. அவனுக்கு பிடிக்காத கத்தரிக்காய் சாம்பார் வைத்தது தான் காரணம். சாப்பாட்டுத் தட்டை தூக்கி வீசி எறிந்து உடைத்துவிட்டு தனது அறைக்குள் சென்று படுத்துக் கொண்டான்.
   ரமேஷின் தந்தைக்கு மகனின் செயல் பிடிக்க வில்லை எனினும் அவர் ஆத்திரப்படவில்லை. ரமேஷிற்கு நேர் எதிரானவர் அவர். எப்பொழுதும் அமைதியையும் நிதானத்தையும் கடைபிடிப்பவர் அவர்.எனவே அவர் ரமேஷை விட்டுப்பிடிக்க நினைத்தார்.
  அன்று மாலை, பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த ரமேஷ், தீடிரென  ‘ச்சே என்ன நோட் இது பேப்பர் எல்லாம் இங்க் ஊறுது என்று எழுதிக் கொண்டிருந்த நோட்டை தூக்கி எறிந்தான். சற்றுநேரம் கழித்து மீண்டும் வேறு பேனாவால் எழுதிப் பார்த்தவன் மீண்டும் பேப்பரில் இங்க் ஊறவே ‘ச்சே இதெல்லாம் ஒரு நோட்டுனு விக்கறான் பாரு!’என்று கோபமாக எடுத்துச் சென்று எரியும் அடுப்பில் தூக்கிப் போட்டான். அவனது கோபத்தினைப் போல நோட்டும் கொழுந்து விட்டு எரிந்தது.
   அது நடந்து ஒரு வாரம் கழித்து ரமேஷ் தனது புத்தகப்பையை கொட்டி தேடொ தேடு என்று எதையோ தேடிக்கொண்டிருந்தான். ‘என்ன ரமேஷ் எதை தேடற? என்று அவனது தந்தை கேட்டார். ‘என்னோட ஹால் டிக்கெட்ட என்னோட புக்குல வைச்சிருந்தேன் இப்ப காணல!’ அழாத குறையாக கூறினான் ரமேஷ். ‘ரமேஷ் அதை என்கிட்ட காமிச்சிட்டு உன்னோட ஹிஸ்டரி நோட்டுல வச்சயே!’ என்றார் அவனது தந்தை. உடனே ரமேஷ் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். “ ரமேஷ் என்னப்பா ஆச்சு ஏன் இப்படி அழறே? தந்தை கேட்டார்.
    ‘ அப்பா அந்த ஹிஸ்டரி நோட்டைத்தான் பேப்பர் சரியில்லைன்னு அன்னிக்கு அடுப்பில தூக்கி எறிஞ்சிட்டேன் ஹால் டிக்கெட்டு நோட்டோட சேர்ந்து எறிஞ்சு போயிருக்கும் நான் பரிட்சை எழுத முடியாது என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான் ரமேஷ்.
   ரமேஷ் இதெல்லாம் எதனால? எல்லாம் உன் கோபத்தினால! கோபம் தான் நம்மோட முதல் எதிரி அதை தெரிஞ்சிக்கோ கோபத்தினால உன்னோட எதிர்காலமே பாழாயிடுச்சு பார்த்தியா! எதிலேயும் நிதானம் வேண்டும் பொறுமை வேண்டும் எதுக்கெடுத்தாலும் கோபப் படறத இனியாவது நீ விட்டுடணும் என்றார் அவனது தந்தை.
   அப்பா நான் திருந்திட்டேன் இனி எதுக்குமே கோபப்பட மாட்டேன் ஆனா என்னால இப்ப பரிட்சை எழுத முடியாம போயிடுச்சே என்று விக்கினான் ரமேஷ். “இந்தா உன்னோட ஹால் டிக்கெட்! நீ கோபத்த விடறதா சொன்னதுக்கு என்னோட பரிசு!’
  ‘அப்பா இது எப்படி உங்க கிட்ட ?’
  ‘அன்னிக்கு நீகோபபட்டு நோட்ட தூக்கி எறிஞ்சப்ப நோட்டுல இருந்து கீழே விழுந்துச்சு கோபத்துல நீஅதை கவனிக்கல நான் கவனிச்சு எடுத்து வச்சேன். அது இன்னிக்கு உன்னை திருத்த உதவிச்சு என்றார் அவனது அப்பா கண்களை சிமிட்டியபடி!’
  அப்பா நான் இனி கோப படவே மாட்டேன்! எனக்கு நல்லா புத்தி வந்தது என்று தந்தையை கட்டிக்கொண்டான் ரமேஷ்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!