கட்டெறும்பாகும் ஆரம்பப் பள்ளிகள்!


கட்டெறும்பாகும் ஆரம்பப் பள்ளிகள்!

  தமிழ்நாடெங்கும் சமச்சீர் கல்வி குறித்து பல்வேறு சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கும் சமயம் நாம் ஆரம்ப பள்ளிகளை குறித்து பேசப்போகிறோம். என்னாது!ஆரம்ப பள்ளியா அப்படின்னா என்று சிலர் கேட்க கூடும். கிராமங்களில் நீங்களும் நானும் ஐந்தாம் வகுப்பு வரை படித்தோமே அவைதான் ஆரம்ப பள்ளிகள்.
   படித்து முடித்த பின் ஒருமுறையேனும் ஆரம்ப பள்ளிகளுக்கு நீங்கள் சென்றது உண்டா? அனேகமாக சென்றிருக்க மாட்டீர்கள் என்றுதான் நம்புகிறேன். என் வயதுள்ளவர்கள் அதாங்க ஒரு 30, 35வயசு உள்ள வங்க எல்லாம் இப்ப ஆரம்ப பள்ளிகளை நினைச்சு கூட பார்ப்பது இல்லை. தான் படித்த பள்ளியில் தன் பிள்ளைகளை படிக்க வைப்பதுமில்லை. அனைவரும் ஆங்கில பள்ளிகளையே நாடிக்கொண்டிருக்கின்றனர்.
   ஏன் ஆரம்பப் பள்ளிகளில் என்ன குறை  குழந்தைக்கு இங்கிலீசு சொல்லித்தரமாட்டாங்களாம்! கான்வெண்டுக்கு அனுப்பி மம்மி டாடின்னு புள்ள சொன்னாதாம் பெத்தவங்களுக்கு புல்லரிக்குதாம்.தமிழ்நாட்டில் தான் இந்த கொடுமை! தமிழ் தமிழ் என்று கொடி பிடித்தவர்கள் கூட தங்கள் வருமானத்திற்காக ஆங்கிலப்பள்ளிகளை ஆரம்பித்து காசை அள்ளி குவித்துவிட்டனர். அதில்லாமல் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அளவுக்கு அதிகமாக இந்த ஆங்கிலப்பள்ளிகள் அமைக்க அனுமதி கொடுத்து தங்கள் கல்லாவை நிரப்பிக் கொண்டனர். விளைவு இன்றைய ஆரம்ப பள்ளிகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது.
   நான் படிக்கும் போதெல்லாம் ஒரு குக்கிராமத்தில் கூட ஆரம்பப் பள்ளிகளில் குறைந்தது 100 மாணவமாணவியர் படிப்பர். குறைந்தது மூன்று ஆசிரியர்கள் வகுப்பெடுப்பார்கள். இருக்க ஒரே கூரைதான் இருக்கும் இட நெருக்கடியில் ஓவென்று ஒரே இரைச்சலாக பலவித வாசம் கமழ்ந்து மணக்கும் பள்ளி ஆனால் இன்றோ ஐயோ பரிதாபம்!.
   பல இடங்களில் ஆரம்ப பள்ளிகள் காணாமல் போய் விட்டன. ஏதோ சில இடங்களில் 15அல்லது 20 மாணவர்கலுடன் ஒரே ஆசிரியருடன் இயங்கி வருகிறது ஆரம்பப் பள்ளிகள். பள்ளியே காலியாக கிடக்கிறது புதிய பாடதிட்ட முறையில் ஏ.பி.எல் முறையில் எதையோ ஆசிரியர்கள் கற்றுத்தருகிறார்கள். கேள்விகள் இல்லை! பரிட்சை இல்லை அதே சமயம் மாணவர்களும் இல்லை என்ற நிலை.
   இருந்த மாணவர்கள் எல்லாம் எங்கே போயினர். அருகில் உள்ள கான் வெண்ட்களுக்கு கலர் கலராய் யூனிஃபார்ம் மாட்டிக் கொண்டு வேன்களில் ஏறிச் சென்று விடுகின்றனர். இலவசக் கல்வி இன்று மக்களுக்கு கசக்கிறது. தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து ஆயிரக் கணக்கில்  செலவழிக்கின்றனர். ஆனால் அந்த பிள்ளைகளோ அப்பன் செலவழித்த காசுக்கு சிறிதும் திருப்தி படுத்துவது இல்லை.
    பல மாணவர்கள் இந்த பள்ளிகளால் ஒழுங்காக படிக்க வில்லை என திருப்பி அனுப்பப் படுகிறார்கள் எனினும் பெற்றோர்கள் மீண்டும் அந்த தவறையே செய்கின்றனர். கான்வெண்ட் மோகம் குறையாமலிருக்கின்றனர்.
   தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் கேட்கிறார்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கொடி பிடிக்கும் இன்றைய பெற்றோர்கள் தாங்கள் படித்த அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க மறுப்பது ஏன்? அரசு பள்ளிகளில் கட்டமைப்புகள் இல்லையா? தரம் இல்லையா?
   அன்றைக்கு இருந்ததை விட இன்று அரசுப்பள்ளிகள் எவ்வளவோ மாறிவிட்டன. கழிப்பிடம் முதல் கொண்டு கம்ப்யூட்டர் வரை பல ஆரம்ப பள்ளிகளில் இன்று வந்து விட்டன. ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளை விட சிறந்த ஆசிரியர்கள் தான். ஆனாலும் பள்ளிகள் காலியாகவே உள்ளன.
   மக்கள் மனம் மாறி இந்த பள்ளிகளை நாடினால் தானாகவே தனியார் பள்ளிகள் கட்டணத்தினை குறைக்கும் நிலை ஏற்படும். இதை மக்கள் யோசிக்க வேண்டும் அரசும் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதை நிறுத்தி அரசுபள்ளிகளின் தரத்தினை மேலும் உயர்த்தி மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும்.
   இல்லையேல் இன்னும் கொஞ்ச நாளில் அரசுஆரம்ப பள்ளிகள் காணாமல் போய்விடும் என்பதில் ஐயமில்லை.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!