பக்திப்படம்!


பக்திப்படம்!

அவன் அந்த படத்திற்கு போவதென்று முடிவெடுத்து விட்டான். ஆனால் கொஞ்சம் உதறலாய்த்தான் இருந்தது. தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள்! அவன் வயது இளைஞர்கள் கேலி பேசியே கவிழ்த்து விடுவார்களே! அவர்களின் இலக்கு இவனாக அல்லவா மாறிவிடும்.
   இருபத்தியோரு வயது இளைஞன் தான் குமார்! அவன் வயசுக்கு இது ஒன்றும் தவறில்லைதான்! சொல்லப்போனால் அறுபது வயது கிழங்கள் கூட ஜொள் விட்டுக்கொண்டு இந்த படத்தை பார்த்துவிட்டு சக நண்பர்களிடம் பிட்டு போட்டுக்கொண்டிருப்பதை இவன் கேட்டு இருக்கிறான். ஆனாலும் அவர்கள் கூட இவனை பார்த்தால் கேலியாகி போய் விடுமே என்று நினைத்தான்.
 இப்படிப்பட்ட படத்தை எல்லாம் வீட்டில் சிடியில் பார்த்து தொலைத்து விடலாம் தான்! யாருடைய தொந்தரவும் இருக்காது. எல்லோரும் வீட்டில் இல்லாத சமயமாய் வாங்கி பார்த்துவிடலாம் என்று நினைத்தான். அப்படித்தான் முயற்சித்தான். அந்த ஊரில் இருந்த ஒரே சிடி ஷாப்பில் போய் படம் பேரை சொன்னதுமே அவன் ஏதோ  வேற்று கிரக வாசியை பார்ப்பது போல பார்த்து என்ன சார்! நீங்க எந்த கிரகத்துல இருக்கிறீங்க! இதெல்லாம் இப்ப கிடைக்கிறது இல்லை!  நெட்லதான் ஏகப்பட்டது கொட்டிக்கிடக்கே! தேவைப்பட்டதை டவுண்லோடு பண்ணிக்க வேண்டியது தானே ! என்று யோசனையும் கொடுத்தான்.
  சரி! அப்படித்தான் செய்து கொள்ளவேண்டும்! என்று முடிவெடுத்து கிளம்பியவன் கண்ணில் அந்த போஸ்டர் பட்டுவிட்டது! போஸ்டரையும் அதில் கண்ட காட்சியையும் பார்த்ததுமே அவனுக்கு சபலம் தட்டிவிட்டது!
    அடடா! இத்தனை நாள் கண்ணில் படாமல் போய் விட்டதே! நாளைக்கு போய் விடலாம் என்று எண்ணியவன் கண்ணில் இந்த வாசகம் பட்டது இன்றே கடைசி! அடடா! இத்தனை நாளைக்கு அப்புறம் இப்படி ஒரு பக்திப்படம்! அதுவும் இன்றோடு கடைசியா? விட்டுவிடக்கூடாது!  என்று தியேட்டர் பக்கம் நுழைந்தான்.
  அதற்குள் அவனது மனசாட்சி அவனை பிரித்து மேய்ந்து விட்டது! பிஞ்சிலேயே பழுத்து விட்டாயே! உனக்கு இப்போது இந்த படம் தேவையா? என்று கேட்ட கேள்விகள் எல்லாம் புதைந்து போய் அவனது ஆசையே வென்றது! தியேட்டரில் யாராவது பார்த்து விடப்போகிறார்கள் என்று தலைக்கு ஒரு கேப் அணிந்திருந்தான்! அதனால் பாதி முகம் மறைந்து போயிருந்தது!
   வேக வேகமாக கவுண்டரில் நுழைந்து அண்ணே ஒருடிக்கட் என்றான். கவுண்டர் ஆசாமியும் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு காசை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு டிக்கெட்டை கிழித்து தந்தான். தலையில் அடித்துக் கொண்டான். அட வந்துருதுங்க பாரு என்று முணுமுணுத்துக் கொள்ளவும் அதை காதில் வாங்காது தியேட்டரில் நுழைந்தான் குமார்.
   தனக்குரிய சீட் எண்ணை கண்டுபிடித்து அமர்ந்து தனக்கு பக்கத்தில் யாரும் தெரிந்தவர்கள் இல்லை என்று முன்னும் பின்னும் பார்த்து அறிந்து கொண்டு பெருமூச்சு விட்டான். படம் ஓட ஆரம்பித்தது. “ஏழுமலையான் மகிமை” என்று டைட்டில் வரவும் அப்பாடா! ஒருவழியா இந்த படத்தை  இன்னிக்கு பாத்து முடிச்சிடலாம் என்று நிம்மதி அடைந்தான் குமார்.
  என்ன சார் முழிக்கிறீங்க! இந்த இண்டெர்நெட் யுகத்துல யாரு பக்திப்படம் பாக்குறாங்க? ஆனா நம்ம குமார் ரொம்ப பக்தி பழம்க! அதான் யாராவது கேலி பேச போறாங்கண்ணு இப்படி தேடி அலைந்து படம் பார்க்க வந்து இருக்கான்!
  ஐ! ஏமாந்தீங்களா! ஏமாந்தீங்களா? 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!