ஒரு ரூபாய் தோசையும் புலவர் செய்த புதுமையும்! கதம்ப சோறு பகுதி 11

கதம்ப சோறு பகுதி 11

மின்மிகை மாநிலமாகுமாம் தமிழ்நாடு

      இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலம் ஆகிவிடும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். இப்போது வீட்டு மின்சாரத்தில் மின்வெட்டு அறவே இல்லை எனவும், ஆனாலும் பகிர்மானத்தில் குளறுபடிகளை தவிர்க்க மின்வெட்டு அறிவித்து விட்டு மின்விநியோகம் ஒழுங்காக செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு இல்லை! அப்படி இருந்தாலும் ஒரு மணி அரைமணி நேர மின்வெட்டே உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதுவும் சீர் செய்யப்பட்டுவிடும் என்று கூறியுள்ள அவர் வழக்கம் போல தமது ஆட்சிக்காலத்தில் தான் மின் திட்டங்களில் இந்த இந்த செயல்பாடுகள் செய்யப்பட்டன என்று தனக்குத்தானே புகழ்ந்துகொண்டுள்ளார். அவர் மின்வெட்டு இல்லை என்று அறிவித்த மறுநாளே எங்கள் ஊரில் மூன்று மணிநேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை மின்சாரம் தடைபட்டு இன்று வரை தொடர்ந்து வருகிறது. நல்லா காட்டுறாங்கப்பா ஷோ!

அலோ மிஸ்டர் ராங் நம்பர்!
     ஒன்றரை வருடங்களில் 723 முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அதாங்க 100ம் நெம்பருக்கு போன் செய்து பெண் காவலர்களிடம் ஒழுங்கீனமாக பேசிய கீளினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
   அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்பவர்களிடம் கனிவாக பேசவேண்டும் என்று இந்த சேவைக்கு பெண்களை நியமித்தது இது போன்ற கிரிமினல்களுக்கு வசதியாக போய்விட்டது. ஏடாகூடமாக இப்படி பேசிவந்த அந்த கிளீனரின் பெயர் பன்னீர் செல்வம். அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் விசாரித்தபோது நூறுக்கு போன் பேசினா யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நண்பன் கூறியதால் போன் செய்தேன். போன் செய்யும் போதெல்லாம் பெண்களே பேசியதால் சந்தோசத்தில் தொடர்ந்து பேசினேன். என்றான். பொதுமக்களுக்கு சேவை செய்ய இருக்கும் இந்த நூறு என்ற எண்ணுக்கும் மற்ற சேவை எண்களுக்கும் விளையாட்டாக இப்படி யாரும் போன் செய்யாதீர்கள் என்றார் போலீஸ் அதிகாரி. உண்மைதானே!

கிச்சன் ரூம் பாடகி ரெகார்டிங்க் ரூம் பாடகியானார்.

      கேரளாவை சேர்ந்தவர் சந்திரலேகா அடூர் குடும்ப வறுமையால் கல்வி கற்க முடியாத இவருக்கு இளமையிலேயே நல்ல குரல்வளம் உண்டு. முறைப்படி சங்கீதம் கற்கும் வசதியின்மையால் சங்கீதம் கற்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அவர் தன் குழந்தையை தூங்க வைப்பதற்காக தாலாட்டுப் பாடல் ஒன்றை பாடினார். குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு அவர் தாலாட்டு பாடியதை குடும்ப நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து கடந்த மாதம் யூடியுப்பில் வெளியிட்டார். ஒரே மாதத்தில் ஏழுலட்சம் பேர் அந்த வீடியோவை பார்க்க வீடியோ பிரபலமானது. சந்திரலேகாவின் குரல் வளத்தை கண்ட மலையாள இயக்குனர்கள் இப்போது அவரை தங்கள் படத்தில் பாட வைக்க அவரது வீட்டில் காத்துக் கிடக்கின்றனர். கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் பாராட்டி உள்ளார். திறமை எங்கிருந்தாலும் ஒரு நாள் அடையாளம் காணப்படும் என்பதற்கு சந்திரலேகா  ஒரு உதாரணம்.

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு காசநோய்!

    இந்தியாவில் பத்துலட்சம் பேருக்கு காச நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 2.7 லட்சம் பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளதாகவும் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இருமல் தும்மல் ஆகியவற்றின் போது வெளிப்படும் நீர்த்துளி உமிழ்நீர் ஆகியவற்றிலிருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு காற்று மூலமாக பரவுவது காசநோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியான இருமல், சளி, காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல் போன்றவை இருக்கும்.
   காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம்,பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா, காங்கோ, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், மியான்மர் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 4.5 லட்சம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் அதற்கான சிகிச்சை பெறாமலேயே இருக்கின்றனர் என்று சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொஞ்சம் விழிப்பா இருந்து காச நோயை விரட்டியடிங்கப்பா!

சீனாவில் பிரபலமாகிவரும் கரப்பான் பூச்சி பண்ணை!

    சீனாவில் கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப்புழுக்களை வறுத்து சாப்பிடுவது அறுசுவை உணவாக கருதப்படுகிறது. கரப்பான் பூச்சிகளை உலரவைத்து சீனமருந்துகள், அழகு சாதனப் பொருள்களிலும் பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள புரதச்சத்து மற்றவகை புரதச்சத்தைவிட விலை மிகவும் குறைவு. மேலும் இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளும் பயன்படுகிறது.கரப்பான் பூச்சிகளுக்கு இருட்டான இடங்கள் மிகவும் பிடிக்கும். பழைய கோழிப்பண்ணைகள் இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்டுக்கள் இரும்பு தகடுகளுக்கு நடுவே இவற்றை வளர்க்கின்றனர். வாங்க் பூமிங் என்ற கரப்பான் பூச்சி பண்ணையாளர் மட்டும் தன்னுடைய ஆறு பண்ணைகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகளை வளர்க்கிறார். கரப்பான் பூச்சி வளர்க்க முதலீடும் குறைவு. 61 ரூபாய் முதலீடு செய்தால் 670 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். ஒரு கிலோ உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 1200 ஆக உள்ளது. சீனாவில் இப்போது கரப்பான் பூச்சி பண்ணைதான் மிக பிரபலமாக உள்ளது.

புற்றுநோயால் அவதிப்படும் நடிகர்

   பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ். தமிழ்படங்களிலும் நடித்துள்ளார்.பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் தந்தையும் இவரே! 90 வயதான் நாகேஸ்வரராவிற்கு பெருங்குடல் மற்றும் மலத்துவார பகுதிகளில் புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. பத்திரிக்கையாளர்களை சந்தித்த நாகேஸ்வரராவ்  புற்றுநோய் தாக்கியவர்கள் ரத்தவாந்தி எடுத்து இறந்து விடுவார்கள் என்ற கதை உள்ள படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அது நூறு சதவீதம் உண்மையல்ல. முன்னாள் குடியரசுத்தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி போன்ற பலர் இந்த புற்றுநோயை தோற்கடித்துள்ளார்கள். என்னை பொறுத்தவரை இந்த மாதிரி போராட்டங்கள் புதிதல்ல 1974,1988 களில் இதய நோயால் பாதிக்கப்பட்டு ஜெயித்தவன் நான். இப்போது என் போராட்டம் புற்றுநோயுடன். அவ்வளவுதான். ரசிகர்கள் ஆசியால் இதில் வெற்றிபெற்று நூறுவயது வரை வாழ்வேன்! என்றார் தன்னம்பிக்கையுடன். இந்த வயதிலும் மன உறுதியுடன் இருக்கும் அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஹாப்!

டிப்ஸ்:


இஞ்சியை தோல் சீவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி 5 நாட்கள் தேனில் ஊறவைத்து தினமும் ஒர் இஞ்சித் துண்டை சாப்பிட்டுவர சரும சுருக்கங்கள் நீங்கும்.

வெள்ளைப் பூண்டை விழுதாக்கி இரவில் தூங்கும் முன்பாக கால் ஆணியில் வைத்து கட்டி வைத்து காலையில் கழுவி விடவும் தொடர்ந்து செய்து வர ஒரு வாரத்தில் கால் ஆணி குணமாகும்.

ஜாதிமல்லி மல்லிகைப்பூ போன்றவை நிறம் மாறாமல் இருக்க பூவை இலேசாக உலர்த்தி செய்தித்தாளில் பொட்டலமாக கட்டி ப்ரிட்ஜில் வைத்தால் புதியது போல அப்படியே இருக்கும்.

சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மஞ்சள்தூள் போட்டு தெளிந்தது உப்பு, சீரகத் தூள் கலந்து அருந்த அஜீரணக் கோளாறு நீங்கும்.

உண்மையாவா?

   நயன் தாராவை தொடர்ந்து இப்போது சோனாக்‌ஷி சின்ஹாவுடன் பிரபுதேவா நெருக்கம் காட்டி வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. தனது அடுத்தப்படத்தில் சோனாக்‌ஷியை நாயகியாக்க முடிவெடுத்திருக்கிறாராம் பிரபுதேவா.அந்த பட ஒத்திகையில் இருவரும் நெருக்கம் காட்டிவருவதுதான் இப்போது பாலிவுட் ஹாட் டாபிக்.

ஒரு ரூபாய்க்கு தோசை!

   விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு பக்கத்தில் உள்ள திருவம்பட்டு கிராமத்தில் தான் ஒரு ரூபாய்க்கு தோசை தரப்படுகிறது தொட்டுக்கொள்ள கடலை சட்னியுடன். இந்த கடையின் உரிமையாளர் தமிழரசு. அந்த காலத்துல எல்லாம் தீபாவளி பொங்கல்னாதான் எங்க வீட்டுல இட்லி தோசை பார்க்க முடியும். கல்யாணமாகி பிள்ளைங்க பிறந்ததும் பிள்ளைகளுக்கு தினமும் இட்லி தோசை சாப்பிட கொடுக்கணும்தான் இந்த கடையை ஆரம்பிச்சேன் என்கிறார். அவரது மகனும் மருமகளும் இப்போது கடையை கவனித்துக் கொள்வதில் உதவுகிறார்கள். ஒரு ரூபாய்க்கு கட்டுப்படியாகிறதா? என்றால் ஊர்க்காரங்க சப்போர்ட் இருந்தால் நீங்க கூட ஒரு ரூபாய்க்கு தோசை கொடுக்கலாம் என்கிறார். ஊரில் விளையும் அரிசி, உளுந்து போன்றவை குறைந்த விலையில் இவர்களுக்கு விற்பார்களாம்.அதனால் எங்களுக்கு கையை கடிக்காது. அவங்க கிட்ட கம்மியா வாங்கி அவங்களுக்கு கம்மியா கொடுக்கிறோம் அவ்வளவுதான் என்கிறார்கள். அம்மா உணவகம் என்று ஊரெங்கும் விளம்பரம் தேடும் உலகில் விளம்பரம் இல்லாமல் இப்படியும் இருக்கிறார்கள்!

வாரியார் விருந்து!

     ஒரு புலவர் துரை ரங்கன் என்ற மன்னனிடம் சென்றார். துரை ரங்கன் என்பவர் குறுநில மன்னர். இவர் சிறந்த ரசிகர். அறிஞர். ஜோதிடக் கலையிலும் வல்லவர். புலவர் புரவலனைப் பார்த்து மன்னவரே ஒரு புதுமை சொல்லுகிறேன் கேள். ஒரு பெண்ணுக்கு நான்கு புருவம், ஐந்து கம்மல், ஆறு தனம், ஏழு கண்கள் என்று ஒரு பாடலை பகர்ந்தார்.
   ‘துங்கவரை மார்ப! துரைரங்க பூபதியே!
   இங்கோர் புதுமை இயம்பக் கேள்! பங்கையக்கை
   ஆயிழைக்கு நான்குநுதல்,ஐந்துகுழை,ஆறுமுலை
    மாயவிழி ஏழா மதி’
 மன்னவன் பேஷ்! பேஷ் என்று சிலாகித்து ஆயிரம் பொன் பரிசு கொடுத்தார்.
  அருகில் இருந்தவர்களுக்கு விளங்கவில்லை! என்ன ஒரு பெண்ணுக்கு நான்குபுருவமா? ஐந்து கம்மலா? ஆறுமுலையா? ஏழு கண்ணா? என்று எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்து வியந்து விளங்காது விழித்தார்கள்.
  புலவர் விளக்கினார். ராசிகள் 12, மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தநுசு, மகரம், கும்பம், மீனம். இந்த அடிப்படையில்
  ஆயிழைக்கு நான்கு நுதல்- ஆயிழை கன்னி, பன்னிருராசிகளில் கன்னி என்பது ஒரு ராசி. கன்யா ராசிக்கு நாலாவது ராசி தநுசு. நுதல்- அதாவது பெண்ணின் புருவம் வில்லைப் போன்றுள்ளது. ஐந்து குழை- கன்னியில் இருந்து ஐந்தாவது ராசி மகரம்- அவளுக்கு மகரக் குழை. ஆறு முலை – கன்னியா ராசியில் இருந்து ஆறாவது ராசி கும்பம், கும்பம் போன்ற தனம். ஏழாவது ராசி மீனம்- மீனம் போன்ற கண்கள்.
       புலவரின் விளக்கம் புரிந்ததா? இத்தனை சிறப்புள்ள புலவர்கள் வாழ்ந்த நம் தமிழ் நாடு சிறப்புடையது அன்றோ?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. வணக்கம் சகோதரரே,
    கதம்பச்சோறு சுவையோ சுவை. அதிலும் சந்திரலேகா அவர்களின் திறமை வெளியுலகிற்கு தெரிந்தது அருமை. சந்திரலேகா அவர்களுக்கும், ஒரு ருபாய் தோசை ஹோட்டல் உரிமையாளருக்கும் வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  2. கதம்பச்சோறு - எத்தனை எத்தனை தகவல்கள்... உங்களின் தேடலுக்கு பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. உள்ளூர் , வெளி மாநிலம் , அண்டை நாடு எனத் தகவல்கள்
    பொங்கி வழிகின்றன எங்கள் இதயங்களும் சந்தோஷத்தில்
    பொங்கி வழிகின்றன படித்து விட்டு.

    ReplyDelete
  4. அன்பின் சுரேஷ் - அருமையான் பதிவு - கதமபச் சோறு அருமை - எத்தனை எத்தனை தகவல்கள் - அத்தனையும் அருமை.

    மின்மிகை மாநிலம் - ராங் நம்பர் - கிச்சன் ரூம் பாடகி - காசநோய் - கரப்பான் பூச்சி - புற்று நோய் - கால் ஆணி - அஜீரணம் - சோனாக்‌ஷி - தோசை - வாரியார் - எத்தனை எத்தனை தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
    _

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!