உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 31

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 31



இந்த பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக சந்திப்பிழையின்றி எழுதுவது பற்றி படித்தோம். இந்த வாரமும் அது தொடர்பான ஒரு பகுதிதான் ஒலிமயக்கம் என்னும் மயங்கொலிப் பிழைகளை பற்றி இந்த பகுதியில் பார்க்க உள்ளோம். தமிழில் எழுதும் போது சின்ன ‘லா’வா பெரிய ‘ளா’ வா என்றும் சின்ன ‘னா’ வா பெரிய ‘ணா’வா என்றும் குழம்பி மாற்றிப் போட்டுவிடுவோம். ஆங்கிலத்திலும் இந்த ஒலி மயக்கம் உண்டு. ஆங்கிலத்தில் B-P, C-G-J,D-T,G-K, V-W, என பல்வேறு ஒலிமயக்கங்கள் உண்டு. ஆனால் தமிழில் மூன்றே மூன்று இனங்களில் தான் இந்த ஒலிமயக்கம் ஏற்படும்.
  அவை
1.      ர-ற  2. ந-ன-ண, 3. ல-ள-ழ
இந்த மூன்று இன எழுத்துக்களும் உச்சரிப்பது எப்படி என்று அறிந்துகொண்டால் பிழையே வராது. பேச்சுத்தமிழிலேயே இப்போதெல்லாம் பிழையாக பேசுவதால் எழுத்து தமிழும் பிழையாகிப் போகின்றது.

வெளிநாட்டு பாதிரியார் ஒருவர் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக் கொண்டார். அவருக்கு மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்று ஆசை! மீன் வாங்கி வந்துவிட்டார். சமையல்கார அம்மாளுக்கு மீன் குழம்பு வைக்க தெரியுமா என்று அவருக்கு சந்தேகம்.அந்த சமையல்கார அம்மணியிடன் பாதிரியார் இப்படிக் கேட்டாராம். “நீங்கள் மீனைக் குழம்பு வைக்க அரிவீர்களா?
  இதைக்கேட்டதும் சமையல்கார அம்மாள், ‘மீனை அரியாமல் எப்படி குழம்பு வைப்பது?’ என்று திருப்பிக் கேட்டாராம். பாதிரியாருக்கு ஒன்றும் புரியாமல் விழித்தாராம். இவர் கேட்க நினைத்தது மீன் குழம்பு வைக்கத் தெரியுமா? (அறிவீரா?) என்று அர்த்தத்தில் அவர் புரிந்து கொண்டது மீனை அரியாமல் எப்படி குழம்பு வைப்பது என்று? பாதிரியார் அரைகுறை தமிழினால் குழம்பிப் போனார். நமது தொலைக்காட்சி அறிவிப்பாளினிகளும் இப்படி கொஞ்சி பேசி தமிழை கொலை செய்து வருகின்றனர்.

இப்படி ஒலிமயக்கம் இன்றி பேசவும் எழுதவும் நிறைய நூல்களை வாசிக்க வேண்டும். ஒரு சில பயிற்சிகளும் உண்டு. உதாரணமாக பெரிய என்று எழுதும் போது சின்ன ‘ரானா’ போட வேண்டும்  சிறிய என்று எழுதும் போது பெரிய ‘றானா” போட வேண்டும். இப்படி எதிர்மறையாக வரும்.
   பேச்சுத்தமிழில்  ர,ற வேறுபாடு அறிந்து கொள்ள ஒரு தொடர் பயிற்சியும் உண்டு. ‘அரைகுறையா உரசினாளாம்,பாறையில பரத்தினாளாம்’ என்ற வாசகத்தை திரும்ப திரும்ப சொல்லிப் பார்ப்பதன் மூலம் பயிற்சி பெறலாம்.
ஒலி மயக்கத்தில் முதலில் நாம் பார்க்க இருப்பது ந-ன-ண ஒலி மயக்கம்.
  த்,ற்,ட் ஆகிய வல்லின எழுத்துக்களுக்கு உறவுடைய மெல்லினங்கள் ந்,ன்,ண் ஆகும். ந்,ன்,ண் ஆகிய மெல்லினங்கள் பிறக்கும் இடத்திலேயே த்,ற்,ட் என வல்லின எழுத்துக்கள் பிறக்கின்றன. அதனால் தமிழ் சொற்களில் எப்போதும்
   ந் பக்கத்தில்தான் த் வரும்
   ன் பக்கத்தில் ற் வரும்
   ண் பக்கத்தில் ட் வரும்

உதாரணமாக பந்து, கந்தன், கன்று, நன்றி, நண்டு, வண்டி,
இப்போது புரிந்ததா? இது புரிந்தால் ந,ன,ண எழுத்துப் பிழைகள் உங்களுக்கு வரவே வராது.

       ந,ன இவையில் சில இடங்களில் குழப்பம் வரும்.அவை இடம் மாறினால் பொருளும் மாறிவிடும் உதாரணமாக முந்நூறு, முன்னூறு இவை இரண்டையும் எடுத்துக் கொள்வோம்.
   முந்நூறு என்றால் மூன்று நூறு என்று பொருள்படும். அதையே முன்னூறு என்றால் “முன்பு சொன்ன நூறு”என்று பொருளாகிவிடும்.  முந்நாள் தலைவர் என்றால் மூன்று நாள் தலைவர் என்ற பொருளாகிவிடும். அதையே முன்னாள் தலைவர் என்று சொன்னால் முன்பு தலைவராக இருந்தார் என்று பொருள்படும்.
  அதே போல் னவும் ணவும்இடம் மாறினால் சில குழப்பங்கள் ஏற்பட்டு பொருள் மாறும்.
  உன் (உன்னுடைய) உண் (சாப்பிடு) ஊன்( உடம்பு) ஊண் (உணவு) மான்( ஒருவிலங்கு) மாண் (மாண்புடைய) தினை( ஒருவகை தானியம்) திணை( ஐந்திணைகள் ஆகிய ஒழுக்கம்)
தன்மை( பண்பு) தண்மை( குளிர்ச்சி) கனி(பழம்) கணி(கணக்கிடு) என பொருள் வேறுபாடு அடையும்.
   இத்தகைய பொருள் வேறுபாடு அடையும் சொற்களை அறிந்துகொண்டால் ஒலிமயக்கமின்றி பேசவும் எழுதவும் முடியும். அடுத்த வாரத்தில் ல-ள-ழ வேறுபாடு பற்றி பார்ப்போம்.

இனி இலக்கியம்.

   சிற்றிலக்கியங்கள் தமிழில் 96 வகைப்படும். பிரபந்தம் என்ற வடமொழி சொல்லுக்கு கட்டுதல் என்று பொருள். அழகிய சொற்களை கட்டுதல் கவிதை இலக்கியமாயிற்று. இந்த சிற்றிலக்கியங்களில் முத்தொள்ளாயிரம் பாடலை இப்போது பார்ப்போம். சேரன் –சோழன் –பாண்டியன் ஆகிய மூவேந்தர்களை பற்றிய பாடல்கள் இதில் அமைந்துள்ளன. அதில் யானை மறம் என்பது ஒன்று.
  யானையின் வீரத்தை, காதலை, வர்ணிப்பது யானை மறமாகும். பாண்டிய நாட்டு யானையின் மறத்தை இந்த பாடலில் பார்ப்போம்.

     மருப்புஊசி யாக மறங்கனல்வேல் மன்னர்
     உருத்தரு மார்புஓலை யாக – திருத்தக்க
     வையகம் எல்லாம் எமதுஎன்று எழுதுமே
     மொய்யிலைவேல் மாறன் களிறு.


பாண்டிய நாடு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை தலைநகராகக் கொண்டது. சங்கப்புலவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதும் அழகை பார்த்த பாண்டியனின் படையில் இருந்த யானைகளுக்கும் எழுதும் ஆசை வந்தது. அதுவும் புலவர்களைப் போல கவிதை எழுத ஆசை வந்தது. அவை எப்படி எழுதின? அதற்கு எழுதுகோலாக எதை பயன்படுத்தியது? தம்முடைய தந்தங்களையே எழுதுகோலாக்கிக் கொண்டன. சரி எழுத ஓலை வேண்டுமே? அதற்கு பகைவரின் மார்பினை எடுத்துக் கொண்டன. அதில் அவை என்ன எழுதின தெரியுமா? ‘வையகம் எல்லாம் எமது’ என்று எழுதினவாம்.
  பாண்டியனின் யானைப்படை முன் எத்தகைய ஆற்றலும் வீரமும் மிக்க மன்னராக இருந்தாலும் உயிர் தப்ப முடியாது. பாண்டியரின் யானைகள் எதிரியின் மார்பை பிளந்துவிடும் என்பதையே கவிஞர் இத்தனை கவி நயமாக எடுத்துரைக்கிறார். யானைப்படையின் ஆற்றலால் பாண்டியன் உலகையே தன் ஒரே குடையில் ஆளும் வாய்ப்பைப் பெற்றான் என்று யானையின் வீரத்தையும் பாண்டியனின் வீரத்தையும் சிறப்பிக்கிறது இந்த பாடல்.

மீண்டும் அடுத்த பகுதியில் இன்னும் சிறப்பான தகவல்களோடு சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




Comments

  1. Replies
    1. நன்றி தனபாலன்! ஆண்ட்ராய்ட் தீபாவளி பர்சேஸா? வாழ்த்துக்கள்!

      Delete
  2. வணக்கம் சகோதரரே..
    தங்களின் தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்களுக்கு சரி, நம்மில் பல பேருக்கும் சரி மயங்கொலியை ஏற்படுத்தும் சொற்களைச் சரியாக உச்சரிப்பதில் தவறு செய்கிறோம். பயனுள்ள பதிவிற்கு நன்றி..

    ReplyDelete
  3. உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்

    ReplyDelete
  4. சிறப்பான பணி தொடரட்டும்!

    ReplyDelete
  5. அன்பின் சுரேஷ் - அருமையான பணி - பயனுள்ல பதிவு - படிப்பவர்களூக்குப் பயன்படும் பதிவு - பள்ளியில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் போல அழகாக அருமையாக இங்கே கற்றுக் கொடுப்பது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!