துரத்தும் நிழல்! பகுதி 4

துரத்தும் நிழல்! பகுதி 4

வைத்தியநாத குருக்கள் தம் மனைவியோடு மாமனார் வீட்டிற்கு சென்ற போது அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.



  என்ன மாமா! என்ன ஆச்சு? ஏன் இப்படி சொல்றீங்க? வைத்தி கேட்டபோது, பின்ன என்ன மாப்ளே! காலையில இருந்து கோவில்பூஜை, அதுக்கப்புறம் கழனி, காடுன்னு அலைஞ்சிட்டு வந்து சாப்பிடலாம்னு உட்காரப்ப இப்படி ஒரு தகவல் வந்துருச்சே!
   என்ன தகவல் மாமா! சொல்லுங்க!
ஏன் உங்க சாதத்திலேயும் மண்ணை போடவா? நீங்க முதல்ல சாப்பிடுங்க! நான் சாப்பிடறதுக்கு இல்லே!
   இல்ல மாமா!
நீங்க சாப்பிடுங்கன்னு சொல்லிட்டேனோ இல்லியோ! சாப்பிடுங்க! அப்புறம் விசயத்தை சொல்றேன்!

    ஒரு பத்து நிமிசம் கழித்து வைத்தி சாப்பிட்டு வந்ததும் அவரது மாமா அந்த தகவலை கூறினார். உங்க அக்காவோட குழந்தை ஒண்ணு தவறிப் போச்சாம்! அந்த தகவல் உங்க ஊருக்கு வந்து அங்கிருந்து இங்க வந்திருக்கு!
   வைத்தியின் முகம் இறுகிப்போனது! இதை முதல்லேயே சொல்லி இருக்கலாம்ல!
   சொன்னா சாப்பிட முடியுமா? தலை முழுகணும்! காத்துக்கிட்டு இருக்கணும். காலையில என்ன சாப்பிட்டேளோ! ரொம்ப பசியோட இருக்கிறமாதிரி தெரிஞ்சது! இது ஒண்ணும் குடி முழுகி போற விசயம் இல்லை! சரி ரெஸ்ட் எடுங்க! நான் போய் தலை முழுகிட்டு வந்து சாப்பிட்டு வந்துடறேன்!
  வைத்தி தலை அசைத்ததும் மாமனார் குளியல் அறைக்குச் சென்றார். ஹேமா, என்னங்க! நீங்க அக்கா வீட்டுக்கு போகணுமா? என்றாள்.
    போகத்தான் செய்யணும்!
இப்பவே மணி ரெண்டாறது! எப்ப கிளம்பி எப்ப அந்த ஊருக்கு போவீங்க!
  தகவல் இப்பத்தானே கிடைச்சிருக்கு! நான் பார்த்துக்கறேன்! நீ எதுக்கும் கவலைப்படாம ரெண்டு நாள் ரெஸ்ட் எடு!
  நான் வர வேண்டாமா?
நீ எப்படி வருவே ஹேமா! கைக்குழந்தைக் காரி நீ! இப்ப உடம்பு வேற சரி இல்லை! எல்லாம் நான் பார்த்துக்கறேன்!
  அரைமனதாக தலையசைத்தாள் ஹேமா. மாமனார் சாப்பிட்டு வந்ததும் அங்கிருந்து கிளம்பி ஆண்டார் குப்பம் வந்தார் வைத்தி.
அங்குதான் அவருடைய மூத்த அக்காள் இருந்தாள்.
   என்னடா பண்ண போறே! என்றாள். சின்ன குழந்தை பாவம் தவறிடுச்சு! நீ கிளம்பளயா அக்கா!
   நான் வரலைடா! எனக்கு இதெல்லாம் பார்த்தா ஒரு மாதிரி இருக்கும்! அத்தானை போகச் சொல்லிருக்கேன்! கிளம்பிண்டு இருக்கார். நீ என்ன பண்ண போறே?
  கோவில் பூஜை வேற முடிக்கலை! நேரம் போயிண்டு இருக்கு! ஒண்ணு வேணா செய்யறேன்! பஞ்செட்டி குருக்களாத்துக்கு போய் இன்னிக்கு ஒரு வேளை பூஜை பண்ண சொல்லிட்டு அப்படியே கூட்டு ரோடுக்கு வந்துடறேன்! அத்தானும் வந்துட்டா ரெண்டு பேரும் அப்படியே திருப்பதிக்கு பஸ் ஏறிடறோம்!
   சரி! இங்கிருந்து பஞ்செட்டிக்கு எப்படி போவே? அத்தானோட பழைய சைக்கிள் இருக்கு இல்லே! அதை கொடு! அதுல போயிட்டு வந்துடறேன்!
   அங்கிருந்து சைக்கிளில் வந்து பூஜைக்கு சொல்லிவிட்டு மீண்டும் கூட்டுரோடு வந்து திருப்பதிக்கு கிளம்பினர்.
  இறப்பு வீட்டில் இருந்து மறுநாள் திரும்பி வந்து பூஜைகளை முடித்து வைத்தி படுத்த போது இரவு மணி பத்தை கடந்துவிட்டது. வயல் சூழ்ந்த அந்த வீட்டில் சிம்னி மினுக் மினுக் கென்று எரிந்து கொண்டிருக்க அப்படியே களைப்பில் கண்ணயர்ந்தார் வைத்தி.

    அது ஒரு பாலைவனம் போன்ற ஒரு மணல் பிரதேசம்! சுற்றிலும் ஒரு மரங்கள் இல்லை! வெயில் கொளுத்தி எடுத்துக் கொண்டு இருந்தது. அதில் ஹேமாவுடன் பயணித்துக் கொண்டிருந்தார் வைத்தி. சூரியன் உச்சியில் இருக்க அவர்கள் நடக்க நிழல் நேராக விழுந்து கொண்டிருந்தது. அந்த பாலையில் அவர்கள் எங்கே செல்கின்றனர் என்பது தெரியவில்லை! கை கோர்த்தபடி நடந்து கொண்டிருந்த அவர்களை யாரும் தொந்தரவு செய்யவில்லை! அவர்களின் நிழல் மட்டுமே அவர்களை தொடர்ந்து கொண்டிருந்தது. சுற்றிலும் நிசப்தம்!  கை கோர்த்து நடந்துகொண்டிருந்த ஹேமா வைத்தியின் கைகளை விடுவித்துக் கொண்டு வேகமாக முன்னேறினாள். ஹேமா எங்க போற! என்னை விட்டு போகாதே! இரு நானும் வரேன்! வைத்தியின் குரலை காதில் வாங்காது சென்று கொண்டிருந்தாள் ஹேமா! இப்போது அவளது நடை துரிதப்பட்டுக் கொண்டு இருந்தது. என்ன ஒரு வேகம்! ஹேமா இதுபோன்று நடந்து வைத்தி பார்த்தது இல்லை! ஏய்! ஹேமா! நில்லு! இதென்ன விளையாட்டு! நானும் வரேன்! சொல்லிக்கொண்டே முன்னேறினார் வைத்தி அதற்குள் ஹேமா இன்னும் பத்தடி தூரம் கடந்திருப்பாள் திடீரென ஒரு மணல் குவியலில் கால் வைத்த ஹேமா! என்னங்க காப்பாத்துங்க! காப்பாத்துங்க! என்று அலறினாள். ஆம்! அது ஒரு புதைகுழி! மரணக் குழியில் விழுந்த அவளைக் காப்பாற்ற வைத்தி ஓடினார். அப்போது திடீரென எங்கிருந்துதான் அப்படி ஒரு புயல் காற்று வீசியதோ தெரியவில்லை! காற்று சுழன்று அடித்து இருக்கும் மணலை எல்லாம் வாரி இறைத்தது! வைத்தியால் ஒன்றும் செய்ய முடியவில்லை! கண்ணைத் திறக்க முடியாதபடி மண் வாரி இறைத்தது! ஐயோ! ஹேமா! என்று கத்தியபடி காற்றையும் கிழித்துக்கொண்டு அருகே செல்ல முயற்சித்தார். அவர் அந்த குழியின் அருகே வந்த போது காற்றும் நின்றுவிட்டது.  ஹேமா அந்த குழியில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி அவளது கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தது. அது என்னைக் காப்பாற்ற மாட்டாயா? என்று இரைஞ்சியது!
                                    நிழல் துரத்தும்(4)

டிஸ்கி} இந்த தொடர் முந்தைய தொடர்கள் போல அவ்வளவு விறுவிறுப்பு இல்லை! வாசகர்கள் வருகை குறைவாகத்தான் உள்ளது.போக போக கதையில் திருப்பங்கள் வரும் அதுவரை வாசகர்கள் பொறுமையோடு இருக்க வேண்டுகிறேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. ஹைகூ கவிதைகள் பதிவின் போது இந்த பகிர்வையும் இன்றே பகிர வேண்டாம்...

    சுவாரஸ்யமாக செல்கிறது... தொடருங்கள்...

    ReplyDelete
  2. பாலைவன நிழல் . கதையின் தலைப்பு வந்தாயிற்று.
    கதை விறுவிறுப்பாகத்தான் செல்கிறது.
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. விறுவிறுப்பாகச் செல்கிறது தொடருங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!