உரத்த சிந்தனை: இருண்ட தமிழகத்திற்கு ஒரு விளக்கு: க.இராமையா

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம், தமிழகத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசும் இதை வைத்து, அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய், மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டு, வரும் டிசம்பர் மாதத்தில் இயங்கி, தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையை போக்கவுள்ள, அணு உலைகளின் இறுதிக்கட்ட வேலைகள், அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டன.

உலகில், 529 அணு உலைகள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது, "கூடங்குளத்தில் மட்டும் வெடிக்கும்; மக்கள் அழிவர்; மீன் வளம் பாதித்து, மீனவர்களின் வாழ்வாதாரம் பயங்கரமாக பாதிக்கப்படும்' என பயமுறுத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, உக்கிர போராட்டங்கள் நடத்துவதன் பின்னணி என்ன?முதல் காரணம்: இந்த அணு உலைகள், ரஷ்ய உதவியால் கட்டப்படுகிறது என்பதே. இதுவே, அமெரிக்க உதவியால் கட்டப்பட்டிருந்தால், எந்த போராட்டமும் நடந்திருக்க்காது என்பது, பட்டவர்த்தனமான உண்மை.இதில், உலக அரசியல், கம்யூனிச எதிர்ப்பு என்பதெல்லாம் இல்லை. இன்று ரஷ்யா, கம்யூனிஸ்டுகளால் ஆளப்படுவதில்லை. இது ஒரு பக்காவான வர்த்தக விவகாரம்.

இந்தியாவிற்கு ரஷ்யா பல உதவிகளைச் செய்துள்ளது. அமெரிக்காவும், நமக்கு சில உதவிகளைச் செய்து வருகிறது. இரு நாட்டு உதவிகளுக்கு இடையேயான பெரிய வேறுபாடு என்னவென்றால், அமெரிக்கா பொருள்களாகத் தான் கொடுக்கும். அவற்றை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் தொழில்நுட்பத்தையோ, அனுமதியையோ கொடுக்காது; தேவைப்படும் உதிரி பாகங்களையும், அமெரிக்காவிடமிருந்து தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.ஆனால், ரஷ்ய உதவிகள் அப்படிப்பட்டதல்ல; பொருள்களை வழங்குவதுடன், அவற்றை இந்தியாவிலேயே தயாரித்துக் கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்களையும், அனுமதியையும் அளிக்கிறது; நாமே உற்பத்தி செய்து கொள்ளவும் உதவுகிறது.
அதனாலேயே அர்ஜுன் டாங்குகள், ஐந்தாவது தலைமுறை போர் விமானங்கள் (எஸ்யூ-50) ஏவுகணைகள் ஆகியவற்றை, நாம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து, நம் தேவைக்குப் போக வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறோம். அரசுக்கு அபரிமிதமான வெளிநாட்டுப் பணம், வந்து சேர்கிறது.

மின்சாரத் துறையிலும் அப்படியே. பல துறைகளில் நம் முன்னேற்றத்திற்கும், அத்தியாவசியமான மின்சார உற்பத்திக்கும் உதவ, ரஷ்யா முன்வந்துள்ளது. நாம் தன்னிறைவு அடைந்த பின், நாமாக எவர் உதவியுமில்லாமல், அணு உலைகளை உற்பத்தி செய்து கொள்ளும் வகையில், கூடங்குளத்தில் முன்னோடியாக அணுமின் நிலையங்களை அமைத்து வருகிறது ரஷ்யா.கூடங்குளத்தில் அமைந்துள்ள, இரண்டு வி.வி.இ.ஆர்., 1000 அணு உலைகளுக்குப் பின், ரஷ்ய தொழில்நுட்பத்துடன், அதே வகை அணு உலைகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளப் போகிறோம். அப்புறம், அமெரிக்காவிலிருந்து அணு உலைகளை ஏன் வாங்க வேண்டும்?

அதனால், 28 லட்சம் கோடி ரூபாய் பெருமானமுள்ள அணு உலைகளை அமெரிக்கா, இந்தியாவிற்கு உடனடியாக விற்க முடியாமல் போய்விடும். அமெரிக்காவுக்கு எவ்வளவு பெரிய இழப்பு!கூடங்குளம் அணு உலைகளைத் தடுத்து நிறுத்திவிட்டால், இந்தியா தன்னிறைவு அடையாது. ரஷ்யா மேலும் உதவுவது தடுக்கப்படும். இந்திய மார்க்கெட்டில், அமெரிக்கா நுழையலாம்; பணம் கொழிக்கலாம். இதுதான் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பின், பின்புலத்திலுள்ள முக்கிய காரணம்.அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் சம்பந்தமான விவாதங்கள், 2006 முதல் 2008 வரை, இந்திய முழுவதும் நடைபெற்று வந்தன. அப்போது, ரஷ்யா உதவியுடன், கூடங்குளம் அணு உலைகளின் கட்டுமான வேலைகள், பெரிய அளவில் நடைபெற்று வந்தன.அப்போதெல்லாம் அணு உலைகள் அமைக்கப்பட்டால், அவை வெடிக்கும்; லட்சக்கணக்கான மக்கள் மாண்டு விடுவர் என, போராட்டங்கள் வெடிக்கவில்லை ஏன்?

அணு உலைகளே வேண்டாம் என்பவர்கள், இப்போது போல் அப்போது கொதித்தெழுந்திருக்க வேண்டியது தானே! ஏன் வாய் மூடி மவுனம் காத்தனர்? காரணம் வெள்ளிடைமலை.அமெரிக்காவுடன் ஏற்பட்ட, 123 அணு உலை ஒப்பந்தம் அமலுக்கு வர, பல சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. இழப்பீடு சம்பந்தமான இந்திய சட்டத்தை, இங்கு உலைகள் கட்டவிருந்த, அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி போன்ற தனியார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், இந்திய மண்ணில் அமெரிக்கா கால் வைக்க முடியவில்லை.கூடங்குளம் அணு உலைகள், வெற்றிகரமாகச் செயல்படத் துவங்கினால், ரஷ்யாவே இந்தியாவில் கட்டப்படவுள்ள மற்ற உலைகளைக் கட்டத் துவங்கும். பெரிய இந்திய மார்க்கெட்டை, அமெரிக்கா இழக்கும்; அமெரிக்க ஆசை, நிராசையாகப் போய்விடும்.

அந்நிலையைத் தடுக்கவே, இத்தனை ஆண்டுகளுக்குப் பின், கூடங்குளம் அணு உலை உற்பத்தியைத் துவங்கும் சமயத்தில், இந்த திடீர் போராட்டம்; அதுவும் இத்தனை உக்கிரமாக.லோக்கல் காரணம்மற்றுமொரு முக்கியமான தூண்டுதல், மூன்று மாவட்டங்களின் முக்கிய பிரமுகர்களிடமிருந்து. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில், பூமிக்கடியில் அதிகளவு கனிமங்கள் உள்ளன.இவற்றை, சில தனியார் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக எடுத்து பணத்தை அபரிமிதமாக அள்ளிக் கொண்டிருக்கின்றன. கனிம சாம்ராஜ்யம் நடத்துவோர், எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தற்சமயம் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் துவங்கினால், மத்திய அரசு சட்டப்படி, 16 கி.மீ., சுற்றளவுக்கு கனிமங்களை வெட்டி எடுக்கவோ, தொழிற்சாலைகள் அமைக்கவோ, மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் அமைக்கவோ அனுமதியில்லை என்பது, பெரும் தொழிலதிபர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதனால், பல கொழுத்த தொழிலதிபர்களும், கூடங்குளம் போராட்டத்தை ஆதரித்து வருவதோடு, பல உதவிகளையும் செய்து வருகின்றனர்.நிபுணர் குழு ஒன்றை அமைத்து, உலையை ஆய்வு செய்து, மக்களின் அச்சத்தைப் போக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்களின் அச்சத்தைப் போக்க முடியுமா?திறந்த மனதுடன் அவர்கள், எதையும் கேட்கத் தயாராயில்லை. அளவுக்கு மீறிய பொய்ப் பிரசாரங்களாலும், துர்போதனைகளாலும், அச்சமும், மனக் கிளர்ச்சியும், அம்மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன.கிளர்ச்சியை முன்னிருந்து நடத்துபவர்கள், சில சமூகக் கட்டுப்பாட்டை தீவிரமாகவும், முழுமையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் இயங்கி வரும், 529 உலைகளிலும், மிகவும் அதிநவீனமான பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது, கூடங்குளம் அணு உலைகள் என, எத்தனை விஞ்ஞான ஆதாரங்களுடன் நிரூபித்தாலும், அவர்கள் காது கொடுத்து கேட்கத் தயாரில்லை.தமிழகத்திலேயே, கல்பாக்கத்தில், 25 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வரும், தலைசிறந்த உதாரணத்தை நினைத்துப் பார்க்கவே அவர்கள் விரும்பவில்லை.கல்பாக்கம் உலையைச் சுற்றி, 40 ஆயிரம் மக்கள், எந்த பாதிப்புமின்றி கடந்த கால் நூற்றாண்டு காலமாக வசித்து வருவதையோ, உலையைச் சுற்றி எப்போதும் போல், மீனவர்கள் மீன் பிடித்து வாழ்ந்து வருவதையோ, ஒரு சாதாரண நிர்தட்சயமான உண்மை என்று, கண்டுகொள்ள மறுக்கின்றனர்.

பற்பல லெட்டர்பேடு இயக்கங்கள், இந்த சாக்கில் மக்களைத் தூண்டி விட்டு, தங்களை முன்னிறுத்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.இங்குள்ள அரசியல் கட்சிகள் எல்லாவற்றுக்கும், இவையெல்லாம் நன்றாகத் தெரியும். ஆனால், ஓட்டு ஆதாயங்களுக்காக, கூடங்குளம் விவகாரங்களை அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றன. பாமரத்தனமான பயத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.உண்மைகள் மறைக்கப்பட்டு, பொய்ப் பிரசாரங்கள் பேயாட்டம் ஆடுகின்றன. இதனால், மின் பற்றாக்குறையால் அல்லலுறும் அப்பாவித் தமிழக மக்கள் தான், ஐயோ பாவம்!
இ-மெயில்: karuramiah70@yahoo.in

க.இராமையா -இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் தேசிய உறுப்பினர்

நன்றி தினமலர்

டிஸ்கி} கூடன் குளம் பற்றி விழிப்புணர்வு பதிவுகளை நமது வலைப்பூ தொடர்ந்து பதிந்து வருகிறது. சொந்தமாக பதிவிட இயலாவிடுனும் வேறு தோட்டத்தில் விளைந்த பூக்கள் இங்கே பூக்கவிடுவதில் மகிழ்கிறேன்! நன்றி!

Comments

  1. நல்ல பதிவு, வித்யாசமான அணுகுமுறையில் உண்மை வெளிவந்திருக்கிறது.

    ReplyDelete
  2. மக்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கலாம் . ஆனால் அந்த அச்சம் எந்த வகையிலும் நீங்கி விட கூடாது என்பது தான் இப்பொழுது போராட்ட தலைவர்களின் குறிக்கோள் . அது தான் பல லெட்டர் பேடுகள் களத்தில் குதிக்க காரணம் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  3. sir
    அப்துல்கலாம் நேரில் சென்று பார்வை செய்து இருக்கிறார்,

    அவர் கூறியது நிலநடுக்கம் ,சுனாமி ....போன்ற இயற்கை உபாதைகள் இருக்காது என்று தான் கூடங்குளம் தேர்உ செய்ய பட்டது ,,,,,,,

    ஆனால் 2004 ம் ஆண்டு சுனாமி வந்தது நாம் அறிந்ததே ...
    இதை போல் மீண்டும் வராது என்பதை யாராவது நிரூபிக்க முடிஉமா............................

    vigi,
    kanyakumari,
    j.vigi@yahoo.com...........

    ReplyDelete
  4. அன்பு நண்பர் விஜி உங்கள் கேள்வி நியாயமானது தான் . கொஞ்சம் இந்த பகுதியை பாருங்கள் உங்கள் சந்தேகம் தெளிவாகும் .
    http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html

    ReplyDelete
  5. நீங்க சொல்றது எல்லாம் சரிதான்...
    அந்தஅணுமின் நிலையம் செயல் பாட ஆரம்பித்தால்
    எங்கழுடாய வாழ்க்கை பாதிக்கப்படும் ...அதை உங்களை போல் உள்ள ஆட்கள் புரிந்து கொள்ள வேண்டும்....அங்கு பிடிக்கும் மீனை நான் சாப்பிடுவேன் ....வெளிமநிலத்துக்கு ஏற்றுமத்தியாகும்
    மீனின் எண்ணிக்கை வெஹுவஹ பாதிக்கப்படும்.. அணுமின் நிலையத்தை அடுத்து
    சின்ன முட்டம் chinna muttam fishing harbour

    உள்ளது அதை விட்டு போஹா சொன்னால் நாங்க எங்கு போவது.......கடலை விட்டு 10 கிலோமீட்டேர் தொலைவில் நாங்கள் போய் என்ன செய்வது ......நீங்க எங்கோ இருந்து விட்டு எப்படி வேண்டுமானாலும் பேசலாம் .... அங்கு என்ன நடக்கும் எண்பது அங்கு வாசிக்கும் மக்களுக்கு தான் அறிவார்கள் .......
    இனிமேலும் இதை போல் பத்திவை படிக்க நேர்தல் ................................

    ....விஜி....
    கன்னியாகுமரி.............

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!