எலி வளர்த்த சிங்க ராஜா! பாப்பா மலர்!


எலி வளர்த்த சிங்க ராஜா!

காடூர் என்ற காட்டில் சிங்கப்பன் என்ற சிங்க ராஜா ஆட்சி செய்து வந்தார். ஒரு சமயம் சிங்கராஜா வேட்டைக்கு போனபோது அவருக்கு வந்தது ஆபத்து. வேடுவன் ஒருவன் விரித்த வலையில் வசமாக சிக்கிக் கொண்டார் சிங்கராஜா!
   வலையிலிருந்து வெளியேற முடியாமல் உறுமினார் சிங்க ராஜா! பாவம் வேடன் பறவைகளுக்குத் தான் வலை விரித்தான். ஆனால் அகப்பட்டது சிங்க ராஜா! சிங்கராஜாவின் சீறலைக் கண்டு பயந்த அவன் ஓடிவிட்டான்.
ஏய் ஓடாதே என்னை காப்பாற்று வெளியில் எடுத்துவிடு என்று சிங்கமொழியில் கூறியது அவனுக்கு பயத்தை மேலும் உண்டாக்க திரும்பிக் கூட பாராமல் சென்று விட்டான்.
   அப்போது அந்த பக்கமாக சின்ன எலி ஒன்று வந்தது. வலையில் சிக்கிய ராஜாவை வணங்கிய அது ராஜா இப்படி மாட்டிக் கொண்டு விட்டீர்களே நான் உங்களை விடுவிக்கிறேன் என்று பற்களால் வலையை கடித்து குதறி ராஜாவை விடுவித்தது.
  சிங்க ராஜாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் மிதந்தது. அன்பு எலியே உருவத்தில் சிறியவனாயினும் இன்று நீ செய்த உதவி மிகவும் பெரியது. அத்துடன் மட்டுமல்ல மகத்தானது. என்னை காப்பாற்றிய உனக்கு இல்லை இல்லை உன் இனத்திற்கே நன்மை செய்யப் போகிறேன். இன்று முதல் நீங்கள் அச்சமின்றி வாழலாம்! யாரும் உங்களை வேட்டையாடவோ பிடிக்கவோ கூடாது என்று உத்தரவிடப் போகிறேன் என்றது.
 மறுநாள் சிங்க ராஜா அரசவையில் தன்னை காப்பாற்றிய எலிக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தார்.எலிகளை யாரும் கொல்லவோ வேட்டை ஆடவோ கூடாது என்று தடை விதித்தார். அத்துடன் அவ்வாறு செய்வது தேசத்துரோகம்! அவ்வாறு செய்பவர்கள் ராஜாவுக்கு இரை ஆக்கப் படுவார்கள் என்று அறிவித்தார்.
    இதைக் கேட்டு அனைத்து விலங்குகளும் திடுக்கிட்டன. இது என்ன இந்த சிங்க ராஜாவின் புத்தி இப்படி போகிறதே?இதனால் எலிகள் பெருகி நாட்டுக்கு நாசம் விளையுமே என்று மனதில் பேசிக் கொண்டன. ஆயினும் அரச கட்ட்ளையாச்சே மீற முடியாது தம் தலை விதியை நொந்து கொண்டன.
  ராஜாவின் அறிவிப்பினால் எலிகளுக்கு சந்தோஷம் உண்டாயிற்று! எதிரிகளே இல்லாததால் இஷ்டத்திற்கு ஆட்டம் போட்டன. மிருகங்களின் வீடுகளில் கொள்ளைஅடித்தன. பொருள்களை நாசம் செய்தன. இவைகளின் ஆட்டம் பூனைகளுக்கும் பாம்புகளுக்கும் தெரிய வந்தபோதும் ஒண்றும் செய்ய முடியாமல் தவித்தன. பூனைகளின் முதுகிலே சவாரி செய்ய ஆரம்பித்தன எலிகள்.ஆனால் அவை ராஜாவின் அரண்மணைக்குள் மட்டும் நுழையவே இல்லை!.
   எல்லா மிருகங்களும் மந்திரியான நரியிடம் சென்று தாங்கள் தான் எங்களை எலியின் அட்டூழியத்திலிருந்து காக்க வேண்டும் என்று முறையிட்டன. நரியும் எலிகளின் ஆதிக்கம் பெருகி விட்டது இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று மிருகங்களை வழி அனுப்பி வைத்தது.
  பின்னர் அது எலிகளின் தலைவனை சந்தித்து எலிகளின் தலைவா! சிங்க ராஜா தங்களின் இனத்திற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் அரண்மணைக்கு விருந்துக்கு அழைத்துள்ளார் தாங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியது. எலிகளின் தலைவனும் விருந்துக்கு வருவதாக ஒப்புக் கொண்டது.
   மறுநாள் எலிகள் படையெடுத்து வருவதாக சிங்கத்திற்கு தகவல் தந்தது நரி!. என்ன எலிகள் படையெடுப்பா என் மீதா சிரிப்பாக உள்ளது என்றது சிங்கம்.
   உண்மைதான் மகாராஜா! எலிகளுக்கு தாங்கள் அளித்த சலுகைகள் கண்ணைக் கட்டி விட்டது. அகம்பாவத்தில் தன்னைக் கொல்ல யாருமில்லை என்று உங்களை விரட்டி விட்டு ஆட்சியில் அமர ஆசைப்படுகிறது அதனால் தான் படையுடன் வருகிறது என்றது நரி
   நரியாரே நீர் சொல்வது உண்மையா? என்று நம்பாமல் கேட்டது சிங்கம். நம்பாவிட்டால் உப்பரிகையில் இருந்து பாருங்கள்! எலிகள் திரண்டு வருவது தெரியும் என்றுசொன்ன நரி எதற்கும் நான் அவர்களை எச்சரித்து வருகிறேன் என்று சென்றது.
   எலிகளிடம் சென்ற நரி இது உங்கள் வீடு விருந்தினரான உங்களை கவுரவிப்பதில் மகாராஜா மகிழ்கிறார் எனவே இங்கே உங்கள் இஷ்டம் போல தேவையானதை கேட்காமலேயே எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் உள்ளே நுழைந்ததும் மஹாராஜாவின் மீது தாவி முத்தமிட வேண்டும். அது தான் மஹாராஜாவிற்கு நண்பர்களிடம் மிகவும் பிடிக்கும். என்று சொல்லிவிட்டு சிங்கத்திடம் சென்றது.
   மஹாராஜா! அந்த எலிகள் அட்டகாசம் அடங்காது போலுல்லது யாரடா உங்கள் அரசன் அவன் மீது தாவி குரல் வளையை கடித்து விடுகிறேன் பாருங்கள் என்று அறை கூவல் விடுக்கின்றன மகாராஜா! அத்துடன் நமது அரண்மனையையும் சூறையாடி வருகிறது பாருங்கள் என்று ஏற்றி விட்டது.
   எட்டி பார்த்த சிங்கத்திற்கு எலிகளின் அட்டகாசம் எரிச்சலை தந்தது. உண்ட வீட்டிற்கா இரண்டகம் செய்கின்றன இந்த எலிகள்! அவைகளை என்ன செய்கிறேன் என்றுவெளியே பாய்ந்தது. அதே சமயம் அதோ ராஜா அவரை தழுவி முத்தமிடுங்கள் என்று எலிகள் சிங்கத்தின் மீது தாவின.
  ஐயோ என்னை கொல்ல வருகின்றனவே இந்த எலிகள்! இதை கொல்லுங்கள்! என்று கத்தினார் சிங்கராஜா.
  மறுநிமிடம் காத்திருந்த பூனைப் படை எலிகளின் மீது பாய்ந்து கடித்து குதற சிதறி ஓடியது எலிகள் கூட்டம்.
    நல்ல வேலை நான் காப்பாற்ற பட்டேன் என்னை காப்பாற்றிய பூனைகளுக்கு ஏதாவது என்று வாய் திறந்த ராஜாவின் வாய் பொத்தினாள் சிங்கராணி!.
    நிம்மதி பெருமூச்சு விட்டார் மந்திரி நரி!.

அறவுரை!.

சிறுபஞ்ச மூலம்

வெந்தீக்கான் வெண்ணெய் மெழுகுநீர் சேர்மண் உப்பு
அந்த மகன் சார்ந்த தந்தைஎன்று ஐந்தினுள்
ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயின் சிறிதெனினும்
குன்றுபோல் கூடும் பயன்.

விளக்கம்} தீயைக் கண்டு உருகும் வெண்ணெய், மெழுகு, நீரினால் கரையும் மண்ணும் உப்பும். அழகுடைய மகனைத் தழுவிய தந்தை என்ற இந்த ஐந்து செயல்களைப் போல் யாசிப்பவனைக் கண்டு இரங்கி ஒருவன் உதவினால் அது சிறியதாயினும் மலை போன்றது.
 
உங்களுக்குத் தெரியுமா?
இந்தோனேசியாவின் பழைய பெயர் “சாவகத் தீவு” 




தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. குழந்தைகளுக்கு பிடித்த கதை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!