கூடங்குளம் பிரச்சனை: 1 அறிக்கை.. 3 மாங்காய்களுக்கு கேப்டன் குறி!

சென்னை: கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, இதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாற்றி, போராட்டத்தை ஒடுக்க, அடக்கு முறையைக் கையாள மத்திய அரசு திட்டமிடுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தக்கோரி, அப்பகுதி மக்கள் இரண்டு மாதங்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நான் அங்கு சென்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சந்தித்தேன். மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து, மத்திய அரசு இப்பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

மக்களின் அச்சம் தீரும் வரை, அணு மின் நிலையப் பணிகளை நிறுத்த வேண்டும் எனவும், பிரதமரை அனைத்துக் கட்சியினரும், போராட்டக் குழுவினரும் சந்திப்பது எனவும், தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு, இப் பிரச்சனை குறித்து மக்களிடம் விவாதிப்பதற்காக, நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. ஆனால், போராட்டக் குழுவினர் இக்குழுவை ஏற்கவில்லை.

இதற்கிடையில், அணு மின் நிலையப் பராமரிப்புப் பணிக்காகச் செல்லும் ஊழியர்களை, போராட்டக் குழுவினர் தடுப்பதாகவும், அமைதியாகப் போராட்டம் நடத்துவதாகக் கூறிவிட்டு, வன்முறை உருவாகும் சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர் எனவும் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும் போராட்டம் வேறு திசைக்கு மாறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்தே மத்திய அரசு இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாற்றி, போராட்டத்தை ஒடுக்க, அடக்கு முறையைக் கையாளப் போகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

மக்களிடம் பேசி, பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமே தவிர, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி சிக்கலை மேலும், மேலும் வலுவடையச் செய்யும் பணியில், மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக இந்த பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கை மூலம் ஒரே கல்லில் 3 மாங்காய் அடிக்க முயன்றுள்ளார் விஜய்காந்த்.

மாங்காய் 1- கூடங்குளம் பிரச்சனையில் மாநில அரசு (அதிமுக) தான் சரியான வழிமுறையை பின்பற்றுகிறது என்று கூறி, அந்தக் கட்சியுடன் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட விரிசலை போக்க முயற்சிப்பது.

மாங்காய் 2- முதல்வர் ஜெயலலிதாவின் மத்திய அரசு எதிர்ப்பு நிலையை தானும் கடைபிடிப்பதாகக் காட்டிக் கொள்வது. இதன்மூலம், நாடாளுமன்றத் தேர்தல் வரை அதிமுக கூட்டணியிலேயே நீடிக்க முயல்வது.

மாங்காய் 3- போராட்டம் நடத்தும் மக்களுக்கு முழு ஆதரவு தருவதாய் காட்டிக்கொள்வது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்கு கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டுவிட்டு, உயர் நீதிமன்றத்தில் அவர்களது கருணை மனுக்களை ஏற்கக் கூடாது என்று கூறியுள்ள அதிமுக அரசின் நிலைப்பாடு குறித்து விஜய்காந்தின் கருத்து என்னவோ?.

இந்த விஷயத்தில் அரசின் நிலையை எதிர்த்தால் எதிர்காலத்தில் அதிமுக கூட்டணி தொடர்வதில் சிக்கல் வரலாம் என்பதால், இது குறித்து விஜய்காந்த் இதுவரை வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் விஜயகாந்த் இதுவரை எதிலுமே ஒரு நிலையான, ஸ்திரமான, வெளிப்படையான கொள்கைக்கு வரவே இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

நன்றி தட்ஸ் தமிழ்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!