மழை! கவிதை !


 மழை!
  (தமிழ்த்தோட்டம் ஜுன் மாத போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற என் கவிதை! உங்களின் பார்வைக்கு! படித்து ருசித்து பின்னூட்டம் இடுங்களேன்! )

   
 ஒவ்வொரு மழையும் நம்முள்
ஏதாவது ஞாபகங்களை
கிளறிவிட்டு போகிறது!
மழையின் ஞாபகங்கள் சுகமானவை!
அம்மனுக்கு கொடை போட்ட இரவில் பொத்துக்கொண்ட
மழையில் ஆடிய சாமியாடிகளை குளிரில் ஆடுகிறாரா?
அருள்வந்து ஆடுகிறாரா என்று இளவட்டங்கள் கேலி பேசிய கோடை மழை!

நண்பனுக்கு கல்யாணமென்று நாலுமணிக்கு கிளம்புகையில்

நனைத்து எடுத்த திடீர் மழை!

வெள்ளம் ஓடுகையில் நிவாரணம் வாங்க நீண்டவரிசையில்

நின்றதை நினைவூட்டும் ஐப்பசி மழை!

பள்ளியில் படிக்கையில் புயல் காத்து அடிக்குதுன்னு

பாதி வேளையில் வீட்டுக்கு அனுப்பிய
கார்த்திகை காத்து மழை!
இடித்து பெய்யும் மழையோ என்றோ இடிவிழுந்து
இறந்து போன ராமசாமி தாத்தாவை நினைக்க வைக்கிறது!

தூறலில் நனைகையில் தாய் சொல்ல கேட்காமல்

துள்ளி விளையாடிய இளமைக் கால மழை நினைவில்!
இரவெல்லாம் பெய்யும் மழை என்றோ அலுவலகத்தில்
மாட்டிக்கொண்ட ஒர் மழை இரவை மனக்கண்ணில் காட்டுகிறது!

சுற்றுலா செல்கையில் பெய்த மழை

தேர்வெழுத செல்கையில் பெய்த மழை!
கோவில் கும்பாபிஷெகத்தில் பெய்த மழை!
பிரசவத்தின் போதுபெய்த மழை!
பெண்பார்க்க சென்ற போது பெய்த மழை!
என்று எத்தனையோ மழைகள் என் வாழ்வில் வந்து போனாலும்
மேகங்கள் கூடும் போதெல்லாம்
மீண்டும் கூடுகின்றன மெல்ல மழைக்கால நினைவுகள்!

எத்தனையோ பேரின் புதைந்த ஞாபகங்களை

கிளறி சுகமாக சென்று விடுகிறது ஓர் மழை!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப் படுத்துங்கள் வாசகர்களே! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2