ஆண்டார்குப்பம் படையப்பா!

செவ்வாயும்! முருகனும்!

செவ்வாய்கிழமை என்றாலே பலரும் விலக்கி விடுவார்கள். இதை சுபகாரியங்கள் செய்ய மாட்டார்கள்.பணம் கொடுக்கல் வாங்கல் செய்ய மாட்டார்கள்.இன்னும் சிலர் வெளியூர் பயணம் கூட தவிர்த்து விடுவார்கள். அப்படி செவ்வாய் ஒதுக்கப்பட்டாலும் ஆன்மீகத்தில் செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்றே அழைக்கப்படுகிறது.
   செவ்வாய் கிழமை ஆறுமுக கடவுளுக்கு உகந்த நாள் ஆகும். இதனால் செவ்வாய் கிழமைகளில் முருகர் ஆலயங்களில் விசேஷமாய் இருக்கும் கூட்டம் அதிகமாக காணப்படும். கிரகங்களில் அங்காரகன் என்பதே செவ்வாய் என்று அழைக்கப்படுகிறது.அங்காரகனின் அதி தேவதை முருகப் பெருமான். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களை நீக்க வேண்டுமானால் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
    எனவே செவ்வாய் கிழமைமுருகப் பெருமானுக்குரிய நாளாக கருதப்படுகிறது. இந்த செவ்வாய் கிழமைகளில் சஷ்டி திதியும் கிருத்திகையும் வந்தால் இன்னும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஜாதகத்தில் அங்காரக தோஷம் உடையவர்கள், செவ்வாய் தசை செவ்வாய் புத்தி நடப்பவர்கள் செவ்வாய் கிழமைகளில் அருகில் உள்ள முருக பெருமான் ஆலயங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் அவர்களுக்கு தீய பலன்கள் குறைந்து நன்மைகள் ஏற்படும்.

  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள ஆண்டார்குப்பம் பால சுப்ரமண்ய சுவாமியை ஆறு வாரங்கள் தொடர்ந்து செவ்வாய் கிழமைகளில் தரிசித்து வழிபாடு செய்வதால் புத்திரபாக்கியம் கிடைக்கிறது. இந்த முருகர் பிரம்மனை சிறைவைத்த கோலத்தில் பிரம்ம சாஸ்தாவாக கைகளை இடுப்பில் ஊன்றி எதிரே பிரம்மனை பார்த்தபடி காட்சி அளிக்கிறார். அருணகிரி நாதர் பாடிய  தலமான இத்தலம் பழம் பெருமை வாய்ந்தது.
 
பெரும்பாலும் எல்லா முருகர் ஆலயங்களிலும் வேலும் மயிலும் காணப்படும். ஆண்டார்குப்பம் முருகரிடத்தில் வேலும் மயிலும் இல்லை. பிரம்ம சாஸ்தாவான இவர் தனது இருகைகளையும் தொடையில் வைத்தபடி நின்று அருள் பாலிக்கிறார். பிரம்மனை சிறைவைத்து படைப்பு தொழிலை தானே நடத்தியமையால் படையப்பா என்று அழைக்கப்படுகிறார்.
  முற்பகலில் பாலகனாகவும் நடுப்பகலில் இளைஞனாகவும் பிற்பகலில் முதியவனாகவும் காட்சி தருவதுஆண்டார்குப்பம் முருகனின் தனிச்சிறப்பு.
    இத்தலத்திற்கு அருகாமையிலேயே இன்னோரு அருமையான முருகர் க்ஷேத்திரம் அமைந்துள்ளது. சிறுவாபுரி என்று அழைக்கபடும் சின்னம் பேடு உறைகின்ற முருகரும் பாலசுப்ரமணியர் தான். இவரை ஆறு செவ்வாய் கிழமைகள் தொடர்ந்து தரிசித்து வழிபாடு செய்வதால் திருமணமும் வீடு கட்டும் யோகமும் வந்து சேருகிறது.

   பொன்னேரி அருகில் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பெரும்பேடு என்னும் தலம் இங்கு வள்ளி தேவசேனாவுடன் ஆறரை அடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் முத்துக்குமாரசாமி என்ற நாமம் தாங்கி அருள் பாலிக்கிறார். இவர் பூமியின் அடியிலிருந்து கிடைத்தவர். இங்கு வள்ளி தேவசேனை இடம் மாறி காட்சி அளிப்பது சிறப்பு.

பொன்னேரி அருகில் உள்ள காட்டாவூர் என்னும் தலத்திலும் ஆறுமுகசாமி பாலசுப்ரமண்யராக சிறப்பாக அருள்பாலிக்கிறார்.

முருகர் காயத்ரி மந்திரம்:

     ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி:
     தன்ன ஸ்கந்த  ப்ரசோதயாத்!

     ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா சேனாய தீமஹி:
     தன்ன ஷண்முக ப்ரசோதயாத்!

செவ்வாயின் உக்கிரத்தை தவிர்க்க செவ்விதழோன் ஆறுமுகனை வழிபட்டு நலம் சேர்ப்போமாக!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2