அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?

இருபது ஆண்டுகளாக கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம், வெற்றிகரமாக உற்பத்தியை துவங்க உள்ள நிலையில், திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அணு உலைகளை பாதுகாக்க வேண்டிய நிலை, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு என்ற பெயரில், போராட்டத்திற்கு பின், அரசியல் பின்னணியும் உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க, 1988ல் இந்திய பிரதமர் ராஜிவ் மற்றும் ரஷ்ய அதிபர் கோர்பசேவ் ஆகியோர் முன்பு கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொண்டு, ஒரு வழியாக வி.வி.இ.ஆர்.,-1000 என்ற தொழில்நுட்பத்துடன், பணிகள் துவங்கப்பட்டன.இந்திய அணுமின் கழகத்தின், 16 ஆயிரத்து 700 கோடி மதிப்பில் திட்டங்கள் துவங்கின. இரண்டு யூனிட்களில், தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. கடந்த 2001ல், அணு நிலைய கட்டுமான பணிகள் துவங்கி, 2007ல் முடிந்தன. பின், தொழில்நுட்ப ரீதியான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு, 2007ல் கொதிகலன் நிறுவப்பட்டது. அணு மின் உற்பத்திக்கான கருவிகள், 2008ல் நிறுவப்பட்டு, எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன.

அடுத்த மாதம் உற்பத்தி துவக்கம்: தற்போது, கட்டுமான பணிகள், கருவிகள் பொருத்துதல் என, அனைத்தும் முடிந்து, முதல் யூனிட்டில் மின் உற்பத்தி செய்வதற்கான ஒத்திகை பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் முதல், ஒரு யூனிட்டிலும், அடுத்த ஆண்டில், இரண்டாம் யூனிட்டிலும் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக, கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இங்குள்ள மக்களும், அரசியல்வாதிகளும், சில தன்னார்வ அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இந்த போராட்டத்தில், உள்ளூரை சேர்ந்த ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள், மூன்று கன்னியாஸ்திரிகள், 20 பெண்கள் உட்பட 127 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்னையில், மாநில அரசு உடனடியாக தலையிட வேண்டுமென, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

எதிர்ப்பின் பின்னணி என்ன?கடந்த இருபது ஆண்டுகளாக நடந்த கட்டுமான திட்டத்திற்கு, திடீரென எதிர்ப்பு கிளம்பியது ஏன்? என்ற கேள்வி, அனைவருக்கும் எழுந்துள்ளது. அரசியல் ரீதியாக போராட்டம் நடப்பதாக, அணுமின் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசியல் கட்சிகளும், உள்ளூர் பிரமுகர்கள் சிலரும், போராட்டத்திற்கு பெரிய அளவில் பங்களிப்பு கொடுத்து வருகின்றனர்.நாட்டின் வளர்ச்சி பெரிதா? அல்லது நாட்டு மக்களின் பாதுகாப்பு பெரிதா? என்றால், முதலில் மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம். எனவே, மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில், கூடங்குளம் அணு மின்நிலையம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்றாக கருதப்படுகிறது. "ஒரே நேரத்தில், எந்த சுற்றுச்சூழல் சீர்கேடும் இல்லாமல், 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உகந்த திட்டம்' என, கூறப்படுகிறது. புதிய கூடங்குளம் அணு மின்நிலையத்தால், மக்களுக்கோ, சுற்றுப்புறத்திற்கோ எந்த ஆபத்தும் இல்லை' என, அணுமின் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட திட்டம், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு, வெளிநாட்டு அதிபர்கள் பேசி, தொழில்நுட்பம் பறிமாறி, கட்டுமான பணிகள் மேற்கொண்ட பின், வளர்ச்சியை எட்ட வேண்டிய நேரத்தில், ஏன் இந்த திட்டம் என்ற போராட்டங்கள் வெடித்துள்ளன.

இன்றைய சிக்கலான பொருளாதார நிலையில், 16ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு என்பது மிக சாதாரணமானதல்ல. இந்த முதலீட்டையும், நாட்டு வளர்ச்சியின் முக்கிய நடவடிக்கையையும், ஒட்டுமொத்தமாக அரசியல் பின்னணி சீர்குலைக்கிறதோ என்று, நடுநிலையாளர்கள் கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மக்களிடம் தேவையற்ற அச்சத்தை உருவாக்கி விட்டு, போராட்டங்கள் நடப்பதாக ஒரு தரப்பு கூறுகிறது. இதில், எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல், சில அரசியல் கட்சிகள் போராட்ட பின்னணிக்குள் நுழைந்து, அரசியல் லாபம் தேடுவது திட்டவட்டமாக தெரிகிறது.அரசியல்வாதிகள் நுழைந்ததால், இதுவரை மக்களின் உயிர்பாதுகாப்பு தொடர்பான போராட்டமானது, நடுநிலையை கடந்து, தற்போது, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு, நெருக்கடி தரும் அரசியல் போராட்டமாக மாறியுள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதனால், இதுவரை நடந்த போராட்டத்தின் நோக்கமும், நம்பகத்தன்மையும் சந்தேகத்துக்குரியதாகியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஆபத்தில்லை : திட்ட இயக்குனர் விளக்கம்:ஆபத்து... ஆபத்து என்று, அச்சத்துடன் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இப்படி, மக்கள் அச்சப்படும் அளவுக்கு, இங்கு ஆபத்து உள்ளதா என்பது குறித்து, கூடங்குளம் அணு மின்நிலைய திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜியிடம் கேட்டபோது, கூறியதாவது:கூடங்குளம் அணு மின்நிலையம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன், ஒப்பந்தம் செய்யப்பட்டு, பார்த்து, பார்த்து, உருவாக்கப்பட்ட திட்டம். இதற்காக நில எடுப்பு செய்தபோதும், கட்டுமான பணிகள் துவங்கியபோதும், பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்களுடன், கிராம மக்கள் மற்றும் அமைப்புகளை அழைத்து, பொது கருத்து கேட்பு மற்றும் விளக்கமளிக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.இதில், அனைவரின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தோம். உலகில் எந்த இடத்திலும் இல்லாத அளவுக்கு, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் அடங்கிய மிகப்பெரிய பாதுகாப்பு திட்டத்தை தயாரித்து, அதன்படி கூடங்குளம் மின்நிலையத்தில் செயல்படுத்தியுள்ளோம்.எப்படியெல்லாம் விபத்து நடக்கலாம் என, பல கோணங்களில் சிந்தித்து, எந்த நிகழ்வானாலும், கதிர்வீச்சோ, கட்டடத்திற்கு பாதிப்போ, சுற்றுப்புற ஊர்களுக்கு சிக்கலோ ஏற்படாத அளவுக்கு நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.இத்திட்டத்தால், கடல் வாழ் உயிரினங்களுக்கோ, மீன்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. கடலுக்கும், அணுமின் திட்டத்திற்கோ தொடர்பில்லை. மீன்வளத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதனால் தான் மீன்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை, கடல் பாதுகாப்புத்துறை உள்ளிட்டவை சான்றிதழ் தந்துள்ளன.அணு உலையை ஒட்டிய கடற் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை இல்லை. அணு உலை பாதுகாப்புக்காக, அதன் கட்டடத்தில் இருந்து, 500 மீட்டர் தூரம் மட்டுமே பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கூட மீன் மற்றும் கடல்வாழ் உயிரின நடமாட்டம் உண்டு.இந்த திட்டம் மிகசிறந்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டதால், கிராம மக்கள் மிக நிம்மதியாக வாழமுடியும். சுற்றுச்சூழல் பிரச்னையோ, அணுக்கழிவோ ஏற்படாது. இத்திட்டம் வந்தால், கூடங்குளம் மற்றும் அதை சுற்றிய பகுதிகள் பெரியஅளவில் வளர்ச்சியடையும். கதிர்வீச்சு போன்ற ஆபத்துகள் இல்லாத உயர்ந்த தரம் கொண்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட திட்டம், என்பதால் இதை மற்ற நாடுகளும் கடைபிடிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பாதிப்பில்லாத விபத்துகள் : அணு உலைகளை பொறுத்தவரை, சுனாமி, கடல்சீற்றம், வெள்ளம், கனமழை, சூறாவளி, நிலநடுக்கம், பயங்கரவாத தாக்குதல், தொழில்நுட்ப செயலிழப்பு, தீ விபத்து போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இதை கருத்தில் கொண்டுதான், அணு மின்நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. சென்னை கல்பாக்கம் அணுமின்நிலையம் இருந்த பகுதியில், 2004ல் சுனாமி தாக்குதல் ஏற்பட்டது. ஆனால், தானாக செயலிழக்கும் கருவிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அணு உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல், 1993ல் உத்தரப்பிரதேசம் நரோரா அணுமின் நிலையத்தில், கொதிகலனில் தீ விபத்து ஏற்பட்டது. இதிலும், எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படவில்லை. குஜராத் காக்ராபர் அணுமின்நிலையத்தில், 1994ல் வெள்ள தாக்குதல் ஏற்பட்டது. இதிலும், கதிர்வீச்சு உள்ளிட்ட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த அளவிற்கு இந்திய அணுமின் நிலையங்கள் மிக பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அணுசக்தி பயன்பாட்டை பொறுத்தவரை, இந்திய தொழில்நுட்பம், உலக அளவில், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளே பொறாமைப்படும் அளவுக்கு சிறப்பாக உள்ளது.

தமிழக மின்பற்றாக்குறையை தீர்க்கும் கூடங்குளம் : கூடங்குளம் அணு மின் நிலையம் வந்தால், தமிழகத்திற்கு என்ன பயன் என்பது குறித்து, தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:தமிழகத்திற்கு, 3,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. மின்பற்றாக்குறையால், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வர்த்தமும், வளர்ச்சி திட்டங்களும் முடங்கியுள்ளன. இதை சரிசெய்ய மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால், அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள், மின் வெட்டை நீக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய மின்திட்டங்கள் இயங்குவதன் மூலம், கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என, தமிழக மின்துறை கணித்துள்ளது.மத்திய அரசின் தொகுப்பிலிருந்து கூடுதலாக 1,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு தர, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வேண்டுமென்றால், புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதில், கூடங்குளம் அணு மின்நிலையமும் ஒன்று. அனைத்து பணிகளும் முடிந்து, அடுத்த மாதத்தில் உற்பத்தி துவங்கும் நிலையில், தமிழக மின்துறைக்கு, முதற்கட்டமாக 462 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அடுத்த ஆண்டில், கூடுதலாக 462 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் மட்டும், தமிழக மின்பற்றாக்குறையில், 50 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.ஆனால், திட்டமிட்டு சிலர் திட்டங்களை முடக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு : கடந்த மார்ச் மாதம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலை வெடித்து சிதறியதையடுத்து, உலகம் முழுவதும் அனைத்து அணு உலைகளுக்கும், கூடுதல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ள, அனைத்து நாடுகளும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. இந்தியாவில் அணு உலைகளை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம்(ஏ.இ.ஆர்.பி.,) கடந்த சில தினங்களுக்கு முன், மத்திய அரசிடம் தனது வழிகாட்டுதல் அறிக்கையை அளித்துள்ளது. இது, இந்திய அணுசக்தி மின்கழகத்தின் மூலம், அனைத்து அணு மின்நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:இந்தியாவிலுள்ள, 20 அணு மின்நிலையங்களில், இயக்கத்தில் உள்ள 18 நிலையங்களின் தன்மை ஆய்வு செய்யப்பட்டது. இதில், பழமையான மகாராஷ்டிரா தாராப்பூர் அணு நிலையம் மற்றும் கடலை ஒட்டி இருக்கும் கல்பாக்கம் அணுமின்நிலையம் ஆகியவற்றிற்கு, கூடுதல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.கடந்த, 2004ல் சுனாமி ஏற்பட்ட பின், கல்பாக்கம் அணு மின்நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில், கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையத்தில் உள்ள வெப்பமூட்டும்"ரியாக்டர்' உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இது, நிலநடுக்கம் மற்றும் சுனாமி அபாயம் உள்ள சுமத்ரா தீவில் ஏற்படும் மாற்றங்களால், பாதிக்கப்படும் பகுதி என்பதால், கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மற்ற அணு உலைகளுக்கு எந்த விதமான பாதிப்புகளுக்கும் வாய்ப்பில்லை.

இந்திய அணு உலைகள், கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியிலிருந்து, மேற்கு கடல் பகுதியில் 800 கிலோமீட்டர் தூரத்திலும், கிழக்கு கடல் பகுதியிலிருந்து, 1,300 கிலோமீட்டர் தூரத்திலும், அமைந்துள்ளதால், சுனாமி அபாயம் இல்லை. எனவே, ஜப்பானை போன்ற நிலை இங்கு ஏற்படாது.ஆனாலும், ஆய்வு மதிப்பீடுகளை தாண்டி, இயற்கை பேரிடர் ஏற்பட்டால், சமாளிக்ககூடிய வகையில், அணு உலைகளின் கட்டடங்கள், அமைப்புகள், குளிர்விப்பான், வெப்பமூட்டும் கருவி, தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றை உயர்தரமான ஆய்வு செய்து அமைக்க வேண்டும். கடலுக்கருகில் வைக்கப்படும் குளிர்விப்பான்களை பாதுகாக்க வேண்டும்.தற்போதைய நிலையில், இந்திய அணு உலைகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. அவற்றால் தீங்கு ஏற்படாத தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் ஏற்பாடுகள் செய்து, சர்வதேச அளவில், உச்சபட்ச கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக, இந்திய அணு உலைகள் செயல்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கம், சுனாமியையும் சமாளிக்கும் :

இந்திய அணுமின் சக்தி கழகம் மற்றும் அணுமின் ஒழுங்குமுறை வாரியம் வெளியிட்ட தகவல்கள்:ரிக்டர் அளவில், 6.7க்கும் மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால், இந்திய அணு உலைகள், தானாகவே செயலிழக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த நிலையிலும், கதிர்வீச்சு வெளியேறாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடல் மட்டம் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட அளவு உயர்ந்தால், நிலையம் தானாகவே செயலிழக்கும். இயற்கை பேரிடர் நேரத்தில், பேட்டரி மூலம் கண்காணித்து இயக்கும், நவீன தொழில்நுட்ப கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.அணு உலையை சுற்றி, பொதுமக்களை பாதிக்காமல் இருப்பதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன. கல்பாக்கத்தில், 14 மீட்டருக்கு மேல் கடல்மட்டம் உயர்ந்தால், தானாக நிலையம் செயலிழக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கதிர்வீச்சு வெளியே வராத அளவுக்கு "ரியாக்டர்கள்' பல அடுக்கு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்து, பிரான்ஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்துகளுக்கு பின், அதுபோன்ற நிலை ஏற்பட்டாலும், அதற்கும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர, இந்தியாவில் நிலநடுக்க அபாயம் உள்ள எந்த பகுதியிலோ, அல்லது அதனால் விளைவுகள் ஏற்படும் பகுதியிலோ, இந்திய அணு மின்நிலையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி தினமலர்.
டிஸ்கி  இதுபற்றி கூடல் பாலா, அல்லது அப்பகுதி மக்கள் கருத்துக்களை தெரிய படுத்தினால் உதவியாக இருக்கும். அணு உலைகள் குறித்த விழிப்புணர்வு  மக்களிடையே ஏற்படவேண்டும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

 

Comments

  1. ஐயா .. மிக தெளிவாக சொன்னீர்கள் ... எனக்கு கூட சந்தேகம் உண்டு ... இந்த போராட்டம் அரசியல் காரணமாக வந்திருக்கலாம். ஏன் நான் அப்படி சொல்லுகிறேன் என்றால் 15 வருடங்களாக திரு அப்பாவு அவர்கள் தான் இந்த பகுதியின் MLA . அணு உலைக்கான முதல் அடித்தளம் போடப்பட்டது முதல் முடிவு வரை எல்லாம் அவர்க்கு தெரியும் தானே . ஆனால் இப்பொழுது அணு உலை வேண்டாம் என்கிறார் என்றால் அதன் பின்னணி என்ன...?

    அறிவியல் வல்லுனர்கள் , மாவட்ட நிர்வாகம் , முதல்வர் மற்றும் பிரதமர் எல்லாரும் அறிக்கை கொடுத்த பிறகும் , மக்கள் நம்ப மறுப்பதற்கு காரணம் சில சுயநலவாதிகளின் சதி என்று தான் கூற முடியும். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் , நியாயமாக பாதுகாப்பை குறித்து சந்தேகம் இருந்தால் , எங்களுக்கு விளக்கி சொல்லுங்கள் என்று கேட்கலாமே. இது வரை அப்படி யாரும் கேட்க வில்லை.

    அது மாத்திரமல்ல ... உண்ணா விரதம் மேற்கொண்டிருக்கிற சில பேர் , வரப்போகிற தேர்தலுக்கு கட்சிகளிடம் சீட் கேட்டிருக்கிறார்கள். இதை சுய நலம் என்று சொல்லாமல் எப்படி சொல்ல முடியும்? இவர்கள் வாழ்வதற்காக எம் மக்களை பலி கடா ஆக்குகிறார்கள். ஏன் இப்படி சொல்லுகிறேன் என்று நினைக்கலாம். உண்ணா விரத தலைவர்களுக்கு பல ஊர்களில் தொழில் நடக்கிறது. ஆனால் எம் மக்களை வேலைக்கு செல்ல விடாமல் தடுக்கிறார்கள் . பிறகு காஞ்சி தொட்டி திறந்து அரசுக்கு தலை வலி கொடுக்கிறார்கள்.

    உள்ளாட்சி தேர்தலுக்க்காகவும் , சில அரசியல் சதுரங்ககளுக்க்காகவும் நடக்கும் போர்ரட்டமே தவீர வேறு ஒன்றும் இல்லை .

    தங்களின் அற்புதமான பதிவுக்கு நன்றி நிறைந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  2. காரணமில்லாமல் போராட்டம் நடத்துவதும், அதற்கு ஊடகங்கள் அறிவில்லாமல் ஆதரவு கொடுப்பதும் வழக்கமாகி விட்ட இந்த நேரத்தில் உருப்படியாக எழுதியது நீங்கள் மட்டும் தான் என்று நினைக்கிறேன். நன்றி. India needs clean, cheap energy.

    அணு உலையின் ஆபத்தை விட சென்னைத் தெருக்களில் ஆபத்து அதிகம். கொட்டும் குப்பைகளிலிருந்து வரக்கூடிய நோய்கள் அதிகம். திறந்தவெளிக் கழிவறைகளில் ஆபத்து அதிகம். டேஸ்மேக்கினால் பரம்பரை பரம்பரையாக அழிய நேரிடும். இதையெல்லாம் ஒழிக்க உண்ணாவிரதம் இருங்கடா சோம்பேறிகளா!!!

    ReplyDelete
  3. தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் சகோதரர்கள் இருதயம் அப்பாதுரை

    ReplyDelete
  4. நன்றாக சொன்னீர்கள் .... இந்த சூழலுக்கு ஏற்ற பகிர்வு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!