ஈர்க்குச்சி மனுசன் கதை! பாப்பாமலர்.


ஈர்க்குச்சி மனுசன் கதை!  பாப்பாமலர்.

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஒரு ராஜா ஆண்டு வந்தாராம். அவர் நாட்டுல ஒரு பெரிய மலை இருந்துச்சாம். அந்த மலை அடிவாரத்துல  சின்ன பசங்க எல்லாம் சந்தோஷமா விளையாடிக்கிட்டு இருந்துச்சாம். அவங்க கூட ராஜாவோட பொண்ணும் மந்திரி குமாரனும் விளையாடுவாங்களாம். மந்திரியோட குமாரனுக்கு ஒரு ஈர்க்குச்சி மனுசன் ஃப்ரெண்டாம். இது என்னாடா இது ஈர்க்குச்சி மனுசன்னு பேரே வித்தியாசமா இருக்குன்னு நினைக்கிறீங்களா? அந்த பையன் ரொம்ப ஒல்லியா குச்சி மாதிரி இருந்ததாலே அந்த பேரை வச்சிட்டாங்க! ஒல்லியா இருந்தாலும் புத்திசாலி பையனாம் ஈர்க்குச்சி மனுசன்.
    ஒரு நாளு எல்லோரும் விளையாடிகிட்டு இருக்கும் போது அந்த மலை மேல ஒரு பெரிய பூதம் ஒண்ணு வந்துச்சாம்! பெருத்த வயிறு! பெரிய பெரிய கை கால்கள் கோரமுகமாய் அந்த பூதம் வரவும் எல்லோரும் அலறியடிச்சிட்டு ஓடிட்டாங்களாம். அந்த பூதம் அவங்களை துரத்திய போது இளவரசி மாட்டிகிட்டாங்களாம் பூதத்து கிட்ட! அந்த பூதம் இளவரசியை அப்படியே தூக்கிக்கினு போயி ஒரு குகையில அடைச்சி வச்சிடுச்சாம்.
  பூதம் இளவரசியை தூக்கிகிட்டு போனது தெரிஞ்சதும் ராஜா மந்திரியை கூப்பிட்டு என் பொண்ணை பூதத்துகிட்ட இருந்து மீட்டுகிட்டு வா! அப்படின்னு சொன்னாராம். மந்திரியோ! ராஜா எனக்கு வயசு ஆயிடுச்சு! என்பையன் உங்க பொண்ணை காப்பாத்திட்டு வருவான்னு சொன்னாராம். ராஜாவும் சம்மதிச்சாராம்.
   வீட்டுக்கு வந்த மந்திரி குமாரனுக்கு இந்த சேதி தெரிஞ்சதும் துள்ளி குதிச்சானாம் ஆகாசத்துக்கும் பூமிக்குமா? இந்த அப்பா ஏன் இப்படி ஒத்துகிட்டு வந்தாரு! அந்த பூதத்தை ஜெயிக்க முடியுமா? அதுங்கிட்ட போயி சாக வேண்டியதுதான் என்னால முடியாதுன்னு சொன்னானாம். மந்திரியோ, நீ இளவரசியை காப்பாத்தி வராவிட்டால் ராஜா  கொன்று போடுவார் அதனால ராஜா கையில சாவா? இல்ல பூதத்து கிட்ட  சாவான்னு நீயே முடிவு பண்ணிக்கன்னு சொல்லிட்டாராம்!
  அப்ப மந்திரி குமாரனோட ப்ரெண்ட் ஈர்க்குச்சி மனுசன், நண்பா! நான் உன் கூட வரேன்! நான் பூதத்தை சாகடிச்சு இளவரசியை மீட்டு தரேன்னு சொன்னானாம்! அதைக்கேட்ட மந்திரி குமாரன் பலசாலியான என்னாலேயே முடியாத காரியம் உன்னால முடியுமா? வீணா நீயும் எதற்கு உயிரை விட போறே இங்கேயே இருன்னு சொல்லி சிரிச்சானாம்!
  பலசாலியால முடியாத காரியங்களை புத்திசாலி சாதிப்பான்! நீ என் நண்பன் உனக்கு ஒரு ஆபத்து வரும்போது நான் உன் கூட இருப்பேன் என்னையும் கூட்டிகிட்டு போ! என்று சொன்னானாம் ஈர்க்குச்சி மனுசன். மந்திரி குமாரணும் ஒத்துகிட்டு ரெண்டு பேருமா கிளம்பி போனாங்களாம்! அப்ப வழியிலே ஒரு ஏத்தகொம்பு இருந்துச்சாம். ஈர்க்குச்சி மனுசன் அதை எடுத்துக்க சொன்னானாம். இத வேற சுமக்கணுமான்னு மந்திரி குமாரன் அலுத்துகிட்டே அதை  எடுத்துகிட்டானாம்.
   இன்னும் கொஞ்ச தூரம் போனதும் ஒரு வண்ணான்சால் இருந்துச்சாம் அதையும் எடுத்துக்க சொன்னானாம் ஈர்க்குச்சி மனுசன். முனகிகிட்டே அதை எடுத்துகிட்டானாம் மந்திரி குமாரன். இன்னும் கொஞ்ச தூரம் போனதும் நிறைய கட்டெரும்புங்க மேய்ஞ்சுகிட்டிருந்துச்சாம்! அதையும் எடுத்து ஒரு சுறுக்குபையில் போட்டுகிட்டானாம் ஈர்க்குச்சி மனுசன்.
அப்படியே நடந்து போன போது ஒரு கழுதை எதிர்ல வந்துச்சாம்! நாங்க ராஜா பொண்ணை காப்பாத்த போறோம்! நீ எங்க கூட வர்றீயான்னு கேட்டாங்களாம்! கழுதையும்வரேன்னு சொல்லிட்டு அவங்க கூட வந்துருச்சாம். அப்படியே நடந்து போகும் போது எருமை ஒண்ணும் மேய்ஞ்சிகிட்டிருந்துச்சாம்! அதையும் ராஜா பொண்ணை காப்பாத்த எங்க கூட வர்றியா?ன்னு கேட்டாங்களாம். அதுவும் அவங்க கூட கிளம்பிடுச்சாம்.
   இப்படி ஏத்த கொம்பு, வண்ணான் சால், கட்டெறும்பு, கழுதை, எருமைன்னு எல்லாத்தையும் எடுத்துகிட்டு இவங்க பூதம் இருந்த குகைக்கு போனாங்களாம்! அங்க குகை மூடி இருந்துச்சாம். எருமை தன்னோட கொம்பால அந்த பாறையை நெம்பி திறந்துச்சாம். எல்லாரும் உள்ளே போனாங்களாம். அங்க ராஜா பொண்ணு நடுங்கி கிட்டே அழுதுகிட்டே உக்காந்திருச்சுச்சாம். ஈர்க்குச்சி மனுசன் அந்த பொண்ணு கிட்ட போயி இளவரசி அழாதீங்க! நாங்க உங்களை காப்பாத்த வந்திருக்கோம்! அப்படின்னு சொன்னானாம்.
  அப்ப வெளியே ஏதோ சத்தம் கேட்டுதாம்! பூதம் வருது நீங்க ஒளிஞ்சிக்கோங்க! என்றுஇளவரசி சொன்னாளாம். இவங்க எல்லாம் ஒரு பாறை இருட்டுல மறைஞ்சிகிட்டாங்களாம்! பூதம் கோவத்தோட உள்ள வந்திச்சாம்! யாருடா என் குகை கதவை திறந்தது!  மரியாதையா வெளியே வாங்கடா! என்று சத்தம் போட்டதாம்.
      அப்ப ஈர்க்குச்சி மனுசன், கொஞ்சம் உரக்க கரகரத்த குரலில் நான் பூதங்களை சாப்பிடற பூதம்! இதுவரைக்கும் 99 பூதங்களை சாப்பிட்டு இருக்கேன்! இப்ப நூறாவது பூதமா உன்னை சாப்பிட வந்திருக்கேன்! அப்படின்னு சொன்னானாம்.
   என்னடா உளற்றே! என்னை நீ சாப்பிட்டு விடுவாயா? அவ்வளவு பெருசா உன் வயிறு என்று பூதம் கேட்டதாம்! நீ நம்ப மாட்டே இல்லே இப்ப என் வயிறை காட்டறேன் பாருன்னு வண்ணான் சாலை எடுத்து காண்பிச்சானாம் ஈர்க்குச்சி மனுசன். பூதத்துக்கு கொஞ்சம் பயமாயிடுச்சாம்! இவ்வளவு பெரிய வயிறா? நம்மளை சாப்பிட்டு விடுமோ? என்று சந்தேகத்துடன் உன் வயிறை காண்பிச்சே ஆனா உன் கால்களை காண்பிக்கலையே?  என்றதாம்.
  அடே முட்டாள்! என் கால்களையும் வயிறையும் ஒன்றாக நீ பார்க்க முடியாது! இதோ பாரு என் கால்கள் என்று ஏத்த கொம்புகளை காண்பிச்சானாம் ஈர்க்குச்சி மனுசன்.  பெரிய பெரிய கொம்புகளை கால்கள்னு நம்புன பூதம், சரி உன் நம்பறேன்! ஆனா உன் குரல் ஏன் இப்படி சன்னமா இருக்குது அப்படின்னு கேட்டதாம்!
  ஏய் முட்டாள் பூதமே ஏதோ உன் கிட்ட சாந்தமா பேசினா? இதுதான் என் குரல்னு நினைச்சிட்டியா இரு என் குரலை காட்டறேன் அப்படின்னு கழுதை காதில கட்டெறும்புகளை விட்டானாம் ஈர்க்குச்சி மனுசன். கழுதை வலி தாங்காமல் “காள் காள்” என கத்தவும்  பூதத்துக்கு ஜண்ணியே கண்டிருச்சாம்.
  இப்பவாவது நம்பறீயா? இதோ என் முகத்தை பார்க்கணுமேஎன்று எருமையின் முகத்தை  காட்டினானாம்  ஈர்க்குச்சி மனுசன். எருமை முகம், ஏத்த கொம்பு கால்கள், வண்ணான் சால் வயிறு கழுதை குரல் என வித்தியாச உருவத்தை கற்பனை செய்த பூதம் வெளவெளத்து போனதாம். அய்யோ என்னை விட்டுடு! என்னை சாப்பிட்டுடாதே! நான் இந்த பக்கமே தலைவச்சி படுக்க மாட்டேன்னு அலறி அடிச்சிகிட்டு ஓடிடுச்சாம்.
  அப்புறம் இளவரசியை கூட்டிகிட்டு மந்திரி குமாரனும் ஈர்க்குச்சி மனுசனும் ராஜாகிட்ட வந்தாங்களாம். ராஜா மகிழ்ந்து போயி மந்திரி குமாரன் தான் இளவரசியை காப்பாத்தினான்னு அவனுக்கு இளவரசியை கட்டி வைக்கிறேன்னு சொன்னாராம்.
  அப்ப மந்திரிகுமாரன். ராஜாவே! நான் இளவரசியை காப்பாத்தலே! ஈர்க்குச்சி மனுசன் தான் இளவரசியை காப்பாத்துனான். அவனுக்குதான் நீங்க இளவரசியை கட்டிக் கொடுக்கணும்னு சொன்னானாம். இளவரசியும் ஆமாம்பா! ஈர்க்குச்சி மனுசன் புத்திசாலி! அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னாங்களாம்!
  ராஜாவும் இந்த மாதிரி புத்திசாலி பையன் இளவரசிக்கு ஏத்தவன் தான்னு கல்யாணம் பண்ணி வைச்சிட்டாராம். அதுக்கப்புறம் அவங்க சந்தோஷமா வாழ்ந்தாங்களாம்!

டிஸ்கி} என் மகள் வேத ஜனனிக்கு என் அப்பா சொன்ன கதை இது! சுவாரஸ்யமாக இருக்க அந்த நடையிலேயே கதையை பகிர்ந்துள்ளேன்.  உங்க வீட்டு குழந்தைகளுக்கு சொல்லி மகிழுங்கள்! அவ்வப்போது இப்படி பகிரலாம் என்று எண்ணம். உங்கள் கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!