அஞ்சு ரூபாய் சைக்கிள்!

அஞ்சு ரூபாய் சைக்கிள்!

அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். சைக்கிள் கூட விடத்தெரியாது. அதற்கு அவசியமும் ஏற்பட்டதில்லை. ஏனேனில் என் பாட்டியின் வீட்டில் இருந்து பள்ளி உள்ள பெரும்பேடு செல்ல வயல் வரப்புகளின் ஊடேதான் செல்ல வேண்டும்.
   பெரும்பேடு ஓர் பெரிய கிராமம். வன்னிய மக்கள் அதிகம் வசித்தனர். அக்ரஹாரம் இரண்டு தெருக்கள் இருந்தது. எல்லோரும் ஐயங்கார்கள். வயல் வரப்பு வழியாக நடந்து வெயில் காலங்களில் ஏரிக்குள் இறங்கி ஏரினால் பெரும்பேடு அக்ரஹாரத் தெரு வந்துவிடும். சீனிவாச பெருமாள் ஆலயத்தை தாண்டினால் இரண்டு பெரிய அரசமரங்கள் ஓங்கி வளர்ந்து நிற்கும். அதைச் சுற்றி துருக்கற்களால் மேடை அமைத்து இருப்பார்கள். ஏரிக்கரை ஓரமாக  ஒரு முருகன் கோயில். சமிபத்தில் பூமிக்கடியில் இருந்து கிடைத்து கோயில் கொண்டுவிட்டார் அந்த ஆறடி உயர முருகன்.  அந்த கோயிலுக்கு எதிர்த்தார்போல நரசிம்மர் மேடை என்று ஒரு வேப்பமரமும் அரசமரமும் இணைந்த மேடை. அங்கு குறி ஆடுவார்கள். அதன் எதிரெ சக்கரை செட்டியார் பங்க் கடை வைத்திருந்தார்.
      இந்த கரை ஓரமாக ஒரு ஐந்து நிமிட பயணம் சென்றால் நான் படித்த பள்ளி வரும்.இங்கு படிக்க எனக்கு சைக்கிள் எதற்கு? நண்பர்களோடு நடைபயணம் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. நான் ஒரு விடுமுறையில் என் சொந்த ஊர் நத்தம் வரும்வரையில்.
   அந்த விடுமுறையில் நத்தம் வந்தபோது என் வயதொத்த ஒருவன் சிறிய சைக்கிளில் அட்டகாசமாக பறந்து சென்றதை பார்த்ததும் என் முதல் சைக்கிள் ஆசை மனதில் துளிர் விட்டது. வீட்டிற்கு வந்து அப்பாவின் அந்தக் கால  பி.எஸ்.ஏவை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு ஆசைதீர மிதித்தேன். பல மைல் தூரம் சைக்கிளில் செல்வதாக கற்பனையில் மிதந்தேன்.ஆனால் சைக்கிள் இருந்த இடம் விட்டு நகரவில்லை! ஏய்! அப்படி சும்மா மிதிக்காதே ப்ரிவீல் உட்டுடும் என்ற அப்பாவின் குரல் என் கனவை கலைத்தது.
   அந்த பையனிடம் கொஞ்சம் நான் ஓட்டிட்டு தரட்டுமா?என்று கேட்டேன் ஒருநாள். அவன் உனக்கு ஓட்டத் தெரியுமா?என்றான். இல்லடா நீ கத்துக் கொடேன் என்றேன். பணக்கார வீட்டுப்பிள்ளை என்னை புழுப் போல பார்த்தான் அவன். முடியாதுடா! வேணும்னா நீ வாடகை சைக்கிள் எடுத்து கத்துக்கோ என்றான்.
 வாடகை சைக்கிள் உள்ளூரில்கிடையாது. பஞ்செட்டிதான் போகவேண்டும் அங்கும் இந்தமாதிரிசின்ன வண்டி கிடையாது. ஏக்கத்துடன் திரும்பினேன். பின்னர் பாட்டி வீட்டிற்கும் சென்று விட்டேன். என் சைக்கிள் ஆசை மறந்து போய்  கிரிக்கெட் கண்ணாமூச்சி திருடன் போலீஸ் என்று விளையாட்டுக்களில் மூழ்கி போனேன். ஒரு மூன்று மாதங்கள் கழிந்து இருக்கும்.
  பெரும்பேட்டில் புதிதாக ஒரு வாடகை சைக்கிள் கடை முளைத்தது. அங்கு ஸ்பெஷலே சிறிய சைக்கிள்தான். ஒரு மணி நேரத்திற்கு வாடகை எட்டணா என ஆளாலுக்கு சைக்கிளை எடுத்து சுற்றி வந்தனர். இதைப் பார்த்ததும் எனக்கும் மீண்டும் சைக்கிள் ஓட்டும் ஆசை வந்தது.
  மாமாவிடம் ஒருநாள் கேட்டேன். மாமா வாடகைசைக்கிள் வந்திருக்கு மாமா! ஒரு நாள் வாடகைக்கு எடுத்து வந்து கத்துகிட்டமா?
  அதெப்படிடா அங்கிருந்து எடுத்து வருவே அதெல்லாம் வேணாம்! கொஞ்சம் பெரியவன் ஆனதும் என் வண்டியில கத்துக்கலாம் இப்ப ஒழுங்கா படிக்கற வழியை பாரு! என்றார்.
   எனக்கு சப்பென்றாகிவிட்டது.
 அரையாண்டு தேர்வுகள் துவங்கின. கடைசி பரிட்சை வரலாறு- புவியியல் எழுதி முடித்தேன். மாமா வெளியூர் போய் இருந்தார். மதியம் விடுமுறை இனி பத்து நாள் கழித்துதான் பள்ளிக்கூடம். இன்று எப்படியாவது சைக்கிளை எடுத்துச் சென்று விட வேண்டும் என்றுமுடிவெடுத்தேன். நாளைந்து நாட்களாக பரிட்சைக்கு பேப்பர் வாங்க காசு கொடுத்ததில் கொஞ்சம்மிச்சம் பிடித்து வைத்திருந்தேன். அதை எடுத்துக் கொண்டு சைக்கிள் கடைக்கு சென்றேன்.
    என்ன தம்பி சைக்கிள்வேணுமா? அத எடுத்துக்கோ ஒரு மணி நேரத்துக்கு ஐம்பது பைசா! முதல்லேயே காசு கொடுக்கணும் என்றான். ஒரு ஐம்பது பைசாவை தந்து விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டேன். எனது பையை கேரியரில் வைத்து தள்ள ஆரம்பித்தேன். குறுக்கு வழியில் ஏரியில் செல்ல ஏரிக்கரை நோக்கி நடந்தேன். அஹ்ரஹாரத்தெருவழியாக சென்று ஏரிக்குள் இறக்கினேன். உருட்டில் உருண்டோடியது. உச்சி வெயில்மண்டையை பிளந்தது. ஆனாலும் சைக்கிள் கற்க வேண்டும் என்ற ஆர்வம். தள்ளிக்கொண்டு மறுகரைக்கு சென்று விட்டேன்.
    மறுகரை உச்சி செங்குத்தாக ஏற வேண்டும் என்னால் சைக்கிளை உந்தி தள்ள முடியவில்லை. ஒரு முறை பாதி தூரம் செல்வதற்குள் மூச்சு இறைத்தது. வியர்த்து வழிந்தது. நெம்பித்தள்ள சைக்கிள் பேலன்ஸ் தவறி பின்னால் செல்ல ஆரம்பித்து கையில் இருந்து விடுபட்டு கீழே சென்று விழுந்தது. பை ஒரு பக்கம் சைக்கிள் ஒருபக்கம் நான் ஒருபக்கம் என கீழே கிடந்தோம்.
   சுதாரித்து எழுந்தேன். மறுபடியும் தள்ள ஆரம்பித்தேன். அப்போது ஒரு பையன் வந்தான். அவன் எங்கள் ஊர் பிடாரி கோயில் பூஜைசெய்யும் பூஜாரி பையன். டேய் டேய் கொஞ்சம் சைக்கிளை தள்ளி விடுடா! தெரியாத தனமா எடுத்து வந்துட்டேன்.  என்று கேட்டேன்.
 என்னது தெரியாம எடுத்து வந்தியா?
இல்லடா! சைக்கிள் கத்துக்கணும்னு ஆசை வீட்டுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க! அதான் அவங்க கிட்ட கேக்காம எடுத்து வந்துட்டேன். இப்பவே நேரமாயிடுச்சு! இதை திருப்பி  கொண்டு போய் கொடுத்துடனும் அதுக்கு முன்னாடி இதை மேல ஏத்தி விட ஹெல்ப் பண்றியா என்றேன் அப்பாவியாய்.
   அந்த பூஜாரிபையனுக்கு என்னைவிட இரண்டு வயது மூத்திருக்கும். அவன் எதையோ புரிந்து கொண்டான் போல! சரி என்று சைக்கிளை கரை மீது ஏற்ற உதவினான். பின்னர் கரை இறங்கி  அந்த கரை ஓரமாகவே பெரும்பேட்டிற்கு மீண்டும் சைக்கிளை தள்ள ஆரம்பித்தேன்.
    அப்போது எனக்கு வியர்த்து கொட்டியது நா வறண்டது. அப்போது குப்பத்து சாலை சந்திப்பு வந்தது. அங்குஒரு மோட்டார் பம்பில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூவரச மர நிழல் வேறு. அங்கு சென்று தண்ணீர் குடித்தேன். இந்த பூஜாரி பையனும் என்னுடன் வந்தான்.  அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும்சைக்கிளை தள்ள ஆரம்பித்தேன் அப்போது எதிரே என் சக மாணவன் ரமேஷ் வந்தான்.
   என்னடா தள்ளிட்டு போறே பஞ்சரா என்றான்!
 இல்லடா என்ற நான் நடந்த அனைத்தையும் கூறினேன். பின்னர் ரமேஷ் நீதான் சைக்கிள் ஓட்டுவியே இந்த சைக்கிளைகடையில கொண்டு விட்டுறியா?என்றேன்.
   அவன் மாட்டேன் நீயே கொண்டு போய் விடு எனக்கு பசிக்குது என்றான்.
 அவன்கையில்  ஒரு ரூபாயை திணித்தேன். இந்தாடா! ப்ளீஸ் கொண்டு போய் விடுடா!என்றேன்.
  ஒரு ரூபாயை பார்த்ததும் அவன் மகிழ்வுடன் சைக்கிளை எடுத்து சென்றான். நான் வர வரைக்கும் இங்கேயே இருக்கணும் என்ற கண்டிஷனுடன். ஒரு அரைமணி நேரக் காத்திருப்புக்கு பின்  அவன் வரவும்  என்னடா என்றேன். நீ கொடுத்த காசுல சைக்கிளுக்கே ஐம்பது காசு போயிடுச்சு! மீதி ஐம்பது காசு நான் எடுத்துகிட்டேன் என்றவன் சரி வாபோலாம் என்றான்.
   எங்களுடன் பூஜாரி பையனும் வந்தான்.  இப்படியாக உச்சி பொழுதில் கிளம்பிய நான் மாலைப் பொழுதில் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். நடந்ததை வீட்டில் யாரிடமும் சொல்ல வில்லை!  பள்ளி விடுமுறை என்பதால் அடுத்த நாள் பெரும்பேடும் செல்ல வில்லை.
  மறுநாள் மாலைநான் விளையாடிக்கொண்டிட்ருக்கையில் பூஜைக்கு வந்த பூஜாரிப் பையன் என்னை அழைத்தான்.
  என்னடா!
சைக்கிள்கடைக்காரரு உன்னை கூட்டிட்டு வரச்சொன்னாரு!
ஏன்?
சைக்கிள்ள ரெண்டு மூணு பஞ்சர் பண்ணிட்டியாமே! காசு ரெண்டு ரூபா வாங்கியாரச் சொன்னாரு இல்லேன்னா நீ வா! என்றான்.
   இருடா சத்தம் போடாதே மாமாவுக்குத் தெரிஞ்சா உதை பிண்ணிடுவாரு என்ற நான் என் உண்டியலில் குச்சிபோட்டு  இரண்டுரூபாய்களை எடுத்து கொடுத்து அனுப்பினேன்.
 அடுத்த நாளும் அந்த பையன் வந்தான். இப்ப என்னடா? என்றேன். சைக்கிள் வீல் பெண்ட் ஆயிருச்சாம்! பால்ஸ் எல்லாம் கொட்டி போச்சாம்! மொத்தம் பத்து ரூபா ஆகியிருக்குசெலவு நீ ரெண்டு ரூபாத்தானே கொடுத்தே மீதி வாங்கிட்டு வரச்சொன்னாரு என்றான்.
 என் கிட்ட காசு இல்லைடா! நாளைக்கு தரேன் என்றேன். மறுநாள் ஊருக்கு வந்து விடும் சந்தோஷத்தில்.
  ஊருக்கு வந்து திரும்பினேன்.
அன்றும் அந்த பூஜாரி பையன் வந்தான். டேய்! யாரை ஏமாத்தரே! நாளைக்கு தரேன்னுட்டு ஊருக்கு போயிட்டியா? அந்த கடைக்காரன் உன் மேல ரொம்ப கோவமா இருக்கான். உன்னைபார்த்தான்னா பிடிச்சி கட்டிருவான். என்றதும் எனக்கு நடுநடுங்கியது.
   இல்லடா அப்பா வந்து கூட்டிட்டு போயிட்டாரு! இந்தா மூணு ரூபா இருக்கு அப்பா கொடுத்த காசு  இனிமே தொந்தரவு பண்ணாதடா! என்றேன் காசைக் கொடுத்து.
  அட நீ சைக்கிளை உடைச்ச! நானா தொந்தரவு பண்றேன்! எனக்கு அந்த கடைக்காரரை தெரிஞ்சதாலே உன்னை விட்டு வைச்சிருக்காரு! இல்லேன்னா எப்பவோ உங்க மாமாகிட்ட வந்து சொல்லியிருப்பாரு என்ற அவன் நாளைக்கு வருவேன் மிச்ச அஞ்சு ரூபாயை எடுத்து வையின்னு சொல்லிட்டு போயிட்டான்.
   முதல்முறையாக என் மீதே எனக்கு வெறுப்பு வந்து விட்டது. பாழாய் போன சைக்கிள் ஆசை இப்படி பழிவாங்குகிறதே என்று அழுதே விட்டேன்.
 அன்று மாலை மெல்ல பாட்டியிடம் விசயத்தை சொன்னேன்! கடங்காரா! அந்த பையன் உன்னை நல்லா ஏமாத்தராண்டா! நாளைக்கு காசு தரமுடியாதுன்னு சொல்லிடு சைக்கிள் கடைக்காரன் வரட்டும் தரேன்னு சொல்லிடு இதுவரைக்கும் ஏமாந்தது போதும் மாமாவுக்கு தெரிஞ்சா சண்டை போடுவான்.  அப்படி ஏதாவது பேசனான்னா என்கிட்ட கூட்டி வா நா பாத்துக்கிறேன் என்றாள்.

  அடுத்த நாள் அந்த பையன் வந்தான்.என்னடா காசு எங்கே என்றான்! காசும் இல்ல ஒரு மண்ணும் இல்ல போடா என்றேன்! நீ ஏமாத்தறே தரமுடியாது என்றேன்.
அந்த பையன் என் பேச்சில் சற்று அயர்ந்தான். ஆனாலும் விடவில்லை.
தர முடியாதுன்னு போய் சொல்லுடா! என்றேன்.
டேய் நாளைக்கு அவன் வந்து உங்க மாமாகிட்ட சொல்லிடுவாண்டா!!
சொல்ல சொல்லு என்கிட்ட காசு இல்ல! இருந்தத கொடுத்தாச்சு! அவன் வரதுக்கு முன்னெ நானே சொல்லிடறேன் மாமா! மாமா! வீட்டில் மாமா இல்லாத தைரியத்தில் குரல் கொடுத்தேன்.
  அவன் அசரவில்லை!
 அப்ப நீ கொடுக்க மாட்டே?
 இல்ல மாட்டேன் போடா!
இரு இரு நாளைக்கு அந்த கடைக்காரணை கூட்டிட்டு வர்ரேன்! உங்க மாமா கிட்ட!
உள்ளூற உதறல் இருந்தாலும் கெத்தாக உன்னால் ஆனதை பாத்துக்கடா! என்றேன்
அடுத்த நாள் வந்தது. எங்கே அந்த சைக்கிள்கடைக்காரன் வருவானோ என்று பயந்து கொண்டிருந்தேன் அவன் வரவில்லை!
  அந்த பூஜாரி பையன் தான் வந்தான். அவனுக்கு நிறைய வேலையாம்! நாளைக்கு நீ ஸ்கூலுக்கு வருவே இல்லை! அப்ப உன்னை பிடிச்சு கட்டி வைக்கிறதா சொல்லியிருக்கான்! மரியாதையா இன்னிக்கு பணத்த கொடுத்தா தப்பிச்ச என்றான்.
  போடா! நாளைக்கு பாத்துக்கலாம்! என்றேன். அவன் ஏமாற்றமாக அகன்றான்.
அடுத்து இரண்டு நாட்கள் அந்தகடை பக்கமாக போகாமல் வேறு வழியாக பள்ளிக்குச் சென்றேன். அப்புறம் ஒருநாள் துணிந்து அந்த கடை பக்கமாக சென்றேன்.
  கடைக்காரன் சினேகமாக சிரித்தான். என்ன தம்பி சைக்கிள் வேணுமா? என்றான்.
வேண்டாம் என்று தலையசைத்து அகன்றேன். ஆக இவன் தான் என்னிடம் ஏமாற்றி பணம் கரந்து இருக்கிறான் என்று ஊர்ஜிதம் ஆனது.
 அத்தோடு என் சைக்கிள்விடும் கனவு தொலைந்து போனது.  ஒரு சைக்கிள் கற்றுக்கொள்ளாமலே மொத்தமாக ஆறு ரூபாய்  என்னிடம் காலியாகி போனது. சூடுபட்ட பூனையானேன் நான். சைக்கிள் எனக்கு மேலும் அச்சத்தை கொடுத்துவிட கற்றுக்கொள்ள மேலும் இரண்டு வருடங்கள் ஆனது.

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! திரட்டிகளில் வாக்களித்து பிரபல படுத்தலாமே! நன்றி!

Comments

  1. தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும், பதிவாக்கித் தந்தமைக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மலரும் நினைவுகள்

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாளுக்கு பிறகு மறக்காமல் வருகை தந்தது மகிழ்ச்சி!

      Delete
  3. மிக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா!

      Delete
  4. பகிர்வுக்கு மகிழ்ச்சி .

    ReplyDelete
  5. விழுந்து எழுந்து சைக்கிள் அனுபவமே தனிதான். உங்கள அனுபவத்தை நன்கு எழுதி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  6. சிறு வயதில் சைக்கிள் கற்பதே தனி அனுபவம் தான்..
    உங்கள் அனுபவத்தை அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும்நன்றி நண்பரே!

      Delete
  7. வாழ்வின் முதல் அனுபவமே கற்றுக்கொள்ள ஆசைப்பட்டது - வீட்டிற்கு தெரியாமல் செய்ய நினைத்தது - ஏமாற்றப்பட்டது -தான். அனுபவப் பகிர்விற்கு நன்றி தளிரண்ணா!

    ReplyDelete
  8. அனுபவப்பதிவு அருமை.சொல்லிய விதமும்.அருமை.. நன்று! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. சைக்கிள் ஓடி ஓடி அனுபவித்த அழகை சொன்ன விதம் சின்னச் சிரிப்போடு வாசித்தேன்.மீண்டும் அந்த வயசுக்குக் கூட்டிப்போனீர்கள் சுரேஷ் !

    ReplyDelete
  10. ரொம்பவும் வெள்ளந்தியா இருந்திருக்கீங்க. ஆனா இப்ப தைரியமா அந்த அனுபவத்தைப் பங்கீருக்கீங்க பாருங்க, அதுதான் பாராட்டத்தக்க விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா!இப்பவும் வெள்ளந்திதான்!

      Delete
  11. நல்ல பதிவு

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  12. மலரும் நினைவுகள் அருமை.

    ReplyDelete
  13. மலரும் நினைவுகள் , அந்த பயம், அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!