குமார் பிரதர்ஸின் குற்றசாட்டும் நாலணா ஊழலும்!


குமார் பிரதர்ஸின் குற்றசாட்டும் நாலணா ஊழலும்!

சலங்கை வலி பதிவில் சங்கம் அமைத்து நாலணா ஊழல் பிரச்சனையில் கலைந்து போனதையும் குறிப்பிட்டு இருந்தேன். நண்பர் திண்டுக்கல் தனபாலன் கூட சங்கம் வைக்கும் அளவுக்கு உங்கள் பணி சென்றது என்றால் வியக்க வைக்கிறது என்று எழுதி இருந்தார். சின்னவயதில் எனக்கு சமூக அக்கறை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இப்போது
பத்தாம் வகுப்பு படிக்கும் போது இப்படித்தான் இருந்தேன்
இல்லையா என்று கேட்கக் கூடாது. அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். ஆசானபூதூரில் தாத்தாவீட்டில் தங்கி  பெரும்பேடு பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தேன். பெரும்பேடு பள்ளி பற்றி நிறைய முறை கூறிவிட்டேன். வாரம் ஒருமுறை நத்தம் வந்து போவேன். வெள்ளியன்று பள்ளி விடும் முன்னரே அரைமணி நேரம் பர்மிசனில் வந்து 3.30க்கு ஒரு பேருந்து வரும். சுந்தரம் டிராண்ஸ்போர்ட் என்று அதில் ஏறி பஞ்செட்டி வந்து  இறங்கி நத்தம் வந்து விடுவேன். சனி ஞாயிறு விடுமுறை நத்தத்தில் கழியும். மீண்டும் திங்களன்று காலை 8.45க்கு அதே பேருந்தில் பஞ்செட்டியில் ஏறி பெரும்பேடு சென்று பள்ளிக்கு சென்று விடுவேன்.
    இப்படி வந்து சென்று கொண்டிருந்த போது ஒரு நாள் பொன்னேரிக்கு சென்ற அம்மா கோகுலம் மாத இதழ் வாங்கி வந்து கொடுத்தார்கள். அதற்கு முன்னரே குமுதம், ஆனந்தவிகடன், தினமணி கதிர் போன்றவைகள் அரைகுறையாக வாசித்து இருக்கிறேன். முதன் முதலில் ஒரு சிறுவர் இதழ் அப்போதுதான் வாசித்தேன். அப்போது அதன் விலை இரண்டு ரூபாய்.
   இரண்டு ரூபாய்க்கு அதில் இருந்த விசயங்கள் அதிகம். எனக்கு அந்த புத்தகம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அப்போது அதன் ஆசிரியர் அழ வள்ளியப்பா. அந்த புத்தகத்தில் ஒரு அறிவிப்பு. கோகுலம் சிறுவர் சங்கம் என்று ஒன்றை அதில் நடத்தி வந்தார்கள். உறுப்பினர் ஆனால் அந்த புத்தகத்தில் பிருந்தாவன கதையரங்கம், கவியரங்கத்தில் நமது படைப்புக்கள் வரும் அதற்கென ஒரு உறுப்பினர் படிவம் கொடுத்தும் இருந்தார்கள்.
   அதை பூர்த்தி செய்து அனுப்பினேன். அழ,வள்ளியப்பா கையோப்பம் இட்டு ஒரு உறுப்பினர் கார்டும் வந்தது. அதை ரொம்ப நாள் பத்திரமாக வைத்திருந்தேன். இப்போதும் அது எங்கோ இருக்கிறது. சரி விசயத்திற்கு வருவோம். உறுப்பினர் ஆனேனே தவிர எதுவும் எழுதி அனுப்பவில்லை! அப்போது ஆசானபூதூரில் கூட படிக்கும் நண்பர்களுடன் இணைந்து கோகுலம் சிறுவர் சங்கம் என்று ஒரு அமைப்பு ஆரம்பித்து விட்டோம். சந்தா ஏதும் வசூல் செய்யவில்லை. ஒன்றாக கூடுவோம் விளையாடுவோம் அவ்வளவுதான் அந்த அமைப்பின் வேலை.
    எட்டாம் வகுப்பு இறுதியில் நான் நத்தம் வந்து விட்டேன். இங்கு வந்த சமயம் கதை எழுத ஆரம்பித்து கையெழுத்து பத்திரிக்கை வெளியிடும் அளவிற்கு வந்திருந்தேன். நேருமாமா என்று அந்த பத்திரிக்கைக்கு பெயரும் வைத்திருந்தேன். இங்கு வந்த போதுதான் குமார் பிரதர்ஸ் பழக்கம் ஆனார்கள். முதலில் ஜெயேந்திரகுமார், அவருடன் அவரது அண்ணன் ராஜேந்திர குமார், தம்பி சுதேந்திர குமார் என்னும் சுதாகர் இவர்களுடன் மகேஷ், மதன். தீனா என பலர் சேர நத்தத்தில் நேரு சிறுவர் சங்கம் உதயமானது.
சங்கம் உடைந்த சமயம் 1998 ல் நான்
   அப்போது அதன் தலைவராக நானும் செயலர் துணை செயலராக குமார் பிரதர்ஸும் இருந்தனர். மாதாந்திர சந்தா வசூல் செய்யப்பட்டது ஒரு ரூபாய் சந்தா வசூல். இந்த சங்கம் குழந்தைகள் தினவிழா சுதந்திர தின விழா என கொண்டாட்டங்கள் நடத்தி மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து பரிசுகள் கொடுத்து வந்தது.
   இது மேலும் வளர்ச்சி பெற்று பத்து ஆண்டுகள் நிறைவை எட்டியபோதுதான் குமார் பிரதர்ஸில் ஒருவரான ராஜேந்திர குமார் நாலணா ஊழல் என பொருளாளர் டி.எஸ் வெங்கடேசன் மீது குற்றம் சாட்டினார்.
   விசயம் ஒன்றும் பெறாததுதான். சங்க ஆண்டுவிழா கணக்கு தணிக்கை செய்யும் போது இருப்பில் இருக்க வேண்டிய தொகையில் நாலணா குறைவாக இருந்தது. இந்த நாலணா குறைந்து போனதை அவர் பெரிது படுத்தி பேச பொருளாளர் நான் ஒரு ரூபாயாக கொடுத்து விடுகிறேன் என்று சொல்லியும் நீ ஊழல் பண்ணி விட்டாய் என்று அவர் கூற பொருளாளர் டி.எஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
     சங்கம் அப்போது பிளவு பட ஆரம்பித்தது. டி.எஸ் தரப்பில் சிலரும் குமார் பிரதர்ஸ் தரப்பில் சிலரும் இருபிரிவாக பிரிந்தனர். நான் இதை பெரிது படுத்த வேண்டாம் என்று கூறினால் யாரும் கேட்க வில்லை! எனவே நானும் எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.
    உடனே தேர்தல் வந்தது. அப்போதுதான் பல புதிய உறுப்பினர்கள் சேர்ந்து இருந்தனர். ராஜேந்திர குமார் செயலராக இருந்தார். அவர் மீண்டும் செயலராக போட்டியிட்டால் தோற்று விடுவோம் என்று செயற்குழு உறுப்பினருக்கு போட்டியிட்டார். பொருளாளர் டி.எஸ் வெங்கடேசனும் போட்டியிடாமல் தனது ஆதரவாளரான போட்டோ ஸ்டுடீயோ குமாரை பொருளாளர் பதவிக்கு நிறுத்தினார். ஆனால் தலைவர் பதவிக்கு மட்டும் யாரும் போட்டியிடவில்லை!
  அனைவரும் ஒரு மனதாக என்னையே தலைவர் என்று தேர்ந்தெடுத்து விட்டார்கள். செயலராக மதன கோபாலும் குமார் பிரதர்ஸில் ஒருவரும் போட்டியிட்டனர். இதில் டி. எஸ் ஆதரவாளர்கள் திட்டமிட்டு குமார் சகோதரர்களை தோற்கடித்து விட்டனர். செயற்குழு உறுப்பினர் பதவி கூட ராஜேந்திர குமாருக்கு கிடைக்கவில்லை!.
இப்போது நான்   எப்புடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ?!!
   எல்லோரும் வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த போதிலும் எனக்கு சங்கம் கலைந்து போவதற்கான அறிகுறி ஏற்பட்டதாகவே தோன்றியது. புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.  பொருளாளர் பதவி ஏற்றதும் சங்கபணம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டார். அதுவரை அந்த பணம் சங்க அலுவலகத்தில் ஒரு பெட்டியில் இருக்கும். ஆனால் புதிய பொருளாளர் மாதாந்திர மீட்டிங்கில் பணம் கணக்கு காட்டப்படும். இங்கே வைத்து யாராவது எடுத்து சென்று அப்புறம் என் மீது வீண்பழி வரும் என்று அவர் பையில் பணத்தை வைத்து கொண்டார். இது பலருக்கும் பிடிக்கவில்லை.
    செயலாளர் அறிவித்த திட்டங்களும் யாருக்கும் பிடிக்கவில்லை! மாதாந்திர சீட்டு என்று ஒன்றை நடத்த ஆரம்பித்தார்கள். இதில் பணம் விளையாட ஆரம்பித்தது. பணம் எடுத்தவர்கள் கட்டவில்லை! சில உறுப்பினர்கள் பணம் எடுக்கவில்லை! வழக்கமான விழாக்கள் புறக்கணிக்கப்பட  மீண்டும் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.
    சங்கம் மீண்டும் கூடியது. கலைத்துவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. கலைக்கவும் பட்டது. இவ்வாறு 1987ல் உதயமான நேரு சிறுவர் சங்கம் பத்து ஆண்டுகள் வளர்ந்து 1998ல் நேரு நண்பர்கள் நலசங்கமாக மாறியிருந்த சூழலில் கலைக்கப்பட்டது.  அந்த கால கட்டத்தில் எங்கள் ஊரில் இளைஞர் மன்றம் ஒன்றும் இயங்கி வந்தது. அதற்கு சரியான போட்டியாக இருந்த எங்கள் சங்கம் நாலணா காணாமல் போனதால் மறைந்து போனது.
   இதற்கு பின் மீண்டும் நண்பர்கள் ஒருங்கிணைந்து வேறு சங்கம் அமைத்து செயல் பட்டாலும் அனைத்தும் சீக்கிரமே கலைந்து போனது. சங்கம் வளர்த்த நண்பர்கள் இப்போது ஆளுக்கொரு மூலையில் தங்கள் குடும்பத்துடன் இருக்கிறார்கள். எப்போதாவது பார்க்கும் சமயம் விசாரிப்பதோடு சரி என்று ஆகிவிட்டது. இதற்கு அப்புறம்தான் என்னுடைய கல்வி நிலைய பணி தொடங்கியது. அதை பிறிதொரு சமயம் பார்ப்போம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. சிறு வயதிலிருந்தே உங்களின் ஆர்வத்திற்கு முதலில் பாராட்டுக்கள்...

    ஒரு புத்தகம் எந்தளவு மாற்றி உள்ளது...! நாலணாவால் (அன்றைக்கு பெரியது...) இவ்வளவு பிரச்சனை... அதுவும் சங்கம் தொடர முடியாமல் போகும் அளவிற்கு... வருத்தம் தான்...

    கல்வி நிலைய பணியை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

    ReplyDelete
  2. அனுபவப் பதிவு சுவாரசியமாக உள்ளது சுரேஷ். சங்கங்கள் என்றாலே ஏதாவது பிரச்சனை யாராவது செய்து கொண்டுதான் இருப்பார்கள். அழகாக பதிவு செய்து வருகிறீர்கள் தொடர்க!

    ReplyDelete
  3. nalla pakirvu..!

    paalya kaalathai ninaivoottiyat

    ReplyDelete
  4. மலரும் நினைவுகள்

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. நாலணாவில் சங்கம் மறைந்து போனது வருத்தமாகவே உள்ளது. அந்த பிரச்சினையே இல்லாமல் இருந்திருந்தால் உங்கள் சங்கம் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே இருந்திருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!