இந்திய தலைமை நீதிபதியாக தமிழகத்தின் சதாசிவம் நியமனம்

சென்னை : இந்திய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். அவருக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, தற்போது, அல்டமாஸ் கபீர் உள்ளார். தலைமை நீதிபதி கபாடியா, ஓய்வு பெற்ற பின், கடந்த ஆண்டு, செப்டம்பர், 29ம் தேதி, தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். இவர், ஜூலை, 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த நிலையில் உள்ள, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக, 19ம் தேதி, பதவியேற்கிறார்.ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில், முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில், முதலாவதாக, சட்டப் படிப்பு முடித்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சென்னை ஐகோர்ட்டில், அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, பதவி வகித்தார். சிவில், கிரிமினல், கம்பெனி வழக்குகளில் ஆஜராகி வந்தார். சென்னை ஐகோர்ட் நீதிபதியாக, 1996ம் ஆண்டு, ஜனவரி, 8ம் தேதி, நியமிக்கப்பட்டார். 11, ஆண்டுகளுக்குப் பின், பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டுக்கு, 2007ம் ஆண்டு, ஏப்ரலில், இடமாற்றம் செய்யப்பட்டார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, 2007ம் ஆண்டு, ஆகஸ்ட்டில் நியமிக்கப்பட்டார். தற்போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். 40வது, தலைமை நீதிபதியாக, இவர் பதவியேற்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 2014ம் ஆண்டு, ஏப்., 26ம் தேதி வரை, தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

பல்வேறு முக்கிய வழக்குகளில், நீதிபதி சதாசிவம் தீர்ப்பளித்துள்ளார். டில்லியில் நடந்த, ஜெசிகலால் கொலை வழக்கில், மனுசர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உறுதி செய்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.,யின், முதல் தகவல் அறிக்கையை, ரத்து செய்தார்.ரிலையன்ஸ் வழக்கில், "ஜனநாயகத்தில், நமது நாட்டின் சொத்துக்கள், மக்களுடையது. மக்களின் நலன்களுக்காக, அந்தச் சொத்துக்களை, அரசு பேணுகிறது' என, தீர்ப்பளித்தார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், 10 பேருக்கு, ஆயுள் தண்டனையாக குறைத்தும், தீர்ப்பளித்தார்.மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தான், ஆயுத சட்டத்தின் கீழ், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை, ஐந்து ஆண்டுகளாக, குறைத்து தீர்ப்பளித்தார். பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும் என, நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், நிர்வாகத் தலைவர் என்கிற முறையில், பல மாநிலங்களுக்கும் சென்று, சட்டக் கல்வியறிவு முகாம்களை, கிராமப்புறப் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் துவங்கியுள்ளார்.

அரை நூற்றாண்டுக்கு பிறகு தமிழர் : சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை சட்டக் கல்லூரியில் படித்த, நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, 1951- 54ல் பதவி வகித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின், இரண்டாவது தலைமை நீதிபதியாக, பதவி வகித்தார். நீதிபதி பதஞ்சலி சாஸ்திரிக்குப் பின், தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர். இவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

அரசு பள்ளியில் படித்து பெரும் சாதனை நீதிபதி சதாசிவத்தின் தாய் பெருமிதம்:


"கான்வென்டில் படித்தால் தான் சாதிக்க முடியும் என, நினைத்திருந்த எங்களுக்கு, அரசுப் பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும் என, என் மகன் நிரூபித்துள்ளார்,' என, அவரது தாய், நாச்சாயி அம்மாள் பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய முதன்மை நீதிபதியாக சதாசிவம் தேர்வு செய்யப்பட்டது குறித்து, அவரது தாய், நாச்சாயி அம்மாள் கூறியதாவது:என் மகன் சதாசிவம், சிறுவயதில் இருந்தே படிப்பில் அதிக ஆர்வம் உடையவர். பள்ளிக்கூடத்துக்கு லீவு எடுக்காமல் செல்வார். அதையே, இன்று வரை தொடர்கிறார். விவசாய குடும்பம் என்பதால், குடும்ப சூழல் காரணமாக, ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். நாங்கள் படிக்காதவர்கள்.படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால், ஆசிரியரின் மீது பெரிதும் மரியாதை கொண்டவர். மேல்நிலைப் பள்ளியின், கணித ஆசிரியர் விஸ்வநாதன் மேல் பக்தி கொண்டவர். அவர், படிப்பின் மேல் வைத்த மரியாதை, இன்று, பெரிய பதவிகளை கொடுத்துள்ளது. கான்வென்டில் படித்தவர்கள் தான் பெரிய பதவிக்கு வரமுடியும் என, நினைத்த எங்களுக்கு, அரசு பள்ளியில் படித்தாலும், வாழ்வில் உயரலாம் என, நிரூபித்துள்ளார்.சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது, திருமணம் செய்து வைத்தோம். லீவு எடுக்காமல் பணியாற்றுவதால், என்னை பார்க்க மட்டும் சொந்த கிராமத்துக்கு வருவார். தற்போது சண்டிகரில் பணியாற்றுகிறார். 19ம் தேதி, பதவியேற்பு விழாவுக்கு, 17ம் தேதியே நாங்கள் கிளம்பி, குடும்பத்துடன் டில்லிக்கு செல்கிறோம். சுயமுயற்சியால், என் மகன் வெற்றி பெற்றார்.என் மகனை பள்ளியில் சேர்த்ததுடன், அவராகவே ஒவ்வொன்றாக தேர்வு செய்து படித்தார். என் மகன், இந்தியாவின் முதன்மை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டது, எங்கள் அனைவருக்கும் பெருமிதமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.சகோதரர்கள் சுப்ரமணியம், வேலுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.


நன்றி: தினமலர்.

Comments

  1. அறுபது ஆண்டுகளுக்கு பிறகு தமிழன் என்று சொல்லடா...நீதி வழங்குவதில் தலை நிமிர்ந்து நில்லடா....தங்களின் இந்தப் பதிவை வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  2. நீண்ட காலத்துகுப்பின் தமிழர் தலைமை நீதிபதியாவது மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது.மனமார்ந்த வாழ்த்துக்களை மேதகு.சதாசிவம் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவிப்போம்

    ReplyDelete
  3. தமிழன் அங்கே வரை போயாச்சு ம்ம்ம்ம் வாழ்த்துவோம்...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!