ஒரு அப்பாவி பதிவரின் “தண்ணி” அடிச்ச அனுபவம்!

ஒரு அப்பாவி பதிவரின் “தண்ணி” அடிச்ச அனுபவம்!

  டிஸ்கி}  யாருங்க அந்த அப்பாவி பதிவர்னு கேக்க மாட்டீங்க இருந்தாலும் சொல்றேன் அந்த அப்பாவி பதிவரு நாந்தானுங்கோ!

   இப்பல்லாம் தண்ணி அடிக்கிறது ரொம்ப சர்வ சாதாரணமா போச்சு சின்ன குழந்தைங்க கூட சர்வ சாதாரணமா தண்ணி அடிக்குதுங்க! நாட்டுலயும் தண்ணிக்கிண்னே தனி டிபார்ட்மெண்ட் போட்டு செயல் பட்டுகிட்டு வருது ஆனா அப்பல்லாம் தண்ணி கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்! குடிமகன்கள்ளாம் ரொம்ப தூரம் தண்ணியை தேடி அலையனும்.
   ரொம்ப தூரம் அலைஞ்சாலும் சரக்கு சுத்தமா இருக்கணும்லயா? சுத்தமான சரக்கு கிடைக்காம ரொம்பவே கஷ்டப் பட்டாங்க நாட்டுமக்களுங்க! அன்னிக்கு ஆட்சியில இருந்தவங்களுக்கு நாட்டு மக்களுங்க மேல அக்கறையே இல்ல போல இப்ப மாதிரி தெருவுக்கு ரெண்டு தண்ணி கடை இருந்தா எல்லோரும் கஷ்டப் பட்டிருக்க மாட்டாங்க! ஆனா அன்னிக்கு ஊருக்கே ஒரு கடை இல்லாத நிலைமை!
   என்னடா ஓவரா பில்டப் பண்றானேன்னு பாக்கறீங்களா! நான் சொல்றது எல்லாம் நிஜம் தானுங்க! நான் வளர்ந்தது எல்லாம் ஒரு குக்கிராமம் அங்க தண்ணி இல்லாம நான் பட்ட அவஸ்தையை தான் இப்ப உங்க கிட்ட பகிர்ந்துக்க போறேன்.
  அப்ப எனக்கு ஒரு நாலு வயசு இருக்கும்! என்ன முறைக்கிறீங்க! எல்லாம் அவங்க அவங்க வாங்கி வந்த வரம்! பொறாமைப் படாம மேலே படீங்க! மேலேன்னு சொன்னவுன்னே மேலே போயிடாதீங்க ! அடுத்தத படிங்கண்னு தான் சொன்னேன். சரி விஷயத்திற்கு வருவோம் அப்ப எனக்கு என்னா ஒரு நாலு இல்ல அஞ்சு வயசு இருக்கும்!
  நான் எங்க தாத்தா வீட்டுல இருந்தேன் குக்கிராமம் அது! எப்பவுமே பாட்டியும் சித்தியும் தண்ணி அடிக்க போவாங்க! என்னடா அக்கிரமம்! இது வயிறு எரியுதா? கொஞ்சம் தண்ணிய ஊத்தி அணைச்சிட்டு மேலே படீங்க! அன்னிக்கும் அப்படித்தான் ரெண்டு பேரும் கமுக்கமா கிளம்பவும் நானும் நைஸா அவங்க பின்னாடியே கிளம்பிட்டேன்.
   சத்தம் போடாம பூனை மாதிரி அவங்க பின்னாடியே போனேனா! ஒரு திருப்பத்துல அவங்க என்னை பார்த்துட்டாங்க! டேய் எங்கடா வரே! நாங்க தண்ணி அடிக்க கிளம்பிட்டோம் நீ வீட்டுலேயே விளையாடுவியாம்! என்றாள் சித்தி
   நான் அழ ஆரம்பித்தேன்! நானும் தண்ணி அடிக்கணும்! நானும் வருவேன் என்று அடம்பிடிக்க டேய் தங்கம் இல்ல ஒன்னால முடியாதுடா! அங்க நாய் இருக்கு உன்னை கடிச்சிடும் என்று பயமுறுத்தினாள் பாட்டி!
   என் செல்லம் இல்ல உனக்கு இதெல்லாம் வேண்டாம்டா! நாங்க தான் எதோ மாட்டிகிட்டு அவஸ்தை படறோம் சின்ன பையன் உனக்கு எதுக்கு இதெல்லாம் வேண்டாத வேலை? என் கண்ணுல்ல பட்டுல்ல வீட்டுக்கு போடா! என்று கொஞ்சி  வீட்டுக்கு திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்தாள் சித்தி.
   ஆனாலும் நான் விடுவதாயில்லை! இல்ல நானும் வருவேன் நானும் தண்ணி அடிப்பேன் என்று அடம் பிடிக்க அழ ஆரம்பிக்க சரி சரி வந்து தொலை என்று அவர்கள் நடந்தார்கள்
  அவர்கள் பின்னே நான் நடந்தேன்! ஊர்க் கோடியில் ஓர் வீடு  அந்த வீட்டின் வேலியை விளக்க எங்கிருந்தோ ஓர் நாய் குலைக்க அதை அதட்டியபடி ஒர் பாட்டி என்னம்மா பேராண்டியை கூட கூட்டிட்டு வந்திருக்கீங்க என்று விசாரித்தாள்.
  எங்க பையன் சொன்ன பேச்சை கேட்டாத்தானே! என்றாள் பாட்டி
தண்ணி அடிக்க ஓத்தாசைக்கு வந்துட்டான் போல! போ போயி அடிச்சிக்குங்க என்று அந்த பாட்டி வழிவிட புழக்கடை பக்கம் போனோம்.
   அங்கு ஒரு கைப்பம்பு அனாதையாக இருக்க அதனடியில் குடத்தை வைத்து சிறிது தண்ணிர் ஊற்றி பாட்டி அடிக்க  பாட்டி பாட்டி நானு நானு! என்று அந்த கைப்பம்பின் கைப்பிடியை பிடித்து அழுத்த ஆரம்பித்தேன் நான்
  குழாயிலிருந்து தண்ணீர் சொட்ட உற்சாகமாய் துள்ளி குதிக்க ஆரம்பித்தேன். எப்படி இருக்கு நான் தண்ணி அடிச்ச கதை இன்னொரு சமயம் இதே மாதிரி ஒரு கதையோட உங்களை சந்திக்கிறேன் அதுவரை டாட்டா! பை! 
மீள்பதிவு}
 பின் குறிப்பு} இன்று காலை முதல் மின்சாரம் அவுட் இப்போதுதான் வந்தது! அதான் பழைய பதிவை அப்படியே ரிபீட் அடிச்சிருக்கேன்! மன்னிச்சீக்கோங்க ப்ளீஸ்!
 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலப்படுத்தலாமே!

Comments

  1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நன்று............

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2