மோடி தர்பார்! கதம்பசோறு பகுதி 37

கதம்பசோறு பகுதி 37

மோடியின் பதவியேற்பு:


    நாட்டின் பதினைந்தாவது பிரதமராக திங்களன்று பொறுப்பேற்றுக்கொண்டார் நரேந்திர தாமோதர் மோடி. ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்து பிரதமரான அவருக்கு முதலில் வாழ்த்துக்கள். பத்தாண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் நாட்டை சீர்குலைத்ததை சீர்படுத்த சில மாதங்கள் அவருக்கு பிடிக்கலாம். அதுவரை குறை சொல்வதை தவிர்த்து அவர் என்ன செய்கிறார் என்பதை உற்று நோக்குவதே விமர்சகர்கள் மாற்றுக்கட்சியினரின் கடமை. மோடி பதவியேற்கும் முன்னரே சர்ச்சை ஆரம்பித்துவிட்டது. சார்க் நாடுகளின் தலைவர்களை குறிப்பாக ராஜபக்‌ஷேவையும் நவாஸ் ஷெரிப்பையும் அழைத்தமைக்கு  கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தே எதிர்ப்புக்கள். இவை எதையும் மோடி காதில் வாங்கிக் கொள்ளவில்லை! தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். சில சுயலாபங்களுக்காகத்தான் இவர்களை வரவழைத்தார் என்று இணையத்தில் தகவல்கள் பரவுகின்றன. அதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. எப்படியோ இந்த இரு நாட்டு தலைவர்களை அழைத்ததில் அந்த நாட்டு சிறையில் இருந்த மீனவர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் பிடிக்கவில்லை என்றால் அவர்மீது தொடர்ந்து மோதல் போக்கை கை ஆள்வது சிறந்த ராஜ தந்திரம் ஆகாது. உணர்ச்சிவசப்பட்டு அரசியல் செய்யும் வைகோ இதை உணரவேண்டும். ஈழத்தாய் அவதாரம் எடுத்த ஜேவும் இந்த ராஜபக்‌ஷே அழைப்பை எதிர்த்தார். இதே அம்மாதான் போர் என்றால் உயிரிழப்பு சகஜம் என்று அப்போது அறிவித்தவர். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! இன்று பிரிந்தவர் நாளைக் கூடிக்கொள்வர். இது தமிழக திராவிடக் கட்சிகளின் அரசியலை பார்த்து வளர்ந்து வரும் நமக்கு நன்றாகவேத் தெரியும். ஆனாலும் இது மாதிரி செய்திகள்தான் நம்மை சுவாரஸ்யப்படுத்தி அன்றைய பொழுதை ஓட்டச் செய்கின்றன. நாம் வளர்ந்த விதம் அவ்வாறு போலும்.

பத்தாம் வகுப்பு ரிசல்ட்!


   இந்த வருட பத்தாம் வகுப்பு ரிசல்ட் மிகப் பிரமாதமாக அமைந்துவிட்டது. இது கல்விமுறையின் வெற்றியா தோல்வியா என்றெல்லாம் ஆராயாமல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள். இனி ஆராய்ச்சிக்குள் வருவோம். மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தோர் 19 பேர். இரண்டாம் இடமான498 மதிப்பெண்கள் 125 பேர் எடுத்துள்ளனர். மூன்றாம் இடம் 497 மதிப்பெண்கள் 321 பேர். இது நமது கல்வி முறையின் வளர்ச்சியை காட்டுகிறதா? என்னைப் பொறுத்தவரையில் சீரழிவைத்தான் காட்டுகிறது. முதல் மதிப்பெண் என்பது நான் படிக்கும் காலத்தில் 460லிருந்து 470 ஐத் தாண்டாது. பள்ளி அளவில் 440 முதல் 450 மதிப்பெண்கள் பெறுவதே பெரும் சாதனையாக இருந்தது. இப்போது சர்வ சாதாரணமாக 499 மதிப்பெண்களை 19 பேர் எடுக்கிறார்கள் என்றால் மதிப்பெண்கள் அள்ளி வீசப்படுகிறது என்றுதானே அர்த்தம். இப்படி எடுத்த மதிப்பெண்கள் புரிந்து படித்து எடுத்தவையா மனப்பாடம் செய்து எடுத்தவையா? என்றும் யோசிக்கவேண்டும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பெயில் இல்லை என்று ஆகிய நிலையில் பத்தாம் வகுப்பில் நிறைய பேர் தமிழ் எழுதவே தடுமாறிக் கொண்டு வருவார்கள். இந்த நிலையில் அங்கு கடினமான வினாத் தாள் அமைத்தால் பாதிபேருக்கும் மேல் பெயில் ஆகவேண்டியிருக்கும். ஆகவே சாறை பிழிந்து எடுத்த சக்கையாகவே பாடத்திட்டம் அமைத்து  அதிலும் ஒவ்வொரு பாடத்திற்கு பிராக்டிகல் மதிப்பெண் கொடுத்து கல்வி முறையை அழித்து வருகிறார்கள். மொழிப்பாடங்களில்தான் அதிகம் பேர் தோற்று இருக்கிறார்கள். இதை விவாதிக்க ஒரு தனிப்பதிவே எழுத வேண்டும். சமச்சீர் கல்வி சமச்சீரான வெற்றியை மேம்போக்காக தந்திருக்கிறது என்று மட்டுமே சொல்லவேண்டும்.

ஐ.பி.எல் அதிசயம்!


    ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம் என்று தெரிந்த பின் போட்டிகளை பார்ப்பதை தவிர்த்துவிட்டேன். செய்தித் தாள்களில் மறுநாள் போட்டி விவரம் படித்து தெரிந்துகொள்வேன். முன்பு போல அதீத ஆர்வம் குறைந்துவிட்டது. ஓவ்வொரு வருடமும் ஒரு அதிசயம் ஐ.பி. எல்லில் நிகழும். இந்தவருடம் தொடக்கம் முதல் பஞ்சாப் அசத்தி வர மும்பை சொதப்பி வந்தது. தொடர்ச்சியாக ஐந்து போட்டிகள் தோற்ற அது எப்படியோ மீண்டு புள்ளிகளில் முன்னேறி வர ராஜஸ்தானுடனான போட்டியில் 13.4 ஓவர்களில் வெற்றி இலக்கு 190-ஐ எட்ட வேண்டும் என்ற கடின இலக்கில் களம் இறங்கி சரியாக 189 ரன்களை எடுத்து டை செய்த நிலையில் ராஜஸ்தான் பெருமூச்சு விட்டனர். ஆனால் நடுவர்கள் இன்னும் ஆட்டம் முடியவில்லை! அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தால் மும்பை அடுத்த சுற்றுக்கு செல்லும் என்று சொல்ல ராஜஸ்தான் அணிக்கு தலையில் இடிவிழுந்தது. பால்க்னர் வீசிய புல்டாசை சிக்ஸ் அடித்து மும்பையை அடுத்த எலிமினேட்டர் சுற்றுக்கு கொண்டு சென்றுவிட்டார் ஆதித்ய தாரே! எதற்கும் உணர்ச்சி வசப்படாத டிராவிட்டே அன்று தோற்றபோது உணர்ச்சிவசப்பட்டு தன் தொப்பியை தூக்கி எறிந்தாராம். இதெல்லாம் செய்திகளில் படித்தேன். இதன் மூலம் போட்டிகள் முன்னரே முடிவு செய்யப்படுகின்றன என்று உறுதியாகவே தெரிகின்றன. இந்த கோமாளித்தனமான போட்டிகளின் மூலம் இந்திய அணிக்கு ஆள் தேர்வு செய்யப்படுவது அதைவிட கோமாளித்தனம். கோடிகள் புரளும் கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம் ஆகிவிட்டது. இன்று எலிமினேட்டரில் சென்னை தோற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை! பார்ப்போம்.

நாட்டின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர்!


    ஏற்கனவே பல முதல்களுக்கு சொந்தமானவர் சுஷ்மா சுவராஜ். இந்தியாவின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர் என்ற சாதனையும் தமதாக்கிக் கொண்டார். மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மூன்றாவது உயரிய பதவி இது. அதை எளிதாக தனதாக்கிக் கொண்டார் சுஷ்மா. இந்தியாவில் அவருக்கு சவால்கள் நிறைய காத்து இருக்கின்றன. சுஷ்மா அதை சமாளித்துக் காட்டுவார் என்று எதிர்ப்பார்ப்போம். 25 வயதில் அரியானா மாநில அமைச்சரவையில் முதல் இளம் பெண் அமைச்சராகிய அவர் டெல்லியின் முதல் பெண் முதல்வர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். அத்வானிக்கு நெருக்கமான தலைவராக  சுஷ்மா கருதப்படுகிறார். அத்வானியை சாந்தப்படுத்த சுஷ்மாவுக்கு வெளியுறவுத்துறை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தாந் சீனா- இலங்கை என நமது அண்டை நாடுகளுடம் பிரச்சனைகள் உருவெடுத்துள்ள நிலையில் இவர் இதை எப்படி கையாளப்போகிறார் என்று இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

எவரெஸ்டில் கால்பதித்து ஆந்திர சிறுமி சாதனை!


   ஆந்திர மாநில சமூகநலத்துறை விடுதியில் தங்கி படிக்கும் பூர்ணா ஸ்வேரோஸ் என்ற பதிமூன்றுவயது சிறுமியும் உடன் படிக்கும் ஆனந்த என்ற பதினாறுவயது சிறுவனும் ஞாயிற்றுக்கிழமையன்று காலை ஆறுமணி அளவில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நமது கொடியை நட்டனர். மொத்தம் 52 நாட்கள் பயணம் செய்த இவர்கள் இந்த சாதனையை பூர்த்தி செய்தனர். பிரான்ஸ் மலைப்பயிற்சி குழுவினர் இவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பூர்ணாவின் தாய் லட்சுமி கூலித்தொழிலாளி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவர் எவரெஸ்டில் ஏறிய மிகக் குறைந்த வயதுடையவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தளிர் தளமும் அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

என் நூலகம்!
    நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி?



டாக்டர் எம். ஆர் காப்மேயர் எழுதி குமுதம் ஆசிரியர் குழுவினர் தமிழ்ப்படுத்தி குமுதத்தில் தொடராக வந்த நூல் இது. கண்ணதாசன் பதிப்பகத்தார் இப்போது நூலாக வெளியிட்டுள்ளனர். சுயமுன்னேற்ற கருத்துக்கள் நிரம்பிய இந்த நூலை நிறைய பேர் வாசித்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்! குமுதத்தில் தொடராக வந்த போதே நிறைய பாராட்டுக்கள் பெற்ற தொடர் அது. 408 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் இருபத்தோராம் பதிப்பை நான் படித்தேன். அது 2006ல் வெளியானது. இப்போது மேலும் சில பதிப்புக்கள் கண்டிருக்கலாம்.
  நீங்கள் வெற்றிபெறவே பிறந்திருக்கிறீர்கள் என்று சொல்கிறார் முதல் அத்தியாயத்திலேயே ஆசிரியர். வெற்றி என்பது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து அல்ல வெற்றிக்கான வழிமுறைகளை பயன்படுத்தி என்ன செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது என்று அடுத்த அத்தியாயத்தில் சொல்லுகிறார். இப்படி ஒவ்வொரு அத்தியாயமும் சுவையாக எளிமையாக புரியும் படி அமைந்திருக்கிறது. சிறப்பான சுய முன்னேற்ற நூல். வாங்கி படிக்கலாம்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

புதினாவை தயிரில் சேர்த்து அரைத்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சிடும்.

காய்ந்த எலுமிச்சைத் தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சி வராது.

பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

தயிர் நீண்ட் நேரம் புளிக்காமல் இருக்க ஒரு தேங்காய் பத்தையை தயிரில் போட்டுவைத்தால் இரண்டுநாட்கள் தயிர் புளிக்காமல் இருக்கும்.

பூந்தொட்டியில் ரோஜாச்செடியை நடும்போது அத்துடன் இரண்டு சிறிய வெங்காயத்தை ஊன்றி வைத்தால் பூச்சிகள் செடியை அரிக்காமல் பாதுகாக்கும்.

அரை வாளித் தண்ணீரில் நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.
கிச்சன் கார்னர்.

  கூல் டொமேட்டோ குக்கூம்பர்!



தேவையான பொருள்கள்: நாட்டுத் தக்காளி 4 வெள்ளரிக்காய் சிறியது 1 மிளகுத் தூள், உப்பு தேவையான அளவு, புதினா இலைகள் சிறிது.
   செய்முறை: தக்காளியை மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் சீவி துருவவும். வடிகட்டிய தக்காளி ஜூஸில் மிளகு, உப்புத்தூள் கலந்து  ஃபிரிட்ஜில் வைக்கவும். குளிர வைத்த ஜூஸில் வெள்ளரித்தூவல் போட்டு கலக்கிவிட்டு புதினா இலைகளை அலங்கரித்து பறிமாறவும்.
 கொடுமையான வெயிலை கூல் செய்யும் குக்கூம்பர் ரெடி.

{பழைய மங்கையர் மலர் இதழொன்றில் வாசகி பி.ரமா தேவி எழுதிய குறிப்பு இது}

இவரைத்தெரிந்து கொள்வோம்!
   பிள்ளைகளே பெற்றோரைக் காப்பகங்களுக்கு அனுப்பும் இந்த காலத்தில் சென்னையில், அப்படி கைவிடப்பட்ட முதியவர் களுக்கு மகனாக இருந்து இறுதிச் சடங்குகளைச் செய்துகொண் டிருக்கிறார் இவர்: இங்கு சென்று இவரை தெரிந்து கொள்வோம்: ஸ்ரீதர் 

குழந்தைகள் பார்லிமெண்டில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை பற்றி பேசி அசத்திய மாற்றுத்திறனாளியான இவரை தெரிந்து கொள்ள  சுவர்ண லட்சுமி

படிச்சதில் பிடிச்சது!

சொல்விளையாட்டு!

    புலவர் ஒருவர் தன் மாணவனை சோதிக்க எண்ணினார். சில சில்லறைக் காசுகளை கொடுத்து மேகம், பசு, மணி இந்த மூன்றையும் வாங்கி வரச்சொன்னார்.
   அந்த கெட்டிக்கார மாணவரும் புலவர் கேட்டதை வாங்கி வந்து கொடுத்துவிட்டார். 
 புலவர் மகிழ்ந்து அந்த மாணவனை தட்டிக்கொடுத்தார்.
 அந்த மாணவன் என்ன வாங்கி வந்தான்?
   காராமணிப் பயறு.
காராமணி பிரித்தால் கார்+ ஆ+ மணி
    கார்- மேகம், ஆ- பசு

சொல்விளையாட்டு எப்படி?

(பழைய பாக்யா வார இதழில் பாக்யராஜ் பதில்களில் படித்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. எவரெஸ்ட் சிகரம் ஏறிய பூர்ணா மற்றும் ஆனந்த் பாராட்டுக்கு உரியவர்கள்
    பாராட்டுவோம்

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு.....

    பாராட்டுகள் தளிர் சுரேஷ்.

    ReplyDelete
  3. நிறைய விஷயங்கள் தொகுத்துள்ளீர்கள். நானும் ஏற்கெனவே ஸ்ரீதர் பற்றி சனிக்கிழமைப் பதிவான பாசிட்டிவில் சேர்த்துக் கொண்டுள்ளேன்.

    ReplyDelete
  4. மோடி தர்பாரில் தொடங்கி பாக்யராஜ் தர்பாரில் முடிந்த உங்கள் கலக்கல் பதிவு அருமை !

    ReplyDelete
  5. சொல்விளையாட்டு மிகவும் பிடித்தது....

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரர்
    வழக்கம்போல் கதம்பச்சோறு நன்றாக சமைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலுக்கு இதமான கதம்பச்சோற்றினைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரரே.

    ReplyDelete
  7. எவரெஸ்ட் சிகரம் ஏறிய பூர்ணா மற்றும் ஆனந்த் பாராட்டுக்கு உரியவர்கள்
    பாராட்டுவோம்

    ReplyDelete
  8. இன்றைய கல்வித் திட்டத்தை பற்றி யோசிக்க வைத்துவிட்டீர்கள்.

    சொள்விளையாட்டு அருமை. டிப்ஸ் வழக்கம் போல் நன்று.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!