அழகிரிக்கு கருணாநிதி கொடுத்த வடகறி!

அழகிரிக்கு கருணாநிதி கொடுத்த வடகறி!


ஊடகங்கள் எந்த பரபரப்பு செய்தியும் கிடைக்காமல் மந்தமாக இயங்கிக் கொண்டிருந்த செவ்வாய்க்கிழமை மதிய வேளையில் வழக்கமாக தானே கேள்வி தானே பதில் என்னும் அறிக்கை விடும் தாத்தா கலைஞர் அவர்கள் தன் திருவாயை மலர்ந்து அழகிரி குறித்து விடுத்த தகவல்கள் பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 அழகிரியை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கும் போது சொல்லாத புதிய காரணம் நேற்று சொன்னார் தமிழினத்தலைவர். இதன் மூலம் அவர் வீட்டுக்குள் நடக்கும் குடும்பச்சண்டையை வெளிச்சம் போட்டு காண்பித்துவிட்டார். ஒரு மூத்த அரசியல் ராஜ தந்திரி என்று வர்ணிக்கப்படும் கலைஞர் தேமுதிக கூட்டணிக்காக இந்த அளவுக்கு இறங்கிவருவார் என்று நினைத்தும் பார்க்கவில்லை நான்.
     அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரது தமிழறிவு, எழுத்தாற்றலை வியப்பவன் நான். நேற்று அவர் அளித்த பேட்டி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர் எழுதிய நாடகமாய் தோன்றியது.
      ஒரு குடும்பத்தில் அண்ணன் –தம்பிகள் இருந்தால் எப்படியும் தகறாரு ஏற்பட செய்யும்தான். வார்த்தை வேகத்தில் சில வார்த்தைகளை கொட்டிவிடக்கூடும்தான். அப்படி அழகிரி உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தாலும் அதையெல்லாம் மீடியாக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன? நீக்குவது சேர்ப்பதும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு புதிது அல்லவே! கண்கள் பணித்து இதயம் புளித்து என்று எல்லோரும் சொல்வதைப்போல தேர்தல் முடிந்ததும் மீண்டும் அழகிரியாரை அரவணைத்துக் கொள்ளலாம்தானே!
      அவர் நல்லவரா? கெட்டவரா என்பதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டு அழகிரியின் பக்கம் இருந்து யோசித்து பாருங்கள்! அவருக்கு தேமுதிகவோடு கூட்டணி சேருவதில் விருப்பம் இல்லை! தென்மண்டல அமைப்பு செயலர் என்ற முறையில் அதைக் கூறியுள்ளார். பத்திரிக்கைகளில் பேட்டி அளித்துள்ளார். அதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு கட்சியில் இருப்பதாலேயே தலைமைக்கு எதிராக கருத்து தெரிவிக்க கூடாது என்றால் அப்போது என்ன உட்கட்சி ஜனநாயகம் வாழுகிறது. இதற்காக அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கியதற்கு கட்சித்தலைவரிடம் நியாயம் கேட்க வந்திருக்கிறார்.
    அதிகாலையிலா கட்சித்தலைவரிடம் நியாயம் கேட்பது? என்கிறார் கலைஞர்.
     கட்சியின் தலைவர் தந்தை என்ற உரிமையில் அவர் கேட்டிருக்கலாம். அப்போது கலைஞர் சொன்னது போல சூடாக ஒன்றிரண்டு வார்த்தைகளை விட்டிருக்கலாம். தவறுதான். ஆனால் அதை அன்றே சொல்லி கட்சியை விட்டு நீக்கியிருக்கலாமே? இன்று புதிதாக சொல்லவேண்டிய அவசியம் என்ன?
   அழகிரிக்கு கருணாநிதி தந்த வடகறிதான் இது! சொல்லாமல் சொல்லிவிட்டார் கட்சியின் வாரிசு ஸ்டாலின் தான் என்று. அன்று அரச பரம்பரைக்குள் அடுத்த வாரிசு யார்? என்று அடித்துக் கொள்வார்கள். இன்று அதே காட்சியை காண்கிறோம்.
   தமிழகத்தின் ஏதோ ஓர் மூலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த கருணாநிதி தன்னுடைய திறமையினாலும் உழைப்பினாலும் முயற்சியினாலும் இன்னும் பிறவற்றினாலும் தமிழகத்தின் முதல்வரானார். 5முறை முதல்வராகி சாதனையும் படைத்தார். இன்று இந்திய பணக்காரர்கள் வரிசையில் அவரது குடும்பமும் இருக்கிறது. இந்த நிலையில்தான் தலைமையை கைப்பற்ற அவர்கள் குடும்பத்தில் போட்டி!
    அண்ணா தோற்றுவித்த கழகம்! குடும்ப கழகமாகி அதனுள் இன்று வாரிசு உரிமை போர் தோன்றிவிட்டது. இத்தனைவயதாகியும் தலைவர் பதவியை விட முடியாத நிலைக்கும் கருணாநிதியை தள்ளிவிட்டது.
  பிறந்த நாள் பரிசாக அல்வாவிற்குள்  இந்த வடகறியை தந்திருக்கிறார் கருணாநிதி. இதன் சுவை அழகிரிக்கு பிடிக்காதுதான்!  என்ன செய்வார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்! ஒரு கண்ணில் வெண்ணெய்! மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு! என்ற மனோபாவம் அவருக்கு எப்போதுமே உண்டு. அது இன்று தன் பிள்ளைக்கே வெளிப்பட்டிருக்கிறது.  ஜோசியம் மூடநம்பிக்கை என்று சொல்லும் அவர் அழகிரியின் இந்த ஆரூடத்திற்கு பயந்தது ஏன்? அதிகாலையில் இப்படி ஒரு கெட்ட வார்த்தை சொன்னால் பலித்துவிடும் என்று பயந்தது ஏன்? அவரே ரவுடி என்று சொல்லாமல் சொல்லிவிட்ட அழகிரிக்கு கட்சியின் தென்மண்டல அமைப்பு செயலர் என்ற பதவியை முன்பு கொடுத்தது ஏன்? இப்படி பல ஏன்கள் எழுகிறது.
   இதற்கெல்லாம் ஒரு பதில்! ஆட்சி அதிகாரம் ஒன்றுதான்! என்பதும் புரிகிறது. அதற்கு எதையும் செய்யலாம்! அன்று வைகோவிற்கு நடந்தது! எம்.ஜி.ஆருக்கு நடந்தது. இன்று அவர் மூத்த பிள்ளைக்கே நடந்துள்ளது. மொத்தத்தில் ஒரு நாடகம் நேற்று  அரங்கேறியுள்ளது.

டிஸ்கி} ரஹிம் கஸாலி அளவுக்கு அரசியல் தெரியாது. ஆனாலும் கலைஞர் சொன்ன இந்த புகார் பற்றி எனக்கு தோன்றியதை பகிர்ந்து கொண்டுள்ளேன்! எந்த கட்சி சார்ந்தவனும் அல்ல நான்.

டிஸ்கி 2} வழக்கமான பகுதி கதம்ப சோறு நாளை பதிவாகும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி

Comments

  1. "// பிறந்த நாள் பரிசாக அல்வாவிற்குள் இந்த வடகறியை தந்திருக்கிறார் கருணாநிதி/" - எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?

    நான் மிகவும் ரசித்த வரி. நன்றி

    ReplyDelete
  2. இதில் கொடுமை என்னவென்றால், அழகிரியும், ஸ்டாலினும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.

    ReplyDelete
  3. என்னத்த சொல்ல... ம்... நாடகமே உலகம்... இது ஸ்பெசல்...!

    ReplyDelete
  4. அடுத்த காட்சியில் இணைந்துவிடுவார்கள் பார்க்கலாம்

    ReplyDelete
  5. மொத்தமாக பொறுமையாக அழகிரியின் பல்லை மொத்தமாக [[அவர் ஆதரவாளர்களை]] புடுங்கிவிட்டுதான் மகனை அனுப்பி இருக்கார் தாத்தா, இனி தயாளு அம்மாவை பிடித்தால், இதயம் கனிந்தது கண்கள் புளித்தது என்று தொடரும் விடுங்கய்யா.

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  7. அன்புடையீர்..
    இன்று வலைச்சரத்தில் தங்களது தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_30.html
    நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment