“லவ் லெட்டர்”

 “லவ் லெட்டர்”


அரசுடைமை ஆக்கப்பட்ட அந்த வங்கி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பகல் மணி பதினொன்றை கடந்துவிட்டது. வங்கிப்பணியாளர்கள் நவீன மயமாக்கப்பட்ட கணிணிகளோடு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். கேஷ் கவுண்டர் முன் நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன் நீண்டதொரு வரிசை. என் முறை வர எப்படியும் அரை மணி நேரம் ஆகிவிடும். கேஷியர் மிக கவனமாக இருந்தார். மெசினில் ஒரு முறைக்கு இரு முறை எண்ணினாலும் கையால் வேறு எண்ணி நோட்டை உத்துப்பார்த்து பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தார்.
    வரிசையில் சலசலப்பு அதிகமானது!  “என்னசார்! எத்தனைவாட்டி எண்ணுவீங்க? டைம் ஆவுது இல்லே!”
  “என் கஷ்டம் உனக்குத் தெரியுமாயா? போன வாரம் அவசரப்பட்டு பத்தாயிரம் ஷாட்டேஜ் ஆயிருச்சு! என் சொந்தப்பணம் சம்பளத்துல இருந்து போட்டு கட்ட வேண்டியதா ஆச்சு!” கேஷியர் பதிலுக்கு புலம்ப ஆரம்பித்தார்.
    அப்போதுதான் வெள்ளையும் சொள்ளையுமாக அயர்ன் பண்ணி கஞ்சிப்போட்ட சட்டை கதர் வேட்டியுடன் மிடுக்காக மேனேஜர் அறையில் இருந்து வெளிப்பட்டான் அவன். இவன்.. இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே… என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன்  என்னைக் கவனித்துவிட்டான்.
  “டேய் முரளி… நல்லாயிருக்கியா? என்னை யாருன்னு தெரியுதா? என்றான்.
    அப்போதும் கூட அவனை என்னால் முழுதும் நினைவுகூற முடியவில்லை! அத்தனை பேர் முன்னிலையில் உரிமையாக டேய் போட்டு வேறு அழைக்கிறான். ஆனாலும் என் நினைவு மங்கிப்போய்விட்டதா என்ன? நான் யோசிக்கும் போதே…
  “ முரளி… என்னைத் தெரியலையா? நான் தாண்டா சரவணன்! பெரும்பேட்டுல ஒண்ணா படிச்சோமே?”
   இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. பால்ய சிநேகிதன்! என்னைவிட இரண்டு வயது பெரியவன். என் வகுப்பிலேயே படித்தவன்.
     “என்னடா? எப்படியிருக்கே? என்ன பண்றே?” கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் சரவணன்.
   அன்று நான் பார்த்த சரவணனுக்கும் இப்போதைய சரவணனுக்கும் ஏக வித்தியாசங்கள். நல்லா இருக்கேன் சரவணா! இங்கதான் ரெட் ஹில்ஸ்ல இருக்கேன்! பக்கத்துல ஒரு கம்பெனியில வொர்க் பண்றேன். நீ எப்படி இருக்கே!
     “நானா? பார்க்கிறே இல்லே! நல்லாத்தான் இருக்கேன்! சொந்தமா பிசினஸ் பண்றேன்! இந்த பேங்க்லதான் அக்கவுண்ட் இருக்கு! ஆமா ஏன் கியுவுல நிக்கறே? என்ன விசயம்?” என்றான்.
   “ஒரு டி.டி எடுக்கணும்! அதான் நிற்கறேன்!”
 எங்க பார்மை கொடு! இதோ முடிச்சுத்தரேன்! என்றவன் என்னிடம் இருந்து பார்மையும் ரூபாயையும் வாங்கி சென்று உள்ளே நுழைந்தான். சில நிமிடங்களில் டி.டி என் கையில் வந்துவிட்டது.
  ஆச்சர்யமாக “ எப்படிடா சரவணா?” என்றேன்.
  “என் அக்கவுண்ட்ல இங்க லட்சக் கணக்குல பணம் போடறேன்! எடுக்கிறேன்! இதுகூட செய்யலைன்னா எப்படி?” என்றான்.
  சரவணனின் முன்னேற்றம் மிகுந்த ஆச்சர்யத்தைகொடுத்தது. ஏனெனில் படிப்பே வராமல் ஏழாம் வகுப்பில் இரண்டு வருடங்கள் பெஞ்சு தேய்த்து எங்களோடு மூன்றாவது வருடமாக படித்தான். எல்லா வாத்தியார்களுக்கும் இவனைக் கண்டாலே சந்தோஷம். அடிவாங்க  ஒருவன் கிடைக்கிறானே! ஆனால் சும்மாச் சொல்லக் கூடாது. எவ்வளவு அடித்தாலும் தாங்குவான். சிரித்துக் கொண்டே இருப்பான். ஒரு துளி கண்ணீர் கூட சிந்த மாட்டான்.
    நான் ஏழாம் வகுப்பில் நுழைந்த போது இவன் தான் வரவேற்றான். இவனது உருவத்தை கண்டு கொஞ்சம் பயந்து போனேன். அப்போதே ஆஜானுபாகுவாக காலேஜ் போகிறவன் மாதிரி இருந்தான். கருத்த உருவம். மீசை மெல்ல வரலாமா வேண்டாமா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
   ஆனால் உருவத்துக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல ஜாலியாக பழகினான். ஒன்றாக ஒட்டி உறவாடினான். எங்களுக்கு ஏதாவது என்றால் உயிரைக் கூட விட்டுவிடுவான் போல பழகினான்.
   அந்த பள்ளியில் தமிழ் வாத்தியார் தங்கமணி என்றால் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம். அவர் செய்யுளை எடுத்து விளக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான். அவ்வளவு விரிவாக விளக்கம் கொடுப்பார். உதாரணங்கள். அதற்கு உதாரணங்கள் என்று நீண்டு கொண்டே போகும் வகுப்பு. அவருக்கு தமிழில் பிழை இருந்தால் பொறுக்காது.
    சீத்தலைச் சாத்தானாரைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்! எழுத்தில் பிழை இருந்தால் தன் தலையில் குட்டிக் கொள்வாராம். இவர் அதற்கு நேர் எதிர். அவர் வைக்கும் தேர்வில் மட்டுமல்ல எங்கள் எழுத்துக்கள் எதைப் படித்தாலும் அதில் தவறு இருந்தால் பிரம்பெடுத்து விளாசிவிடுவார். தமிழ் நாட்டுல பிறந்துட்டு தமிழை ஒழுங்கா எழுத பழகுலே மூதேவி! என்று வசவுகள் கண்டபடி வந்து விழும்.
     அன்று ஒருநாள் சரவணனிடமிருந்து ஒரு நோட்டை வாங்க அதில் ஒரு லவ்லெட்டர் என் கண்ணில் மாட்டியது. இளவயசு! மனசு குறுகுறுவென லெட்டரை படித்தேன்! என் இதயத்தில் தாமரையாக பூத்திருக்கும் செல்விக்கு என்று தொடங்கி தப்பு தப்பாக எழுத்துப்பிழைகளோடு அந்த லெட்டர் இருந்தது.
   நான் படித்துக் கொண்டு இருக்கும்போதே சரவணன் பார்த்துவிட்டான். “டேய்! டேய்!... வேணாண்டா! படிக்காதே! நோட்டை கொடுடா!” என்று பிடுங்கிக் கொண்டு ஓடினான்.
   நான் துரத்திக் கொண்டு ஓடினேன். ஏரிக்கரை ஆலமரத்தடியில் நின்றிருந்தான். “ ஏய்! முரளி! ப்ளீஸ்! யாருக்கிட்டேயும் சொல்லிடாதடா!” என்றான்.
    “ ஏண்டா நீ தமிழ்செல்வியை லவ் பண்றியா?”
   நாணிக் கோணி நெளிந்து, “ஆமாம்டா” அந்த புள்ளையை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குது!” என்றான்.
   “ டேய்! அது யாரு தெரியுமில்ல!”
   “நம்ம தமிழ் வாத்தியோட பொண்ணு!” அசால்டாக சொன்னான் சரவணன்.
   “ ஏலேய்! வேணாம்ல! அவருக்கு சும்மாவே உன்னை பிடிக்காது! இப்ப இந்த மேட்டர் தெரிஞ்சா..”
   “ தெரிஞ்சாத்தானே!”
  “ நீ இந்த லெட்டரை அந்த பொண்ணுகிட்ட கொடுத்தா என்ன நடக்கும் தெரியுமா?”
   “கொடுத்தாத்தானே!”
  “என்னடா சொல்றே? கொடுக்க போறது இல்லையா? அப்ப எதுக்கு இத்தனை பெரிய லெட்டரு எழுதி வச்சிருக்கே?”
   “ எம் மனசுல இருந்த பாரத்தை இறக்கி வச்சிருக்கேன்! அவ்வளவுதான்!” பெரிய ஞானி போல பேசினான்.
   “அப்ப அந்த பொண்ணுக்கிட்ட கொடுக்க போறது இல்லை!”
  “ ஆமாடா! கொடுக்க போறது இல்லை!”
 “ஆனா அந்த பொண்ணை லவ் பண்றீயா?”
“ஆமாம்!”
  “ நான் அந்த பொண்ணுக்கிட்ட சொல்ல போறேன்!”
“வேணாம்டா! விட்டுறு! உனக்கு என்ன வேணுமோ கேளு! வாங்கித் தரேன்! இத இத்தோட மறந்துரு!” என்றான்.
   ஒரு வாரம் கடந்திருக்கும். நான் அந்த சம்பவத்தையே மறந்து இருந்தேன். அன்று தமிழ் நோட்டு திருத்தத்திற்கு எல்லோர் நோட்டும் மேஜையில் இருக்க ஒவ்வொரு நோட்டாய் திருத்தி வந்த தங்கமணி வாத்தியார் கையில் சரவணனின் இந்த நோட்டு சிக்கியது.
    நோட்டை எடுத்ததுமே கீழே விழுந்த பேப்பரை எடுத்து பிரிக்க ஆரம்பித்துவிட்டார் வாத்தியார்.  “டேய்! சரவணா! லெட்டரோடவாடா நோட்டை கொடுப்பே! மாட்டிக்கிட்டியே!” என்று கிசுகிசுத்தேன் நான்.
   லெட்டரை படிக்க படிக்க வாத்தியாரின் முகம் கறுத்துக் கொண்டே போய் தீடிரென சிவந்தது. கோபம் பொங்க  “ஏலே சரவணா எழுந்திருலே! என்னலே இது!”
   “ஐயா அது.. அது.. வந்து!”
  இன்னிக்கு சரவணனுக்கு ஆப்புதான் டீசி கொடுத்து அனுப்பிடுவாரு வாத்தி என்று நான் யோசிக்கையில்
  ஏண்டா! கருமாந்திரம் பிடிச்ச பயலே! கடுதாசியாட எழுதறே! கடுதாசி!”
இல்ல ஐயா! அது வந்து தெரியாமா… சரவணன் தயங்க,  “என்னலே தெரியாமா.. கிரியாமன்னு சொல்லிக்கிட்டு.. தமிழ்ல உம் பேரை ஒழுங்கா எழுதத் தெரியாது! காதல் கடுதாசி! எழுதறியலோ?இத்தனை தப்பு தப்பா வார்த்தைக்கு வார்த்தை தப்பா எழுதிறியா?”
    “அன்பேன்னு எழுத அன்போ!ன்னு எழுதறே! இதயத்தில் வாசித்திருப்பேன்ற… என்னடா தமிழ் இது?”
   அப்போதுதான் சரவணனுக்கு மூச்சே வந்தது! ஐயா! கடிதத்தில் பிழைக்கு அடிக்கிறாரே தவிர அவர் பொண்ணுக்கு லெட்டர் எழுதியதுக்கு அல்ல என்று.
   அவர் சொல்லி சொல்லி அடிக்க சிரித்துக் கொண்டே நின்றான் சரவணன்.
     “ என்னடா பழைய ஞாபகமா?” என்றான் சரவணன்.
   “ஆமாடா! அந்த லெட்டரை நினைச்சா இப்பவும் சிரிப்பா வருது!”
    சரி கல்யாணமாயிருச்சா என்றேன்.
  ஆச்சுடா! யாருன்னு கேட்டா நீ ஆச்சர்யப்படுவே என்றான்.
யாரு? என்றேன்.
  அதே தாண்டா! லெட்டர் எழுதினேனே தமிழ்வாத்தியார் பொண்ணு செல்வி! அவளையேத் தான் கட்டிக்கிட்டேன் என்றான்.
  “எப்படிடா? என்றேன்!
தமிழுக்கும் எனக்கும் தான் தகறாரு! தமிழ்செல்விக்கும் எனக்கும் ஒத்துமைதான்! என்று கண் சிமிட்டினான். 
அட! வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிப் போகிறது! காலம் போடும் கணக்கை நினைத்து வியந்தவனாய்   “நல்லாயிரு நண்பா! ஒருநாள் என் வீட்டுக்கு அவசியம் வரனும்”என்று அவனிடம் விடைபெற்றேன் நான்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. பள்ளிகூட நினைவுகளே ஒரு இன்பம் தான். இன்று நான் படித்த இடுகைகளிலே மிகவும் ரசித்த ஒன்று. தொடர்ந்து இவைகளை அளிக்கவும்.

    ReplyDelete
  2. கதை அருமை...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உங்களுக்குள் இருக்கும் ஒரு அற்புதமான எழுத்துக்காரனை சந்தித்தேன்.. வாழ்த்துக்கள்
    கலக்கல் கதை...

    ReplyDelete
  4. //தமிழுக்கும் எனக்கும் தான் தகறாரு! தமிழ்செல்விக்கும் எனக்கும் ஒத்துமைதான்! // ஆஹா :)
    அருமையான கதை

    ReplyDelete
  5. நல்லதொரு கதைதான் நண்பா...

    ReplyDelete
  6. அருமையான கதை நண்பரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சூப்பர் கதைங்க..//தமிழுக்கும் எனக்கும் தான் தகறாரு! தமிழ்செல்விக்கும் எனக்கும் ஒத்துமைதான்!// ஆஹா காதலித்தவளையே கைப்பிடித்தாரே....சாரி கைப்பிடிக்க வைச்சீங்களே...சுபம் போட்டு.....நல்ல கதை...சுரேஷ் ஏன் நீங்கள் உங்கள் சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடக் கூடாது.....ஆன்லைனில் செய்யலாமே...முயற்சி செய்து பாருங்களேன்...

    ReplyDelete
  8. அதுதானே மனப் பொருத்தம் இருந்தால் போதாதா ?

    ReplyDelete
  9. அப்படி போட்டு தாக்கு.. சரி.......இதுக்கு தமிழ் வாத்தியார் எப்பிடி ஒத்துக்கிட்டார்.....?

    ReplyDelete
  10. தபுத்தப்பாக தமிழை எழுதி, தமிழ் வாத்தியார் பெண்ணையே திருமணம் செய்து கொண்டாரா. நல்ல கற்பனை தான்
    அருமையான கதை.

    ReplyDelete
  11. கதை சுவாரசியமாய் இருந்ததுங்க....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!