கவிதைத் தேன்!


விற்பனைத் திருப்பம்.

 கண்ணே!
 நீ கடை வீதிக்கு
 பொருள் வாங்க
 வந்தபோது என்
 உள்ளத்தை உன்னிடம்
 தந்தேன் ஆனால் நீயோ
 சரக்கு சரியில்லை
 என்று திருப்பி
 விட்டாயே!

முதிர் கன்னிகள்

நாங்கள் திருமண சந்தையில்
விலை போகாத
பெருமாள் மாடுகள்!
அடுத்த சந்தை நாளுக்கு
காத்திருந்து அலங்கரித்துக்
கொள்ளும் பரிதாப பதுமைகள்!
படித்திருந்தும் பண்பிருந்தும்
பணமில்லாததால்
மணமாவாதவர்கள்!
மண்ணவனை தேடி
வழிமேல் விழி வைத்திருக்கும்
திருஷ்டி பொம்மைகள்!


காற்று
சில்லென்று வீசி
சில சமயம்
சூறாவளியாய் மாறி
உயிரின் சூட்சுமமாய்
உடலிலே கலந்து
மிதமாய் தழுவி உறக்கத்திற்கு
அழைத்துசெல்லும் மேஜிக் நிபுனன்.


ஏழ்மை ஒழிப்பு

ஏழ்மையை ஒழிப்போம்
என்றார்.எங்க ஊரு
எம்.எல்.ஏ.
ஒழித்தார்.
அவருடைய
ஏழ்மையை!

மனம் ஒரு குரங்கு

உன்னிடம் மனதை
பறிகொடுத்தேன்
என்று சொன்னவர்
ஒருவாரமாய் தோழியுடன்
சுற்றுகிறார்.
மனம் ஒரு குரங்கு
என்பதால் மரம் விட்டு
மரம் தாவி விட்டதோ?

புன்னகை

நட்பு பாலத்திற்கு
நல்லதொரு
அடிக்கல் நாட்டுவிழா!

தாலி

கட்டுகட்டாய் நோட்டும்
சவரன்கணக்காய் நகையும்
கிலோகணக்காய் பாத்திரமும்
புத்தம் புதிதாய் வண்டியும்
விலையாய்க்கொடுத்து
கணவனை வாங்கியதற்கு ரசீது!.

சிலை
காக்கை குருவிகளின்
காசில்லா
கழிப்பிடம்.
நினைவுநாளிலும்
பிறந்தநாளிலும்தான்
உனக்கு மரியாதை
உன்னை உடைத்தாலோ
ஊரிலே கலவரம்

   

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!