சாகச வீரன் சூப்பர் தும்பி! பாப்பா மலர்

சாகச வீரன் சூப்பர் தும்பி!


    “டேய்  முகில்! அங்க என்னடா பண்ணிட்டு இருக்கே?” தோட்டத்தில் தும்பிகளை பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்த  முகிலை அந்த குரல் கலைத்தது. “ அம்மா! இங்க வாயேன்! எத்தனை எத்தனை தும்பி! பாரும்மா! நம்ம தோட்டத்துல அதுங்க அழகா பறக்கிறதை பார்க்க பார்க்க ஆசையா இருக்கு!” என்றவாறு கையில் ஒரு சிறு தும்பியை பிடித்தபடி வந்தான்  முகில்.
     “  முகில்! இதென்ன கெட்ட பழக்கம்?” எந்த உயிரையும் நாம துன்புறுத்த கூடாது? ஓடி விளையாடற உன்னை பிடிச்சு கட்டி வைச்சா உனக்கு வலிக்குமா வலிக்காதா? அப்படித்தான் விலங்குகளும் பூச்சிகளும் அதுங்களோட உலகத்துல நாமும் இருக்கோம். நாம வலிமை மிக்கவங்கறதாலே அதுங்களை துன்புறுத்த கூடாது விட்டுரு!”
  “ஸாரிம்மா! நான் இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன்! என் ப்ரெண்ட்  முத்து தான் இப்படி தும்பி பிடிக்க சொல்லிக் கொடுத்தான். அவனையும் பிடிக்கக் கூடாதுன்னு சொல்லிடறேன்!” என்றவாறு “ஸாரி தும்பி! ஏதோ ஆசையிலே உன்னை பிடிச்சிட்டேன்! இப்ப விட்டுடறேன்! நீ சுதந்திரமா பறந்து போ!” என்று அதை விட சிறகடித்து பறந்தது தும்பி.
  பள்ளியில், ”டேய்  முத்து! இனிமே தும்பி பட்டாம்பூச்சி எல்லாம் பிடிச்சு விளையாடறதை விட்டுடு. நம்மளை போல அதுவும் ஓர் உயிரினம்! அதை துன்ப படுத்த கூடாது!”
   “தோடா! வந்துட்டாரு புத்தரு!” போடா! நீ வேணா பிடிக்காதே! நான் தும்பி மட்டும் இல்லே! பொன்வண்டு, பட்டாம் பூச்சி எல்லாம் பிடிப்பேன்! உன்னால முடிஞ்சதை செய்துக்க!”
     ”உன் கிட்ட அப்படி எதாவது பூச்சியை பார்த்தா நான் அவுத்து விட்டுருவேன்!”
   ”முடிஞ்சா செய்! இதோ பாரு என் கிட்ட ஒரு தும்பி இருக்கு! இதோட ரெக்கையை உடைச்சி என் ஜாமெட்ரி பாக்ஸில் வைச்சுக்க போறேன்!”
    டேய்! வேணாம்டா! விட்டுடு!”
    முத்து அந்த தும்பியை எடுத்து அதன் இறக்கையை உடைக்க முயல  முகில் சினம் கொண்டு கணேஷின் கையைத் தட்டி விட்டான். அவன் கையில் இருந்த தும்பி  விடுபட்டு பறந்தது. அடுத்த கணம்  முகிலின் கன்னத்தில் ஒரு குத்து விழுந்தது. “ஆ” என்று  முகில் அலறியது ஸ்கூல் பள்ளி மணி சத்தத்தில் மறைந்து போனது.
   “ எவ்வளோ கஷ்டப்பட்டு அந்த தும்பியை பிடிச்சேன்! இப்படி தட்டி விட்டுட்டியே! அதுக்கான பரிசுதான் இந்த குத்து! நாளைக்கு நான் மறுபடியும் தும்பியோட வருவேன். அப்ப நீ ஏதாவது வால் ஆட்டனே மவனே பல்லு உடைஞ்சிரும்!”  முத்து கருவியபடி சொல்ல கண்கலங்கியவாறு நடந்தான்  முகில்
   அன்று மாலையில்  முகில்அவனது தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருக்க அவனது தோள் மீது வந்தமர்ந்தது அந்த தும்பி.  “ஹலோ  முகில்! அடி ரொம்ப பலமா பட்டிருச்சா! வலிக்குதா?” என்றது.
   “யாரு யாரு பேசறது?”
”நான் தான்  முகில்! உன் தோள் பட்டையில உக்காந்திருக்கேன்! காலையில என்னை காப்பாத்தினேயே அந்த தும்பி!”
 முகிலின் கண்கள் வியப்பால் விரிந்தன. “ தும்பி நீ பேசக் கூட செய்வாயா?
   ”சாதாரண தும்பிகளால் பேச முடியாது! ஆனால் நான் ஒரு வினோத தும்பி. முனிவர் ஒருவர் சாபத்தினால் இப்படி தும்பியாக மாறிவிட்டேன். உண்மையில் நான் ஒரு கந்தர்வன்.”
   “கந்தர்வனா?”
ஆமாம்! நாங்கள் ஆகாயத்தில் வசிப்பவர்கள். ஒரு முறை அப்படியே சஞ்சாரம் செய்து வரும் போது விந்திய மலை அடிவாரத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்தில் நுழைந்தேன். அங்கு கூடைகளில் நிறைய மலர்கள் நிறைந்து இருந்தது. மலர்களின் வாசம் என்னை கவர்ந்தது. அப்படியே கீழிறங்கி கூடையோடு மலர்களை எடுத்து முகர்ந்து கொண்டிருந்தேன்.

அப்போது, ஒரு முனிவர் ஆவேசத்தோடு வந்து பூஜைக்கு வைத்த மலர்களை பாழாக்கிவிட்டாயே! பூக்களை நுகர்ந்த நீ இனி தும்பியாக மாறி பல பூக்களை தினமும் நுகர்ந்து கொண்டிரு! என்று சாபம் விடுத்துவிட்டார். சாப விமோசனம் கேட்டேன். தும்பியாக பிறந்த உன்னை மனிதர்கள் பிடித்து துன்புறுத்தி சாகடிப்பார்கள். பலமுறை செத்தும் மீண்டும் தும்பியாக பிறப்பெடுப்பாய். நல்ல மனதுள்ள ஒரு சிறுவன் உன்னை ஒருமுறை விடுவிப்பான். அவனுக்கு தேவையான உதவிகளை செய்து முடி! அப்புறம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும். என்றார்.
   இன்று உன்னால் விடுவிக்கப் பட்டேன்! எனக்கு சாபவிமோசனம் விரைவில் கிடைக்கும். உனக்கு என்னுடைய சக்தியை தரப் போகிறேன்! இன்று முதல் நீ பறக்க முடியும்! என்னை நினைத்து சிறகே வா! சீக்கிரம் பற என்று சொன்னால் அந்தரத்தில் பறப்பாய்! தம்பி! நீ சூப்பர் தும்பி ஆகப் போகிறாய்!” என்றது அந்த தும்பி.
  முகிலால் நடப்பது எதையும் நம்ப முடியவில்லை!
 ”அதோ உன் ப்ரெண்ட்   முத்து கையில் ஒரு பொன்வண்டை வைத்துக் கொண்டு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறான் அவனுக்கு நாம் விளையாட்டு காண்பிப்போமா?” என்ற்து தும்பி.
   என்னை மனதில் நினை! மந்திரத்தை சொல்லு!
தும்பியை நினைத்து, ”சிறகேவா! சீக்கிரம் பற” என்றான்  முகில்
  தன் முன்னே தீடிரென்று வந்து நிற்கும்  முகிலைப் பார்த்து, காலையில் வாங்கினது பத்தலையா? என்றான் முத்து.
   “முத்து அந்த வண்டை விட்டுரு!”
   “இல்லேன்னா!”
அடுத்த நொடி! முத்துவை தூக்கிக் கொண்டு பறந்தான் முகில். ஓர் உயரமான மரத்தின் கிளையில் தொங்கவிட்டான். ”முத்து எப்படி இருக்குது நம்ம தொட்டில்! ராத்திரி முழுக்க இங்க தூங்கறியா?”
    முத்துவின் கண்களில் பயம் தெரிந்தது. ”வேண்டாம் முகில்! விட்டுரு! நான் இந்த பூச்சியை விட்டுடறேன்!”
   “ இந்த பூச்சியை மட்டும் இல்லே! இனிமே எந்த பூச்சியையும் பிடிக்க மாட்டேன்னு சொல்லு!”
   ”பிடிக்க மாட்டேன்! பிடிக்க மாட்டேன்! உங்கிட்ட வம்புக்கும் வரமாட்டேன்!”
சரி! உன்னை இறக்கி விடறேன்!  மரத்திலிருந்து முத்துவை அலேக்காக தூக்கி பறந்து கீழே  இறங்கினான் முகில்
   “ டமால்! என்ற சத்தம் கேட்டது. கட்டிலில் இருந்து புரண்டு விழுந்திருந்தான் முகில்
  ஏண்டா கனவு ஏதாவது கண்டியா? தூக்கத்திலே என்னென்னமோ உளறினே இப்ப புரண்டு கீழே விழுந்திருக்கே!  அம்மா கேட்க
    ச்சே!! எல்லாம் கனவா?  என்று முகம் கழுவ பாத்ரூம் சென்றான். சட்டையில் ஏதோ உறுத்த அவிழ்த்தான். அவன் விலாப்புறம் இரண்டு சிறிய இறக்கைகள் இது இது….!
    பாத்ரூம் ஜன்னலில் தும்பி ஒன்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

டிஸ்கி}  1980களில் தினமணிக் கதிரில் சூப்பர்தும்பி என்றொரு கார்டூன் வெளிவந்தது. படு சுவாரஸ்யமாக இருக்கும். நான் விரும்பி படிப்பேன். அதன் பாதிப்பே இந்த கதை. அவ்வப்போது தொடர்வேன் தும்பியின் சாகசங்களை!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கதை நன்றாக இருக்கிறது.
    நல்ல கருத்தைக் கூறும் நல்ல கதை.

    ReplyDelete
  2. நல்ல கதை நண்பரே வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    http://ypvn.myartsonline.com/

    ReplyDelete
  4. கார்ட்டூனை மனதில் வைத்து தீட்டிய கதை அருமை.

    ReplyDelete
  5. அருமையான கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. அப்போ அவன் தும்பிதான்ங்கறீங்க! எதிலிருந்து கனவு?

    ReplyDelete
  7. அருமையான கற்பனை வளம். சிறுவருக்கான உங்கள் படைப்புக்களை எல்லாம் தொகுத்து மின்னூலாக்குங்கள்.

    ReplyDelete
  8. சிறுவர்களுக்கான நல்ல ஃபேண்டசி கதை சுரேஷ்..பாராட்டுகள் சுரேஷ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!