நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 11

போகாதே!

”காலம் கெட்டுக்கிடக்கு! ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டேண்ட் பக்கம் கூட்டம் இருக்கே பயமில்லைன்னு    தனியா போய்  உயிரை விட்டுறாதே  ஜாக்கிரதை! ஆமாம் சொல்லிப்புட்டேன்!” என்று காலேஜுக்கு கிளம்பிய பேத்தியை எச்சரித்தாள் பாட்டி!

அட்வைஸ்!
    ஜங்க் புட் நிறைய எடுத்துக்காதீங்க! அது உடம்புக்கு நல்லதில்லை! அது முழுசும் கொலஸ்ட்ரால் நிறைய இருக்கு! எப்ப செஞ்சதுன்னு தெரியுமா? குர்குரெ! லேஸ், பர்கர், பீட்ஸான்னு நிறைய சாப்பிட்டா அப்புறம் உடம்பு கெட்டுப் போகாம என்ன செய்யும்? மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவனிடம் அறிவுரை வழங்கியவன் கைகளில் இருந்தது பெரியதொரு மிக்சர் பாக்கெட்.

வீக் எண்ட்!
   ”ஊருல தாத்தா செத்து போயிட்டாராம்!” ஞாயிறு அதிகாலையில் செய்தி வந்ததும் ”இந்த வீக் எண்டும் பாழாப் போச்சா! ஞாயிற்றுக்கிழமை பார்த்தா சாகனும்!” என்று புலம்பிக் கொண்டிருந்தான் பேரன்.


இனிப்பு!
   சொற்பொழிவில் இனிக்க இனிக்க பேசிய சொற்பொழிவாளர் பேசி முடித்ததும் கேட்டார் “ சக்கரை இல்லாம கொஞ்சம் காபி கிடைக்குமா?”

முழம்!

   முல்லை கதம்பம் முழம் முப்பது ரூபா! அதுக்கு கொறைச்சு தரமுடியாது! இஷ்டபட்டா வாங்கு என்று கறாராக கூறிய பூக்காரி குறைத்துக் கொடுத்தாள் கால் முழம் குறைவாக.

லஞ்சம்!
   பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரியை விடுவித்தார்கள் ஐம்பதாயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்டு.  

எஸ்கேப்!

    காலையில் இருந்து போன் அடித்துக் கொண்டிருந்தது. ஆஹா இவர்கிட்டே சிக்க கூடாதே என்று எடுக்காமல் அவாய்ட் செய்ய எஸ். எம். எஸ் வந்து பேசச் சொன்னது. டபாய்த்துவிட்டு ஆபீஸ் சென்று வாட்ஸப் பார்க்க சாட்டில் வந்தார். பிஸியாக இருப்பதாக சொல்லி கட் செய்ய லஞ்ச் ப்ரேக்கில் நேரே வந்துவிட்டார். அவாய்ட் பண்ணாதீங்க சார்! ரொம்ப கம்மியான இண்ட்ரஸ்ட்! செக் கொடுத்தா போதும்! எங்க பேங்க்ல நீங்க ஹோம் லோன் வாங்கிடலாம். செக்யூரிடி எல்லாம் நான் பாத்துக்கறேன்! என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார் அந்த மேனேஜர்.

 அஹிம்சை!
  அஹிம்சையை வலியுறுத்தி ஊர்வலம் போனவர்களுக்கு ஆளுக்கொரு பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.

  பரிசு!
    டீசல் சிக்கனம் என மெதுவாக சென்று கொண்டிருந்தார் அரசுபஸ் ஓட்டுனர். பரிசு கிடைத்தது தனியார் முதலாளிகளிடம் தனியாக.

பகிர்வு!
   வேலையை பகிர்ந்து கொடுங்க சார்! ஒரே ஆள் இத்தனை வேலையை எப்படி செய்வது? கொஞ்சம் யோசியுங்க! என்று மேனேஜரிடம் சண்டை போட்டு வந்தவர்  இன்னிக்கு கொஞ்சம் பசங்களுக்கு ஹோம் ஒர்க் சொல்லி கொடுங்களேன் என்ற மனைவியிடம் ஏன் இதைக் கூட உன்னால செய்ய முடியாதா? என்று கோபித்துக் கொண்டார்.

போதனை!
     படிக்கலைன்னா உருப்படாம போய் பெயில் ஆயிருவே! 
     தெரியும்பா!
    தெரிஞ்சுமா படிக்காம பசங்க கூட ஊர் சுத்தறே?
     குடிச்சா உடம்பு கெட்டு போய் செத்துருவோம்னு தெரிஞ்சும் நீங்க குடிச்சுட்டு வரலையாப்பா?
 மகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றான்.

 எடை!
     எடையை ஒழுங்கா நிறுத்துப் போடுப்பா! நீ போடுற எடை கிலோவுக்கு கால்கிலோ குறையும் போல இருக்கே? இப்படி கொள்ளை லாபம் அடிக்க கூடாது!  பழைய பேப்பர் வியாபாரியிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தான் ரேசன் கடை ஊழியன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


   

Comments

  1. அனைத்துமே அருமையான கதைகள்... பாராட்டுகள்.

    ReplyDelete
  2. எல்லாம் அருமை. குறிப்பாக ஒன்றும், மூன்றும்.

    ReplyDelete
  3. எஸ்கேப் சமீபத்தில் எங்களுடைய அனுபவம் ஒன்றை நினைவூட்டியது! :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!