நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 10

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 10

கவர்மெண்ட் ஸ்கூல்!
    உங்க புள்ளைகளை ஏன் கவர் மெண்ட் ஸ்கூல்ல சேர்க்க மாட்டேங்கறீங்க? அங்க எல்லாமே இலவசமா கிடைக்குது! படிக்க புக்ஸ், யூனிபார்ம், செருப்பு சாப்பாடு எல்லாம் போடறாங்க! இங்கிலீஷ் மீடியமும் இருக்கு, டாய்லெட் வசதி, கம்ப்யூட்டர் எல்லாம் கூட வந்திருச்சு! நம்ம கவர்மெண்ட் ஸ்கூல்ல பசங்களை சேருங்க! அப்பத்தான் ஸ்கூல் டெவலப் ஆகும். ஸ்ட்ரெந்த்  கூடுனா இன்னும் கூடுதல் வசதிகளை கேட்டு வாங்கலாம்!  வீடு வீடாக சென்று பிள்ளைகளை கவர்மெண்ட் ஸ்கூலில் சேர்க்க சொன்ன டீச்சர் தன் மகளை தனியார் பள்ளியில் சேர்த்து இருந்தார்.

நூறுநாள் வேலை!
    அரை நாளு முழுக்க வெயில்லேயும் சேத்துலேயும் கஷ்டப்பட்டு களை புடுங்கினா ஐம்பது ரூபா தான் தர்றீங்க! யாரு வருவாங்க! நூறு நாள் வேலைக்கு போனா சுளையா நூற்று முப்பது ரூபா வருது! என்ற முருகாயியிடம், சரிம்மா! நானும் நூறு ரூபா தரேன்! களைக்கு ஆளை கூட்டிட்டு வர்றியா? என்றார் பண்ணையார். மறுநாள் தனியாக வந்த முருகாயி சொன்னாள். பண்ணையார் ஐயா! அங்கே வேலை செய்யாமலே கூலி கிடைக்குதாம் அதனால யாரும் வரமாட்டேங்கிறாங்க என்றாள்.

மிஸ்டேக்!
    ஒரு பாராகிராப் எழுதச் சொன்னா அதுல இத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக்! ச்சே! நீயெல்லாம் படிச்சு என்னத்தை கிழிக்க போறியோ? மகளிடம் எரிந்து விழுந்து விட்டு ஆபீஸ் சென்ற மேகலாவை மேனேஜர் அழைத்தார். என்னம்மா மேகலா! வேலையிலே சேர்ந்து ஆறு வருசம் ஆகுது! ஒரு ஸ்டேட் மெண்ட் டி.டி.பி பண்ண சொன்னா அதுல இத்தனை மிஸ்டேக்! உன்னையெல்லாம் வச்சிக்கிட்டு நான் எப்படி கம்பெனி ரன் பன்றது?

பணிஷ்மெண்ட்!
     வங்கியில் டெபாசிட் செய்து விட்டு பாஸ்புக்கை கொடுத்துவிட்டு எண்ட்ரிக்காக காத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பின்னால் வந்தவர்களுக்கு எல்லாம் போட்டுக் கொடுத்த ஊழியர் என்னை மட்டும் அமரும்படி சைகை செய்துவிட்டு அவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரம் கழித்து அழைத்தவர் என்ன டீச்சர்! உங்க ஸ்கூல்ல பசங்க நோட்டை கொடுத்தா உடனேவா திருத்தி கொடுக்கறீங்க? வெச்சுட்டு போ! அப்புறம் வா!ன்னுதானே காக்க வைப்பீங்க! இப்ப நான் அரை மணிநேரம் காக்க வைச்சா உங்களுக்கு பி.பி ஏறுதே! என்றார்.

நிழல் கொடை!
     சாலையோரம் பலருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்த அந்த வேப்ப மரம் அடியோடு பெயர்க்கப் பட்டது. அடுத்த வாரத்திலேயே மந்திரியின் பெயர் பொறித்த ஓர் நிழல்குடை புதிதாக திறக்கப் பட்டது.

அமைதி!
   பெரிய பெரிய லவுட் ஸ்பீக்கர்கள் அலறின. மந்திரி வந்ததும் ஆயிரம் வாலா பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. மந்திரி மேடையேறியதும் கரகோஷமும் விசிலும் விண்ணைப் பிளந்தன, மைக்கை ஆன் செய்த மந்திரி பேச ஆரம்பித்தார். பெரியோர்களே! தாய்மார்களே! இன்று நாம் உலக அமைதி தினத்தை சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்!

புத்தக கண்காட்சி!
    நம்பி வீட்டில்  புத்தக கண்காட்சிக்கு போயே தீருவேன் என்று அடம்பிடித்து கண்காட்சிக்கு நண்பர்களுடன் நுழைந்தான். ஒரு ஸ்டால் விடாமல் நுழைந்து வந்தான். நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டான். மறக்காமல் அதை எஃப். பியில் ஷேர் செய்தான். ஆனால் மறந்தும் ஒரு புத்தகமும் வாங்க வில்லை.

தீர்ப்பு!
   இன்னிக்கு முக்கியமான தீர்ப்பு வரப் போவுது! நம்ம ஃபேமிலி எல்லோரும் அங்க இருந்தாவனும். ஜட்ஜ் நம்மளுக்கு ஃபேவராத் தான் பண்ணுவாருன்னு பார்க்கறேன் என்று எல்லோரும் தீர்ப்புக்கு காத்திருக்கையில் இந்த நாலு பேருல பைனலுக்கு போக போற மூணு பேர் என்று   மூன்று பேர்களை சொல்ல ஆரம்பித்தார் சூப்பர் சிங்கர் ஜட்ஜ்.

உடை!
   என்ன டிரஸ் இது! தொடை தெரியற மாதிரி டாப்ஸ்! டைட்டா பிடிக்கிற லெக்கின்ஸுன்னு  என்ன பேஷனோ எனக்கு ஒண்ணும் பிடிக்கலை!  பெண்ணை திட்டிய தாய் மாமியாரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள் என்னடி புடவை கட்டறே? புடவை முந்தானையை தரையை பெருக்கறா மாதிரி தொங்க விட்டுக்கிட்டு! இடுப்புல இழுத்து சொருகு!

வலி!
   நகரின் பிரபல் பிசியோ தெரபிஸ்ட் அவர். காலை முதல் மாலைவரை பலருக்கு பயிற்சிகள் கற்றுக்கொடுத்து வைத்தியம் செய்தவர் வீட்டுக்குள் நுழைந்தார். “அம்மா! காலையிலே இருந்து ஒரே கழுத்துவலி! தைலம் ஏதாவது தடவி விடறியா? என்றார்.

டிப்ஸ்!
    அந்த சின்ன டீக்கடையில் மாஸ்டர் ஆத்திக் கொடுத்த டீயையும் வடை பஜ்ஜியை எடுத்துவந்து பறிமாறிய பையனிடம் தனியாக ஒரு ஐந்து ரூபாயை கையில் அழுத்தினான் ஓட்டலில் சர்வராக வேலை பார்க்கும் கணேஷ்.

லக்கி ட்ரா!
   உங்க போன் நம்பர் லக்கிட்ராவிலே செலக்ட் ஆகியிருக்கு! பத்து லட்ச ரூபாய் பரிசு கிடைக்க போவுது உடனே இந்த மெயில் ஐடிக்கு உங்க விவரங்களை அனுப்ப முடியுமா? என்ற காலர் பெண்ணிடம், சாரி மேடம்! லக் இல்லே என்றான். ஏன்? உங்களுக்குத்தான் பத்துலட்சம் கிடைக்க போவுதே! இல்ல மேடம் இந்த நம்பர் என்னுது இல்லே! வர்ற வழியிலே பஸ்ல ஒருத்தன் கிட்ட அடிச்சேன்! என்றான்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அனைத்தும் நன்று நண்பரே ரசித்தேன்

    ReplyDelete
  2. அனைத்துமே அருமை. வேலை பார்க்காமல் கூலியை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
  3. கதைகளும் அருமை ... படங்களும் அருமை ... https://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
  4. கதைகளும், தேர்ந்தெடுத்த படங்களும் அருமை. பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  5. நூறு நாள் வேலைத் திட்டம் குறித்து "நச்"சென்று சொல்லி விட்டீர்கள். உண்மையில் இது தான் நடக்கிறது.

    ReplyDelete
  6. கதைகள் அருமை சுரேஷ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!