மனக் கஷ்டம் நீக்கும் மாசிலாமணீஸ்வரர்!

   மனக் கஷ்டம் நீக்கும் மாசிலாமணீஸ்வரர்!


மனக் கஷ்டம் இல்லாத மனிதர்கள் இல்லை! மனக் கவலைக்கு மருந்து இல்லை என்ற பழமொழியும் உண்டு. ஆனால் பக்தர்களின் மனக்கஷ்டங்களை அவர்களது மனதினுள் நுழைந்து ஆறுதலும் தீர்வும் தருகிறார் மாசிலாமணீஸ்வரர்.

சென்னை ஆவடி அருகே அமைந்துள்ளது வட திருமுல்லைவாயில் எனப்படும் திருமுல்லைவாயில். சென்னையில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில்  உள்ள சிறப்பான தலம்.
 சென்னையில் மூன்று அம்மன்களை ஒரேநாளில் அதாவது பவுர்ணமி அன்று தரிசனம் செய்தால் நன்மை என்றொரு நம்பிக்கை உள்ளது.இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற முப்பெரும் சக்திகளாக திகழும் அம்பிகைகள் அதில் முதலாவது அம்பிகை வடிவுடை நாயகி, திருவொற்றியூர் ஞானத்தை வழங்குபவள். அடுத்து  மணலி அருகே மேலூரில் உள்ள திருவுடைநாயகி,இச்சா சக்தியை அதாவது விரும்பியதை தருபவள். அடுத்த அம்பிகை இந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளி இருக்கும் கொடியிடை நாயகி. கிரியா சக்தி வடிவானவள். நம்முடைய செயல்களுக்கு துணை நிற்பவள். செயல்களை திருத்துபவள்.


தல வரலாறு: பல  ஆண்டுகளுக்கு முன்னர் வனாந்திரமாக இருந்த இந்த பகுதியில் வாணன், ஓணன் என்ற அசுரர்கள் இங்கு தவமிருந்த முனிவர்களை துன்புறுத்தி வந்தனர். அவர்களுடன் போரிட வந்த அரசன் தொண்டைமானை அசுரர்கள் கொல்ல முயன்றனர். அரசன் அவர்களிடம் தப்பி தன்னுடைய பட்டத்து யானை மீதேறி சென்றான். அப்போது யானையின் கால் ஒரு முல்லைக் கொடியில் சிக்குண்டது. மன்னன் யானை மீதிருந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டினான். அப்போது வெட்டப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது.
   மன்னன் பதறிப்போய் கீழே இறங்கி பார்த்தபோது மண்ணுக்கு அடியில் ஒரு சிவலிங்கம் புதைந்திருப்பதும் அதன் லிங்கத்திலிருந்து ரத்தம் வழிவதையும் கண்டான். சிவபெருமானையே அபச்சாரம் செய்து விட்டோமே என்று மன்னன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றான். அப்போது அவன் உயிரை காக்க சிவன்  அம்பாளை அழைக்காமல் தனியாக காட்சி தந்து , லிங்கம் வெட்டுண்டதற்காக வருந்தவேண்டாம், வெட்டுப்பட்டாலும் மாசு இல்லாத தூய மணியாகவே விளங்குவேன் என்று அருளிச் செய்தார். சிவன் அவசரமாக சென்றதை கண்ட பார்வதி தேவியும் உடனடியாக இங்கு வந்து வலப்புறம் நின்றாள்.
   மன்னன் சிவனிடம் அசுரர்களைப் பற்றி கூற தன்னுடைய நந்தி வாகனத்தை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லச் செய்தார். மன்னன் அசுரர்கள் வைத்திருந்த இரண்டு வெள்ளெருக்கம் தூண்களை எடுத்துவந்து ஓரிடத்தில் வைத்து இறைவனுக்கு கோயில் கட்டினான். இந்த இரண்டு தூண்களும் இன்றும் சிவன் கருவறைக்கு முன்னர் காணலாம்.


   இத்தல இறைவன் மாசிலாமணீஸ்வரர். சுயம்பு மூர்த்தி, இவர் தலையில் வெட்டுப்பட்ட காயம் உள்ளது. வெட்டுப்பட்ட காயத்தை குளிர்விக்க சந்தனக் காப்பு தினமும் செய்யப்படுகிறது. இவரை சந்தனக் காப்பு கோலத்தில் தரிசித்தால் மனக் கஷ்டம் போக்கி நிம்மதி தருவார் என்று நம்பப்படுகிறது.

 சித்திரை மாதம் சதய நட்சத்திரம், அதன் மறுநாள் சந்தனக் காப்பு இன்றி காட்சி தருவார். அன்று வணங்கிட பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இங்கு காணப்படும் நந்தி அசுரர்களை எதிர்த்து போரிட்டு வெல்ல மன்னருக்குத் துணை சென்றமையால் சுவாமியை பார்க்காமல் எதிர் திசை நோக்கி உள்ளது. இவ்வாலயத்தில் நவகிரகம் சன்னதி கிடையாது.


கொடியிடை நாயகி:  அம்பாள் கொடி போன்ற இடை உடையவள் என்பதால் கொடியிடைநாயகி என்று வழங்கப்படுகிறாள். இவளை வணங்கினால் பாவ விமோசனம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை ஆகிய நாட்கள் தவிர்த்து பிற நாட்களில் இங்குள்ள நந்தியை பூஜை செய்து மாலை சார்த்தி வழிபட்டு அந்த மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை, புத்திர தோஷம் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.


வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம், மாசிமாதத்தில் தெப்பத்திருவிழா, ஆனியில் வசந்தோற்சவம் என்ற வகையில் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோயில் திறக்கும் நேரம்: காலை: 6.30- 12, மாலை 4 –இரவு 8மணிவரை.  தொடர்புக்கு: 044- 2637 6151

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. சிறப்பான தகவல்களுடன் கோவில் அறிமுகம் அருமை

    ReplyDelete
  2. நல்லதோர் கோவில் பற்றிய தகவல்களுக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  3. புதியதொரு கோவிலின் அறிமுகம், மிக்க நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  4. ஒரு காலத்தில் வீட்டிலே இருந்து இந்தக் கோயிலுக்கு நடந்தே போயிருக்கோம். :( அருமையான, அதே சமயம் பழைமையான கோயில்.

    ReplyDelete
  5. இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பாதரசலிங்கம் காஞ்சிப் பெரியவரின் விருப்பப்படி ஒருவரால் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டுப் பிரதிஷ்டை ஆனது. 84 ஆம் வருஷம் இந்தப் பாதரசலிங்கம் அம்பத்தூருக்குப் பிரசன்ன விநாயகர் கோயிலுக்கு வந்தப்போப் பார்த்தேன். :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!