நாச்சியார் கோவில்! கல் கருடன்!

  நாச்சியார் கோவில்!


கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார் கோவில். இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர்.

   திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்று பொருள். ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர்ப்பெயரும் நாச்சியார் கோவில் என்றாகிவிட்டது.
   கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீவாசுதேவனாக திருமணக் கோலத்தில் ஸ்ரீ வஞ்சுளவல்லித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். இங்கு தாயாருக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பெருமாளைவிட தாயார் சற்று முன்னே எழுந்தருளி இருப்பதை காணலாம்.இங்கு சகல மரியாதைகளும் முதலில் நாச்சியாருக்குத்தான். பெருமாளும் நாச்சியாரும் ஒரே சன்னதியில் எழுந்தருளி இருப்பது மற்றொரு தனிச்சிறப்பு ஆகும்.

   கருவறையில் பெருமாளோடு, பிரம்மா, ப்ரத்யும்னன்,பலராமன், அநிருத்தன்,புருஷோத்தமன் ஆகிய ஐவரும் உடன் அருள்பாலிக்கின்றனர்.   ஒரு சமயம், மேதாவி என்ற முனிவர் ஒருவர், திருமகள் தனக்கு மகளாகவும், ஸ்ரீமன் நாராயணன் தனக்கு மருமகனாகவும் அமைந்திட வேண்டும் என விரும்பி தவம் செய்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவ்வுலகோருக்கு நாரணின் பஞ்சவியூக திவ்ய தரிசனத்தை காண்பித்திட வேண்டியும், திருமகள் குழந்தை உருவெடுத்து இத்தலத்தில் அவதரித்தார். அழகேயான அந்த குழந்தையை முனிவர் எடுத்து வளர்க்கலானார். குழந்தையும் திருமண பருவம் எட்டியது. அச் சமயம் நாராயணன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், சாம்பன் மற்றும் வாசுதேவன் என தனது பஞ்சவீயூகத் தோற்றமான ஐந்துரு கொண்டு திருமகளை தேடி இத் தலம் வந்தடைந்தார்.அப்போது கருடாழ்வார் லட்சுமி தேவி இங்கு வஞ்சுளவல்லியாக வளர்வதை அவர்களிடம் தெரிவித்தார். முனிவரின் ஆசிரமத்தில் திருமகள் வளர்வதை அறிந்தார். தனது ஐந்துருவில் ஆசிரமம் சென்றார். முனிவர் வந்தோர்க்கு அமுது படைத்தார். வாசுதேவன் கை அலம்ப செல்கையில், முனிவரின் மகளாய் வளரும் திருமகளின் கரம் பிடித்தார். 

திருமகள் அலற, முனிவர் அங்கு வர, திருமால் தனது ஐம்பொன் திருமேனி காட்டினார். முனிவரிடம் " முனிவரே, உமது தவம் பலிக்கவே யாம் இந்த நாடகம் நடத்தினோம்". என்றார். தன் தவம் பலித்த மகிழ்ச்சியில் முனிவர் ஐயனிடம், " பெருமானே, எனக்கு நீர் தரிசனம் தந்தது போல் இத் தலத்தில் யாவரும் தரிசிக்கும் வண்ணம் என்றென்றும் அருள்புரிய வேண்டும். எனது மகளாய் வளர்ந்த வஞ்சுளவல்லியின் பெயராலேயே இத் தலம் அழைக்கப்படவேண்டும். இத் தலம் வந்து உம்மை சேவிப்பவர் அனைவருக்கும் முக்தி தர வேண்டும்". என வரங்கள் கேட்டார். பரந்தாமனும் அவ்வாறே ஆகட்டும் எனக் கூறி முனிவருக்கு காட்சி தந்த கோலத்திலேயே இத் தல கருவறையில் அனைவருக்கும் காட்ச்யருள்கிறார். இத்தலம் வந்து சேவிப்போருக்கு பெரும் பேறு அளிக்கிறார். பின்னர் பெருமாள் வஞ்சுளவல்லி திருமணம் நடந்தேறியது. பெருமானின் திருமணத்திற்கு உதவிய கருடாழ்வாருக்கும்  நாச்சியார் கோவிலில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. கருவறைக்கு சற்று முன்னால் வலப்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி சேவை சாதிக்கும் கருடாழ்வார் மிக அழகானவர். உற்சவ காலத்தில் பெருமாளுக்கு வாகனமாக செல்லும் கல் கருடன் இவர். இந்தப் புதுமை வேறெங்கும் இல்லை.

   இந்த கருடனை தூக்கிச்செல்ல முதலில் நான்கு பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும் போது, எட்டு, பதினாறு என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கி செல்ல நேரிடுமாம். திரும்பும் சமயம் அதே போல் குறைந்து கொண்டு வந்து நான்கு பேர் மட்டும் சென்று கருடனை அதன் சன்னதியில் அமர்த்துவார்களாம். வியக்க வைக்கும் ஆலய அதிசயம் இதுவாகும். இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது. ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா? எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் .இந்த கருடனில் இன்னொரு சிறப்பு ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாக விளங்குவது ஆகும். எல்லாக் கருடனிலும் எட்டு நாகங்களே ஆபரணமாக இருக்கும். இங்கு ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.
 . நாச்சியார் கோயில் "கருட சேவை" மிகப் பிரசித்தம். மிக விஷேசம். ஆண்டாளின் தகப்பனாரன பெரியாழ்வார் இவரது சொரூபமே . இவருக்குரிய கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் முதலியவைகளை வாழை இலையில் கலந்து இவரது திருமேனியில் சாற்றினால், சாற்றுவோர் அனைத்து வித இஷ்ட சித்திகளையும் பெறுவர். இவருக்கு பட்டு முதலிய வஸ்திரங்களை சார்த்த நினைத்தவை நடந்திடும். ஆடி மாத சுக்கில பஞ்சமி திதியில் இவரை வணங்க நன் மகப் பேறு கிடைக்கும். மணமாகாத, திருமணம் தடை பட்டு வரும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். இவரது ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் இவரை அர்ச்சிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும். 

இவரை நினைத்து வணங்கினால் விஷ ஜந்துக்களிடமிருந்து, முக்கியமாக பாம்புகளிடமிருந்து காத்தருள்வார். வியாழக் கிழமைகள் மாலை வேளைகளும், சனிக் கிழமைகள் காலை வேளைகளும் இவரை தரிசனம் செய்ய சிறந்த காலங்களாகும். 
   திருமங்கை ஆழ்வாருக்கு சுவாமியே சமாச்ரயணம் செய்து வைத்ததால் ஆழ்வாரால் ‘நம்பி’ என்று மங்களாசாசனம் செய்யப்பட்டவர் பெருமாள்.  இரு கரங்களுடம் எளிமையாக காட்சி தருகிறார். இது ஒரு மாடக் கோயில் ஆகும்.படிகள் ஏறிச்சென்று பெருமாளை சேவிக்கவேண்டும்.

சிறிதும் பெரிதுமான 16 கோபுரங்களைக் கொண்டது. இராஜகோபுரம் 5 அடுக்குகளும், 76 அடி உயரமும் உடையது. கருவறைக்கு மேல் உள்ள விமானமும் கோபுரம் போன்றே அமைந்திருப்பது அரிதானது. (இதே போன்ற அமைப்பு உள்ள மற்றொரு கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்!). கண்ணன் காடு (கிருஷ்ணாரண்யம்) எனப்படும் ஐந்து தலங்களில் இதுவே ஆரம்பத் தலம். மற்றவை: திருச்சேறை, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம் மற்றும் திருக்கண்ணங்குடி.

முக்தி அளிக்கும் 12 தலங்களில் ஒன்று.

கோச்செங்கண் என்ற சோழ மன்னன் சிறந்த சிவபக்தன். போரில் தோற்ற போது இங்கு நீராடி தெய்வ வாளினைப் பெற்று எதிரிகளை வென்றான்வைணவ பக்தன் ஆனான். இந்த ஆலயத்தை கட்டுவித்தான் என்ற வரலாறும் உண்டு.
 அதிசயத் தலமாம் திருநறையூர் செல்லுவோம்! திருமாலின் அருள் பெறுவோம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வணக்கம்
    வரலாற்று தகவலுடன் அருமையான பதிவை தந்துள்ளீர்கள் அறிய முடியாத பிற தகவல்களையும் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. புதியதொரு கோவிலைப் பற்றி வரலாற்று செய்திகளுடன் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி

    ReplyDelete
  3. நாச்சியார் கோவில் தலப் பெருமைகளும், படங்களும் மிக அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!