“உதார் விட்ட அழகிரியும்! வீணாய்ப் போன ஆதாரும்” கதம்ப சோறு! பகுதி 28

கதம்பசோறு பகுதி பகுதி 28

அழகிரி டிஸ்மிஸ்!

    போனவாரமும் அழகிரி நியுஸ்தான் முதலில் வந்தது. இன்றும் அதே நியுஸ். திமுகவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அழகிரி இந்த முறை சும்மா இருக்கவில்லை. டெல்லி சென்று மன்மோகன், ராஜ்நாத் சிங்குகளை சந்தித்து அலப்பறை செய்தார். அத்துடன் விட்டிருந்தால் இதயம் கனித்து கண்கள் பனித்து கட்சியில் சேர்த்திருப்பார்களோ என்னவோ? ஆனால் வாரிசுரிமைப்போர் உச்சகட்டத்தில் இருக்கும் இந்த வேலையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்று வைகோவை போய் பார்த்தார் அழகிரி. இன்றைய நிலையில் இதனால் அழகிரிக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவது இல்லை. அதே நிலைதான் வைகோவிற்கும். ஆனால் இந்த சந்திப்பு அழகிரிக்கு ஒரு பெரிய ஆப்பை வைத்துவிட்டது. கட்சி விரோத நடவடிக்கைகளில் செயல்படுவதால் திமுகவில் இருந்து அறவே நீக்கப்பட்டிருக்கிறார் அழகிரி. அவரது ஆதரவாளரான கோபி இப்போது ஸ்டாலின் பக்கம் நிற்க, கோபியின் அடிப்பொடிகள் சிலரும் ஸ்டாலின் பக்கம் சாயப்போகிறார்கள். நான் தஞ்சாவூர் போகிறேன், கம்பம் போகிறேன் ஆதரவாளர்களுடன் பேசப்போகிறேன். கட்சி என்னுடையது என்று அழகிரி வாய்ஸ் மட்டும் விட்டுக்கொண்டிருக்க அங்கே மவுனமாக காய் நகர்த்தி சாய்த்துவிட்டார் ஸ்டாலின். இனி அழகிரி உட்டாலக்கடி கிரிகிரி தான்!

“ஆதாருக்கு மூடுவிழா”

    மக்கள் பணத்தை விரயம் செய்வதில் மக்களாட்சிகளுக்கு  பேதமே கிடையாது. அவங்க அப்பன் வீட்டு சொத்து ஒன்றும் குறையப்போவது இல்லை அல்லவா? அப்படி பல்வேறு வீணடிப்புக்களில் இப்போது முதன்மை பெற்றுவிட்டது ஆதார். இது இல்லாமல் காஸ் மானியம் இல்லை. இது இல்லாமல் எந்த சேவையும் இல்லை என்று மத்திய அரசு உதார் விட்டுக்கொண்டிருக்க  சத்தமில்லாமல் ஒருவர் கோர்ட்டில் கேஸ் போட உச்ச நீதிமன்றம் சரியான ஆப்பு வைத்துவிட்டது. ‘அரசின் சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என அரசு தரப்பில் ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தால் அதை வாபஸ் பெற வேண்டும். இதற்காக சேகரிக்கப்பட்ட விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இது தொடர்பான எந்த தகவல்களையும் ஆதார் ஆணையம் யாரிடமும் பகிரக்கூடாது. என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வைத்துள்ளது. இந்த அட்டை வாங்க ஒவ்வொரு குடிமகனும் பட்டபாடு இருக்கிறதே அது மகா கொடுமை! முட்டி மோதி கியுவில் நின்று வெயிலில் வாடி போட்டோ எடுத்து வந்தால் அட்டை வந்த பாடில்லை என்று மறுபடியும் போட்டோ எடுக்க செல்வார்கள். முறைப்படுத்தல் இன்றி நடந்த இந்த திட்டத்திற்கு  2009 ஜனவரியில் இருந்து2013 செப்டம்பர் வரை 3500 கோடி செலவிட்டதாக ஆதார் ஆணையமும். 50000 ஆயிரம் கோடி செலவிடப்பட்டதாக மத்திய அரசும் கூறிவருகிறது. அதிக பட்சமாக மஹாராஷ்டிராவில் எட்டுகோடி பேருக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்கு கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.  எல்லாம் வீண் விரயம்!

 “ ஒஸ்தி தி மாஸ்”

    சிம்புவின் படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி! தந்தை அடுக்கு மொழி பேசினார் என்றால் இவர் பஞ்ச் விடுகிறேன் பேர்வழி என்று நம் நெஞ்சுக்குழியை பிதுக்குவார். நேற்று இரவு சேனல்களை மாற்றிவருகையில் ஏதோ ஒரு லோக்கல் சேனலில் மாஸ் சிலரை பீஸ் பீஸாக்கிக் கொண்டிருந்தார். அப்புறம்தான் தெரிந்தது அது ஒஸ்தி படம் என்று. மினி சினிமா என்று ஒரு மணி நேரம் ஓட்டினார்கள். சந்தானம் காமெடி தவிர வேறு ஒன்றும் ரசிக்க முடியவில்லை! ஹீரோயின் அந்த கால சங்கவி முக சாயலில்   ஏகப்பட்ட உயரத்தில் இருந்தார்.நடிப்பை காட்டுவதற்கு பதில் நிறைய முதுகைக் காட்டிக்கொண்டிருந்தார். அவருக்கு டப்பிங் கொடுத்தது யாரோ? மஹா கொடுமை அந்த குரல்! பாவாடை தாவணி என்று காஸ்ட்யூம் போட்டு  தாவணியை கேவலப்படுத்திவிட்டனர்.   இந்த ஹீரோயினியை சந்தானம் கலாய்த்தது கலக்கலாக இருந்தது. இந்த படத்தில் நடிக்க சல்மானிடம் வேறு அட்வைஸ் கேட்டார் என்று படித்து இருக்கிறேன். ஏன் இந்த கொலைவெறி சிம்பு?

நாதஸ்வரம் இன்னும் ஒரு வருடம் ஒலிக்குமாம்!

   சன் டீவியில் தினம் ஏழரை மணிக்கு ஒலிக்கும் நாதஸ்வரம் தொடர் இன்னும் ஒருவருடம் தொடருமாம். இந்து நாளிதழில் பேட்டி அளித்த அதன் இயக்குனர் திருமுருகன் தான் இவ்வாறு கூறியுள்ளார். சன் டீவி தயாரிப்பாளர்கள் இயக்குமாறு கேட்டதால் சினிமாவிலிருந்து மீண்டும் டீவி தொடருக்கு வந்ததாகவும். இசைப்பின்ணணியில் ஒரு கதை எடுக்க வேண்டும் என்ற ஆசையில் நாதஸ்வர இசை மிகவும் பிடிக்கும் என்பதால் நாதஸ்வரம் என்று தலைப்பு வைத்ததாகவும்  கூறிய அவர் மவுலி, பூவிலங்குமோகன், அவர் தவிர அனைவரும் புதுமுகங்களை வைத்து தொடர் இயக்குவதாகவும். எந்த ஒரு சீனை பார்த்தாலும் இது நாதஸ்வரம் சீரியல் என்று சட்டென தெரியவேண்டும் என்று நினைத்து அவ்வாறு இயக்குவதாக கூறிய அவரிடம் ஆயிரம் எபிசோட்களை கடந்தும் இன்னும் என்ன இருக்கு? என்று கேட்டதற்கு எனக்கு எப்போது முடிப்பேன் என்று தெரியாது. கதை தேவைப்படும் வரையில் எடுப்பேன். இப்போதைக்கு ஒருவருடத்திற்கு கதை இருக்கிறது என்கிறார். மெகா சீரியல்தான் போல!

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!


  வீட்டில் தண்ணீர் தொட்டி கட்டும் போது அதன் உள் தரையை சற்று சாய்வாக வைத்தால் தொட்டியை சுத்தப்படுத்த எளிதாக இருக்கும்.

மருந்து மாத்திரை வாங்கும் போது மருத்துவர் பரிந்துரைத்த முழு அளவையும் வாங்காமல் ஓரிரு வேளைக்கு வாங்கினால் அலர்ஜி ஏற்பட்டால் மருத்துவரிடம் உடனே சென்று மாற்று மருந்து வாங்கிக் கொள்ள உதவியாக இருக்கும்.

சமையலறையில் மிதியடி போட்டு அதன் மேல் நின்று சமைத்தால் தரையின் ஈரம் கால்களை பாதிக்காது. மூட்டுவலிப் பிரச்சனையும் குறையும்.

காய்களில் கிழங்குகளை வறுக்கும் போது எண்ணெய் அதிகமாகிவிட்டால் சிறிது பொட்டுக்கடலை தூவவும். அதிக எண்ணெய் உறிஞ்சப்பட்டு கூடுதல் சுவையுடன் மொறுமொறுப்பாக இருக்கும்.

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன் சிட்டிகை உப்பை தடவிக்கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.


தேங்காய்ப்பால் ரசம்! (சமையல் குறிப்பு)
முன்னெச்சரிக்கை!


சமையலுக்கும் நமக்கும் கொஞ்சம் தூரம் அதிகம்! இது நான் படித்த கேட்ட சமையல் குறிப்புக்களை உங்களுக்கு தரும் ஒரு பகுதி! இதன் பாதிப்புக்களுக்கு நான் பொறுப்பல்ல!

எங்க கோயில் வேலைக்கு ஒரு கொத்தனார் வந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவங்க வீட்டம்மா விதவிதமா சமைக்கும் சொல்லி தேங்காய் ரசம் வைச்சாங்கன்னா அவ்ளோ சூப்பரா இருக்கும்னு சொன்னார். அதென்ன தேங்காய் ரசம் கேள்விப்பட்டதில்லையேன்னு சொன்னேன். நீங்கள்ல்லாம் புளியை கரைச்சு ஊத்தி ரசம்னு சொல்றீங்க ஓம்போது வகையான ரசம் இருக்கு எங்க ஊட்டம்மா வைக்கும்னு பெருமையா சொல்லிக்கிட்டார். எப்படி செய்வாங்கன்னு நான் விடாப்பிடியா கேட்டேன். அவர் சொன்னது இம்புட்டுதான்.
   நல்லா முத்தியும் இருக்க கூடாது வழுக்கையாவும் இருக்க கூடாது. பிஞ்சியா இருக்க தேங்காய் இரண்டை துருவி மிக்சியிலே பால் அடிச்சிக்கணும். அப்புறம் இரண்டு பல் பூண்டு, கொஞ்சம் மிளகு, சீரகம்,  ஊறுகாய் மிளகா கொஞ்சுண்டு புளி கறிவேப்பிலை கொத்துமல்லி எடுத்துக்கணும்.
   அடுப்புல கொஞ்சம் தண்ணிய வைச்சு கொதிக்க விட்டு அதில இந்த தேங்காப்பாலை ஊத்தி கொதிக்க வைக்கணும். ஒரு ரெண்டு கொதி வந்ததும் லேசா புளியைக் கரைச்சி ஊத்தி பூண்டு மிளகு சீரகம் தட்டிப் போட்டு மிளகா தாளிச்சு முடிச்சா தேங்காய்ப் பால் ரசம் ரெடியாம். சொல்ல மறந்துட்டேனே தேவையான அளவு உப்பு சேர்த்துக்குங்க! வயிற்றுப்புண்ணுக்கு இது ரொம்ப நல்லதாம்! நான் இன்னும் செஞ்சு பாக்கலை! நீங்க செஞ்சிட்டு சொல்லுங்க! அப்புறம் பார்க்கலாம்!

சிறுவன் பாடிய பாட்டு!


வீட்டில் பெரிய விருந்து நடந்தது. வந்திருந்தவர்கள் பெரியமனிதர்கள். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அந்த வீட்டுச் சிறுவன், சாப்பிட்ட எச்சில் கையோடு எழுந்து நின்றான்.
“ அம்மா, உச்சா வருது!” என்று ஒற்றை விரலை காட்டினான்.
  சிறுவனின் தாய் அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு டாய்லெட் பக்கம் சென்றாள். “ இனிமே இப்படி எல்லார் முன்னாடியும் சொல்லக்கூடாது என்றாள்.
   “பின்னே எப்படிம்மா சொல்லனும்?”
“ எனக்கு பாட்டுப் பாடனும் போல இருக்கு”ன்னு நாசூக்கா சொல்லணும் தெரிஞ்சுதா?”
  சிறுவன் தலையசைத்துக் கொண்டான். இது நடந்து ஒருவாரம் ஆகியிருக்கும். அம்மா ஊருக்கு போயிருந்தாள். சிறுவன் அப்பாவுடன் பெட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். நடு இரவில் விழித்துக் கொண்ட அவன் அப்பாவை எழுப்பினான்.      அப்பா! எனக்கு பாட்டுப்பாடணும் போல இருக்குப்பா!” என்றான்.
 “என்னடா இது ரெண்டுங்கெட்டான் நேரத்துல பாட்டு? பேசாம படு!” அப்பா சொல்ல சிறுவன், அப்பா! ப்ளீஸ்பா! எனக்கு அவசரமா பாட்டுப் பாட வருது!  என்றான்.
   “சரிசரி! சத்தமா பாடி மத்தவங்களை டிஸ்டர்ப் பண்ணாதே! மெதுவா என் காதுல பாடு!” என்றார் தந்தை.
  அடுத்து என்ன நடந்திருக்கும்! உங்கள் கற்பனைக்கே!

(படித்ததில் பிடித்தது!)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!





Comments

  1. மற்றவற்றைப் புறந்தள்ளி விட்டு முன்னே நிற்பது - சிறுவனின் பாட்டு பாடு அவசரம் தான்!..

    ஆண்டுகள் நாற்பதுக்கும் மேலிருக்கும் என்று நினைக்கின்றேன் - அந்த பாசக்கார சிறுவன் பாடிய பாட்டுக்கு!..

    ReplyDelete
  2. // முட்டி மோதி கியுவில் நின்று வெயிலில் வாடி // நாம் மட்டுமா...? இதற்காக... குழந்தைகளுக்காக... பள்ளியில் சென்று விடுமுறை வாங்கி... சே...!

    டிப்ஸ்கள் உதவிகரமானவை...

    // நான் இன்னும் செஞ்சு பாக்கலை // நாங்களும் மாட்டுவதாக இல்லை... ஹிஹி...

    பாட்டு தெரிந்திருந்தாலும் மறுபடியும் ஹா.... ஹா....

    ReplyDelete
  3. ஆதார் கார்டு இப்போதான் ஐந்து நாள் விடுமுறையில் போயிருந்த பொழுது அல்லாடி பதிஞ்சுட்டு வந்தேன் இன்னும் கார்ட் வந்தபாடில்லை, கோவிந்தாதான் போல.

    பையன் காதுல நல்ல சூடா பாட்டு பாடிட்டானா?............

    ReplyDelete
  4. ஆதார் என்பதற்கு பதிலாய் பேஜார் கார்டுன்னே சொல்லலாம் !
    உங்களுக்கு வயசு ஆயிடுச்சு போலிருக்கே ...பாவாடை தாவணியை ரசிக்க முடியலேன்னு சொல்றீங்களே !அவ்வ்வ்வ் !

    ReplyDelete
  5. அருமையான கதம்பம்
    மிகவும் ரசித்துப் படித்தேன்
    முடிவாகச் சொன்ன பாட்டு விஷயம்
    வாய்விட்டு சிரிக்கவைத்தது
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஹேப்பி ஹேப்பி ....நான் ஆதாரே வாங்கலையே ...

    ReplyDelete
  7. எதுவோ வந்து பாய்ந்தது காதினிலே!ஹா ஹா ஹா

    ReplyDelete
  8. ஆகா பையன் காதுல பாடிட்டானா.

    ReplyDelete
  9. இந்த வாரம் தேங்காய் பால் ரசம் தான். முயற்சிக்கின்றோம்.

    ReplyDelete
  10. ஆதார்.... இன்னும் முடிவு வந்தது போல தெரியவில்லை! :) அரசு இன்னமும் இதை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கலாம் எனத் தோன்றுகிறது.

    சமையல் டிப்ஸ்... நான் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை! :)))

    ReplyDelete
  11. தேங்காய் ரசமா ? அதன் மனம் இங்கே வரை வந்து அசத்துதே !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!