நாயை மணந்த எஜமானி! கதம்ப சோறு பகுதி 26

கதம்ப சோறு பகுதி 26

ஏமாந்த கம்யூனிஸ்ட்களும் இளிச்சவாய் பா.ஜ.கவும்!

  தமிழகத்தில் லோக்சபா தேர்தல் களை கட்டிவிட்டது. முதல் ஆளாய் நாற்பது தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உடனே சிலரை மாற்றி அம்மா பரபரப்பு காட்டி நானே பிரதமர் என்று கனவு கண்டுவருகிறார். அப்போதாவது இந்த கம்யூனிஸ்ட்கள் கொஞ்சம் உஷாராகி இருக்க வேண்டும். இவர்களுக்கு யாரோடாவது தோள் சாய்ந்து நடந்தே பழக்கமாகிவிட்டது. கொஞ்சம் கூட ரோஷம் இல்லாமல் அம்மா ஏதாவது போட்டுக்கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தார்கள். டெல்லி சலோ கனவில் இருக்கும் அம்மாவுக்கு கம்யூனிஸ்ட்கள் தவம் பெரிதாய் தெரியவில்லை நஹி! நஹி! என்று சொல்லிவிட்டார். சீச்சி இந்த பழம் புளிக்கும்! என்ற நிலைக்கு தள்ளப்பட்ட கம்யூனிஸ்ட்களை ஆதரிக்க கருணாநிதி தயாராக இருந்தபோதும் இவர்களுக்குத் தயக்கம். ஸ்டாலினும் அதை விரும்பவில்லை. இப்போது தனித்து களத்தில் குதித்துள்ளார்கள். இதை முதலிலேயே செய்திருந்தால் மரியாதையும் கிடைச்சிருக்கும் வெற்றிவாய்ப்பும்  இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. விஜயகாந்த் மெகாசீரியலாய் யாருடன் கூட்டணி என்பதை இழுத்தடித்து கடைசியில் எதிர்பார்த்தது போல பா.ஜ.வில் இணைந்து பா.ம.க வகையறாக்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டார். இவரால் பா.ஜவிற்கு எந்தவிதத்தில் நன்மை என்று தெரியவில்லை. இருக்கும் கட்சிகளுக்குள் இவரை சேர்த்தமையால் அதிருப்திதான். இந்த கூட்டணி இளிச்சவாய் கூட்டணியாகத்தான் தெரிகிறது. விஜயகாந்த் பேரம் கேட்க கேட்க பணிந்து அவரை சேர்த்துக் கொண்டு தமிழகத்தில் அப்படி என்ன சாதித்துவிடப்போகிறது பா.ஜ. என்னை பொறுத்தவரை தமிழகத்தில் நாற்பது தொகுதிகளிலும் நேரடிப்போட்டி அதிமுகவிற்கும் திமுகவிற்கும்தான். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்;
     239 பயணிகளுடன் நடுவானில் மாயமாகிப் போய் உள்ளது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம். நான்கு நாட்கள் ஆகியும் இன்னும் எந்த உருப்படியான தகவலும் கிடைத்தபாடில்லை. விபத்துக்குள்ளானதா கடத்திச்சென்றார்களா என்ற மர்மம் விலகியபாடில்லை. சென்னையை சேர்ந்த சமூக சேவகி ஒருவரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார். போலி பாஸ்போர்ட்டுடன் நான்கு பேர் பயணித்துள்ளனர்.அவர்கள் தீவிரவாதிகள் இல்லை என்று கண்டுபிடித்துவிட்டனர். ஆனாலும் விமானம் எங்கு போனது? எப்படி மாயமானது என்று கண்டறியமுடியவில்லை. எவ்வளவோ நவீன தொழில் நுட்பங்கள் வந்தாலும் இயற்கையை வெல்ல மனிதனால் முடியவில்லை என்பது மட்டும் உறுதி.

நாயை மணந்த எஜமானி:
  லண்டனைச் சேர்ந்தவர் அமண்டா ரோட்ஜர்ஸ் 47 வயதான இவர் 20 வருடங்களுக்குமுன் ஒருவரை திருமணம் செய்து பின்னர் பிரிந்து விட்டார். அன்றுமுதல் தனிமையில் வசித்துவரும் அவர் ‘ஷீபா’ என்ற செல்ல நாயை வளர்த்துவந்தார். குரோஷியா நாட்டின் ஸ்பிலிட் நகரத்தில் 200 பேர் முன்னிலையில் அமண்டாவிற்கும் மணப்பெண் உடையில் வந்த ஷீபாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து அமண்டா கூறுகையில், நான் ஷீபாவிடம் முட்டிப்போட்டு காதலைத் தெரிவித்தேன்; அது வாலாட்டி என் காதலை ஏற்றுக்கொண்டது. நான் கவலையாக இருக்கும் போதெல்லாம் ஷீபா என்னை சிரிக்க வைத்து ஆறுதல் கூறும். ஒரு கணவருக்கு இருக்க வேண்டிய குணங்களும் அதனிடம் இருக்கிறது. இந்த திருமணம் சட்ட ரீதியாக செல்லாது என்றாலும் ஷீபா எனக்கு முக்கியம் என்கிறார். கலிகாலம் என்பது சரியாத்தான் இருக்கு இல்லியா?

இந்திய வம்சாவளி மாணவன் ஸ்பெல்லிங் போட்டியில் தேர்வு:
      அமெரிக்கா மிசோரி மாகாணத்தி சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் குஷ்சர்மா அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்குபெறும் ஸ்பெல்லிங் போட்டியில் பங்குகொண்டு இதுவரை நடந்த 95 சுற்று போட்டிகளில் தடுமாறாமல் கடுமையான வார்த்தைகளுக்கும் ஸ்பெல்லிங்க் சொல்லியதோடு அந்த வார்த்தை தோன்றியவிதம், அதன் பொருள் என அனைத்தையும் கூறி நடுவர்களை வியக்க வைத்தான். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சோபியா என்ற மாணவி குஷ்சர்மாவுக்கு சரியான போட்டிக் கொடுத்த போதும் ‘ஸ்டிப்லிங்’ என்ற வார்த்தைக்கு தவறான ஸ்பெல்லிங்க் சொன்னதால் மயிரிழையில் தோல்வியைத்தழுவினாள். இதையடுத்து வாஷிங்டனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஸ்பெல்லிங் போட்டிக்கு குஷ் சர்மா தேர்வாகி உள்ளான். வாழ்த்துக்கள் சர்மா!

லொல்லுசபா பாலாஜி மரணம்!
    லொல்லுசபா என்ற ப்ரோக்ராமை விஜய் டீவி ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. பழைய படங்களை கலாய்த்து நக்கல் செய்த அந்த நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனவர்தான் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவரை இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தவர் பாலாஜி. சூப்பர் 10 என்ற நகைச்சுவை நிகழ்ச்சியிலும் இவர் நடித்து உள்ளார். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் சென்னை அனகாபுத்தூரில் வசித்து வந்தார். 43 வயதான் இவருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி பாலாஜி இறந்து போனார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


உத்தம வில்லன்!
    விஸ்வரூபம்2 படவேலைகளை முடித்துவிட்ட கமல் அடுத்து நடிக்கும் உத்தம வில்லன் பட வேலைகளில் இறங்கி விட்டார். இதற்கான போஸ்டர் வெளியிட்டதும் உடனே சர்ச்சை கிளம்பிவிட்டது. கமல் படம் என்றாலே எப்போதும் சர்ச்சை கிளம்புவது சாதாரணம் ஆகிவிட்டது. படத்தைதான் காப்பி அடிப்பார்கள். இப்போது போஸ்டரை கூட காப்பி அடித்துவிட்டார்கள் என்று ஆளாளுக்கு போட்டுத்தாக்க கமல் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. மவுனம் சர்வார்த்த சாதகம் என்று மவுனித்து விட்டாரோ என்னவோ? இந்த படத்தில் கமல் கூத்துக் கலைஞராக நடிக்கிறார் என்று முதல் கட்ட தகவல்கள் கசிகின்றன. சரித்திரகால கதைப்பின்னனி என்றும் சொல்லப்படுகிறது. பிறக்கறது முன்னேயே ஆண்பிள்ளையா பெண் பிள்ளையா என்று அலசி மேய்வது நம்ம குணம் தானே! படம் வெளியாகற வரைக்கும் இனி பரபரப்பா ஏதாவது கிளம்பிக்கிட்டே இருக்கும்.

பார்பி பொம்மை பெண்!
    உக்ரைன் நாட்டில் வசிப்பவர் வாலெரியா லூக்யாநோவா! அடேயப்பா உச்சரிக்கிறதுக்க நாக்கு சுளுக்கிருச்சு! 23 வயதான இவர் பார்பி பொம்மை போன்ற தோற்றத்துடன் வலம் வருகிறார். இன்னும் ஒரு அதிசயம் என்ன தெரியுமா? இவர் இதுவரை உணவு சாப்பிட்டதில்லையாம். தண்ணீர் மற்றும் ஒளியால் உயிர்வாழ்வதாக கூறுகிறார். உலகம் முழுவதும் பரவி வரும் எதிர்மறை தன்மையை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளதால் ஆன்மீக குரு என்ற முறையில் பல இடங்களுக்கு பயணம் செய்வதாக இவர் கூறுகிறார்.

மலிவான விலையில் ப்ரெய்லி பிரிண்டர்!

     அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டாகிளாரா பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் இந்திய வம்சாவளி மாணவர் சுபம் பாணர்ஜி. இவர் குழந்தைகள் தாங்களாகவே பொம்மைகளை உருவாக்கி விளையாடும் ‘லெகொ’ நிறுவன விளையாட்டுப் பொருட்களைக் கொண்டு ‘பிரெய்கோ’ என்னும் பிரெய்லி பிரிண்டரை தயாரித்துள்ளார். வெளிச்சந்தையில் இத்தகைய பிரிண்டர்களின் விலை 1.25 லட்சம் உள்ள நிலையில் பாணர்ஜி தயாரித்த ‘பிரெய்கோ’ 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த எடையில் உள்ள இந்த பிரிண்டரின் வடிவமைப்புக்கான மென்பொருள் மற்றும் செயல்விளக்கம் இலவசமாக இணைய தளத்தில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகளும் எளியதாக பயன்படுத்தும் வகையில் உள்ள இந்த பிரிண்டர் ஆங்கில எழுத்துக்களை ஒவ்வொரு எழுத்தையும் ஏழு வினாடிகளில் பிரிண்ட் செய்யும். அடுத்த கட்டமாக 0 முதல் 10 வரையிலான எண்களை பிரிண்ட் செய்யும் முயற்சியில் இந்த சிறுவன் உள்ளார். வாழ்த்துக்கள் பாணர்ஜி.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

குளிக்கும் நீரில் சிறிது வேப்பிலை, யூகலிப்டிஸ் இலை, அரைமுடி எலுமிச்சையை போட்டு சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்து குளித்தால் சரும நோய், தலைவலி, ஜலதோஷம் கிட்ட வராது. புத்துணர்ச்சி கிடைக்கும்.

நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் காசிக்கட்டியை குடிநீரில் கொதிக்க வைத்து பருகினால் எந்த தொற்று நோயும் அண்டாது. நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

வாழைப்பூவை பொரியல் செய்து அதை தயிருடன் கலந்து சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிலக்கின் போது வரும் வலி மற்றும் அதிக உதிரப்போக்கு இருக்காது.

காரணமின்றி வரும் கழுத்து வலிக்கு நிவாரணம் தலையணையை வெயிலில் நன்கு காயவைத்து விட்டு பின்பு உபயோகப்படுத்துவதுதான். இதனால் தலையணை சுத்தமாவதுடன் கழுத்துவலியும் குணமாகும்.

சந்தனம், மிளகு, ஜாதிக்காய் இம்மூன்றையும் அம்மியில் அரைத்து மரு உள்ள இடத்தில் பூசி வந்தால் விரைவில் மருக்கள் மறையும்.

வெளியூர் பயணங்களின் போது தண்ணீர் பாட்டில் எடுத்துச்சென்று பஸ் செல்லும் வேகத்தில் குடிக்க முடியாமல் திணறுவோம் ஒன்றிரண்டு ஸ்ட்ராக்களை உடன் எடுத்துச் சென்றால் சிந்தாமல் சிதறாமல் தாகம் தணியலாம்.

டீயினால் சுட்ட புண்!

  ரயில் பயணி ஒருவர் பிளாட்பாரத்தில்  ‘டீ’ விற்றுக்கொண்டு போன ஒருவனைக் கூப்பிட்டு  ‘டீ’ வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே காசு கொடுக்காமல் தாமதப்படுத்தினார்.
  அதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டது.
 ‘டீ’ விற்கும் பையனுக்கு காசும் கிடைக்கவில்லை. பிளாஸ்டிக்  ‘டீ’ தம்ளரும் நஷ்டம்.
  பக்கத்தில் இருந்த அவனது நண்பன் அவனை சமாதானம் செய்தான். “கவலைப்படாதே! நண்பா! கடவுள் அந்த ஆளை கவனிச்சுப்பார்!”
    ‘டீ’ விற்ற பையன் சொன்னான்.
“கடவுளுக்கு எதற்கு அந்த சிரமம். என்  ‘டீ’யே அதை கவனித்துக் கொள்ளும்.

(படித்ததில் பிடித்தது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நாய் ஷிருமணமும் பர்பி பெண்ணும் புதுசு.

    டீ ஜோக் சூப்பர்.

    ReplyDelete
  2. அதனால தான் -
    காசு கொடுத்து கூட ரயில் டீ குடிப்பதில்லை!..

    தகவல் தொகுப்பு அருமை!..

    ReplyDelete
  3. இந்த ஸ்பெல்லிங் போட்டியில் அடிக்கடி இந்திய வம்சாவளியினர் சாதித்துக் கொண்டுதான் உள்ளனர்...இப்பொழுது சாதித்திருக்கும் இவருக்கும் நம்முடைய வாழ்த்துக்கள்.... மலேசிய விமானம் கன்னித் தீவு மர்மமாய் நீண்டு கொண்டே.... உத்தம வில்லன் பெயர் வடிவமைப்பு வில்லுப்பாட்டில் வரும் வில்லின் வடிவமைப்பினை ஒத்திருப்பதைப் பார்த்தால் கதையும் அது சமந்த்தப் பட்டதாகவே இருக்கலாம் என்று ஒரு கணிப்பு....

    ReplyDelete
  4. இதுவரை மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் என்னவாயிற்று என்று தெரியவில்லை... நல்லதாகவே ஏதேனும் நடந்திருக்க வேண்டும்...

    குஷ் சர்மா மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... வாலெரியா லூக்யாநோவா - வியப்பு... டிப்ஸ்களுக்கு நன்றி...

    சூப்பர் டீ...!

    ReplyDelete
  5. ப்ரெய்லி பிரிண்டர்.... தளத்தின் முகவரி கொடுத்திருக்கலாம்.

    நல்ல நல்ல தகவல்கள் சுரேஷ்.

    ReplyDelete
  6. Replies
    1. கிட்டத்தட்ட 1476 பதிவுகளை முடித்து விட்டீர்கள்... பாராட்டுக்கள்... மொத்தமாகவும் சரி செய்யலாம்... ஆனால் கவனத்துடன் செய்யவும் வேண்டும்... அதிக பகிர்வுகள் என்பதால் நேரமும் ஆகும்... அதனால் Labels gadget-யை edit செய்து Selected Labels - என்பதை தேர்வு செய்து, எவை எவை தளத்தில் தெரியு வேண்டும் என்று உங்கள் விருப்பம் போல் மாற்றலாம்...

      வேறு விதமாக என்றால் கீழ் உள்ள இணைப்பில் உள்ளது...

      http://www.mybloggertricks.com/2011/09/create-automatic-tabs-menu-from-labels.html

      மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்...

      dindiguldhanabalan@yahoo.com

      Delete
  7. "நிறம், மணம், திடம் மற்றும் சுவை" யோட கீதுபா கதம்பச்சோறு...!
    கட்சீல குட்துக்கின பாரு ஒரு டீயி... அத்தாம்பா செம்ம தூக்கல்...!

    ReplyDelete
  8. வணக்கம் நண்பரே, என்ன ஒரே தகவல் குவிப்பாக குவித்துவிட்டீர்கள்? ஒரே பதிவில் இவ்வளவு வேண்டாமே? தேனீ போலச் சேகரிக்கும் தகவல்களிலிருந்து, இனிப்புக் கலந்து, சிந்தனை மருந்து தயாரித்து மக்களுக்கு விருந்து கொடுத்துப் பாருங்கள் இன்னும் கூடுதல் வரவேற்பு கிடைக்கும். நன்றி

    ReplyDelete
  9. கதம்ப சோறு - ரசித்தேன்.....

    ReplyDelete
  10. இந்த பகுதியில் நான் அதிகமாக விரும்புவது உங்களின் டிப்ஸ் தான், அதனை பிரிண்ட் அவுட் எடுத்து என் மனைவியிடம் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொள்வேன், ஹி .. ஹி .. நன்றி சுரேஷ்,.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!