என்ன ஆச்சு யுவராஜ்?

என்ன ஆச்சு யுவராஜ்?


உலக கோப்பை டி 20 ஜுரம் இந்தியர்களை பீடித்திருக்கும் இந்த வேளையில் நேற்றும் என்னை சிறிது தாக்கியது. உலகமெங்கும் பரவிக்கிடக்கும் கிரிக்கெட் காதலர்களில் நானும் ஒருவன் தான். ஆனால் சமீப காலமாக கிரிக்கெட் பார்ப்பதை தவிர்த்து வந்தேன். நேர விரயம்! இதனால் என்ன லாபம், விளையாடுபவர்கள் கோடிகளில் கொழிக்கிறார்கள். நாம் நம் நேரத்தை வீணடித்து சில ரூபாய் சம்பாதிப்பதை விட்டு செலவழிக்கிறோம் என்று புத்தி, புத்தி சொன்னதால் நிறைய தவிர்த்துவிட்டேன்.
     பாகிஸ்தான் உடனான மேட்ச் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தும். அன்று அதிக வேலை! உடல் அசதி சீக்கிரமே படுத்து உறங்கிவிட்டேன். நேற்று மேற்கிந்திய தீவுகள் உடனான ஆட்டத்தை காண வேண்டியதாய் போயிற்று.
     மாலையில் எந்த டீவியிலும் உருப்படியான நிகழ்ச்சிகள் இல்லாமல் ஒவ்வொன்றாய் மாற்றி வருகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் மேட்ச் ஒளிபரப்பு ஆகிக்கொண்டிருந்தது. சரி  கொஞ்ச நேரம் பார்ப்போம் என்று வைத்தேன். பத்து ஓவர்கள் முடிந்து விட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஐம்பது ரன்களையே கடந்து இருந்தது. என்னடா வெஸ்ட் இண்டீஸிற்கு வந்த சோதனை என்று நினைத்தேன். முன்னதாக அமித் மிஸ்ராவின் முதல் ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு விளாசினார் கெய்ல். இனி அதிரடி ஆரம்பமாகும் என்று நினைத்த வேளையில் அடுத்த பந்தை மீண்டும் தூக்கி அடிக்க எல்லைக் கோட்டருகே அதை கோட்டை விட்டார் யுவராஜ். அது ஒன்றும் அத்தனை கடினமான கேட்ச் இல்லை. சாதாரணமான ஒன்றுதான். அதைக் கூட சரியாக கணித்து பிடிக்க தெரியவில்லை யுவராஜிற்கு.
   நீ களத்தில் இருந்தால் தெரியும் என்று சொல்லலாம். நான் களத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த சிம்பிள் கேட்ச்சை தவற விட்டிருக்க மாட்டேன். இந்திய சுழல்பந்தை சமாளிக்க முடியாமல் ரன் சேர்க்க திணறியது வெஸ்ட் இண்டீஸ். கடைசி கட்டத்தில் அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. ஒன்றிரண்டாய் ரன் சேர்க்கவே அவர்கள் முயலவில்லை. அது பரிதாபம். கெய்லின் ரன் அவுட் திருப்பு முனையாக அமைய அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் மீளவே இல்லை. கடைசி ஓவரை ரவீந்திர ஜடேஜா கேவலமாக வீச அதில் மட்டும் இருபத்தி எட்டு ரன்கள் விளாசப்பட்டன. தோனி புவனேஸ்வருக்கோ அல்லது சமிக்கோ இந்த கடைசி ஓவர் வாய்ப்பை தந்திருக்கலாம். மற்றபடி இந்திய பீல்டிங் ஒன்றும் அவ்வளவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நிறைய வாய்ப்புக்களை வீணடித்தனர்.

      கொஞ்ச நேரம் பார்ப்போம் என்று உட்கார்ந்த நான் சுவாரஸ்யமாக இதில் உட்கார்ந்துவிட சாப்பிட அழைப்பு வரவும் வெஸ்ட் இண்டிஸ் இன்னிங்ஸ் முடியவும் சரியாக இருந்தது. சாப்பிட்டு வந்தவுடன் இந்தியாவின் பேட்டிங் பார்க்க ஆவலாக உட்கார்ந்தால் ஸ்கோரில் ஏதோ குழப்பம் என்று பத்து நிமிடம் வீணடிக்க எரிச்சல்தான் வந்தது. முதல் ஓவரிலேயே தவான் அம்பயரின் தவறான தீர்ப்புக்கு பலியானார்.
   பின்னர் கோலியும் ரோகித்தும் இணைந்து வெஸ்ட் இண்டீஸை வெளுத்து வாங்கினர். இதெல்லாம் பவர் பிளே வரை நன்றாக இருந்தது. அதன் பின்னரும் ரன் விகிதம் குறையாமல் பார்த்து கொண்டனர். பவுண்டரிகள் மட்டுமில்லாமல் ஓடியும் ரன் எடுக்க தடுக்க முடியாமல் விழித்தனர் வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள். முதலில் கோலி அரைசதம் கடக்க பின்னர் ரோகித் சர்மாவும் அரை சதம் தாண்டினார். இதற்கு பின் தான் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பதினைந்தாவது ஓவரில் கோலி ஆட்டமிழக்க யுவராஜ் வந்தார். இரண்டாவது பந்தில் பவுண்டரியும் அடித்தார். ஆனால் அதன் பின் அவர் ஆடியது டெஸ்ட் மேட்ச் கணக்காய் இருந்தது.
    ஐந்து பந்துகளை வீணடித்து ஆறாவது பந்தில் ஒற்றை ரன் எடுத்து என்று இரண்டு மூன்று ஓவர்களை வீணடிக்க இந்தியாவின் வெற்றி தள்ளிப் போனது. பதினாறு அல்லது பதினெழாவது ஓவரில் பெற வேண்டிய வெற்றி கடைசி ஓவர் வரை சென்றது. அதுவும் இறுதி ஓவரில் ஒரு ரன் எடுக்க இரண்டு பந்துகளை வீணடித்து மூன்றாவது பந்தில் அவுட் ஆக அரங்கமே அதிர்ச்சியில் மூழ்கியது. அடுத்து வந்த ரெய்னா முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க வெற்றிபெற்றது இந்தியா.

   எளிதாக வென்றிருக்க வேண்டிய இந்த போட்டியை மிக கடினமாக மாற்றி கடைசி வரை இழுத்தடித்த யுவராஜை பார்க்க பரிதாபமாக இருந்தது. முதல் போட்டியிலும் இவர் சரியாக ஆடவில்லை. பீல்டிங்கிலும் முன்பு போன்று துடிப்பாக செயல்பட முடியவில்லை. இவருக்கு பந்துவீசவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை!
    முன்பொரு காலத்தில் மேட்ச் வின்னராக இருந்த யுவராஜிற்கு என்ன ஆச்சு? கேன்சரில் இருந்து மீண்டபின் அவர் சரியாக போட்டிகளில் பங்கு பெறவில்லை! இந்த தொடருக்குமுன் போதிய பயிற்சி போட்டிகளில் அவர் கலந்துகொள்ளவில்லை! எதற்கு அவரை திடீரென சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. நல்ல வீரர்தான்! ஆனாலும் தற்போது பார்மில் இல்லாத போது சேர்த்து அணியை திண்டாட வைக்காமல் இளம் வீரரான ரகானேவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்பது என் கருத்து.
   யுவராஜ் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சாம்பியன் டிராபியில் 87 ரன்கள் குவித்த போதில் இருந்து பார்த்து வருகிறேன். இதே போன்றதொரு தடுமாற்றம் அவருக்கு ஏற்பட்டது இப்போதுதான் என்று நினைக்கிறேன். இப்போது வயதும் கூடிவிட்டது. இனி ஆடவேண்டுமா? என்று யோசிக்கவேண்டும் அவர். பதினாலு கோடி கொடுத்து வாங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலியே அவரது ஆட்டத்தை நையாண்டி செய்ததை டீவியில் காண முடிந்தது. யுவராஜ் சகாப்தம் முடிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. மீண்டுவருவாரா பார்ப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. இறுதி வரை டென்சனாக்குவது தான் வாடிக்கை ஆச்சே... சமீபத்திய போட்டிகளில் யுவராஜ் பவுலிங் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை... ரன் கொடுத்தாலும் விக்கெட் எடுப்பார்... சிக்சர் மன்னன் யுவராஜ் விரைவில் மீளுவார்... நம்புவோம்...

    ReplyDelete
  2. இளம் ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு ன்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  3. நான் இப்போதெல்லாம் கிரிக்கெட் பார்ப்பதே இல்லை.... :)))

    ReplyDelete
    Replies
    1. நானும் அதே தான். ஒரு காலத்தில் கிரிக்கெட்டே உலகம் என்றிருந்தேன். ஆனால் இப்போது அதன் பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை.

      Delete
  4. // நாம் நம் நேரத்தை வீணடித்து சில ரூபாய் சம்பாதிப்பதை விட்டு செலவழிக்கிறோம் என்று புத்தி - புத்தி சொன்னதால் நிறைய தவிர்த்து விட்டேன்.//

    புத்தி - புத்தி சொல்லியும் கேட்கவில்லை!?...

    ReplyDelete
  5. //நேர விரயம்! இதனால் என்ன லாபம், விளையாடுபவர்கள் கோடிகளில் கொழிக்கிறார்கள். நாம் நம் நேரத்தை வீணடித்து சில ரூபாய் சம்பாதிப்பதை விட்டு செலவழிக்கிறோம் என்று புத்தி, புத்தி சொன்னதால் நிறைய தவிர்த்துவிட்டேன்.//

    சுரேஷ்! நாங்களும் ஒரு காலத்தில் கிரிக்கெட் பார்த்தவர்கள் தான்! தாங்கள் சொல்லியிருப்பது சரியே!

    அதுவும் இப்போது சூதாட்டம் வேறு! நேமையான விளையாட்டாக இல்லையே! ஆதங்கம் தான்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!