ஆடி மாச நாயகி! நாடி உனை துதிப்போம்! அம்பிகையே!

ஆடி மாச நாயகி! நாடி உனை துதிப்போம்! அம்பிகையே!


அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே!
ஞான வைராக்கிய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹிச பார்வதி!

   தனம் தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
   மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமிலா
   இனம் தரும் நல்லனவெல்லாம் தரும் அன்பனரென்ப வர்க்கே
   கனம் தரும் பூங்குழலான் அபிராமி கடைக்கண்களே!

       சிவாலயங்களில் அம்பிகை இறைவனின் பீடத்தில் பிரியாமல் ஒன்றாக இருந்து யோகசக்தியாகவும் அர்த்த மண்டபத்தில் போக சக்தியாகவும் பிரகாரத்தில் வீரசக்தியாகவும் இருந்து அருள் பாலிக்கிறாள்!
  அம்பிகையை வழிபட மாதங்களில் ஆடியும் தையும், வாரங்களில் செவ்வாயும் வெள்ளியும் சிறப்பானது.
  அம்பிகை வழிபாட்டிற்கு திதிகளில் அஷ்டமியும் சதுர்த்தசியும்,பவுர்ணமியும் நட்சத்திரத்தில் உத்திரமும் பூரமும் விசேஷமானது.
   ஒவ்வொரு நாளும் வரும் இரவுக்காலம் அம்பிகை பூஜைக்குரியது. பிரதமை திதியன்று அஸ்தம் நட்சத்திரம் வருமாயின் அன்று வழிபடுவது மிகச்சிறப்பு.
  
காந்திமதி அம்மன் ;

      தமிழ்நாட்டில் எந்த கோயிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு நெல்லை ஸ்ரீ காந்திமதி அம்மனுக்கு உண்டு இந்த அம்மனின் உருவ அமைப்பு ஒரு காலைத் தூக்கி ஓடிவரும் நிலையில் இருக்கும். இது தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அம்பாள் ஓடிவந்து உதவுவதை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

நத்தம் ஸ்ரீ துர்க்கையம்மன்;

          செங்குன்றம் அடுத்த பஞ்செட்டி நத்தம் கிராமத்தில் வாலீஸ்வரர் ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கையம்மன் விசேசமானது. பொதுவாக ஆலய பிரகாரத்தில் இருக்கும் துர்க்கை சிலைகள் பின்னால் ஜ்வாலை( தீக்கங்குகள்) உடன் இருக்காது. இங்கு அம்மன் ஏழு ஜ்வாலைகளுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.  இவ்வாறு ஜ்வாலை யுடன் இருந்தால் காளி ரூபமாக வாயில் கோரைப்பற்கள் இருக்கும். இங்கு அவ்வாறு இல்லாமல் சாந்த சொருபமாக காட்சி அளிக்கிறாள். இந்த துர்க்கையை வெள்ளி செவ்வாய் கிழமைகளில் விளக்கேற்றி வழிபாடு செய்ய துயரங்கள் விலகி நன்மை உண்டாகும். திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை.

கிழக்கு முகவாயில்:
      கிழக்கு நோக்கி அம்பாள் இருக்கும் வாயில்கள் அம்பாள் தவம் செய்த சிறப்புடையதாக இருக்கும். திருப்பாலைவனம், மாங்காடு, சங்கரன் கோயில் முதலியன அம்பாள் கிழக்கு நோக்கி அமர்ந்த தலங்களாகும்.

நிமிசத்தில் துயர் தீர்க்கும் நிமிஷாம்பாள்:

        முக்த ராஜன் என்னும் அரசன் அம்பிகை பக்தன், சிறப்பாக ஆட்சி செய்த அவனுக்கு தொல்லைக்கொடுத்தான் ஜானுசுமண்டலன் என்னும் அரக்கன்.  அவனது தொல்லை பொறுக்க முடியாமல் அம்பிகையை குறித்து யாகம் செய்தான் முக்தராஜன். யாகத்தில் அம்பிகை தோன்றினாள். முக்தராஜன் தன்னுடைய குறையை கூற அம்பாள் ஜானுசு மண்டலனை பார்த்து ஒருநிமிடம் கண் மூடி திறந்தாள். அந்த கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீயில் ஜானுசு மண்டலன்  சாம்பலாகிப் போனான். நிமிடத்தில் துயர் தீர்த்த அம்பாள் நிமிஷாம்பாள் என பெயர் பெற்றாள். கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்க பட்டினம் அருகே கஞ்சம் என்ற இடத்தில் நிமிஷாம்பாள் ஆலயம் உள்ளது. சென்னையில் பிராட்வே காசிசெட்டி தெருவில் உள்ளது நிமிஷாம்பாள் ஆலயம்.
இராஜ இராஜேஸ்வரி!

      உலகையே ஆளும் லோக மாதாவான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனை ஆடிமாதத்தில் வழிபடுதல் சிறப்பாகும். அன்னைக்கு தமிழகத்தில் ஆலயங்கள் குறைவு. ராஜராஜேஸ்வரி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்பதால் மகா மேரு சக்கரம் ராஜராஜேஸ்வரி ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். வலது கால் தொங்கவிட்டு இடது காலினை மடக்கி வலது கையில் நீலோத்பல மலருடன் இடது கையில் கரும்பும் பின்னங்கைகளில் பாசம் அங்குசம் ஏந்தி தாமரை மலரில் வீற்றிருப்பவள் ராஜராஜேஸ்வரி!
    லலிதா சகஸ்ரநாமம், அஷ்டோத்திரம், போன்றவைகளால் துதித்து அன்னையை வணங்கிட வேண்டும்.
  ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேச்வரி!
 ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி!
ஆகம வேத கலாமய ரூபிணி!
அகில சராசர ஜனனி நாராயணி!
நாக கங்கண நடராஜ மனோஹரி!
ஞான வித்யேச்வரி ராஜராஜேஸ்வரி!
   என்ற ஸ்லோகத்தை கூறீயும் அம்பிகையை வழிபடலாம்.
 ராஜ ராஜேஸ்வரி ஆலயம் மதுரை போக்குவரத்து நகரில் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் கூட்டுச்சாலை அருகே கீழ்மேனி கிராமத்திலும் அமைந்துள்ளது.

சப்த கன்னியர்கள்!

      தமிழக இறைவழிபாட்டில் சப்த கன்னியர் வழிபாடு சிறப்பாகும்.  தன்னை ஆராதிக்கும் பெண்களின் மனதில் உள்ள குறைகளை களைவதில் அன்னை கன்னிகா பரமேஸ்வரிக்கு நிகரில்லை என்பது பக்தர்கள் நம்பிக்கை!
    சென்னை பிராட்வேயில் கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. சப்த கன்னியர் பூமியில் அவதரித்த கதை ஒவ்வொரு கோயிலிலும் ஒன்று இருக்கும். அன்னையின் அம்சங்களான கன்னிமார் வழிபாடு மிகவும் சிறப்புடையது பழமையானது.
     சிறுவாபுரி முருகன் கோயில் அருகே சப்தகன்னிமார்கள் ஆலயம் சிறப்புற  அமைந்துள்ளது. கிராம காவல் தெய்வமாகவும் உள்ளது.
  
சிறுவாச்சூர் மதுர காளி

  பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. திங்கள் வெள்ளி இரண்டு நாட்கள் மட்டுமே காலை ஒன்பது மணியில் இருந்து ஒரு மணிவரை திறந்திருக்கும் சித்திரை அமாவாசை துவங்கி 15 நாட்கள் சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு பிரம்மாண்டமான பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுகிறது.

அடுத்த வாரம் இன்னும் சில அம்மன்களை தரிசிப்போம்!

Comments

  1. தனம் தரும் கல்வி தரும்... அற்புதமான வரிகளுடன் கூடிய பகிர்வு சிறப்புங்க.

    ReplyDelete
  2. வேண்டுவோர்க்கு வேண்டியது தரும் அன்னையைப் பற்றிய அழகிய பதிவு சகோ!

    நல்ல நல்ல தகவல்கள் அனைத்தும் சிறப்பு.
    படங்களும் அற்புதம்!

    அன்னையின் அருள் உங்களுக்கும் கிடைக்க வேண்டுகிறேன்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தகவல்கள் அனைத்தும் சிறப்பு... நன்றிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அற்புதமான பதிவு.
    பக்திப் பரவசம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2