விருந்தோம்பல்!

விருந்தோம்பல்!

அந்த அதிகாலை வேளையில் சென்னை விரைவு போக்குவரத்துக்கழக பேரூந்து கரூர் பேருந்து நிலையத்தில் எங்களை உதிர்த்துவிட்டு புகையை கக்கியபடி கிளம்பியது. அப்போது மணி அதிகாலை 3.30 என அந்த பேருந்து நிலையத்தில் இருந்த மணிகூண்டு காட்டியது.
    அதிகாலை நேரம் என்றாலும் பேருந்து நிறுத்தத்தில் நாலாபுறமும் இயங்கிக் கொண்டிருந்த கடைகளில் நடமாட்டம் இருந்துகொண்டுதான் இருந்தது. மார்கழிப்பனிக் காற்று “ஜில்”லென்று காதைத்துளைத்தது. இடுப்பில் மூன்று வயது குழந்தை கையில் ஒரு டிராவல் பேக் கோடு நிதானமாக நடந்தேன். ஆறுமாத கைக்குழந்தையோடு பின் தொடர்ந்தாள் மனைவி.
      அருகில் இருந்த கட்டணக் கழிப்பிடம் நோக்கி தன்னிச்சையாக கால்கள் நடந்தன. ஏறக்குறைய பத்துமணி நேர பயணம் எங்கள் அடிவயிற்றை முட்டிக் கொண்டு இருந்தது. முதலில் மனைவி சென்று வர குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு நான் கழிப்பிடத்தினுள் நுழைந்தேன். அந்த அதிகாலை வேளையிலும் அனைத்தும் நிரம்பியிருந்தது. உள்ளே இருந்து ஒரே புகை மண்டலம். அவற்றுடன் மூத்திர நாற்றமும் கலந்து ஒரு மாதிரி குமட்டிக்கொண்டு வந்தது. கட்டணம் வாங்குகிறார்களே தவிர பராமரிப்பு என்பதும் சுகாதாரம் என்பதும் மருந்துக்கு கூட கிடையாது. ஏற்கனவே பலமுறை வந்து அனுபவப்பட்டவன் என்பதால் சிறிது நேரம் வாயில் அருகே காத்திருந்து ஒருவன் வந்ததும் உள்ளே நுழைந்தேன்.  ஆயிற்று ஒரு ஐந்து நிமிடம். நிம்மதியுடன் வெளியே வந்து கைகளை சுத்தம் செய்துகொண்டு  மனைவியின் அருகில் வந்தேன்.
     என்னங்க! நம்ம ஊருக்கு பஸ் நாலரைக்குத்தான்! இன்னும் ஒரு மணி நேரம் இங்கதான் இருந்தாகனும் என்றாள். அப்படியா? அப்போ முகம் கழுவிக் கொண்டு ஒரு டீ சாப்பிட்டு உக்காந்திருக்கலாம். குளிர் தாங்க முடியலை என்றேன்.
    மீண்டும் கழிப்பிடத்தினுள் சென்று பல்விளக்கி முகம் கழுவிவிட்டு வந்தேன். அவளும் சென்று வந்த பிறகு காசு கொடுத்துவிட்டு அங்கிருந்த டீக்கடை பக்கமாக சென்றோம்.
 இதற்குள் பெரியவள் முழித்துக் கொண்டாள்.அவளை கீழே இறங்கி நடக்க செய்து எங்கள் இருவருக்கும் டீ சொல்லிவிட்டு குழந்தைகளுக்கு பால் ஆர்டர் செய்தேன்.
   அப்போதுதான் கவனித்தேன். அங்கே நிறைய கூலித்தொழிலாளர்கள் அந்த கடையோரமாக ப்ளாட்பாரத்தில் கோணி விரித்து படுத்து இருந்தனர். நாங்கள் டீ வாங்கிய இடத்திலும் அப்படி சிலர் படுத்து இருந்தனர். டீ ஒன்றும் அவ்வளவு சுகமில்லை. டீக்கடையில் எம்.ஜி ஆரோடு யாரோ ஒருவர் இருக்கும் படம் மாட்டிவைக்கப்பட்டு இருந்தது. இந்த பக்கம் பெரும்பாலும் இப்படி படம் மாட்டிவைக்கப்பட்டு இருக்கிறது. டீ வியாபாரத்தை விட  கிங்க்ஸும் கோல்ட் ப்ளேக்கும் அதிகம் விற்றன. நான் ஒரு டீ சாப்பிடுவதற்குள் ஏறக்குறைய பத்து பேர் புகை பிடித்து அங்கே பரவவிட்டார்கள். பொது இடத்தில் பிடிக்க தடை என்பதெல்லாம் வெறும் கண் துடைப்புதான் போல.
    புகை நமக்கு பகை! கூடவே குழந்தைகளும் இருந்ததால் அங்கே புகைவிட்ட ஒருவரை முறைத்தேன். அவர் என்ன? என்பது போல பார்த்தார். கொஞ்சம் தூரமா போய் புகையுங்கள்! குழந்தைகள் இருக்கிறார்கள் என்றேன். ஏதோ முணுமுணுத்தபடி அகன்றார்.
      இதற்குள் வாங்கிய பாலை ஆற்றி பாட்டிலில் விட்டு குழந்தைக்கு கொடுப்பதற்காக அங்கே ப்ளாட்பாரத்தில் அமர்ந்தாள்மனைவி. அப்போது தாயி! வெறுந்தரையிலே உக்காராதே! பனி சில்லுன்னு இருக்கும்! இந்தா என்று தான் படுத்திருந்த கோனி ஒன்றை கொடுத்தார் அருகிலிருந்த பெண்மணி. சுமார் நாற்பது வயதிருக்கும். அழுக்கேறிய தலை! அந்த அதிகாலை வேளையிலும் வெத்தலை புகையிலை போட்டுக்கொண்டிருந்தார். பெரிய பெண்ணை பார்த்து தாயி! பேரு என்ன? என்றார் சிரித்தபடி!  சொல்ல மாட்டேன் போ! என்று தூக்க கலக்கத்திலும் முறைத்தாள் என் பெண். தாயி! ஏன் கோச்சுக்குது!  எங்கிருந்து வாரீங்க! எங்கிட்டு போவனும்? என்று அடுத்த விசாரிப்பை துவங்கினாள்.
     என் மனைவி அவளுடன் சகஜமாக பேச துவங்கினாள். சற்று நேரத்தில் என் பெண்ணும் அவளுடன் ஒட்டிக் கொண்டது. குளிர் அதிகமா இருக்குது. ஸ்வெட்டரோட குல்லாவை நல்லா போட்டுக்க என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவள் கொடுத்த கோணியில் மனைவியும் குழந்தைகளும் வசதியாக அமர்ந்து கொண்டிருக்க அவள் வெறும் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
     கொஞ்ச நேரம் அவள் காணாமல் போய் திரும்பி வந்தாள். ஏம்மா! டீ சாப்பிடலையா என்று கேட்டான்  டீ கடைக்காரன்.
 அந்த கடையில குடிச்சிட்டேன்! என்றாள் பக்கத்துக் கடையை காட்டி அவள்.
   ஏன்! நம்ம கிட்ட குடிக்க வேண்டியதுதானே! படுத்துக்க மட்டும் நம்ம கடை வாசல்! ஏதோ அவன் சொத்தை எழுதி வைத்துவிட்டது போல குறைபட்டுக்கொண்டான் கடைக்காரன். உன் கடை டீயை  தெரிஞ்சவன் குடிப்பானா? என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன்.
      கோச்சுக்காதேப்பா! தெரிஞ்சவங்க வாங்கி கொடுத்தாங்க! நான் காசு போட்டு வாங்கலை! என்றாள் காவியேறிய பற்கள் தெரிய சிரித்தபடி!
    என் பெண் சும்மா இல்லாமல் அங்கும் இங்கும் ஓடியாடிக்கொண்டிருந்தாள். பக்கத்து கடை ஷட்டரை எட்டி உதைத்தாள். அய்யே! ஏன் இப்படி பண்றே? என்று அலுத்துக் கொண்டாள். அன்னியோன்யமாய் பழக ஆரம்பித்துவிட்டாள் மனைவியுடன்.
   இதற்குள் ஒரு மணிநேரம் கடந்து எங்கள் ஊருக்கான பேருந்து வந்து நின்றது. என்னங்க பஸ் வந்திருத்து!
   மடமடவென்று பைகளை எடுத்துக் கொண்டு குழந்தையையும் தூக்கிக் கொண்டு பஸ்ஸினுள் ஏறி அமர்ந்தேன். மனைவியும் பின்னாலேயே வந்து ஏறி அமர்ந்தாள். ஐந்து நிமிடத்தில் பஸ் புறப்பட தயாரானது.
    வெளியே எட்டி பார்த்தேன். அந்த காவி நிற பல்லை உடையவளை காணவில்லை! அவள் யாரோ எவளோ தெரியாது. அவளுக்கும் நமக்கும் எந்த உறவும் இல்லை! வலிய வந்து பேசி உதவினாள். ஏழை கூலித் தொழிலாளி அவளிடம் இருக்கும் விருந்தோம்பல் நமக்கு இல்லாமல் போய்விட்டதே!
    கிளம்பும் போது ஒரு டீ வாங்கி தந்தாவது இருக்கலாம்! போய் வரோம்! என்று ஒரு நன்றி சொல்லாவது சொல்லி இருக்கலாம்!  எதுவுமே சொல்லாமல் பஸ் வந்ததும் அடித்து பிடித்து ஏறிவிட்டோமே!  அடச்சே! என்று நினைத்தது மனது.
   என்னங்க! என்னமோ யோசிக்கிறீங்க?

இல்லே! உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்துச்சே அந்த பொம்பளை! அதுங்கிட்ட சொல்லாமயே வந்துட்டேமே! அவ்ளோ பாசமா பேசிச்சே! ஒரு டீயாவது வாங்கி தந்திருக்கலாம்! இல்லை என்றேன்.
     ஆமாங்க! எனக்கும் அது தோணலை! என்றாள்

பஸ் கிளம்பியது! அந்த பெண்மணி இப்போது வேறு யாரோ குடும்பத்தினருடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். எந்த எதிர்பார்ப்பும் அவளிடம் இல்லை! வெள்ளந்தியான விருந்தோம்பல் அவளுடையது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. உண்மையில் நாம் அவுங்களுக்கு உதவக்கூடாது என்ற எண்ணம் கிடையாது. சட்டென்று நமக்கு தோன்றாது. அது தான் நமக்கு இருக்கும் பிரச்சனை.

    ReplyDelete
  2. அனைவரையும் ஒரு சந்தேக கண்ணோடு பார்க்க வைத்து விட்டது இன்றைய சமூகம்... ம்...

    மனதில் இந்த எண்ணம் தோன்றியதற்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. பல சமயங்களில் நானும் இப்படி
    நடந்து கொண்ட விஷயங்களை
    ஞாபகப்படுத்தி வெட்கப் பட வைத்தது
    தங்கள் அருமையான பதிவு
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மனதில் தோன்றிய எண்ணம் பாராட்டப்படவேண்டியது

    ReplyDelete
  5. பல சமயங்களில் நமக்கு இது சாதரணமா விஷயமாக தெரிகிறது. பிறகு தான் யோசிக்கிறோம்.....

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. கருப்பட்டி காபி குடிப்பதற்கு மிகவும் ருசியானது. அதற்கு வேம்பார் கருப்பட்டி ரொம்ப இன்றியமையாததாகும். சென்னையில் அது கிடைப்பதில்லை. உங்கள் ஏரியாவில் கிடைக்கிறதா....? கிடைத்தால் நான் வந்து வாங்கி செல்வேன்.
    அன்புடன்
    கதிர்முருகன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கதிர் முருகன்! நானும் சென்னைவாசிதான்! கரூர் என் மாமியார் ஊர்! கருப்பட்டி அங்கு கிடைப்பதாக அறிந்தேன்! அந்தபக்கம்போகும்போது வாங்கிக் கொள்ளுங்கள்! நன்றி!

      Delete
    2. அன்பான எழுத்தாளர் அவர்களுக்கு,

      தங்கள் பதிலுரைக்கு நன்றி!!
      சென்னை அல்லது அதன் சுற்று வட்டாராத்தில் எங்கே கிடைக்கும் என அறியவே விரும்பினேன். எனது சொந்த ஊர் கொடுமுடி அங்கேயே வாங்கிக் கொள்ள முடியும் சென்ற முறை வாங்கி வந்தது தீர்ந்துவிட்டது. இப்போது ஊருக்கும் செல்ல இயலாத வகையில் பணிச் சுமை.

      நன்றி!!
      கதிர்முருகன்

      Delete
    3. நன்றி கதிர் முருகன்!, கருப்பட்டி வெல்லம் காதிகிராப்ட் போன்ற அரசு கூட்டுறவு கடைகளில் கிடைக்கலாம். சில டிபார்மெண்டல் ஸ்டோர், சூப்பர்மார்க்கெட்களில் கிடைக்கலாம் விசாரித்து பார்க்கவும். மேலும் விபரங்கள் கிடைத்தால் பகிர்கிறேன்! நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!