கோச்சடையான் கதை! பாப்பாமலர்!

கோச்சடையான்!


வெகு காலத்திற்கு முன்னே விக்கிரமபுரி என்ற நாட்டிலே ஒரு வயதான தம்பதிகள் வசித்து வந்தார்கள். அவர்களது மகன் மருமகள் இறந்துவிடவே அவர்களின் பேரன் மட்டும் அவர்களுடன் வசித்து வந்தான். இளவயதுக்காரனான அவன் இரக்க குணம் மிக்கவன். அந்த வயதான தம்பதிகளால் வேலை எதுவும் செய்ய முடியாது. பேரனோ வேலை செய்யும் அளவிற்கு வளர வில்லை. அதனால் அவர்கள் அன்றாடப் பொழுது கழிவதே பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.
    வயதான தம்பதிகள் பக்கத்து வீட்டில் வசதியான பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் சொல்லும் எடுபிடி வேலைகள் ஏதாவது பேரன் செய்வான். அதற்கு அவர் தரும் சப்பாத்தி துண்டுகள் அல்லது வீணான பழங்கள் ஏதாகிலும் அவர்களின் அரைவயிற்றை கழுவ உதவியது. மூதாட்டி சில சமயம் அவர்கள் வீட்டு தோட்டத்தில் விளையும் சில கீரைகள் பழங்கள் ஆகியவற்றை வீதியில் கடைபரப்பி விற்பாள். அப்படியும் அவர்களுக்கு எந்த நிரந்தர வருமானம் கிடையாது.
   ஆனாலும் பேரன் கோவிந்துவிற்கு மிகுந்த இரக்க குணம். தனக்கு கிடைக்கும் உணவையும் பிறருக்கு பகிர்ந்து கொடுத்து உண்பான். தோட்டத்தில் மேயும் பறவைகள், அணில்கள் போன்றவற்றிற்கு ஏதாவது தீணி போட்டுக்கொண்டிருப்பான். அவனது பாட்டியோ புலம்பிக் கொண்டிருப்பாள். இருக்கும் தானியங்களையும் இப்படி பறவைகளுக்கும் அணில்களுக்கும் இரைத்துவிட்டால் நம் பிழைப்பு என்னாகும்? நாம் என்ன அவ்வளவு பணக்காரர்களா? என்பாள்.
   ஆனால் கோவிந்து அதை காதில் வாங்கிக்கொள்ளமாட்டான். வீட்டில் இருந்தால் இருக்கும் சில தானியங்களையும் பறவைகளுக்கு கொடுத்துவிடுவான். பக்கத்து வீட்டுக்காரன் தோட்டத்தில் ஒரு பறவைகளும் மேயாது. இவன் வீட்டிலோ கோவிந்தை கண்டாலே பறவைகள் மொய்த்துக் கொள்ளும். இதை பார்த்து வயிற்றெரிச்சல் படுவான் பக்கத்து வீட்டுக்காரன்.
    ஒரு நாள் கோவிந்த் காலையில் விளையாடிவிட்டு திரும்பும்போது சாலையில் ஒரு குட்டி நாய் அடிபட்டுக் கிடந்தது. அதனருகே சென்ற கோவிந்த் அதை தூக்கி வந்து காயங்களை துடைத்து மருந்து இட்டான். பின்னர் அதை வீட்டிற்கு எடுத்துவந்துவிட்டான்.
   வீட்டில் அவனது பாட்டி சத்தம் போட்டாள். ஏய்! கோவிந்த்! இங்கு நமக்கு சோற்றுக்கே வழியில்லை! இந்த ஜீவனை வேறு ஏன் கொண்டுவந்தாய்? இதை வளர்ப்பது நம்மால் ஆன காரியம் இல்லை! எங்காவது விட்டுவிட்டு வந்துவிடு என்றாள்.
   இல்லை பாட்டி! இது மிகவும் சின்ன குட்டி! சாலையில் அடிபட்டு கிடந்தது. பார்க்க பாவமாக இருந்தது. நான் வளர்த்துக் கொள்கிறேனே! என்னுடைய உணவில் சிறிது இதற்கு கொடுத்துக் கொள்கிறேன். என்று வாதாடி அதை வளர்க்க ஒப்புதல் பெற்றுக் கொண்டுவிட்டான்.
     இரண்டொரு நாளில் அந்த நாய்க் குட்டியின் காயங்கள் ஆறிவிட்டது. அதன் ரோமங்கள் பொன்னிறமாக பளபளத்தது. புசுபுசுவென அழகாக காட்சி அளித்தது.
  கோவிந்த் எந்த நேரமும் அந்த நாய்க்குட்டியுடன் திரிந்தான். பக்கத்துவீட்டுக்காரன் இதை பார்த்ததும் அதிசயித்தான். அட இந்த நாய்க்குட்டி புசுபுசுவென அழகாக இருக்கிறதே! இது எப்படி உனக்கு கிடைத்தது? எனக்கு கொடுத்துவிடேன்! உனக்கு நிறைய தானியங்களும் பழமும் தருகிறேன் என்று கேட்டான்.
  மாட்டேன்! இதை நான் வளர்க்கிறேன்! கொடுக்க முடியாது. இது என் உயிர் நண்பன்! யாருக்கும் தரமாட்டேன்! என்றான் கோவிந்த்.
  சரி அப்படியா? உன் நண்பன் பேர் என்ன சொல்லு? என்றான் வேடிக்கையாக பக்கத்து வீட்டுக்காரன்.
  அப்போதுதான் கோவிந்திற்கு நாய்க்குட்டிக்கு இன்னும் எந்த பெயரையும் வைக்க வில்லை என்று தோன்றியது. இதற்கு இன்னும் நான் பெயர் வைக்க வில்லை என்றான்.
   அப்படியா? நான் ஒரு பெயர் சொல்லட்டுமா?
ம் சொல்லுங்கள்!
சடையன்! என்று வைத்துக் கொள்! முடி சடைசடையாக இருக்கிறதே! என்றான் பக்கத்து வீட்டுக்காரன் நக்கலாக.
   அட! புதுமையாக இருக்கிறதே! என்பெயர் கோவிந்த் நான் வளர்க்கும் நாய் சடையன்! கோச்சடையான்! அருமை! என்று துள்ளிக்குதித்து ஓடினான் கோவிந்த்.
  அன்றுமுதல் கோச்சடையான் என்று கூப்பிட்டு பழக்கினான். அதுவும் மிகவும் நன்றாக அவனுடன் பழகியது. அவனது பாட்டி மட்டும் அவ்வப்போது திட்டுவாள். அதை அவன் காதில் வாங்குவது இல்லை. ஒரு பத்து பதினைந்து நாள் கடந்திருக்கும். அதிகாலை கோவிந்த் கண் விழித்தபோது பக்கத்தில் படுத்திருந்த கோச்சடையானை காணவில்லை! பதறிப்போய் தேடினான்.

     கட்டிலின் அடியில் இருந்து “லொள்’ என்று சத்தம் வரவே எட்டிப்பார்த்தான். அங்கு கோச்சடையான் படுத்துக் கிடந்தது. அதன் உடலில் ஒரு ரோமங்கள் கூட இல்லை! அனைத்தும் கீழே உதிர்ந்து கிடந்தது. அது பேசத்தொடங்கியது. அன்பு கோவிந்த்! நான் ஒரு தேவதை! ஒரு சாபத்தால் நாயாக பிறக்க நேரிட்டது. ஒரு பட்சத்திற்கு ஒரு முறை என்னுடைய ரோமங்கள் உதிர்ந்து விடும். பின்னர் ஒரு நாள் முழுவதும் சூரிய ஒளி படாமல் இருந்தால் மீண்டும் வளரத் தொடங்கி விடும். இந்த ரோமங்கள் அனைத்தும் சூரிய ஒளி பட்டதும் தங்கமாக மாறிவிடும். இதை எடுத்துக் கொள். இதை யாரிடமும் கூறாதே! உன்னுடைய இரக்க குணம் என்னைக் கவர்ந்தது. உனக்கு உதவவே இங்கு வந்தேன். என்னை இன்று வெளியில் அழைக்காதே! இந்த ரோமங்களை சூரிய ஒளியில் வை. அவை தங்க ரோமங்களாகும். அவற்றை விற்று விடு. என்றது கோச்சடையான்.
   கோவிந்திற்கு எல்லாம் அதிசயமாக இருந்தது. கோச்சடையானை தூக்கி முத்தமிட முயன்றான். அது என்னை தூக்காதே! என் உடல் எல்லாம் வலிக்கிறது. ரோமங்கள் எல்லாம் உனக்காக உதிரச் செய்துவிட்டேன். இவை இல்லாமல் என்னால் வெளியே வர முடியாது. இன்னும் இரண்டுநாள் ஆகும் பழையபடி வளர என்றது.
   கோவிந்த் அந்த ரோமங்களை சூரிய ஒளியில் காட்டினான். அவை தங்க இழைகளாக மாறியது. வியந்து போன அவன் அதை எடுத்துச் சென்று தாத்தா- பாட்டியிடம் காண்பித்தான். அடேய்! உனக்கு ஏது இவ்வளவு தங்கம்? என்று கேட்டனர் அவர்கள். கோச்சடையான் பற்றி கூறிய அவன் இதை யாருக்கும் சொல்லாதீர்கள். இதை விற்கும் வழியை பாருங்கள். என்றான். அவர்களும் அந்த ரோமங்களை அவர்களுக்குத் தெரிந்த ஓர் பொற்க்கொல்லனிடம் கொடுத்து பணமாக்கினார்கள். அவன் இது எப்படி கிடைத்தது என்று கேட்டான்.
     கோவிந்திற்கு தாய்வழியில் கிடைத்தது என்று சொல்லி சமாளித்துவிட்டார்கள். ஓரளவு பணம் கிடைக்கவே கொஞ்சம் வசதியாக அவர்கள் வாழ ஆரம்பித்தார்கள். அவர்கள் உணவிற்கு முன்பு போல கஷ்டப்பட நேரவில்லை. பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை கோச்சடையானின் ரோமங்கள் முழுவதும் உதிர்ந்துவிடும். ஆனால் கோவிந்த் முதல் முறை மாதிரி அனைத்து தடவையும் முழு ரோமங்களையும் தங்கமாக மாற்றுவது இல்லை. சிலவற்றை மட்டும் தங்கமாக மாற்றுவான். மிகுதியை அப்படியே சேகரித்து வைத்து இருந்தான்.
  கோவிந்த் வசதியாக மாறிவிட்ட நிலை கண்டு பக்கத்துவீட்டுக்காரனுக்கு பொறாமை ஏற்பட்டது. இவனுக்கு எப்படி வசதி வந்தது என்று அவன் ஆராய்ச்சி செய்யத்தொடங்கினான். ஒரு முறை கோவிந்தின் பாட்டியிடம் கேட்டான். அவளும் பேச்சுவாக்கில் கோச்சடையானால்தான் நாங்கள் இந்த அளவிற்கு இருக்கிறோம் என்று சொல்லிவிட்டாள்.

  அதெப்படி அந்த நாய் உங்களை எப்படி மாற்றியது? என்றான் பக்கத்துவீட்டுக்காரன்.
  அதெல்லாம் ரகசியம்! சொல்ல முடியாது! என்றாள் அவள்.
பலமுறை கேட்டுப்பார்த்தும் அவள் சொல்லாது போகவே அவன் வெறுப்படைந்து கிளம்பி விட்டான்.
   அன்று கோச்சடையான் ரோமங்களை உதிர்க்கும் நாள். அப்படி ரோமங்களை உதிர்த்துவிட்டு கட்டில் அடியில் படுத்து இருந்தது. கோவிந்த் வந்து பார்த்துவிட்டு. கோச்சடையான்! உன் ரோமங்கள் இல்லாமல் உன்னை குளிர் வாட்டும் இல்லையா? இதோ! உனக்காக  உன் ரோமங்களை கொண்டே ஸ்வெட்டர் பின்னிவிட்டேன்! இதை போட்டுக் கொள்! என்று போர்த்திவிட்டான். இதை பார்த்து சடையனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
  கோவிந்த்! நீ மிகவும் கருணை மிக்கவன்! இன்னும் யாராவது இருந்தால் என் ரோமங்களை பொன்னாக்கி விற்கத்தான் முயற்சிப்பார்கள். நீ உன் தேவைக்கு மட்டும் எடுத்துக் கொண்டு எனக்கு ஆடை தைத்து கொடுத்திருக்கிறாய்! இதை நான் மறக்கமாட்டேன்! என்றது.
     இப்படியே வருடங்கள் சில ஓடியது. கோவிந்த் இப்போது ஊரில் செல்வந்தன் ஆகிவிட்டான். பக்கத்து வீட்டுக்காரனுக்கு வயிற்றெரிச்சல் ஆகிவிட்டது. நம் வீட்டில் எடுபிடி செய்த பிள்ளை நம் அளவிற்கு வளர்ந்து விட்டானே! என்று வயிறெரிந்தான்.
  மீண்டும் சென்று பாட்டியிடம் விசாரித்தான். அட! அந்த கோச்சடையான் உதவி செய்து பிழைக்கிறோம்! உனக்கென்னப்பா வந்தது? என்றாள் பாட்டி எரிச்சலாக!
   ஓகோ! இப்போது என்ன செய்கிறேன் பார்! என்று அவன் உள்ளே நுழைந்தான். கோவிந்தின் அறையில் சடையான் உறங்கிக் கொண்டிருந்தது. ஏய்! சடையனே! நீ எப்படி கோவிந்திற்கு உதவினாய்! அதைச்சொல்! இல்லாவிட்டால் உதைதான் கிடைக்கும்! என்று தடியை எடுத்து மிரட்டினான்.
   ஓகோ! நீ பொறாமைக்காரன்! உனக்கு கட்டாயம் நான் உதவியது எப்படி என்று தெரியவேண்டுமா? என்றதுநாய்.
   என்னது நீ பேசுவாயா? பேசும் நாய்! அதிசயம்! உன்னை விற்றாலே ஆயிரம் பொன் கிடைக்குமே!  உன்னை வைத்து ஏதேனும் வித்தைகாட்டி சம்பாதிக்கிறானோ என்றான் அவன்.
     வித்தையெல்லாம் ஒன்றும் இல்லை! என்னுடைய ரோமங்களை விற்று பணக்காரன் ஆகிவிட்டான்.
   என்னது உன் ரோமமா? அதென்ன விலை போகும்!
ரோமம் தங்கமானால் விலைபோகும் அல்லவா?
  என்னது ரோமம் தங்கமாகுமா? எப்படி?
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என் ரோமங்கள் உதிர்ந்து தங்கமாகும்.
  அப்படியா? இப்படித்தான் அவன் பணக்காரன் ஆகிவிட்டானா? இனி நீ எனக்குத்தான்! என்று அந்த குட்டி நாயை தூக்கிக் கொண்டு விரைந்தான் அந்த பக்கத்துவீட்டுக்காரன்.
   அடேய்! அது கோவிந்துடையது கொடுத்துவிடு! என்று பாட்டி கத்தியது அவன் காதில் விழவில்லை!
    வெளியே சென்றிருந்த கோவிந்த் வீடு திரும்பியதும் பாட்டி நடந்ததை கூறினாள். அவன் பக்கத்து வீட்டுக்காரனிடம் சென்று கேட்டபோது என்னிடம் இருந்தால் எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டான். அவன் வீடு முழுவதும் தேடியும் கோச்சடையானை காணவில்லை!
  என்னுடைய கோச்சடையானை கொடுத்துவிடு! உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்? என்று கேட்டான் கோவிந்த்.
  ஓ! நீ பணம் கொடுக்கும் அளவிற்கு பெரிய ஆளாக மாறிவிட்டாயா? உன்னிடம் ஏது இவ்வளவு பணம்?
  அது எதற்கு உனக்கு? என் சடையனை திருப்பித்தா!
என்னிடம் இல்லை! என் வீடு முழுவதும் தேடிவிட்டாய் அல்லவா? அந்த சடையன் எங்கு ஓடிப்போனானோ? என்னை தேடி வந்துவிட்டாயே! என்றான் அவன்.

   கோவிந்த் ஏமாற்றமாய் வீடு வந்து சேர்ந்தான். அவனால் உண்ணவும் உறங்கவும் முடியவில்லை! மறுநாள் ஊர் தலைவரிடம் சென்று முறையிட்டான். அவரிடமும் பக்கத்து வீட்டுக்காரன் என்னிடம் அந்த நாய் இல்லை! வேண்டுமானால் சோதித்துக் கொள்ளுங்கள் என்று வீட்டை திறந்து விட்டான். அவர்களும் சோதித்துவிட்டு வீணாக பழி சுமத்தாதே தம்பி! உன் நாய் எங்காவது ஓடிப்போய் இருக்கும்! கிடைத்துவிடும் என்று சொல்லிவிட்டார்.
   கண்ணீருடன் வீடு திரும்பினான் கோவிந்த்.
ஒரு வாரம் கழிந்திருக்கும். பக்கத்து வீட்டுக்காரன் சடையனை அவன் வீட்டில் இருந்த ஒரு பாதாள அறையில் அடைத்து வைத்து இருந்தான். அதற்கு உணவு ஏதும் சரிவர போடவில்லை! அது வாடிக்கிடந்தது. அன்று அதன் ரோமங்கள் உதிரும் நாள். மார்கழிமாத குளிர் வாட்டி எடுத்துக்கொண்டிருந்த வேளையில் அதன் ரோமங்கள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தன. பக்கத்துவீட்டுக்காரன் அதைப் பார்த்துவிட்டு ம்! சீக்கிரம் உன் ரோமங்கள் உதிர்வதற்கு இத்தனை நேரமா? என்று கத்தினான். ஒரு வழியாக எல்லா ரோமங்களும் உதிர்ந்தன.
   சரி! எல்லா ரோமமும் உதிர்ந்துவிட்டன! ஏன் தங்கமாக அவை மாறவில்லை! நீ பொய் சொல்லுகிறாயா? உன்னை என்ன செய்ய போகிறேன் பார் என்றான் பணக்காரன்.
    சடையன் மிகுந்த கோபத்துடன் இருந்தது. இத்தனை நாள் அதற்கு உணவு போடாததால் மிகவும் வெறியுடன் இருந்தது. ரோமங்கள் உதிர்ந்து போனதால் வலியும் வேதனையும் சூழ்ந்திருந்தது அதற்கு. பணக்காரன் கோபிக்கவும் அதுவும் உறுமியது.
     ஏய்! குட்டி நாயே! என்னையே ஏமாற்றுகிறாயா? என்று குச்சியால் அதை ஒரு அடி அடித்தான் பணக்காரன். அந்த வேதனையில் அது அவனது மேல் விழுந்து பிறாண்டியது. அப்படியே ஒரு கவ்வு கவ்வ பணக்காரன் பயந்து போனான்! ஏய்! விடு விடு என்று அப்படியே பிடித்து எடுத்து வெளியில் வீசினான். அந்த சமயம் கோவிந்த் அந்த வழியே சென்று கொண்டிருந்தான். அவனது காலடியில் சென்று விழுந்தது கோச்சடையான். மறுகணம் கோவிந்த் அதை தூக்கி உச்சி முகர்ந்தான்.

    சடையா! வந்துவிட்டாயா? என்ன இது உன் ரோமங்கள் காணவில்லை! உதிர்ந்துவிட்டதா? உன்னை யார் அடித்தது? இவ்வளவு காயங்கள் உள்ளதே! என்று விரைந்து தன் வீட்டிற்கு தூக்கி சென்று மருந்திட்டான். தான் தைத்து வைத்திருந்த ஸ்வெட்டரை போர்த்தி விட்டான். பின்னர் சிறிது உணவும் தந்தான்.
      பக்கத்துவீட்டுக்காரன் என்னை பிடித்து சென்று அடைத்து வைத்திருந்தான். இன்று ரோமங்கள் உதிர்ந்ததும் தங்கமாகவில்லையே என்று எரிச்சல் பட்டு என்னை அடித்தான். அதனால் அவனை கடித்தேன்.  அப்படியா! அவனை ஊர் தலைவரிடம் மாட்டிவிடுவோம்.
   வேண்டாம்! என் ரோமங்கள் அவனுக்கு தகுந்த பாடம் புகட்டும்!
   எப்படி? என் ரோமங்கள் சூரிய ஒளிபட்டால் பொன்னாகும். அதே நிலவொளி பட்டால் அப்படியே பெரிதாக கொடிபோல வளரத்தொடங்கும். நிலவு மறையும்வரை வளர்ந்து கொண்டே இருக்கும். மறுநாள் சூரிய ஒளி பட்டால் தான் வளர்வது நிற்கும். இதை இன்று அந்த பொறாமைக்காரன் அனுபவிக்கட்டும் என்றது சடையன்.
    ஏமாற்றுக்கார நாய்! என்னை கடித்தும் விட்டது.  பத்து பைசா பெறாத இதன் ரோமங்கள் யாருக்கு வேண்டும்? என்று வெளியே தூக்கி எறிந்தான் பணக்காரன். அன்று பவுர்ணமி பூரண நிலவு ஒளி வீச அந்த ரோமங்கள் அப்படியே கொடியாக வளரத் தொடங்கின. அந்த வீடு முழுவதும் படர ஆரம்பித்தன.
   பணக்காரன் திகைத்தான். என்ன இது அதிசயக் கொடி! நில்லு! வளராதே என்றான். அது நிற்குமா என்ன? அவன் வீடு முழுவதும் பற்றிப் படர்ந்தது. வெட்ட வெட்ட துளிர்த்தது. இருக்கவே இடம் இல்லை! இவன் வெளியே ஓடிவர முற்பட இவனையும் சூழ்ந்துகொண்டது.
   ஐயோ! காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அவன் அலறியபோது முழுதாய் அவனை மூடிவிட்டது கொடி! அப்படியே அழிந்து போனான் கொடியவன்.

பின்குறிப்பு: ரஜினியின் கோச்சடையான் படக்கதை நினைத்து வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல! இது குட்டிப்பசங்களுக்கு சொல்ல நான் எழுதின கோச்சடையான் கதை!


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. மனிதனின் கற்பனா சக்திக்கு எல்லையே இல்லை சகோதரா
    ஒரு நாயை வைத்து எவ்வளவு அழகாகவும் கச்சிதமாகவும்
    நீதியை நிலை நிறுத்தும் வண்ணம் கதையைப் படைத்துள்ளனர் .
    இக் கதையைப் படிக்கும் போதே உணர்வு எங்கும் சிதையாமல்
    அப்படியே தொடரச் செய்தது .சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் சகோ .

    ReplyDelete
  2. வாசிக்கும் போது சிறு குழந்தையாகிறது மனசு, வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஓ ...இது அந்த கோச்'சடை'யானா?அருமை !

    இன்றைய என் ஜாலி பதிவு >>>http://www.jokkaali.in/2014/02/blog-post_22.html
    சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ?ஆனால் என் சைட்டை பார்க்க நான் அழைக்கிறேன்!
    த ம 8

    ReplyDelete
  5. நாங்களும் பாப்பாதான! நல்ல அருமையான் கதை அதுவும் நாய் குட்டியை வைத்தே!

    சூப்பர்!

    ReplyDelete
  6. படிக்கப் படிக்க குழந்தையாய் மாறிப் போனேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  7. அப்பப்பா, எப்படி இப்படி தங்களால் யோசிக்க முடிகிறது. குழந்தைகளுக்கு நாய் குட்டி என்றால் மோகவும் பிடிக்கும், அதை வைத்தே ஒரு அருமையான நீதிக் கதையை தந்த உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
    தொடரட்டும் தங்களுடைய இந்த கற்பனாசக்தி.

    ReplyDelete
  8. சிறப்பான கதை.

    கோச்சடையான் - செம டைட்டில்! :))))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!