அம்மா தியேட்டர்கள் அவசியமா? கதம்ப சோறு பகுதி 24

கதம்ப சோறு பகுதி 24

அம்மா தியேட்டர்கள்! அவசியமா?


சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இந்தியாவில் வேறேங்கும் இல்லாத திட்டமாக மலிவுக் கட்டண திரையரங்குகளை நிறுவி மாநகராட்சி நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அம்மா வாட்டர், அம்மா உணவகம் போன்றவற்றை அரசு நடத்தி வருகையில் கேளிக்கைகளுக்காக ஒரு தொழிலை அரசு நடத்த வேண்டியது அவசியமில்லை!. மக்களின் அன்றாடத்தேவைகளை கவனிப்பதில் அரசு கவனத்தில் கொள்ளுமானால் பாராட்டலாம். அவனைக் கெடுப்பதில் அக்கறை காட்டுவதாக இந்த அரசுகள் அமைவது வேடிக்கை மட்டுமல்ல வாடிக்கையாகவும் ஆகிவிட்டது. டாஸ்மாக்கில் ஆரம்பித்து ஒவ்வொரு தொழிலாக அரசு ஏற்று நடத்த ஆரம்பித்து வருகிறது. அந்த வகையில் அம்மா உணவகங்களை பாராட்டலாம். பல ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஒன்று அம்மா உணவகங்கள். ஆனால் திரையரங்குகள் அப்படியா? பொழுது போக்கு கேளிக்கை சார்ந்த இந்த திரையரங்குகள் நடத்துவது என்பது அரசுக்கு தேவையில்லாத ஒன்று. இதையெல்லாம் சொன்னாலும் கேட்பதற்கு அம்மா பக்தர்கள் தயாராக இருக்கப்போவதில்லை! இந்த திட்டங்கள் அடுத்த அரசால் கலைக்கப்படும். அல்லது மாற்றப்படும். இதை வேடிக்கைப்பார்த்து அரசியல் பேசி பொழுதை கழித்துக்கொண்டிருப்போம் நாம்.

ஈரோட்டில் உதயமாகும் ஜவுளி வர்த்தக சந்தை!


    ஜவுளி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிச்சந்தை அமைக்கும் பணி நடந்துவருகிறது. 80 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாரச்சந்தையில் வர்த்தகர்களுக்கு இடம் ஒதுக்கும் பணி துவங்கி உள்ளது. உள்நாட்டு ஜவுளி, கைத்தறி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் விசைத்தறி தொழில் மேம்பாட்டு திட்டத்தில் தமிழகம், மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒருங்கிணைந்த விசைத்தறி பெருங்குழும திட்டத்தை அமல்படுத்த 2009ல் திட்டம் வகுத்தது. இதில் தமிழகத்தில் விசைத்தறி தொழில் மையமாக உள்ள ஈரோடு மாவட்டத்தில் ஜவுளிச்சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த ஜவுளிச்சந்தை அமைக்க ஈரோட்டை சேர்ந்த யு.ஆர்.சி புரொமோட்டார்ஸ்,லோட்டஸ் ஏஜென்சி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு 2011ல் கட்டுமானம் துவங்கியது. டெக்ஸ்வேலி என்ற பெயரில் இந்த சந்தை வடிவமைக்கபட்டுள்ளது.450 கோடி ரூபாய் திட்டமான இதில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. மொத்தம் 6000 கடைகள் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 4500 கடைகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தை செயல்படத்தொடங்கினால் ஆண்டுக்கு கூடுதலாக 2500கோடி ரூபாய் வர்த்தகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனை!

    இந்த மருத்துவமனைக்கும் அம்மா பெயர் வைத்துவிடுவார்கள் என்றுதான் பார்த்தேன். நல்லவேளை வைக்கவில்லை! ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட தலைமைச்செயலகத்தை இடித்துவிட்டு 143 கோடி செலவில் உயர் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட  கட்டிடத்தில் 400 படுக்கை வசதிகளுடன் 14 அறுவைசிகிச்சை அரங்குகளுடன் இந்த மருத்துவமனை செயல்படுகிறது. மிகவும் நவீன மயமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ மனையில் இதயசிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, நரம்பியல், ரத்தநாள அறுவை சிகிச்சை உட்பட ஒன்பது உயர் சிறப்பு பிரிவுகளோடு இன்னும் பல துறைகள் உள்ளன. முதல் கட்டமாக 83 மருத்துவர் பணியிடங்களும் 232 மருத்துவம் சாரா பணியிடங்களும் 20 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் மற்றும் இதர மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் நோயாளிகளுக்கு உயர் சிறப்பு மருத்துவமனை செயல்படும்.
எப்படியோ இதுவாவது உருப்படியா செயல்பட்டா சரி!

சில்லரை வழங்கும் இயந்திரம்!

   இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி இணைந்து சென்னையில் 30 இடங்களில் தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்களை நிறுவி உள்ளன. சில்லரை தட்டுப்பாட்டை போக்க இந்த இருவங்கிகள் இணைந்து இதை செயல்படுத்தி உள்ளன. இந்த இயந்திரத்தில் பத்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரை சில்லரை மாற்றலாம். 1ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயமாக சில்லரையை பெற்றுக்கொள்ளலாம். இந்த இயந்திரங்களை பஸ் நிலையம், கோவில், ரயில்நிலையங்களிலும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கியின் தலைவர் பாசின் தெரிவித்தார்.

குறட்டைக்கு குட்பை சொல்லும் தலையனை!

  தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இது பலருக்கு எரிச்சலை மட்டுமல்ல தூக்கத்தை கெடுக்கும் செயலாகவும் அமைந்து விடுகிறது. வெளிநாடுகளில் குறட்டை பழக்கத்தால் விவாகரத்து வரை கூட கணவன் மனைவிகள் சென்றுவிடுகின்றனர். சரியான கோணத்தில் படுக்காமல் மூச்சுவிடுவதில் தடை ஏற்பட்டு குறட்டை ஒலி எழும்புவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். குறட்டை விசயத்துக்கு தீர்வு காணும் வகையில்  அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் நவீன தலையணை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சிறிய ரக மைக்ரோபோன்கள் பொருத்தப்பட்ட இந்த தலையனை, சென்சார் கருவிகள் மூலம் குறட்டை ஒலி ஏற்படுவதை உடனே அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தலையனை பயன்படுத்துவதின் மூலம் குறட்டை ஒலி ஏற்பட்ட உடனேயே தலையணையில் உள்ள வைப்ரேட்டர் உறங்குபவரை எழுப்பி விடுகிறது. இதனால் உறங்குவோர் தாங்கள் உறங்கும் நிலையை மாற்றிக்கொள்வதின் மூலம் குறட்டை ஒலி தவிர்க்கபடும். இதை தொடர்ந்து சில நாட்கள் பயன்படுத்தினால் நாளடைவில் தலையணை இல்லாமலேயே குறட்டை பழக்கம் நின்றுவிடுமாம். இந்த தலையணை விலைதான் வியக்க வைக்கிறது அதிகமில்லை பத்தாயிரம் ரூபாய்தானாம்!.

கசந்து போன காதல்! கொலையில் முடிந்தது!

   டெல்லியில் சிலமாதங்களுக்கு முன் ஆட்டோ டிரைவர்- வெளிநாட்டுப்பெண்மணி காதல் பரபரப்பாக பேசப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த எரின் வில்லிங்கர் ஆட்டோ ஓட்டுனர் பண்ட்டி என்பவரை காதலித்தார். கடந்த அக்டோபரி இருவரும் நீதிமன்றத்தில் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் சில நாட்களிலேயே காதல் கசந்து இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். எரின் குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். இதற்கிடையில் பண்ட்டியின் ஆட்டோவில் எரின் சென்றுள்ளார். அப்போது எரினை கத்தியால் குத்தி கொன்ற பண்ட்டி தானும் வீட்டிற்கு சென்று சமையல் காஸை திறந்து வைத்து தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். எரின் வைத்திருந்த டாலர்களுக்காகத்தான் பண்ட்டி காதலித்ததாக கூறப்படுகிறது. எரினுக்கு பண்டியை சந்திக்கும் முன் ஆஸ்திரிய இளைஞன் ஒருவனுடன் இருந்த பழக்கமும் பண்ட்டிக்கு தெரிய வந்துள்ளது. இதுவே சண்டைக்கு காரணமாகி கொலையில் முடிந்துள்ளது. நவீன காதல்கள்!

வாட்ஸ் அப்பை வாங்கிய பேஸ்புக்;

    பிரபல வாட்ஸ் அப் மென்பொருள் நிறுவனத்தை பேஸ்புக் சமூக வலைத்தளம் 11லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியது. அத்துடன் வாட்ஸ் அப்  உரிமையாளர் ஜான் கூமை தன்னுடைய இயக்குனர் குழுவில் ஒருவராகவும் நியமித்துள்ளது. இதனிடையே இந்த மென்பொருள் நிறுவன சர்வர் கோளாறினால் கடந்த மூன்று நாட்களாக சேவை முடங்கியது. உலகம் முழுவதும் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் வாட்ஸ் அப் பிரபலமாக உள்ளது. தங்கள் கையில் உள்ள மொபைல் மூலம் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் குறுஞ்செய்திகள், படங்களை பறிமாறிக்கொள்ள வாட்ஸ் அப் உதவுகிறது. இந்த தொழில் நுட்பத்தால் 1200 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான ஜான் கூம் கடந்த காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர். சோவியத் யூனியன் உடைந்த பின் உக்ரைனில் இருந்து அமெரிக்காவந்த கூம் ஒரு வேளை உணவுக்கும் கஷ்டப்பட்டார். பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகளை உணவுக்காக செய்த அவர் சிலிகான் வேலியில் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பணியில் சேர்ந்து பின் யாஹுவில் பணியாற்றி 2007ல் வெளியேறினார். பின்னர் வாட்ஸ் அப் மென்பொருளை உருவாக்கினார். அது அவரை கோடீஸ்வரராக்கியது. சாதனை மனிதருக்கு வாழ்த்துக்கள்!.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!


துவரம் பருப்பை வேக வைக்கும் போது தேங்காய்த் துண்டு ஒன்றை நெருக்கிப் போடுங்கள். பருப்பு விரைவில் வெந்து குழைவாக இருக்கும்.

அரிசி நிறம் பழுப்பு நிறமாக இருந்தால் வேகும்போது சிறிது மோரை விட்டால் சாதம் தும்பைப்பூ போல வெண்மையாக இருக்கும்.

கேஸ் லைட்டர் மக்கர் செய்கிறதா? சமைத்து இறக்கிய சூடான குக்கர் மீது லைட்டரை சிறிது நேரம் வைத்து உபயோகித்து பாருங்கள். வேலை செய்யும்.

காண்டாக்ட் லென்ஸ் கீழே விழுந்துவிட்டால் முதலில் அந்த அறையை இருட்டாக்கிவிட்டு பிறகு டார்ச் லைட் அடித்துப் பார்த்தால் லென்ஸ் மினுமினுக்கும். உடனே கண்டுபிடித்துவிடலாம்.

பருத்திப்புடவையில் கஞ்சி மொடமொடப்பு போவதற்கு புடவையை துவைத்தவுடன் காய வைத்து சிறிது ஈரம் உள்ளபோதே இஸ்திரி செய்தால் மொடமொடப்பு இருக்காது.

ஏன்?
  உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி அவர் கடவுளிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
  கடவுளே… என் மனைவியை ஏன் இத்தனை அழகாய் படைத்தாய்?
வானிலிருந்து ஒரு பதில் வந்தது, “அப்போதுதானே நீ  அவளை காதலிப்பாய் மகனே?”
திரும்பவும் இவர் கேட்டார் “ அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய்?”
 “ நீ அவளை காதலிக்கத்தான்”
 “பொறுப்போடு வீட்டைப் பார்த்துக்கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய்?”
 “அதுவும் நீ அவளை காதலிக்கத்தான் மகனே”
எல்லாம் சரி அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய்?”
 லேசான சிரிப்போடு பதில் வந்தது. “அடேய்! அப்பதாண்டா அவ உன்னை காதலிப்பா…!”

(படித்ததில் பிடித்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. நவீன காதலைப் படித்து தலையில் அடிச்சுக்கிட்டேன்
    டிப்ஸ்லாம் அருமை. காண்டாக்ட் லென்ஸ் தகவல் புதுசு.

    ReplyDelete
  2. நிறைய செய்திகள் எனக்கு புதிது. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    உங்களுடைய டிப்ஸ் எல்லாம் என் மனைவிக்கு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருக்கிறேன். அவர்களும் உங்களுடைய டிப்ஸ்க்கெல்லாம் நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள்.

    ReplyDelete
  3. தலையணை விலையை நினைத்து நினைத்து தூக்கம் வராது...!

    டிப்ஸ்களுக்கு நன்றி...

    ReplyDelete
  4. கதம்பச் சோறு ருசி அருமை
    குறிப்பாக கடைசி நகைச்சுவை துவையலும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கதம்பச் சோறு அருமை
    நண்பரே

    ReplyDelete
  6. சிறப்பான கதம்ப சோறு....

    அருமை நண்பரே....

    ReplyDelete
  7. நல்ல அருமையான தொகுப்பு!.. கடைசியில் நகைச்சுவை கலக்கல்!..

    ReplyDelete
  8. நல்ல அருமையான தொகுப்பு!.. கடைசியில் நகைச்சுவை கலக்கல்!..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!