ரீசார்ஜ்- பஸ் சார்ஜ்!

ரீசார்ஜ்- பஸ் சார்ஜ்!


கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அந்த அதிகாலை வேளையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஐந்தாவது பிளாட்பாரத்தில் திருச்சி செல்ல பேருந்துகள் நின்றிருக்க திருச்சி.. திருச்சி.. என்று நடத்துனர்கள் கூவிக்கொண்டிருக்க மற்ற ப்ளாட்பார்ம்களில் பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி தூக்கம் தொலைத்த கண்களாய் தங்கள் ஊர் பேருந்தை பிடிக்க  சுமைகளோடு நடந்துகொண்டிருந்தனர்.

    அதிகாலைப்பொழுதில் டீக்கடைகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பொழுதிலும் பஜ்ஜியும், கஜாடாவும், போண்டாக்களும் வடைகளும் அதிவேகமாக விற்றுத் தீர்ந்துகொண்டிருந்தது ரமேஷிற்கு ஆச்சர்யமாக இருந்தது. கடைகளை தாண்டி ஆவின் பாலகத்திற்கு வந்து ஒரு பாதம் பால் என்று ஆர்டர்கொடுத்துவிட்டு கால்சட்டைபையில் பணம் எடுக்க  கைவிட்டான். ஒரு ஐநூறுரூபாய் தாளை கொடுத்து சில்லறை இல்லையா சார் என்று கேட்ட ஆவின் பாலக ஊழியரிடம் இல்லை என்று சொல்லி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்ற அவரிடம் பரவாயில்லை! நான் இந்த பாலை குடிச்சு முடிக்கிறதுக்குள்ள கொடுத்திருங்க என்றான்.

     பாலை ரசித்து குடித்து முடித்து ஊழியர் கொடுத்த சில்லறையை வாங்கி மேல்சட்டை பையில் வைக்கவும் அந்த இளைஞன் அண்ணா என்று கூப்பிட இங்க யாரு நமக்கு திடீர் தம்பி? என்று யோசித்தவாறு நிமிர்ந்தான்.

     ஒடிசலான தேகத்தில் முகமெல்லாம் மழித்து உதட்டின் கீழ் குறுந்தாடி வைத்து ஒரு இளைஞன் நின்றிருந்தான். பேண்ட் இடுப்பை விட்டு இறங்கி அவனது உள்ளாடையை காட்டிக் கொண்டிருந்தது. சட்டை உடலை இறுக்க பிடித்து இருந்தது, அதை அவன் லட்சியம் செய்யாமல், “ அண்ணா! நான் ஆந்திராவுல விஜயவாடா போகணும்! சிதம்பரத்துல இருந்து பஸ்ல வரேன்! தூக்கத்துல யாரோ என் பர்ஸை அடிச்சிட்டாங்க! வேற பணம் எதுவும் இல்லை!  ஒரு முன்னுறு ரூபா கொடுத்துஹெல்ப் பண்ணுங்க! உங்க அட்ரஸ் இல்லன்னா பேங்க் அக்கவுண்ட் நம்பர் கொடுத்தா அங்க போய் பணத்தை அனுப்பிடறேன் ப்ளீஸ் ஹெல்ப்! பண்ணுங்கன்னா! என்றான்.

        ஸாரிப்பா! முன்னுறு ரூபா உனக்கு சின்னதா தெரியலாம்! ஆனா எனக்கு அது பெரிசு! என்னால முடியாது… வேற ஆளைப்பாரு…!

     அண்ணா! என்னை நம்புங்கன்னா… ப்ளீஸ்னா! யாரும் உதவ மாட்டேங்கிறாங்க மூணு மணியில இருந்து மூணு மணி நேரமா இந்த பஸ் ஸ்டாண்ட் பூரா சுத்தி வரேன்னா… ப்ளீஸ்னா…!

     இல்லேப்பா…! என்னை விடு…!

  அவன் விடுவதாயில்லை… பின்னாலேயே துரத்தி வந்தான். அண்ணா அண்ணா ப்ளீஸ்னா ஹெல்ப் பண்ணுங்கன்னா! ஏமாத்த மாட்டேன்னா! ஒரு தம்பியா நினைச்சுக்கங்கன்னா…!

        தம்பி! உன் வீட்டுல யாருகிட்டேயாவது போன் இருக்கா?

      இருக்குன்னா… ஆனா  என் பேக் முழுசும் தொலைஞ்சு போச்சு! என் போனும் அதுல போயிருச்சு!

    பரவாயில்லை! உன் வீட்டுல யார் நம்பர் உனக்கு நினைவில் இருக்கு…?
      அப்பா நம்பர் மனப்பாடம்னா…!

    அப்படின்னா  சொல்லு  நான் டயல் பண்றேன் நீ பேசு… என்னோட நம்பர் தரேன் அதுக்கு அவங்களை முன்னூறு ரூபாவுக்கு ரீசார்ஜ் பண்ண சொல்லு! பணம் என் அக்கவுண்ட்ல வந்ததும் நான் உனக்கு முன்னூறு ரூபா தரேன் சரியா? போனை எடுத்தேன்.

    பையன் கண்களில் மிரட்சி! அண்ணா அப்படியெல்லாம் வேண்டாம்னா! இல்லேன்னா விட்டுருங்க அவன் விலகி நடக்க ஆரம்பிக்க

     தம்பி! தம்பி! நான் குரல் கொடுக்க அவன் ஓடிக் கொண்டே
  நீங்க ரொம்ப இண்டலிஜெண்ட்டுன்னா!  என்றான்/

டிஸ்கி} இன்று காலை முகநூலில் விக்கியுலகம் வெங்கட் பதிந்த  ஒரு தகவலைக் கொண்டு பிணையப்பட்ட கதை இது!
நன்றி: விக்கியுலகம் வெங்கட்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  

Comments

  1. அம்மாடியோவ்வ்வ்.. ரமேஷ் போல விவரமா இருக்கோணும்!
    நாம அங்கை வந்தா அவ்ளோதான்...
    நினைச்சுக்கிட்டேன்!

    கதையின் கருவும் நடையும் அருமை! வாழ்த்துக்கள் சகோ!
    தொடருங்கள்!..

    ReplyDelete
  2. அருமை சுரேஷ்! சொல்லி வரும் போதே தெரிந்துவிட்டது அந்தப் பையன் ஏமாற்றுகின்றான் என்று ஆனால் அதனை ரமேஷ் சமாளித்த விதம் அருமை..ஹஹ நல்ல சூப்பர் ஐடியா...

    ReplyDelete
  3. எத்தனை எத்தனை திறன்கள் உங்களிடம்..!

    கதையின் முடிவு பற்றி அனுமானித்தாலும் நீங்கள் எடுத்துச் சென்றவிதம் அருமை!

    ReplyDelete
  4. ஆகா ,ஏமாறாமல் இருக்க இந்த ஐடியாவை கையாளலாம் போலிருக்கே :)

    ReplyDelete
  5. யோசனை நன்று நண்பரே...

    ReplyDelete
  6. ஏமாற்றுகிறவர்களைச் சமாளிக்க இப்படியும் ஒரு வழிஇருக்கிறதா
    அருமை நண்பரே

    ReplyDelete
  7. கடந்த ஒரு பதிவில் சொன்னதைப் போல தாங்கள் ஒரு பல்துறை வித்தகர் என்பதை நிரூபித்துக்கொண்டு வருகின்றீர்கள். நன்றி.

    ReplyDelete
  8. யாரோ ஒரு சிலர் ஏமாற்றுவேலை செய்ய, உண்மையிலுமே பணத்தைத் தொலைத்தவர்கள் பாடு திண்டாட்டம்தான். ஒருமுறை, சமயபுரத்தில் எங்கள் நண்பர்கள் நடத்திய அன்னதானத்தின்போது, ஒரு இளைஞர், இவ்வாறே வந்து பணம் கேட்டார். நம்புவதா வேண்டாமா என்று யோசித்து விட்டு, அவருக்கு நூறு ரூபாய் கொடுத்தேன். அவரது கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர். அவர் சொன்ன உண்மைக்கு ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

    ReplyDelete
  9. இவன் ஏமாற்றுவழி வேறு.. இன்னுஞ்சிலர் பாக்கெட்டில் வைத்த பணத்தை நாமறியாமல் பறித்துவிடுகிறார்களே... அது ஒருவகையான ஏமாற்றுவழி.. நாம்தான் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புனைகதை என்றாலும் நல்லதொரு பாடம் சொல்லிப்போகிறது.

    ReplyDelete
  10. ஹஹஹா சூப்பர் பதில்..

    ReplyDelete
  11. ஹஹஹா சூப்பர் பதில்..

    ReplyDelete
  12. நல்ல ஐடியாவா இருக்கே.... :)

    ReplyDelete
  13. நல்ல யோசனை தான்! அந்தப் பையர் ஏமாற்றுக்காரர் தான் என்பதையும் கண்டு பிடிக்க முடிந்ததே! :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!