யானைக்கு வந்த நாட்டிய ஆசை! பாப்பாமலர்!

யானைக்கு வந்த நாட்டிய ஆசை! பாப்பாமலர்!

   


முல்லை வனக் காட்டில் விலங்குகள் கூடி இருந்தன. வரப் போகும் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது என்பதுதான் கூட்டத்தின் நோக்கம். நரியார் தான் முதலில் பேச ஆரம்பித்தார்.
   “ மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை விதவிதமாக கொண்டாடுகிறார்கள். இசை நடனம், விருந்து என்று கேளிக்கைகளில் ஈடுபட்டு சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள் நமது காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட வேண்டும்”என்றது.
   அப்போது குறுக்கிட்ட கரடி, “மனிதர்களின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நமக்குத் தேவையா? அவர்களுக்கு மற்றவர்களின் கஷ்டத்தை பற்றிய கவலையே கிடையாது. நடு இரவில் வீதியில் பட்டாசு வெடித்து  சத்தமான பாடல்களை பாடவிட்டு குடித்து கும்மாளமிட்டு  அயலாரை துன்பபடுத்துகின்றனர்! இதெல்லாம் காட்டுக்கு தேவையில்லை!” என்றது.
     அப்போது மான் ஒன்று பதில் பேசியது, கொண்டாட்டம் என்றால் ஆட்டம் பாட்டம் இருக்கத்தான் செய்யும்! அது இல்லாமல் விழா இல்லை! அது மற்றவர்களை பாதிக்காத வண்ணம் இருந்தால் நல்லது. யாரோ சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த மனிதர்களையும் குறை சொல்லக் கூடாது! என்றது.
    இதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சிங்கராஜா! “ சரி இதுவரை நாம் புத்தாண்டு கொண்டாடியது இல்லை! இந்த வருடம் கொண்டாடுவோம்! ஆனால் அது மற்றவர்களுக்கு சங்கடம் இல்லாத வகையில் கொண்டாடுவோம்!” என்றது.
   எல்லா விலங்குகளும் மகிழ்ச்சி ஆரவாரம் இட்டன.  புத்தாண்டு அன்று விருந்து தயாரிக்கும் பொறுப்பை புலிக்கூட்டம் ஏற்று கொள்கிறது. விலங்குகளுக்கு தேவையான அனைத்து உணவுகளும் நாங்கள் தயாரிக்கிறோம் என்றது புலி.
   அதைக்கேட்டு பலத்த கரகோஷம் எழுந்தது. அடுத்து குயிலும் மயிலும் எழுந்து இசை நாட்டியம் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றது.
    விளையாட்டு போட்டிகளுக்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றன முயல்களும் மான்களும்
   விழா நடத்த தேவையான இடத்தை தயார் செய்யும் பொறுப்பை நாங்கள் செய்கிறோம் என்றன யானைகளும் கரடிகளும்.
   விழாவில் அனைவருக்கும் இனிப்பான பாணம் வழங்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றது குரங்குகள்.
   இப்படி அனைவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக்கொள்ள விழா ஏற்பாடுகள் தொடங்கின. ஒத்திகைகள் நடந்தன. புத்தாண்டு அன்று காட்டின் மையத்தில் விழாவுக்கான மேடை அமைக்கப்பட்டது. அதில்  முதல் நிகழ்ச்சியாக குயில் பாட மயில் நடனம் ஆடியது. குரங்குகள் நகைச்சுவை செய்து காட்டின. விளையாட்டு போட்டிகளை மானும் முயலும் நடத்த அனைத்து விலங்குகளும் கலந்து கொண்டன. குரங்கார் இளநீர்களை பறித்து வந்து அனைவருக்கும் வழங்கினார்.புலியாரின் தயாரிப்பில் அறுசுவை உணவுகளை அனைவரும் சாப்பிட்டு முடித்து விழாவை நிறைவு செய்து கிளம்பினர்.
    விழாவில் மயிலின் நாட்டியம் மிகவும் பிரமாதமாக பேசப்பட்டது. அதைக் கேட்ட ஓர் குட்டி யானைக்கு தாமும் அப்படி நாட்டியம் ஆட வேண்டும் என்று ஆசை வந்தது. அது தன் தாயிடம் போய், அம்மா அம்மா! நானும் மயில் போல நடனம் ஆட ஆசைப்படுகிறேன்! என்று கேட்டது.
   தாய் யானையோ, குழந்தாய்! மயில் இயல்பிலேயே நடனம் ஆடக்கூடியது. நாம் உடல் பெருத்தவர்கள் நம்மால் அதைப்போல் ஆட முடியாது உன் ஆசையை விட்டு விடு என்றது.
    “ அப்படியானால் மனிதர்கள் எப்படி நடனம் ஆடுகிறார்கள்?” குட்டி யானை கேட்கவே, “அது எப்படி உனக்குத் தெரியும்?”என்று கேட்டது தாய் யானை.
    காட்டில் தான் மனிதர்கள் அடிக்கடி வருகிறார்களே! ஒருநாள் காட்டிற்குள் வந்தவர்கள் கையில் ஏதோ பொருளை வைத்துக்கொண்டு எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்கள்.நான் தூர இருந்து கவனித்தேன். அதில் ஒரு பெண் நடனம் ஆடிக்கொண்டிருந்தாள்.”
     “இதற்குத்தான் மனிதர்கள் பக்கம் நெருங்காதே என்று சொல்வது? பார்த்தாயா இப்போது உனக்கு விபரீத ஆசை வந்துவிட்டது?”
   ”நான் ஆடமுடியாதா அம்மா?”
   “மனிதர்கள் பயிற்சி எடுத்து ஆடுகிறார்கள்! உன்னால் அதுபோல பயிற்சி எடுக்க முடியுமா? யார் கற்றுக்கொடுப்பார்கள்?”


  “ மயிலிடம் போய் கற்றுக் கொள்கிறேன்!”
“மயிலாட்டம் உனக்கு வராது! எதற்கும் முயன்று பார்ப்போம்!”
   இரண்டும் மயிலிடம் சென்று தங்கள்  விருப்பத்தைக்கூறின.
   மயில், எனக்கு ஆடத்தான் தெரியும் கற்றுக்கொடுக்கத் தெரியாது. பட்டணத்தில் இந்த நடனம் கற்றுக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள் அங்கு சென்று பாருங்கள் என்றது.
       இரண்டும் காட்டை விட்டு நகரத்துக்குள் வந்தன. நிறைய அலைந்து ஓர் நடனப் பள்ளியை அடைந்தன. தங்கள் விருப்பத்தை கூறின. அந்த நடனப்பள்ளியின் ஆசிரியை சொன்னார்.
   உன் விருப்பத்தை தடை செய்ய வில்லை! நாளையே உனக்கு கற்றுக் கொடுக்கிறேன். ஆனால் அதற்கான உடையை அணிந்து வா! என்றார்.
    உடை எங்கே கிடைக்கும்?துணிக்கடைக்கு போய் வாங்கி வாருங்கள் என்றார்.
   இரண்டும் அங்கிருந்து அருகில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றன. தாய் யானை குட்டி யானையுடன் வருவதை கண்டு கடைக்காரர் மிரண்டு போனார். நில்லுங்கள் நில்லுங்கள்! உள்ளே வந்து பொருட்களை உடைத்து விடப்போகின்றீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?
    பரதநாட்டிய உடை வேண்டும்!
 உன்னுடைய சைஸுக்கு உடை தயாராக இல்லை! வேண்டுமானால் துணி தருகிறேன்!  தைத்து கொள்ளுங்கள். ஆனால் பணம் யார் தருவார்கள்?
   பணமா? அப்படி என்றால்…
துணியை சும்மா தர முடியுமா? அதற்கு விலை இருக்கிறது! அந்த விலையைத் தான் கேட்கிறேன்!
  சரி அது எங்கே கிடைக்கும்? உழைத்தால் கிடைக்கும்!
உழைப்பதா? அப்படி என்றால்…
   ஏதாவது வேலை செய்தால் பணம் கிடைக்கும்!
சரி நீங்களே ஏதாவது வேலை கொடுங்களேன்!”
 “ சரி இந்த் துணி மூட்டைகளை சுமந்து கடைக்குள் வையுங்கள்!”

 மூட்டைகளை இரண்டும் சுமந்தன.
  “பார்த்து பார்த்து கண்ணாடிகளை உடைத்துவிடப் போகிறீர்கள்!”
மாலை முழுதும் வேலை செய்துவிட்டு இப்போது துணியை தருகிறீர்களா? என்றன யானைகள்.
     இந்தாருங்கள் துணி! இதை தையல் காரனிடம் கொடுத்து தைத்துக் கொள்ளுங்கள்! இரண்டும் தையல் காரனை தேடிச்சென்றன.
     ஒரு தையல்காரனை கண்டு துணியை கொடுத்து தைக்கச் சொல்லின. என் வாழ்நாளில் இதுவரை யானைக்கு துணி தைத்தது இல்லை! இதை தைக்க நிறைய கூலி தேவை! அது உங்களிடம் இருக்கிறதா?
     இரண்டும் முழித்தன. கூலியா அப்படின்னா?
இந்த துணியை சும்மாவா தைச்சு கொடுப்பேன்? அதுக்கு பணம் வேணும்? அது உங்க கிட்ட இருக்கா?  இல்லேன்னா கிளம்புங்க!

    அப்போது அங்கு வந்தான் சர்க்கஸ் கம்பெனி முதளாளி ஒருவன். அவன் தன்னுடைய கூடாரத்துணியை தைக்க வந்தான். அவன் மனதில் ஒரு திட்டம் உருவானது. என்னுடன் வருகிறீர்களா என்று நைச்சியமாக அழைத்தான்.
      இல்லை! இல்லை! நாங்கள் நாட்டியம் கற்க வேண்டும்?
   அதற்குத்தான் கூப்பிடுகிறேன்! நான் நன்றாக நாட்டியம் கற்றுத்தருகிறேன்!
    அதற்கு  உடை தைக்க வேண்டுமே?
   அதெல்லாம் இல்லாமலே நான் கற்றுத் தருகிறேன்!
     அப்படியானால் சரி வருகிறோம்!
  இரண்டையும் கூண்டு வண்டியில் ஏற்றினான் சர்க்கஸ் கூடாரத்திற்கு அழைத்து வந்தான். தினமும் அதற்கு பயிற்சிகளை வழங்கினான். சரியாக ஆடவில்லை என்றால் சவுக்கால் அடித்தான். பெரிய யானைக்கும் பயிற்சிகள் வழங்கினான். இரண்டையும் சங்கிலியால் கட்டிவைத்தான்.

இப்போது குட்டியானை தாயிடம் கேட்டது, அம்மா நாட்டியம் கற்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா? வேண்டாம் அம்மா நாம் காட்டிற்கே போய்விடலாம்!
  சரி வா முதலாளியிடம் கேட்போம்!
    அய்யா! நாங்கள் எப்போது கானகம் போவது?
   என்னது கானகத்திற்கா? இவ்வளவும் எதற்கு சொல்லிக் கொடுத்தேன்! நான் சம்பாதிக்க வேண்டாமா?
 இன்றுமுதல் ஷோ ஆரம்பம்! நான் சொல்லி கொடுத்ததை எல்லாம் அரங்கத்தில் நீ செய்து காட்ட வேண்டும். ஷோ நிறைய வேண்டும்.
      என்னது? நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு கற்றது நீ சம்பாதிக்கவா? இல்லை முடியாது…!
     உங்களை யார் விடப்போகிறார்கள்! முடியாது என்பதே கிடையாது! நீங்கள் ஆடித்தான் வேண்டும்.
    அம்மா நாம் தப்பிக்கவே வழி கிடையாதா?
   உண்டு! நான் சொல்வதைக் கேள்! இதுவரை நாட்டியம் கற்கவேண்டும் என்ற ஆசையால் இவன் சொல்வதை கேட்டு அடிமை போல இருந்தோம்! உன் நாட்டிய ஆசையை விட்டுவிடு நம் உடல் பளுவின் மேல் நம்பிக்கை வை! இந்த சங்கிலியை அறுத்தெறிந்து இவனை தூர வீசி நாம் தப்பித்துவிடலாம்.
    உண்மைதான் அம்மா! இயல்புக்கு மாறாக இருந்து துன்பப்பட்டது போதும்! இப்போதே கிளம்புவோம்!
   யானைகள் இரண்டும் ஆக்ரோசம் கொண்டன! சங்கிலிகளை அறுத்தெறிந்து ஓடத்தொடங்கின. தடுக்க முனைந்த பயிற்றுனரை தூக்கி வீசின. அவன் பயந்து ஓடினான்.
    உடல் சோர்ந்து காட்டுக்குள் நுழைந்த யானைகளிடம் மயில் கேட்டது! யானையாரே நடனம் கற்றுக் கொண்டீர்களா?
    நடனம் மட்டும் அல்ல! நல்ல பாடமும் கற்றுக்கொண்டேன்! என்று சொன்னன யானைகள்.

(மீள்பதிவு)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. மிகவும் ரசித்தேன்...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. படித்த நினைவு இருந்தது! இருந்தாலும் எத்தனை முறை வாசித்தாலும் ரசித்து வாசிக்க முடிகிறது அதுவும் குழந்தைகளைப் போல்!!

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. யானைகள் தப்பி ஓடியது குறித்து மகிழ்ச்சி! நல்ல படிப்பினை உள்ள கதை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!