சோகங்கள் போக்கும் சோமவார வழிபாடு!

சோகங்கள் போக்கும் சோமவார வழிபாடு!




கார்த்திகை மாத பவுர்ணமி நாளில்தான் சிவபெருமான் ஜோதி வடிவமாக தோன்றினார். இதுவே கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. சோமம் என்றால் சந்திரன் சோமவாரம் திங்கள் கிழமை. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமைகள் சோமவாரமாக கொண்டாடப்படுகின்றது. தேய்ந்து போகும் படி சபிக்கப்பட்ட சந்திரன் சோமவார விரதம் இருந்து சாபவிமோசனம் பெற்று சிவபெருமானின் ஜடாமுடியில் சூடிக்கொள்ளப்பட்டான். அத்தனை சிறப்பு பெற்றது சோமவார விரதம்.

சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், 

நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச்சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.

கார்த்திகை மாதத்தில் சிவன் அக்னிப்பிழம்பாக இருப்பதால் அவரை குளிர்விக்க சங்காபிஷேகம் செய்விக்கப்படுகின்றது. கார்த்திகை சோமவார விரதம் கடைபிடிப்பவர்களிடம் நான் பிரியமாக இருப்பேன் என்று சிவபெருமான் சொன்னதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதத்தில் ஒவ்வொருவர் இல்லத்தில் உள்ள நீரிலும் ஸ்ரீமன் நாராயணன் இருப்பதாக ஐதீகம். இம்மாதத்தில் செய்யப்படும் பூஜைக்கு பலன் அதிகம். இம்மாதத்தில் மஹாவிஷ்ணுவை கஸ்தூரியால் அபிஷேகம் செய்து தாமரை மலர்களால் அர்சித்து வழிபட நம் இல்லங்களில் மஹாலஷ்மி குடிபுகுவாள். வில்வ இலையினால் விஷ்ணுவையும் சிவனையும் அர்ச்சித்து வழிபட்டால் மறுபிறவி இல்லை என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

மனிதனுடைய உடலில் ஆறு மாதங்கள் சேரும் கழிவுகளை நீக்கி சுத்தமடையச் செய்ய கார்த்திகை மாதத்திலிருந்து தை மாதம்வரை மூன்று மாதங்கள் புனித நீராடலும் விரதங்களும் தொடங்குகின்றன.

மாதங்களில் மார்கழியாக இருப்பவர் நாராயணன். கார்த்திகையாக இருப்பவர் சிவபெருமான். சோமவார தினத்தில் காலையில் வீட்டில் தீபம் ஏற்றிச் சிவனைக் குறித்து விரதம் இருந்து ஒரு வேளை சிறிதளவே  ஆகாரம் எடுத்து, இரவில் உறங்கி மறுநாள் நீராடி விரதத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். இப்படியாக விரதம் செய்பவர்கள் சிவனின் அருள் பெற்று உய்வர் 

கார்த்திகை மாதத்தில் விடியற்காலையிலும் அந்திப்பொழுதிலும் வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி வழிபட துன்பங்கள் அகலும்.

கார்த்திகை சோமவார வழிபாடு பல்லாண்டுகளாக சிவாலயங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது.  சோமவார அபிஷேகம் நடக்கும் சிவாலயங்களுக்குச் சென்று தீபம் ஏற்றி அபிஷேகப் பொருட்கள் புஷ்பம் முதலியனவற்றை சிவனுக்கு சமர்பித்து பூஜையில் கலந்து கொள்வது சிறப்பாகும்.

கிராமங்களில் கவனிப்பார் அற்று இருக்கும் சிவாலயங்கள் ஏராளம். அந்த ஆலயங்களில் சோமவார பூஜைக்கு ஏற்பாடு செய்து பூஜை செய்து வழிபட சிவனருள் கிடைக்கும்.

  தேய்ந்து போன சந்திரனை தனது சடையில் சூடி சந்திர சேகரர் ஆனார் சிவபெருமான். அவருக்கு பிரியமான சோமவார விரதம் இருந்து நம் வாழ்வின் தேய்பிறையில் இருந்து வளர்பிறையாக வளர அவரின் அருள் பெறுவோமாக!

(படித்து தொகுத்தது)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. அறிந்து கொள்ள வேண்டிய பல விளக்கங்கள்... நன்றி...

    ReplyDelete
  3. அருமையான விளக்கம் கார்த்திகை விரதம்
    பற்றி. நான் சிறுவயதிலிருந்தே
    இந்த விரதம் இருந்து வருகிறேன்.

    ReplyDelete
  4. தேவையான தகவல்...நன்றி..

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள் நன்றி சுரேஷ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!