மணியை மாற்றிய மகாத்மா! பாப்பாமலர்


“அன்பார்ந்த மாணவர்களே நமது பள்ளியில் சுதந்திர தின விழாவையோட்டி ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்த உள்ளோம் திறமை உள்ள ஓவியம் வரையத்தெரிந்த மாணவர்களும் தத்தமது ஓவியங்களையும் கண்காட்சியில் வைக்கலாம். சிறந்த ஓவியத்துக்கு பரிசு உண்டு.” பள்ளி ப்ரேயரில் அறிவித்தார் தலைமை ஆசிரியர்.

   ஓவியத்திறமை உள்ள மாணவர்கள் கண்காட்சியில் வைப்பதற்காக,  தத்தமது கைத்திறமையை காட்டி படம் வரைய ஆரம்பித்தார்கள். அதில் மணியும் ஒருவன். அவன் சுமாராக படம் வரைவான். கண்காட்சிக்காக சில படங்களை வரைந்தான்.ஆனால் ஒன்றுமே அவனுக்குத் திருப்தி அளிக்க வில்லை. கண்காட்சியில் எப்படியும் பரிசினை பெற்றுவிட வேண்டும் என்று ஒரு வெறி அவனுள் பிறந்தது.
மீண்டும் படங்களை வரைய ஆரம்பித்தான் ஆனால் எதுவுமே அவனுக்கு பிடிக்க வில்லை.

     அவனுக்கு அப்போதுதான் அவனது அடுத்த தெருவில் வசிக்கும் விநாயகம் அண்ணனின் நியாபகம் வரைந்தது. மிகவும் நன்றாக படம் வரைவார். பள்ளி செய்முறை பயிற்சி ஏடுகளில் படம் வரைய மாணவர்கள் அவரை அணுகுவது உண்டு. அப்போதுதான் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.இப்படி படம் வரைந்து கொடுப்பது அவரது படிப்புக்கு பயிற்சியாகவும் இருந்தது. மணி அவரிடம் சென்றான்.

    “அண்ணா! எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணுமே!” என்று பீடிகை போட்டான்.

   “என்னப்பா! ரெக்கார்ட் நோட்டுல ஏதாவது படம் வரையணுமா?”

    "இல்லேன்னே! எங்க ஸ்கூல்ல சுதந்திர தின ஓவியக் கண்காட்சி வைச்சிருக்காங்க! அதுக்கு படம் வரையணும். நல்லா இருக்கற படத்துக்கு பர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும்னே! நீங்க வரைஞ்சு கொடுத்தா எனக்குத்தான் பர்ஸ்ட் ப்ரைஸ்! ப்ளீஸ்ணே! முடியாதுன்னு சொல்லாதீங்க!" கெஞ்சினான் மணி.

   “ இது தப்பாச்சே மணி! ரெக்கார்ட் நோட்டுல வரைஞ்சி கொடுக்கிறதே தப்பு! சின்ன பசங்க பாவம்னு ஏதோ ஒண்ணு ரெண்டு வரைஞ்சி கொடுக்கிறேன். இப்ப நான் வரைஞ்ச படத்தை நீ கொண்டு போய் பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கினா சுயமா வரைஞ்சவனுக்கு என்ன மதிப்பு இருக்கு!”

     “ அண்ணே! நான் சுயமா வரைய முயற்சி செய்யறேன்! ஆனா அழகா வர மாட்டேங்குது!”

   “அதனால என்ன? நிறைய வரைஞ்சு பழகு! இந்தவருஷம் இல்லாட்டி அடுத்த வருஷம் பரிசு வாங்கிட்டாப் போச்சு!”

   மணி முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு திரும்பினான். 

அவனுக்கு இந்த முறை எப்படியும் பரிசு வாங்கிட வேண்டும் என்ற வெறி.  அன்று மாலை மீண்டும் விநாயகத்தின் வீட்டுக்கு சென்றான். “ அண்ணே! அண்ணே!” என்று கூப்பிட்டான். “என்னப்பா மணி! அதான் படம் வரைய முடியாதுன்னு சொல்லிட்டேனே! ஏன் தொந்தரவு பண்றே?”
     “ இல்லேன்னே நீங்க வரைஞ்சி வச்சிருக்கிற படம் ஏதாவது இருந்தா பார்த்து அதே மாதிரி வரையலாம்னு நினைக்கிறேன்னே! உங்க படங்கள் ஏதாவது இருந்தா கொடுங்கண்ணே! அதை பார்த்து இங்கேயே வரைஞ்சு பழகறேன்!”

    விநாயகமும் அவர் வரைந்துவைத்திருந்த சில படங்களை எடுத்துக் கொடுத்தார். அதை வைத்துக்கொண்டு தாளில் பெயருக்கு எதையோ வரைந்து கொண்டு இருந்தான் மணி. ஓர் அரை மணிநேரத்தில் விநாயகம் ஏதோ வேலையாக வெளியே செல்ல, அவர் வைத்திருந்த படங்களில் ஒன்றை எடுத்து தன்னுடைய நோட்டில் வைத்துக் கொண்டான். பின்னர் மற்ற படங்களை வழக்கம் போல எடுத்த இடத்தில் வைத்து விட்டான்.

  விநாயகம் வரைந்த அப்படம் பாரதமாதா கையில் கொடியேந்தி நிற்க இந்து முஸ்லீம் கிறிஸ்துவர் இன பேதமின்றி கைகோர்த்து நிற்பதாக அழகாக இருந்தது   இனி எனக்கே பரிசு என்று பெருமிதப் பட்டான். ஆனால் அவனது மனசாட்சி அவனை இடித்துரைத்தது. மணி பரிசுக்காக மற்றவர் படைப்பை உன் படைப்பென்று கூறலாமா? அதையெல்லாம் பார்த்தால் பரிசு கிடைக்காது! என்று சமாதானப் படுத்திக் கொண்டான் மணி.

   கண்காட்சியிலும் அப்படத்தை வைத்துவிட்டான். எல்லோரும் அவனைப் பாராட்டி உன் படத்திற்குத்தான் பரிசு என்று கூறியபோது அவனுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது..

  கொடியேற்றி முடித்ததும் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் ஒருவர் பேசினார்.  “அன்பார்ந்த குழந்தைகளே! நான் உங்களுக்கு தேசப்பிதாவின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை கூறுகிறேன். சிறுவயதில் அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது பள்ளிக்கு ஆய்வாளர் வந்தார். அவர் காந்தியைகெட்டில்என்ற ஆங்கில வார்த்தையை எழுதும்படி கூறினார். காந்திக்கு அதற்குஸ்பெல்லிங்க்தெரியவில்லை. ஆசிரியர் பக்கத்து மாணவனைப் பார்த்து எழுதும் படி சைகை செய்தார். ஆனால் காந்தி மறுத்துவிட்டார்.

   மற்றவனை பார்த்து காந்தி எழுதி இருக்கலாம் ஆனால் மறுத்தார் ஏன்? தமக்குச் சொந்தமில்லாததை தம்முடையது என்று சொல்ல அவரது மனசாட்சி மறுத்தது. அதனாலே அவர் உலக உத்தமராக உயர்ந்தார். இவ்வாறு அவர் சொல்லிக்கொண்டே போக மணியின் மனம் கூசியது.

  காந்தி பக்கத்துப் பையனை பார்த்து எழுதவே கூசினார். ஆனால் நானோ மற்றவரின் பொருளை எனது என்று சொந்தம் கொண்டாடுகிறேனே! நானும் ஒரு மனிதனா? அவன் தலைகுனிந்தான்.

   “ஓவியக் கண்காட்சியில் முதல் பரிசு மணி!” என்று அறிவிப்பு முழங்க,   “மணி, சார் அந்த படத்த நான் வரையலை! எனக்கு பரிசு வேண்டாம் என்றான். “ என்னப்பா சொல்றே? ”ஆசிரியர் கேட்க நடந்த அனைத்தையும் கூறினான் மணி.

     “என்னை மன்னிச்சிடுங்க சார்! பரிசுக்கு நான் தகுதியானவன் இல்லை. இனி  இதமாதிரி செய்யமாட்டேன் !”என்றான் கண்ணீருடன்!

   “ மணி நீ கண்டிப்பா பரிசுக்குத் தகுதியானவன் தான்! இத்தனை பேர் முன்னால நீ உண்மையை ஒத்துகிட்டு உயர்ந்தவன்னு நிரூபிச்சு இருக்கே! படம் வரைந்தவருக்கு கட்டாயம் பரிசு உண்டு அது போல உண்மையை ஒத்துக்க ஒரு தைரியம் வேண்டும் . அந்த தைரியம் உன்கிட்ட இருக்கு! திருந்திய உனக்கும் பரிசு உண்டு!” என்றார் தலைமை ஆசிரியர்.

 மணி கண்ணீருடன் அவர் காலில் விழுந்தான். அங்கே போட்டோவில் மகாத்மா புன்னகை சிந்தியபடி அவனை ஆசிர்வதித்தார்.

  வாய்மையே வெல்லும்!


டிஸ்கி}  இது நான் கல்லூரி படிக்கையில் எழுதிய கதை! வலைப்பூ துவங்கிய புதிதில் பதிவிட்டேன். அப்போது என்னை பாராட்டியும் சில திருத்தங்கள் சொல்லியும் தமிழறிஞர் புலவர்  இ.பு. ஞானபிரகாசம் அவர்கள் கருத்துரை இட்டார். அந்த பதிவை கொஞ்சம் திருத்தி சீரமைத்து இன்று சுதந்திர தின சிறப்பு பதிவாக வெளியிடுகின்றேன். சில ஆங்கிலச்சொற்களை பேச்சுவழக்கில்  உபயோகிப்பதால் அப்படியே தந்துள்ளேன் தமிழ்படுத்தவில்லை!  

பழைய பதிவிற்கு லிங்க்: மணியை மாற்றிய மகாத்மா

இதற்கு  இ.பு ஞானப்பிரகாசம் அவர்கள் வழங்கிய கருத்துரை என்னால் மறக்கமுடியாத ஒன்று. இதோ அது.

சிறுவர்களுக்கான படைப்புலகம் இருக்க இருக்கச் சுருங்கி வரும் இந்நாளில், இணையம் வழியே சிறுவர்களுக்கு இலக்கியத்தை வழங்கும் உங்கள் முயற்சிக்கு முதலில் என்னுடைய உளமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்!

கதை நன்றாகவே இருக்கிறது. ஆனால் ஓவியர் ஒருவர் வரைந்த படத்திற்கும் சிறுவன் வரைந்த படத்திற்கும் கூட வேறுபாடு தெரியாதவர்களாகவா இருக்கிறார்கள் நம் ஆசிரியப் பெருமக்கள்?...

மேலும், கதையில் கதை மாந்தர்கள் பேசும் இடங்களில் பேச்சுத் தமிழையே பயன்படுத்தினால், படிப்போருக்கு அந்நியத் தன்மை ஏற்படாமல் இருக்கும். இதைக் குறையாகச் சொல்லவில்லை என்னுடைய ஒரு சிறு ஆலோசனையாகத்தான் முன்வைக்கிறேன்.

அடுத்து, கதையின் தொடக்கத்தில் 'பிரேயர்' என்று ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளீர்கள். கடவுள் வாழ்த்து என்றே குறிப்பிட்டிருக்கலாமே! கதை மாந்தர்கள் பேசும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் தூய தமிழையே பயன்படுத்துவது நல்லது என்பது என்னுடைய ஆலோசனையாக இல்லாமல் ஒரு வேண்டுகோளாகவே கேட்டுக் கொள்கிறேன்!

தொடரட்டும் உங்கள் சிறுவர் இலக்கியச் சேவை!

நன்றி! வணக்கம்!

முடிந்தவரை அவரது ஆலோசனைகளை திருத்தங்களை ஏற்று செயல்படுத்தி உள்ளேன். ஆங்கிலச்சொல் கலப்பு மட்டும் நீக்கவில்லை! கதையை அந்நியப்படுத்தும் தன்மை என்று அவர் சொல்லியிருப்பதே அதற்கு காரணம்.

வந்து வாசித்து கருத்திட்டு ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்!


Comments

  1. வணக்கம் நண்பரே நல்லதொரு படிப்பினையை தந்தது தங்களது பதிவு இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சுயம் என்பது அடுத்தவர் வயம் ஆகும்பொழுது
    பயம் என்பது பாடாய் படுத்தும்.
    நல்ல நெறியை தந்த மகாத்மாவின மாண்பினை உணர்த்திய கதை அருமை!
    வாழ்த்துகள் நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. "குழலின்னிசையின்"

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு




    ReplyDelete
  4. வணக்கம் தளீர்,
    தெரிந்த கதையுடன் தங்கள் கதைநடத்திய விதம் அருமை,
    வாழ்த்துக்கள்,
    இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அனைவருக்கும் பாடமான ஒரு நிகழ்வாக கதையை அமைத்துத் தந்துள்ளீர்கள். நன்றி. அம்மாணவன் பரிசுக்கு உகந்தவனே. சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    கதை நகர்ந்து சென்ற விதம் சிறப்பு... படித்து மகிழ்ந்தேன்
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. காந்தி வாழ்வில் நடைபெற்ற நிகழ்வினை சுட்டிக்காட்டும்
    வகையில் அருமையான கதை நண்பரே
    நன்றி
    சுதந்திரதின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அன்புடையீர்,

    வணக்கம்.
    தங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருகை தந்து சிறப்பிக்கவும்.

    blogintamil.blogspot.in/2015/08/blog-post_16.html

    நன்றி

    அன்புடன்,

    எஸ்.பி.செந்தில்குமார்.

    ReplyDelete
  9. அருமையான கதை தோழர்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  10. நல்ல கதை..... வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. மிக மிகச் சிறப்பான கதை சுரேஷ்! நல்ல நீதி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!