உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 50

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 50


வணக்கம் வாசக நெஞ்சங்களே! ஒரு புதிர் போட்டி போல ஆரம்பித்த இந்த தொடர் இலக்கணம் இலக்கியம் என்று வளர்ந்து இன்று 50வது பகுதியை அடைந்துள்ளது. உங்களின் பேராதரவிற்கு மிக்க நன்றி.
   இத்தனை பகுதிகள் இந்த தொடர் நீளும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை! உங்களின் ஊக்கமிகு கருத்துக்களால் தமிழ் கற்றும் கற்பித்தும் வருகிறேன். இந்த வாரம் ஓர் எளிமையான இலக்கணம் படிக்கப் போகிறோம். அதற்கு முன் சென்ற வாரம் என்ன படித்தோம் என்பதை நினைவில் கொள்ள இங்கு சென்று வரவும். திணையும் பாலும்

இன்று நாம் பார்க்க போவது ஓரெழுத்து ஒரு மொழி.
இரண்டு பகுதிகள் முன்பு நாம் ஏற்கனவே மூவகை மொழிகளைப்படித்தோம். இங்கு.  மூவகை மொழிகள்
அதில் எழுத்து தனித்து நின்று பல எழுத்துக்கள் சேர்ந்து நின்று ஒரு முழுப்பொருளை தருமானால் அது சொல் அல்லது பதம் என்று படித்து இருப்போம். தமிழில் ஒரே எழுத்தில் தொடங்கி ஒன்பது எழுத்துக்கள் வரையிலான சொற்கள் உண்டு.
 இன்னொரு முக்கிய விசயம் தமிழ்ச்சொல் ஒன்பது எழுத்திற்குள்ளேயேதான் முடிய வேண்டும் என்ற விதியும் உண்டு. ஆனால் அதற்கு சில விதிவிலக்குகளும் உள்ளனவாம். பல எழுத்துக்கள் சேர்ந்து பொருள் தரும் சொல்லை அமைப்பது ஒன்றும் புதிது அல்ல. ஆனால் தமிழில் ஒரே எழுத்தில் பொருள் தந்து சொல்லாகும் சொற்கள் நாற்பத்திரண்டு உள்ளன.

   அவை உயிர் எழுத்துக்களில் ஆறு சொற்கள்
   ‘ம’ வரிசையில் ஆறு சொற்கள்
    ‘த,ந, ப’ வரிசையில் ஐந்து சொற்கள்
   ‘க,வ, ச, வரிசையில் நான்கு சொற்கள்
   ய வரிசையில் ஒன்று
 இவை அனைத்தும் நெடில் எனப்படும் நெட்டெழுத்து சொற்களால் ஆன ஓரெழுத்து ஒரு மொழி.
  குறில் எழுத்துக்களில் நொ, து ஆகிய இரண்டு எழுத்துக்கள் என மொத்தம் நாற்பத்து இரண்டு எழுத்துக்கள் ஓரெழுது ஒரு மொழி ஆகின்றன.


இதில் இன்னுமொரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்த ஒரே எழுத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களும் கூட உள்ளன. இதில் இருந்தே தமிழ் மொழியின் வளமையை அறிந்து கொள்ளலாம் அல்லவா?

  உயிர் எழுத்துக்களில்
 ஆ- பசு, ஈ- ஈ என்னும் பறவை, ஊ,- உணவு, ஏ- அம்பு, ஐ- தலைவன், ஓ- மகிழ்ச்சி

ம வரிசையில்
   மா- அழகு, மேன்மை, மீ- உயர்ச்சி, மூ- மூப்பு, மூன்று, மே- அன்பு, மேம்பாடு,  மை- அஞ்சனம்,எழுதுமை, மோ- மோத்தல்

த வரிசையில்
  தா- அழிவு, தாண்டுதல், தீ- நெருப்பு, இனிமை, தூ- தூய்மை,பகை, தே- கடவுள், அருள், தை- ஒரு மாதம்

ப வரிசையில்
  பா- பாட்டு,அழகு,பூ-மலர்,புவி, பே- நுரை, மேகம், பை, கொள்கலம்,இளமை, போ- போதல்

ந வரிசையில்
   நா- நாக்கு, அயலார், நீ முன்னிலை, நீ, நே- அன்பு, அருள், நை- இகழ்ச்சிக்குறிப்பு, நோ- நோய், துன்பம்

க வரிசையில்
  கா- காத்தல், சோலை, கூ -,நிலம், கை- கை, ஒழுக்கம் கோ- மன்னன், பசு
வ வரிசையில்
 வா- வருதல் வீ- மலர்- விரும்புதல், வை, வைத்தல், வைக்கோல், வௌ- கைப்பற்றுதல், ஒலிக்குறிப்பு

ச வரிசையில்
  சா- சாதல், சோர்தல், சீ- இகழ்ச்சிக்குறிப்பு, இலக்குமி சே- காளைமாடு, சிவப்பு, சோ- மதில் நகர்

ய வரிசையில்
 யா- யாவை, ஒருவகை மரம்

குறில் எழுத்துக்களில்
நொ- துன்பம், நோய்
து- உண், அசைதல்
என்ன நண்பர்களே 42 ஓரெழுத்து ஒரு மொழிகளை அறிந்து கொண்டீர்களா? வியப்பாக இருக்கிறது அல்லவா? பல புதிய சொற்களை அறிந்து கொண்டிருப்பீர்கள்! மீண்டும் ஒரு முறை படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இலக்கிய சுவை!

இரண்டு வாரமாக புற நானூற்று செய்யுள்களை பார்த்தோம் இன்று பார்க்க இருப்பது குறுந்தொகை பாடல் ஒன்று. நான் ப்ளஸ் டூ படிக்கும் போது படித்தது.
குறிஞ்சி திணையில் அமைந்த இந்த பாடலை பாடியவர் கபிலர்
இரவில் மட்டும் வந்து செல்லும் தலைவனை தோழி அவன் எதிரே வந்து தலைவியின் நிலையை கூறி மணந்துகொள்ளுமாறு கூறுவதாக அமையும் பாடல் இது.

  வேரல் வேலி வேர்க் கோட் பலவின்
  சாரல் நாட செவ்வியை ஆகுமதி
  யார் அஃது அறிந்திசினோரே சாரல்
  சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
  உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே


விளக்கம்: யாரும் வளர்க்காமலேயே இயல்பாகவே வளரக்கூடிய சிறிய மூங்கில்கலாகிய வாழ்வேலியை உடைய வேரிலேயே குலைகளை ஈந்து பழுத்து தொங்கும் பலாமரங்களை உடைய மலைச்சாரலையுடைய நாட்டையுடையவனே!
   உங்கள் பக்க மலையிலே பலாமரத்தின் சிறிய கொம்பிலே பெரிய பழம் ஒன்று பழுத்து தொங்கிக் கொண்டிருப்பது போல எங்கள் தலைவியின் உயிரானது மிகச்சிறியது. ஆனால் அவள் உங்கள் மீது கொண்டிருக்கும் அன்போ  மிகப்பெரியது. அவளுடைய இந்த நிலையை அறிந்தவர் யாரும் இலர். அவளை விரைந்து மணந்து கொண்டு அவள் நோய் தீர்ப்பாயாக!
   சிறிய கிளையிலே பழுத்து தொங்கும் பலாப்பழத்திற்கு காவலாய் நிற்பது மூங்கில், அதுபோல தலைவியின் காம நோய்க்கு அவளின் இயல்பான குணநலன்களே காவலாக அமைந்து இருக்கிறது. சிறிய கிளையில் உள்ள பழம் தானாக கனிந்து விழும் அல்லது பிறரால் பறிக்கப்படும். அதுபோல தலைவி உன்னை நினைத்து உயிர் துறக்க கூடும் அல்லது பிறரை மணந்து கொள்ளவும் நேரிடும்.  அவளது உயிர் வருத்தும் இந்த காம நோயை யாரும் அறிந்திலர். நீயாவது அறிந்து விரைவில் அவளை மணம்புரிந்து நோயிலிருந்து மீட்க வேண்டும் என்கிறாள் தோழி.

இந்த பாடலின் உவமை நயத்தை ரசித்தீர்களா? என்ன ஒரு அருமையான உவமை!

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்!

மேலும் தொடர்புடைய இடுகைகள்



தங்களின் பின்னூட்டங்களை அளித்து தொடர் சிறக்க உதவுங்கள்! நன்றி!



Comments

  1. தமிழறிவு எப்படி தொடர் ஐம்பதாவது பதிவைத் தொட்டதற்கு வாழ்த்துக்கள். தமிழ்ச்சொற்கள் ஒன்பது எழுத்துகளில் தான் அமைய வேண்டுமா? எனக்கு இது புதுத்தகவல். நன்றி.
    ஓரெழுத்து ஒரு மொழி பட்டியல் அருமை. குறுந்தொகைப் பாடலும் விளக்கமும் நன்று.
    ஒரு வேண்டுகோள், 'உங்கள் தமிழ் அறிவு எப்படி' என்ற தலைப்பில் வந்த பதிவுகள் அனைத்தையும் ஒரு அட்டவணைக்குள் சேர்த்தால் நல்லது, அனைத்தையும் படிக்க விரும்புகிறேன்..ஆனால் ஐம்பதும் ஒரு லேபிளில் அடங்கவில்லை..தமிழ் இலக்கணம், தமிழறிவு என்று சிதறி இருக்கிறது. ஒன்றுசேர்த்து அனைத்தையும் ஒரு பொதுவான லேபிளில் வைத்தீர்களானால் முதலில் இருந்து அனைத்தையும் படிக்க விரும்புபவருக்கு உபயோகமாய் இருக்கும்...இல்லையென்றால் அதற்கு ஒரு தனிப்பக்கம் போட்டுவிட்டாலும் நன்றாய் இருக்கும்..தவறாக எண்ண வேண்டாம்...எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் லேபிள்களை ஒன்று படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது சகோதரி! கொஞ்சம் பொறுமைத் தேவைப்படுகிறது! கூடிய விரைவில் சரி செய்கிறேன்! தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி!

      Delete
    2. ஒவ்வொரு பதிவாக சென்று இனி மாற்றுவது சிறிது சிரமம் தான்... அதுவும் இல்லாமல் Label-யை திருத்தி விட்டு update-என்பதை தான் சொடுக்க வேண்டும் என்பதால், கவனமும் தேவை... அதனால் இதுவரை இடாத label-யை இடவும்...

      இலக்கியச் சுவை, தமிழின் சிறப்பு -->இது போல்... 50 பதிவு என்பதால் செய்து விடலாம்...

      ஒவ்வொரு பதிவிற்கும் செல்லாமல் மாற்றுவது எப்படி...?

      எளிதான வழி :

      1) பகுதி 1, 2 என்று இருப்பதை விட்டு விடுங்கள்... உங்களின் தமிழ் அறிவு எப்படி? என்று தான் இதுவரை வெளியிட்ட 50 பதிவுகளின் தலைப்பு பொதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

      2) Posts ---> All பகுதியில் அனைத்து பதிவுகளும் இருக்கும்... அந்தப் பக்கத்தில் வலது புறம் ஓரத்தில் பல் சக்கரத்திற்கு கீழ் உள்ளதை சொடுக்கி, 50 என்று மாற்றிக் கொள்ளுங்கள்... அப்படி மாற்றினால் அந்தப் பக்கத்தில் 50 பகிர்வுகள் இருக்கும்... கவனிக்க : > < இவைகள் அடுத்தடுத்த 50 பகிர்வுகள் உள்ள பக்கத்திற்கு செல்ல உதவும்...

      3) இதில் உங்களின் தமிழ் அறிவு எப்படி? எனும் பதிவுகளை மட்டும் தேர்வு செய்து கொள்ளுங்கள்... (டிக் மார்க்...)

      4) இப்போது மேலே சென்று Publish, Revert to draft - இவைகளுக்கு முன் உள்ள பென்சில் போல icon-யை சொடுக்கி, New label...என்பதை சொடுக்கி, நீங்கள் முடிவு செய்து வைத்துள்ள label-யை இடவும்... தேர்வு செய்த அனைத்து பதிவுகளும் புதிய label-ல் சேர்ந்து விடும்...

      5) இது போல் அடுத்த 50 பகிர்வுகளுக்கு சென்று மாற்றவும்...

      நன்றி...

      Delete
    3. நன்றி நண்பரே!விரைவில் முயன்று பார்க்கிறேன்! விளக்கமாக உதவியதற்கு மிக்க நன்றி!

      Delete
    4. இப்படி உதவும் உள்ளம் கொண்ட திரு.தனபாலன் சகோதரர் அவர்களுக்கு, உளமார்ந்த நன்றி...பலரையும் ஊக்கப்படுத்துவதோடு இல்லாமல் உதவியும் செய்கிறீர்கள் சகோ..உயர்ந்த மனிதர் நீங்கள்!

      Delete
    5. நண்பரின் ஆலோசனைப்படி லேபிள்களை மாற்றிவிட்டேன்! எளிய இலக்கணம் இனிய இலக்கணம் என்ற லேபிளின் கீழ் இத்தொடரின் அனைத்து பதிவுகளையும் படிக்கலாம்! நேரம் கிடைக்கும்போது படித்து பாருங்கள் சகோதரி!

      Delete
  2. கபிலர் பாடல் விளக்கம் மிகவும் அருமை... (+2) என்றோ படித்ததை இவ்வளவு ஞாபகம் வைத்து பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்...

    50 வது பகிர்வு... தமிழ் சுவை மேலும் தொடர வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  3. இனிமைத் தமிழ் மொழியின் சிறப்புகளை விளக்கியது நன்று.இந்தப் பகுதி மட்டும் ஐம்பதை தொட்டதற்கு வாழ்த்துக்கள். தமிழறிவோம் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளி! தொடர்ந்து உங்களின் ஊக்கம் தொடர்கையில் இந்த பதிவு 100ஐ எட்டும்!

      Delete
  4. தமிழ் அறிவு பகுதியின் வெற்றிக்கரமான 50வது பகுதிக்கு வாழ்த்துக்கள்.

    நானெல்லாம் உங்களின் நியாபகசக்திக்கு பக்கத்தில் கூட வரமுடியாது. கல்லூரியிலேயே நான் என்ன பண்ண படித்தேன் என்று நியப்கம் கிடையாது, இதில் நீங்கள் +2வில் படித்ததைப் பற்றி நியாபகம் வைத்திருக்கிறீர்கள் என்றால் .......................
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சொக்கன் சார்! எங்களுக்கு வாய்த்த தமிழாசிரியர் திரு முருகேசனைத்தான் பாராட்ட வேண்டும். அவர் சொல்லித்தந்தது நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்தது. தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி!

      Delete
  5. 50க்கு மகிழ்ச்சி,
    தொடரட்டும் தங்களின் சேவை.
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  6. வணக்கம் அண்ணா...

    கபிலரின் பாடலை சிறப்பாக எழுதி விளக்கமளித்துள்ளீர்கள்...

    ஓரெழுத்துச் சொற்கள் பலவற்றையும் கூறியுள்ளீர்கள். நன்றி... மா என்றால் பெரிய என்ற பொருளும் உள்ளது...

    தொடருங்கள்... பாராட்டுகள் அண்ணா...

    ReplyDelete
  7. இத்தொடரின் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே
    தொடரட்டும் தங்களின் மகத்தானத் தமிழ்ப் பணி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!