சானியா மிர்ஸாவை லவ்விய சந்தானம்! (கலகல கதை)

 

வாழ்க்கையில் சில கேரக்டர்கள் சுவாரஸ்யம்! எது நடந்தாலும் ஓக்கே! நான் இப்படித்தான் இருப்பேன்! என் வாழ்க்கை என்னுடையது நான் இப்படித்தான் வாழ்வேன் என்று வாழ்வது ஒருவகை! இந்த வகையினரின் நடத்தை பிறரை பாதிக்காமல் இருக்க வேண்டும்.

    இன்னொரு வகை எல்லாவற்றிற்கும் பிறரை பழி போடுவது! கடவுளை குற்றம் சொல்வது. நான் பிறந்த நேரம் சரியில்லை அதான் இப்படி அல்லாடுறேன் என்று சதா புலம்பிக் கொண்டு இருப்பவர்கள் ஒரு ரகம்!  இவர்கள் வாழ்க்கை எப்போதும் இனிப்பது இல்லை!


    நாம் பார்க்க போகும் கேரக்டர் சந்தானம்! சினிமா நடிகர் சந்தானம் போலவே ஒரு ஜாலி டைப் கேரக்டர்! கையில் காசிருந்தால் கர்ணன் தான்! கொடை வள்ளலாகி கூடியிருக்கும் தோழர்களுக்கு பாட்டில் பாட்டிலாய் சரக்கு சப்ளை செய்வார். காசு இல்லையேல் அன்று அவனுக்கு கொடுத்தோமே என்று கணக்கு பார்த்து அவனிடம் சென்று கேட்க மாட்டார். அப்படியொரு நல்ல குணம். வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைக்கும் ஒரு நல்ல மனிதன் இந்த சந்தானம்.

     இவனுக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் ஏற்பட்டு விட்டது. சானியா மிர்சாவுடனான காதல் தான் அது. என்னடா சந்தானத்துக்கும் சானியா மிர்சாவுக்குமா? ஏணி வைச்சாலும் எட்டாதே என்று யோசிக்கிறீர்கள் தானே! இது ஒரு தலைக் காதல்! அப்போதுதான் சானியா டென்னிஸ் அரங்கில் அடிபதித்த காலம் பத்திரிக்கைகள் ஆகா ஓகோ என்று புகழ சந்தானம் அவளை லவ் பண்ணத் துவங்கி விட்டான்.

     என்னடா! அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்பது போல பண்ற! உன் வயசு என்ன? அவ வயசு என்ன? அவ ரேஞ்சுக்கு நீ எல்லாம் தூசி! இதெல்லாம் சரிபட்டு வருமா? என்றால்  உனக்கென்னடா! அவ என்னை லவ் பண்றாலோ இல்லையோ நான் அவளை லவ் பண்றேன்!  என்று சிம்பிளாக கூறிவிட்டு செய்தி தாள்களில் சானியாவின் படங்களை சேகரிக்க ஆரம்பித்து விட்டான்


      ஒரு 192 பக்க லாங் சைஸ் நோட்டு வாங்கி அது முழுக்க சானியாவின் படங்களை ஒட்டி வைத்திருந்தான்.   வோய் சந்தானம் இது உம்ம வயசுக்கு நல்லா இல்ல! தகுதியும் இல்ல சின்ன பசங்க மாதிரி இந்த சின்ன பொண்ணை சைட் அடிச்சிகிட்டு திரியாதே!  என்றால் போடா  இதுக்கெல்லாம் வயசு காரணம் இல்லை மனசுதான் காரணம் அவ என்னை விரும்பாவிட்டால் என்ன நான் அவளை மானசீகமா லவ் பண்ணிட்டு போறேன் என்று சினிமா டயலாக் விடுவான்.

 

    சில பேர் குஷ்பு சிம்ரன் என்று சினிமா நடிகைகள் மீது அதீத காதல் கொள்வர்! நிஜம் அவர்கள் கண்ணை மறைக்கும். அவர்களுக்கு திருமணச் செய்தி வந்தால் வீட்டில் சாப்பிடாது ஒரு ரெண்டு வாரங்கள் தாடி வளர்த்து திரிவர். இன்னும் சிலர் தாங்கள் மணக்க போகும் பெண்ணுக்கு அந்த நடிகையின் பெயரை சூட்டி சமாதானப் பட்டுக் கொள்வர் அது மாதிரி இவருக்கு சானியா பித்து பிடித்து விட்டது.

    அறை முழுக்க சானியா ப்ளோ அப்களை ஒட்டி வைத்து மகிழ்ந்து கொண்டிருந்த அவருக்கும் ஒரு ஆப்பு வந்தது. டென்னிஸில் கொடி கட்டி பறந்த சானியா கொஞ்சம் சறுக்க ஆரம்பித்தார். பத்திரிக்கைகள் மெல்ல ஓரம் கட்ட  ஆரம்பித்தன. என்னடா இது என் செல்லத்தை பத்தி ஒரு நியூசும் வர மாட்டேங்குது  என்று புலம்பி தீர்த்தான் ஒரு நாள்.

     என்னத்த பெரிசா ஆடி கிழிக்கறா? ஒண்ண மாதிரி ஆளுங்க தான் ஜொள்ளு விட்டுகிட்டு அவ பின்னாடி திரியறீங்க! அவளும் அவ ஆட்டமும் சுத்த வேஸ்ட் என்றதற்கு என்னிடம் கோபித்துக் கொண்டு  மூணு நாள் பேச வில்லை. சானியாவின் முகவரி தெரிந்து கொண்டு பிறந்த நாள் தெரிந்து கொண்டு வாழ்த்து அனுப்பி பார்த்தான் ஒரு லெட்டர் எழுதி அனுப்பினான் எதற்கும் பதில் இல்லை.ஆனாலும் விடாது தொடர்ந்து அவளது பிறந்தநாள் போட்டியில் வென்றதற்கு அதற்கு இதற்கு என்று வாழ்த்து அனுப்பிக் கொண்டே இருந்தான் சந்தானம்

       என்னடா சானியா! சானியான்னு புலம்பினீயே உன்னோட  வாழ்த்துக்கு ஒரு தேங்ஸ்  அனுப்பினாளா அவ? என்றேன்! என் செல்லத்துக்கு ஆயிரம் வேலை இருக்கும் இதுல என்னோட லெட்டரை அவ பார்த்திருப்பாளோ என்னமோ? என்று வக்காலத்து வாங்கினான். .  இது தெரியுது இல்லை அப்புறம் ஏன் அவளையே நினைச்சிகிட்டு காலா காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணிக்க கூடாதா? என்றேன்.

  


     யோவ் உமக்கு ஒண்ணும் தெரியாது. கல்யாணம் பண்ணிட்டு என்னத்த சாதித்து இருக்கீங்க நீங்கள்ளாம்!  என்று மடக்கினான் சந்தானம். திடுமென ஒரு நாள் எல்லோரையும் அழைத்து பார்ட்டி கொடுத்தான். என்னடா என்ன விஷேசம் கல்யாணம் பண்ணிக்க போறீயா என்றதற்கு என்னடா சந்தோஷமான நேரத்துல் அதை ஞாபகப்படுத்தறே என் சானியா லெட்டர் போட்டிருக்காடா? என ஒரு கடிதத்தை காண்பித்தான். அது டைப் செய்யப்பட்ட ஒரு கடிதம். அவனது வாழ்த்துக்கு நன்றி கூறியிருந்த அதில் இறுதியில் சானியா கையெழுத்து இருந்தது. சாதிச்சிட்டடா என்ற போது அவன் முகத்தில் பெருமை மிளிர்ந்தது. அந்த கடிதத்தை பிரேம் போட்டு வைத்திருந்தான் அவன்.

நல்ல வேளை அப்போது  பேஸ்புக்கும், இன்ஸ்டாவும் ட்விட்டரும் வராத காலம்! அதெல்லாம் இருந்திருந்தால்  சந்தானத்தை கையில் பிடித்திருக்கவே முடியாது.

     திடிரென ஒருநாள் அந்த செய்தி வந்தது. நான் தான் சந்தானத்திற்கு முதலில் சொன்னேன். யோவ் உம்ம லவ்வருக்கு கல்யாணமாம்! போயி தடுக்கலை என்றேன்!

தெரியும்டா!  என்னது அப்ப உன் லவ்?

 

   என்னடா இது பைத்தியகாரத் தனமா கேக்குற? அவளை எல்லாம் நான் மேரேஜ் பண்ணிக்க முடியுமா? அவ எங்கே நான் எங்கே? என்றான்,. அப்ப அவ பைத்தியாமா அலைஞ்சியே அவ போட்டோவை கட் பண்ணி ஒட்டிகிட்டே? வேற பொண்ண கட்டிக்க மாட்டேன்னு  சொன்னே?

  நான் எப்ப அப்படி சொன்னேன்? இப்ப கல்யாணம் வேண்டாம்னுதான் சொன்னேன்! இதெல்லாம் நடக்காதுன்னு தெரியும் ஆனா வாழ்க்கைல ஒரு எண்டர்டெய்ன் மெண்ட் வாணாமா? என்னை பார்த்து நீங்க எல்லாம் எவ்வளவு  பொறாமை பட்டீங்க? அவகிட்ட இருந்து லெட்டர் வந்ததும் உங்களுக்கு எவ்வளவு வயித்தெரிச்சல்! என்னை இல்லை பைத்தியக்காரன்னு சொன்னீங்க  நான் தான் பைத்தியமா அலைஞ்சேன்னா அவளை பத்தி தெரிஞ்சிக்க நீங்கல்லாம் என் பின்னாடி அலைஞ்சீங்க! அது எவ்வளோ ஜாலி உங்களை எண்டர்டெய்ன் பண்ணேன் தட்ஸ் ஆல் என்றான்.

அப்ப உன்னோட லவ்? நான் லவ் பண்ணேலேன்னு யார் சொன்னது சானியாவுக்கு லட்ச கணக்கில் ரசிகர்கள் அதுல நானும் ஒருத்தன்! அவ மேல அன்பு செலுத்தினேன் ஆனா அது காதல்னு நீங்கதானே கோர்த்து விட்டீங்க! இதெல்லாம் வாழ்க்கையில் கடந்து போகும் மாமே என்றான்.

   ஒரு சுபயோக சுபதினத்தில் சோயப் மாலிக் கழுத்தில் தாலி கட்டினார் சானியா! அதற்கும் மறக்காமல் வாழ்த்து அனுப்பிய சந்தானம் இதுவரை கல்யாணம் கட்டிக் கொள்ளவில்லை!

      என்னப்பா சந்தானம் எப்ப கல்யாணச் சோறு? என்று கேட்டபோது  இப்ப  ஸ்மிருதி மந்தனாவை லவ் பண்ணிகிட்டு இருக்கேன்! பார்க்கலாம் அவ சம்மதம் கிடைக்குமான்னு என்று ஸ்மிருதி மந்தனாவின் இன்ஸ்டா பக்கத்தில் லவ் எமோஜிகளை பறக்கவிட்டபடி  கண்ணடித்தான்   ஜாலியாக!

 

கதை நிஜமல்ல! கற்பனைதான்! கதைக்கும் சந்தானத்தின் படத்திற்கும் நிச்சயமாய் எந்த சம்பந்தமும் இல்லை!

( திருத்திய மீள் பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

 

Comments

  1. ரசித்தேன் கதையை.

    ReplyDelete
  2. தங்களுடைய தளமும் புதுப் பொலிவுடன் கண்டேன். ஆனாலும் டேம்ப்லேட் கொஞ்சம் கூட பொலிவுடையதாக வருபவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கலாம். கட்டுரை, கதை, கவிதை என்று பல ஆக்கங்களையும் எதிர்பார்க்கிறேன். வணக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2