கவரிமான்!

 


கவரிமான்
!

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

 

குடவாயிற் கோட்டத்துச் சிறைச்சாலை! அந்தி சாய்ந்த அந்த பெரும்பொழுதில் மிகவும் பயங்கரமாக காட்சி அளித்தது. சிறைச்சாலைகளின் சுவர்களிலே ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்த பந்தங்களில்  எண்ணெயும் கொழுப்பும் கலந்த கலவையை ஊற்றி பற்றவைத்துக் கொண்டிருந்தனர் காவலாளிகள். அந்த பந்தங்கள் தீப்பற்றி எரிகையில் ஒருவிதமான நெடியும் புகையும் சூழ்ந்து கொடிய நரகம் போல அந்த சிறைச்சாலை விளங்கிக் கொண்டிருந்தது.

 

சோழன் செங்கணான் உடனான திருப்போர் புறத்து போரில் பெரும் தோல்வியை சந்தித்த சேரமான் கணைக்கால் இரும்பொறையும் அவனோடு சிறைபட்ட பல்லாயிரக் கணக்கான வீரர்களும் அந்தச் சிறையில் அடைபட்டிருந்தனர். அவர்களில் பலருக்கு உடலின் பல இடங்களில் பெரிதும் சிறியதுமாய் ரத்த காயங்கள். அதனினும் பெரிதாய் மனக்காயங்கள்!

 

பிறந்த அனைவருக்குமே ஒருநாள் இறப்பு என்பது நிஜம் என்றாலும் அதற்குள் இந்த உலகை நிலத்தை கட்டி ஆளவேண்டும் என்ற நினைப்பு புவியில் சிலருக்குத் தோன்றுவதாலேயே  சாம்ராஜ்யங்கள் பிறப்பெடுக்கின்றன. ஒவ்வொரு சாம்ராஜ்யத்தின்  அடித்தளத்திலே எத்தனையோ ஆயிரம் வீர்ர்களின் உயிர்களும் சரித்திரங்களும் புதைக்கப்பட்டுக் கட்டி எழுப்பப் படுகின்றது.

 

 அப்படித்தான் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் இடையே சாம்ராஜ்யத்தை நிறுவுவதில் போட்டி. அப்போட்டி கழுமலம் என்ற தற்போதைய சீர்காழியில் பெரும் போர் நடைபெற்றதாக கூறுகிறது வரலாறு. அந்த கழுமலம் வேறு. சீர்காழி வேறு என்போரும் உண்டு.

 அந்த கழுமலப் போரிலே மாண்டவர்கள் கோடி! மிகவும் கொடூரமான போர்! மஹாபாரதப் போருக்கு நிகரொத்த அந்த போரிலே தோல்வியைத்தழுவினான் சேரனான கணைக்கால் இரும்பொறை.

 

சங்கிலியால் கைகளும் கால்களும் பிணைக்கப்பட்டு குடவாயிற்க் கோட்டத்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான்.

 

 சங்ககால சோழர்களின் ஆட்சியில் அமைக்கப்பட்டதுதான் குடவாயிற்கோட்ட சிறைச்சாலை!  சிறைச்சாலையை சுற்றி  சுமார் நாற்பது அடி அகலமும் இருபதடி ஆழமும் கொண்ட நீண்ட அகழி. அதில் ஆளைக் கொல்லும்  முதலைகள். அதைத் தொடர்ந்து சுமார் முப்பதடி உயரம் கொண்ட பாறைகளினால் ஆன மதில். உள்ளே பெரிய சிறைச்சாலை. பத்துக்குப் பத்து அளவில்  நூற்றுக்கணக்கான சிறைச்சாலைகள் பாறைகற்களால் கட்டப்பட்டு பலமான மரக்கதவுகளால்  பிணைக்கப்பட்டு இருந்தது. அது தவிர அந்த சிறைச்சாலையின்  வடப்புறத்தில் பாதாளச் சிறையும் ஒன்று கட்டப்பட்டது.

 

சோழநாட்டில் கொடிய குற்றங்களுக்காக சிறைபட்டோர் இந்தச்சிறைச்சாலையில்தான் அடைக்கப்படுவர். அவர்களுக்கு அங்கே கடுமையான தண்டணைகள் வழங்கப்படும். அவற்றிலிருந்து மீண்டு உயிர்பிழைத்து வருவதென்பது பெரும் கஷ்டம். அப்படியொரு சிறைச்சாலையில்தான் கட்டப்பட்டிருந்தான் கணைக்கால் இரும்பொறை.

 

அவன் மனதில் பலநினைவுகள் குடிகொண்டன. சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் வஞ்சி என்னும் இன்றைய கொடுங்கோளூரை தலைநகராக்க் கொண்டு உருவாக்கிய சேரர்  வரலாறு பழம் பெருமை உடையது. அதன் பின் அவன் புதல்வன் நெடுஞ்சேரலாதன் ,சேரன் செங்குட்டுவன்  பெருஞ்சேரலாதன் போன்ற சேரப் பேரரசர்கள் மரபில் உதித்த நான் என்ன பாவம் செய்தேன்? இப்படி பரம வைரியான இந்த சோழனின் சிறையிலே இப்படி கட்டுண்டு கிடக்கின்றேனே! நான் போரிலே வெற்றி பெறாத அப்போதோ உயிர் துறந்திருக்கலாகாதா? ஐயோ!  போரிலே பெற்ற வலியை விட இந்த மனம் கொண்ட வலி அதிகமாக இருக்கிறதே? என் உயிரை பறித்துவிடு இறைவா!

 

முதலையின் பிடியில் இருந்த கஜேந்திரனை  சுதர்சனம் கொண்டு காத்தருளிய நாரணனே! இந்த சோழனின் இரும்புச்சிறையில் இருந்து என்னை காத்து முக்தி அளிப்பாயா? என்று அவன் மனம் வெதும்பி சிந்தித்து கொண்டிருந்தான்.

 

 மனம் படும் பாட்டை உடல் அறியாது. உடல் ஒரு இடத்தில் இருக்க மனமோ அலைபாய்ந்து எங்கெல்லாமோ சுற்றி வருகின்றது. ஆனால் உடல் ஒரு இடத்தில் நிலையாய் இருந்தாலும் உள்ளே இயங்கும் உறுப்புக்கள் சும்மா இராது தாம் இயங்கத் தேவையான உணவைக்கேட்டு  துன்புறுத்தி எடுக்கின்றது.

 

சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. அக்காலத்தே வென்ற அரசர்கள் தோற்ற அரசர்களை மிகக் கேவலமாக நடத்துவர் போலும். சிறையிலே இப்போது கிடைப்பது போல மூன்று வேளை போஜனம் கிடையாது. ஏதோ ஒரு வேளை உணவை தட்டில் வீசிவிட்டு செல்வர். அதை எடுத்து உண்ண மனம் கூசும். உடல் கெஞ்சும்! மனசு தட்டிவிடும் ஆனாலும் உடலே இறுதியில் வெல்லும்.

 

அன்றைய மாலைப்பொழுது கடந்து மூன்று நாழிகை  கடந்த நிலையிலும் சிறைச்சாலையில் உணவு வழங்கப் படவில்லை!  போர்க்கைதிகள் உடல் வலியால் துவண்டதோடு பசிப்பிணியாலும் துவண்டு கிடந்தனர்.

 

 சேரமானுக்கும்  நா வறண்டு போனது! அழுதழுது அவன் கண்கள் வீங்கிக் கிடந்தன. உடல் சோர்வைவிட மனச்சோர்வு அதிகரித்து துவண்டு கிடந்த அவனுக்கு நாவறட்சி  அயர்வைத் தந்தது.

 

  கதவோரம் வந்து அங்கிருந்த காவலரை அழைத்தான்.

 

 ஐயா! காவலரே…!”

 

அழைப்பது சேர மன்னன் என்றாலும்  அவனிருப்பது தன் காவலில் என்ற மமதை அந்த காவலனுக்கு!

 

காதில் விழாது போல் அமைதி காத்தான்..

 

சேரனுக்கு அவமானம் பிடுங்கித்தின்றது.  இதுவே தன் நாடாக இருந்து தன் குரலை செவிமடுக்காத காவலனாக இருந்தால் இந்நேரம் அவன் உயிரைப் பறித்திருப்பான். இங்கு சிறைக்கம்பி அவனை பிணைத்திருக்கிறதே?

 

மீண்டும் அழைத்தான்!  ஐயா! காவலரே…!”

 

என்னய்யா! வேண்டும் சும்மா தொணதொணவென்று காவலரே காவலரே என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாய்!”

 

ஐயா! கொஞ்சம் மரியாதையாய் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்! சோழ நாடு சோறுடைத்து என்று பெருமிதமாய் சொல்லிக்கொள்ளும் நீங்கள் இங்கே சிறையிலிருக்கும் எங்களுக்கு  அளிப்பதோ ஒரு வேளை உணவு. அதையும் நேரத்திற்கு  அளிப்பதே இல்லை! பொழுது சாய்ந்து மூன்று நாழிகை நேரம் கடந்தபின்னும் இன்னும் எங்களுக்கு உணவு வந்த பாடில்லை.”

 

 உண்டி சுருக்க கற்றுக்கொள் சேரா!” அப்போதுதான் மற்ற நாடுகளை பிடித்து  உன் எல்லையை விரிவாக்க வேண்டும் என்ற எண்ணம் தவறென்று புரியும்.”

 

போரும் சாம்ராஜ்யங்களை கட்டி ஆள்வதும் சத்திரியனின் தர்மம்

 

அதே சத்திரியன் போரில் தோற்றுப் போனால் அவனை எதிரி இப்படி சிறையில் அடைப்பதும் சோறிடாமல் துன்புறுத்துவதும் அரச தர்மம் தான்!”

 

உன்னோடு விவாதம் செய்ய என்னால் இயலாது என் நா வறண்டு போகின்றது! குடிக்க சிறிது நீராவது கொடுக்கிறாயா?”

 

முரளா நதி நீர் குடித்து வளர்ந்தவன் இங்கே காவிரியின் நீருக்கு ஏங்கி நிற்கிறாய் பார்த்தாயா?”

 

அது காலத்தின் கோலம்!  என் நாவறண்டு விட்டது. உன் குதர்க்கமான பேச்சுக்களை குறைத்துக் கொண்டு ஒரு குவளை நீர் தருவாயா?”

 

அப்படியே மண்டியிட்டு கேள்! ஒரு குவளை என்ன? ஒரு குடம் கூட கொண்டு வந்து தருகிறேன்!”

 

சேரனின் இரத்தம் சூடேறிப்போனது!

 

காவலா! உன் கேலிக்கும்  ஓர் எல்லை உள்ளது!”

 

எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் நாங்கள்! நீ எங்கள் கைதி! மண்டியிட்டு யாசகம் கேள்! உயிர் பிச்சை போடுகிறோம்!”

 

ஐயோ! என்னை காக்கும் கண்ணபிரானே! என் காதால் இப்படியொரு சொற்களை கேட்டு இன்னும் நான் உயிர் வாழ வேண்டுமா?”

 

புலம்பாதே..! சரி மண்டியிட வேண்டாம்!  கை கூப்பி கேள்! நீ கேட்ட குவளை நீர் கொண்டு வருகிறேன்!”

 

காவலாவேண்டாம்! நான் ஒரு மன்னன் என்பதை அறிந்துதான் பேசுகின்றாயா?”

 

யார் நீயா? மன்னனா? எப்போது? அது முடிந்த காலம்! இப்போது நீ எங்கள் கைதி! அதுவும் போர்க்கைதி!”

 

போர்க்கைதிகளை உங்கள் தேசத்தில் இப்படித்தான் நடத்துவீர்களா?”

 

நீ கொஞ்சம் விஷேசமானவன்! எங்களின் பரம எதிரி! உன்னை சீண்டிப் பார்ப்பதில் எங்களுக்கு ஆனந்தம்! ”

 

சேரன் கலங்கிப் போனான்!

 

அடேய் காவலா! எங்கள் பரம்பரையில் குழந்தை இறந்து பிறந்தாலோ தசை பிண்டமாக பிறந்தாலோ கூட வாளால் வெட்டித்தான் புதைப்போமடா! அப்படிப்பட்ட வீரப் பரம்பரை எங்களுடையது. என் முன்னோர்கள் நெடுஞ்சேரலாதனும் செங்குட்டுவனும் முடிசூடா மன்னர்களாக இருந்தவர்களடா! அப்படிப் பட்ட வீரப்பரம்பரையில் உதித்த நான் போரில் வாளால் வெட்டுண்டு சாகாமல் போனேனே?

 

என்னை ஒரு அரசனாய் நடத்தாமல் சங்கிலியால் கட்டி  ஒரு நாய் போல சிறையில் தள்ளிய உங்களிடம் நாவறட்சியால் தண்ணீருக்கு யாசகம் கேட்கிறேனே! நான் அரசனா? சிறைபிடித்த உங்களிடம் உணவுக்கும் தண்ணீருக்கும் மனவலிமை இன்றி இறைஞ்சுகின்ற நான் மன்னன் இல்லை! நான் உயர்குடிப் பிறந்தோன் இல்லை!  நான் மன்னன் இல்லை!” என்று கத்திவிட்டு  ஓய்ந்தான்  சேரமான்.

 

சேரமானின் இந்த பேச்சு காவலனை என்னமோ செய்தது. இப்படி நாம் கேவலப்படுத்தியிருக்க கூடாதோ என்று வருந்தினான்.  ஒரு குவளையில் நீர் எடுத்துக் கொண்டு சிறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

 

மூலையிலே சுவற்றிலே  தலைக்கொடுத்து அமர்ந்திருந்த சேரனின் தோள் தொட்டான். “ ஐயா, சேரபிரானேஎழுந்திரும்! இந்தாரும் நீர்..”

 

பதில் இல்லை! ” சேரபிரானேஎழுந்திரும்…! ”முகத்தில் தட்டினான்.

 

அந்தோ பரிதாபம்! சேரனின் தலை துவண்டது

ஆம்! மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரி மானாய் பிரிந்து போயிருந்தது சேரனின் உயிர்.

 

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!