ஷாபாலி வர்மா! பெண்கள் கிரிக்கெட்டின் ஷேவாக்!

 

ஷாபாலி வர்மா!  பெண்கள் கிரிக்கெட்டின் ஷேவாக்!

 

சமீப காலங்களில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பெரும் வளர்ச்சியை அடைந்து வருகின்றது. திறமையான இளமையான பல கிரிக்கெட் வீராங்கனைகள் அணியில் இடம்பெற்று அசத்தி வருகின்றனர். அப்படி அறிமுகமாகி இளவயதில் பெரும் சாதனைகளை படைத்து வருகின்றார் ஷாபாலி வர்மா.

 யார் இந்த ஷாபாலி வர்மா? பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஹரியானாவில் ரோதக் மாவட்ட்த்தில் பிறந்து இன்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூன்று பிரிவுகள், டெஸ்ட், ஒருநாள் 20-20 என்று முத்தரப்பு கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் 17 வயது இளம்பெண் தான் ஷாபாலி.

ஹரியானாவின் பின் தங்கிய மாவட்ட்த்தில் பிறந்த ஷாபாலி வர்மா தனது எட்டாவது வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். இவரது அண்ணன் ஷாகில் வர்மாவும் ஒரு கிரிக்கெட்டர். இளவயதில் உள்ளூர் டோர்ணமெண்ட் ஒன்றில் அண்ணனுக்குப் பதில் சப்ஸ்டியூட்டாக களமிறங்கிய ஷாபாலி அதில் அசத்தி அண்ணன் அணிக்கு கோப்பை பெற்றுத் தந்ததுடன் ப்ளேயர் ஆப் மேட்ச் ஆகவும் ஜொலித்தார்.

 ரோதக்கில் உள்ள மந்தீப் சீனியர் செகண்டரி ஸ்கூலில் படித்த ஷாபாலிக்கு இளவயதில் அவரது கிரிக்கெட் ஆர்வத்தை கண்டறிந்து ஊக்கம் கொடுத்த்து அவரது தந்தை  சஞ்சீவ் வர்மாவும் அவரது அண்ணன் ஷாகில் வர்மாவும். ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதை ஊரில் உள்ள ஆண்கள் விரும்பாவிட்டாலும் ஷாபாலியின் திறமையை கண்டறிந்து வெளிப்படுத்தி அவரை சிறந்த வீராங்கனையாக்கத் துடித்தார் சஞ்சீவ்.

இளவயதில் ஊரில் பெண்கள் கிரிக்கெட் அணி கிடையாது. ஆண்களுடன் இணைந்து விளையாடச் சென்றால் அவர்கள் ஷாபாலியை வெறுத்தனர். விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். ஷாபாலி தன் நீண்ட தலைமுடியை ஆண்களைப் போல ஹேர்கட் செய்து கொண்டார். பையனைப் போலச் சென்று விளையாட வாய்ப்பு கேட்டார். நீ முடி வெட்டிக்கொண்டுவிட்டால் ஆணாகிவிடுவாயா? எங்களைப் போல் விளையாட முடியுமா என்று பையன்கள் சவால் விடுத்தனர். ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால் நிருபிப்பதாக கூறி அணியில் இணைந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். இவரது ஆக்ரோஷமான பேட்டிங்கும் துடிப்பான பீல்டிங்கும் பையன்களை விட சிறப்பாக இருக்க ஆண்கள் அணியில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார். தொடர்ந்து பல டோர்ணமெண்ட்களில் விளையாடி வந்தார்.

 கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற தன் கனவை மகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள நினைத்த அவரது தந்தை சஞ்சீவ் முதல் மூன்றுவருஷங்கள் மகளுக்கு சிறப்பான கோச்சாக விளங்கினார். ஷாபாலி அடிக்கும் ஒவ்வொரு சிக்சருக்கும் 5ரூபாய் பரிசு என்று அறிவித்து ஷாபாலியை அதிரடி ஆட்டக்காரியாக மாற்றிக் காட்டினார்.

ஷாபாலிக்கு ஒன்பது வயது நிரம்பியிருக்கும் போது ரஞ்சி டிராபி போட்டியொன்றில் சச்சின் தனது கடைசி ரஞ்சிப் போட்டி விளையாடுவதை தந்தையுடன் சென்று பார்த்தார். அப்போட்டியில் சச்சின் விளையாடுவதைப் பார்த்து மிகவும் வியந்து போன ஷாபாலி தானும் ஒருநாள் இந்திய அணிக்காக இதுபோல விளையாட வேண்டும் என்று கனவை வளர்த்துக் கொண்டார். அந்தப் போட்டியின் போது சச்சினை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் முயன்றும் முடியாது போனது.

2016 ம் ஆண்டில் ஷாபாலி ரோதக்கில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடமியான நாராயண் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். அங்கு பயிற்சி பெறுகையில் இவரது கோச் அஸ்வினி குமாரி ஷாபாலியின் வயதுக்கு மீறிய திறமையை உணர்ந்து அவரை எலைட் குருப்பில் சேர்த்துவிட்டார். எலைட் குருப் என்பது அண்டர் 19, அண்டர் -23 ரஞ்சிப் போட்டிகளில் விளையாட உள்ளோர் பயிற்சி பெறும் குருப். அதில்  12 வயதே நிரம்பிய ஷாபாலி சேர்ந்த்து மட்டுமின்றி அவர்களுக்கு இணையாக மட்டுமில்லாமல் அபாரமாக விளையாடியது அனைவரின் கவனத்தைக் கவர்ந்தது.

ஷாபாலியின் கோச் அஸ்வினி குமாரி கூறுகையில்  ஷாபாலிக்கு 12 வயதிலேயே 15 வயது நிரம்பியவருக்கான கிரிக்கெட் அறிவும் விளையாடும் திறனும் பெரிய ஷாட்ஸ் அடிக்க்க் கூடிய  வலுவும் இயல்பிலேயே இருந்தது. எனவே அவரை  எலைட் குருப்பில் சேர்த்து பயிற்சி அளித்தேன் என் கணிப்பு பொய்க்கவில்லை! அவர் திறமையாக விளையாடினார்.

2018ம் ஆண்டு தனது 14 வயதில்  ஹரியானா அண்டர் 19 பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கினார் ஷாபாலி. அவருடைய திறமை விரைவில் அவரை இந்திய அணிக்கு அழைத்துச் சென்றது. 2019ல் தன்னுடைய  பதினைந்தாவது வயதில்  மிகக் குறைந்த வயதில் இந்திய அணியில் இடம்பிடித்த வீராங்கனை என்ற சாதனையுடன் இந்திய அணியில் இடம்பிடித்தார். தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக டி-20 போட்டியில்  ஸ்மிருதி மந்தனாவிடமிருந்து இந்திய அணியின் தொப்பியைப் பெற்றுக் கொண்டு களமிறங்கினார்.

மிக விரைவிலேயெ இந்திய பெண்கள் அணியில் ஓர் அசைக்க முடியாத வீராங்கனையாக மாறிய ஷாபாலி சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். மிக இளவயதில்  அரைசதம் அடித்த சாதனை அது. 49 பந்துகளில் 73 ரன்களை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக குவித்து அந்த சாதனையை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து உலக்க் கோப்பை கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்து அசத்தினார்.

  இதுவரை மொத்தம் 22 டி.20 இன்னிங்க்ஸ்களில் 617 ரன்கள் குவித்து மூன்று அரைசதங்களை அடித்துள்ள ஷாபாலி  டி-20 கேரியரில் 29.38 ஆவ்ரேஜ் வைத்துள்ளார். இது உலக அளவில் 9வது இடம். இவரது ஸ்ட்ரைக் ரேட் 148.31 இதுவரை 29 சிக்ஸர்களும் 73 பவுண்டரிகளும் அடித்து பெண்கள் அணியின் ஷேவாக் ஆக சிறந்து விளங்குகிறார்.

  சிறப்பான பங்களிப்பால் டெஸ்ட் அணிக்கு தேர்வான ஷாபாலி  இந்த வாரம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கி அறிமுகப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 96 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களும் குவித்து அறிமுகப் போட்டியில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் முதலிடம்.

 ஷாபாலியின் இந்த ஆட்ட்த்தை பிரபல கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட், கங்குலி, ப்ராட் ஹாக்  ஷேவாக் போன்றோர் வியந்து பாராட்டி வருகின்றனர்.

தன்னுடைய இத்தனை சாதனைகளுக்கும் காரணம் தன் தந்தைதான் என்று சொல்லும் ஷாபாலி தன் சாதனைகளை தந்தைக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.

ஷாபாலியின் சாதனைகள் தொடரட்டும்! இந்திய பெண்கள் கிரிக்கெட் வளரட்டும்!

 

Comments

  1. சாதனையாளரைப் பற்றிக் கூறியவிதம் அருமை. மகன்(ள்) தந்தைக்காற்றும்...... என்ற குறள் நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!