சாமார்த்திய திருடன்! பாப்பா மலர்!



முன்னொரு காலத்தில் விவேகன் என்ற திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பெயருக்கேற்றபடி விவேகம் உள்ளவன். திருடினாலும் திருந்தத் திருடுவான். மிகுந்த திறமை சாலியான அவன் திருடன் ஆனது அவனது பொல்லாத காலம்.

 உள்ளூரில் திருடி திருடி பிழைத்துவந்த அவனுக்கு சலித்துப்போய்விட்டது. வெளியூருக்குப் புறப்பட்டான். அந்த ஊரில் ஒரு மிகப்பெரிய பண்ணைவீடு இருந்தது. அங்கு சென்று வேலை கேட்டான். முன் பின் தெரியாத உனக்கு எப்படி வேலை தருவது? என்று கேட்டார் பண்ணையார். ஒரு மாதம் இங்கு எனக்கு ஒத்தாசையாக இரு. உன் வேலை எனக்கு பிடித்து உன் மீது நம்பிக்கை ஏற்பட்டால் தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.

 விவேகனும் ஒருமாத காலம் உண்மையாக அங்கு உழைத்தான். பண்ணையாரிடம் மிகுந்த விசுவாசமாக நடந்து கொண்டான். இன்னு கொஞ்ச நாள் பண்ணையாரின் நம்பிக்கையை பெற்றுவிட்டால் இங்கு கொள்ளை அடிப்பது சுலபம் என்று அவரது நம்பிக்கையை பெறும் வண்ணம் வேலை செய்து வந்தான்.

  சில நாட்கள் கடந்தன.

ஒருநாள் பண்ணையார் விவேகனை அழைத்து  “விவேகா! நீ என்னதான் சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும் நீ ஒரு திருடன் என்று தெரிந்துவிட்டது. உன் ஊரைச்சேர்ந்த ஒருவன் இங்கு வேலையில் இருந்தான். இங்கிருந்து வெளியூர் சென்ற அவன் இன்று திரும்பி வந்துவிட்டான். நீ திருடன் என்று அவன் போட்டு உடைத்துவிட்டான். இனி என்னை ஏமாற்ற முடியாது. உன்னை அரசரிடம் பிடித்து கொடுக்கும் முன் கிளம்பி விடு! ”என்றார்.

  விவேகன், ”பண்ணையார் ஐயா! நான் திருடன் தான்! உங்கள் மனதை திருடிவிட்டதால் இங்கு எதையும் திருடவில்லை! என்னை மன்னித்து வேலையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

   ”அப்படியானால் ஒரு சவால்! என்னிடம் இருந்து ஒரு பொருளை எடுத்துச் சென்று விற்றுவிடவேண்டும். விற்ற பொருளினை மீண்டும் என்னிடமே சேர்ப்பிக்கவேண்டும். அதற்கு நீ பணம் கொடுக்க கூடாது. அப்படி நீ செய்தால் உன்னை சாமார்த்தியசாலி என்று ஒத்துக் கொண்டு வேலை தருகிறேன். ”என்றார் பண்ணையார்.

  ”சவாலுக்குத் தயார்! ”என்றான் விவேகன்.

”ஐயா! உங்களது குதிரை ஒன்று வேண்டும். ஊருக்குச் சென்று திரும்பி வந்துவிடுகிறேன்! ”என்றான்.

பண்ணையாரும் குதிரையைக் கொடுத்துவிட்டார். குதிரையில் ஏறி ஊருக்கு கிளம்பினான் விவேகன். எதிரே ஒரு வியாபாரி கிழ குதிரையில் வருவதை பார்த்தான். உடனே அவன் மூளையில் ஒரு எண்ணம் உதித்தது. “ ஐயா! வியாபாரியாரே! உங்கள் கிழ குதிரையை வைத்து கொண்டு எவ்வளவு வியாபாரம் செய்ய முடியும்? இதோ இந்த குதிரையை வாங்கிக் கொள்ளுங்கள் நூறு பொன் பெறும் இந்த குதிரையை ஐம்பது பொன்னுக்குத் தருகிறேன்.எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது!”என்றான் விவேகன்.

 வியாபாரியும் குதிரை நன்றாக இருக்கிறது. நமக்கு ஐம்பது பொன் லாபம் கிடைக்கும் வாங்கி கொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்தார்.

  வாங்கிக் கொள்கிறேன்! ஆனால் இந்த கிழ குதிரையை என்ன செய்வது? என்று கேட்டார்.

  ”அதை நான் இருபது பொன்னுக்கு வாங்கிக் கொள்கிறேன்! மீதி முப்பது பொன் கொடுத்து இந்த குதிரையை ஓட்டிச்செல்லுங்கள்.”
  “நல்லயோசனை!  அப்படியே செய்வோம்!”. என்று முப்பது பொன் கொடுத்து குதிரைய மாற்றிக் கொண்டார்கள். அப்போது விவேகன், “ஐயா! பக்கத்து ஊரில் ஓரு பண்ணையார் இருக்கிறார் போகும் வழியில் இந்த கடிதத்தை அவரிடம் சேர்த்துவிட முடியுமா? ”என்று பணிவோடு கேட்டான்.

வியாபாரியும் அவ்வளவுதானே சேர்த்துவிடுகிறேன்! என்று குதிரையுடன் கிளம்பினார். விவேகன் தன் ஊருக்குச் சென்றான்.

  குதிரையுடன் பண்ணை வீட்டுக்கு வந்தார் வியாபாரி. “ என்ன ஐயா! விவேகன் குதிரையை திருப்பி கொடுத்து அனுப்பினாரா?” என்று அங்கிருந்த வேலையாட்கள் குதிரையை பிடித்து தொழுவத்தில் கட்டினார்கள்.

 “ஐயோ! இது என் குதிரை! நான் உங்கள் எஜமானரை பார்க்க வேண்டும்! ”என்று அலறினார் வியாபாரி.
 பணியாட்கள் வியாபாரியை பண்ணையார் முன் கொண்டு நிறுத்தினர். நடந்ததை விசாரித்தார் பண்ணையார். விவேகன் கொடுத்த கடிதத்தையும் வாங்கி வாசித்தார்.

   “பண்ணையார் ஐயா! உங்கள் அனுமதி பெற்று உங்கள் கண் முன்னே உங்களது குதிரையை எடுத்துச் சென்றேன். அதை ஐம்பது பொன்னுக்கு விற்று பணத்தையும் எடுத்துக் கொண்டேன். அதில் இருபது பொன்னுக்கு ஒரு கிழகுதிரையை வாங்கிவிட்டேன். வாங்கியவனிடமே குதிரையை கொடுத்து உங்களிடம் அனுப்பி விட்டேன். எப்படி என் சாமார்த்தியம்?” என்று கேட்டிருந்தான்.

 பண்ணையார் விவேகனின் சாமார்த்தியத்தை மனசுக்குள் பாராட்டிக் கொண்டார். விவேகனை கிழ குதிரையுடன் அழைத்துவரும்படி கட்டளையிட்டார். அந்த கிழ குதிரையை வியாபாரியிடம் தந்துவிடும்படி கூறிய அவர் வியாபாரியிடம் பெற்ற பொற்காசுகளையும் திருப்பித் தர சொன்னார். விவேகனை தன்னுடைய பணியாளராக சேர்த்து கொண்டு இனி திருடாமல் திருந்தி வாழ சொல்லி அறிவுரை கூறினார்.

விவேகனும் பண்ணையாரிடம் அதன் பின் உண்மையாக நடந்துகொண்டு உழைத்து பிழைத்து வந்தான்.

(செவிவழிக்கதை என் பாணியில் தந்தேன்)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. கதை இரசிக்கும்படி இருந்தது நண்பரே விவேகன் விவேகமானவன்தான்.

    ReplyDelete
  2. கதை அருமை.
    உண்மையான உழைப்பு விவேகனுக்கு உயர்வைத் தரும்.

    ReplyDelete
  3. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
  4. அருமையான சிறுவர் கதை பாராட்டுகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!