நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 4

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 4

 போகாதே!
      சுடுகாட்டு பக்கம் போகாதேடா!  ஏதாவது காத்து கருப்பு அடிச்சிரப்போவுது! எப்ப பாரு வெய்ய நேரத்துல அங்க சுத்தறியாமே? வேணாண்டா சொன்னா கேளு! தினம் தினம் அறிவுரை சொன்ன தாத்தா இப்போது மரணித்து சுடுகாட்டுக்கு போய்க் கொண்டிருந்தார்.

 நாற்காலி!
        வீட்டிற்கு புதிதாய் ரோஸ்வுட்டில் நாற்காலி செய்ய கார்பெண்டரை வரச்சொல்லியிருந்தேன். அதோ மூலையிலே கால் உடைஞ்சி தூக்கி போட்டிருக்கேனே அந்த மாதிரி நல்ல வேலைப்பாடா பண்ணனும் சரியா என்று உதாரணம் காட்ட கார்ப்பெண்டர் நாற்காலியை பார்த்தவர் ஐயா இதை ஏன் தூக்கி போட்டுட்டீங்க ஒரு கால்தானே உடைஞ்சிருக்கு சரி பண்ணிடலாம் என்றார்  அப்போதுதான் கவனித்தேன். அவரது ஒரு கால் செயற்கை என்பதை.

 விக்கெட்!
       இன்னும் ஒரே விக்கெட்!  ஆறே பந்துகள் மீதம் இருக்கின்றன! அவுட் ஆகாமல் 12 ரன்கள் எடுக்க வேண்டும். ஜெயித்துவிடலாம்..! கிரிக்கெட் ரசிகரான அவர் சீட் நுனியில் அமர்ந்து  பார்த்து கொண்டிருக்க பவுலர் வீசிய புல்டாஸ் சிக்சராக மாறியது. களத்தில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அடுத்து மூன்று பந்துகள் ரன்னில்லை! இரண்டு பந்தில் ஆறு ரன்கள் எல்லோரும் திக் திக்கென்றிருக்க அந்த பந்தை மீண்டும் சிக்சருக்கு தூக்கினான் பேட்ஸ்மேன்…   அப்பாடா! பெட்டிங்கில் ஜெயிச்சாச்சு! கடைசி வரை மேட்சை இழுத்து அடிக்கவுட்டு இன்னிக்கு செம கல்லா கட்டியாச்சு! என்று பெருமூச்சு விட்டார் அந்த புக்கி.

அரட்டை!
     நீ லட்சுமியோட பொண்ணு கல்யாணத்துக்கு கட்டிட்டு வந்த பட்டுபுடவை சூப்பர்டி! பெரிய பார்டர் மயில் பச்சைன்னு அசத்திருச்சு!
நீ மட்டும் என்னவாம் பெரிய அட்டிகை ஒன்னை போட்டு எல்லாரையும் திரும்பி பாக்க வைச்சிட்ட!
அடுத்தவாரம் நம்ம ஹேமா கிரஹப் பிரவேசம் போறாளாமே!
  ஆமாம்டி! நல்ல பெரிய பங்களாவா கட்டி வைச்சிருக்கா! புருஷன் காரன் தாசில்தார் ஆபீஸ்ல வேலை செய்யறார் இல்லே… அவளுக்கென்ன கொறைச்சல் இதை விட பெரிசா கூட கட்டுவா!
சரிடி! குட்நைட்!, ஓக்கே குட்நைட்!
  வாட்சப்பில் இரு தோழிகள் சாட் செய்துகொண்டிருந்தார்கள்.

 வித்தியாசம்!

   எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன்! ரெண்டு பேரையும் வித்தியாசம் பாக்காமத்தான் வளர்க்கிறேன்! அவங்கவங்க என்ன விரும்புனாங்களோ அதை படிக்க வைச்சேன். பொண்ணாச்சேன்னு  கட்டுதிட்டம் பண்ணவே இல்லை! என்று சொன்னவர் 100 பவுன் போட்டு பொண்ணை கட்டிக் கொடுத்ததையும் அதே 100 பவுன் வரதட்சணை வாங்கி பையனுக்கு கல்யாணம் செய்ததையும் கடைசிவரை சொல்லவே இல்லை.

வியாதி!
   டாக்டர்! எனக்கு வித்தியாசமான வியாதி வந்திருக்கு! அப்படி என்ன வியாதி? யாரை பார்த்தாலும் இல்லை எதை பார்த்தாலும் முன்கூட்டியே பார்த்த மாதிரி தோணுது. புதுசா ஒரு சினிமா பார்த்தால் அதை எப்பவோ பார்த்த மாதிரி தோணுது. முத முதலா ஒரு நபரை பார்த்தா கூட அவரை முன்னேயே சந்திச்சா மாதிரி தோணுது..  உங்க மூளையில அதீதமான நினைவுகள் சேமிக்க படுதுன்னு நினைக்கறேன். வெல்! இதை கொஞ்சம் கொஞ்சமா குணப்படுத்திடலாம்! நான் சொல்ற டேப்ளட்ஸ் யூஸ் பண்ணுங்க! இன்னும் ஒரு வாரம் கழிச்சு வந்து பாருங்க!... “ இதையேத் தானே போனவாரமும் சொன்னீங்க டாக்டர்?”

கிசுகிசு!

   அந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே இயக்குனருக்கும் அந்த முன்னனி நடிகைக்கும் காதல் என்று கிசு கிசு கசிந்தது. இரு தரப்பும் ஒன்றும் சொல்லவில்லை! அப்படியே பரவட்டும் இது நம்ம படத்துக்கு நல்ல புரமோட் பண்ணும். இன்னும் ரெண்டு விஷயத்தை கூட சேர்த்து எழுதட்டும்… இதனால நம்ம படம் பிச்சுகிட்டு ஓடும்.. தயாரிப்பாளரும் டைரக்டரும் இப்படி நினைத்து கொண்டிருக்க ரசிகர்கள் வேறு மாதிரி நினைத்தார்கள். இனிமே அந்த நடிகை நம்ம ஆளு இல்லே! டைரக்டரோட ஆளூ? எதுக்கு வீணா படத்தை பார்க்கணும்! வேற ஆளை பார்ப்போம்!  படம் ப்ளாப் ஆகிப் போனது.

பத்து செகண்ட் கதை!
    அந்த எழுத்தாளர் பத்து செகண்டில் படிக்க ஓர் கதையை டைப் செய்து கொண்டிருந்தார். டைப் செய்தார் அழித்தார்… மீண்டும் டைப் செய்தார்… அழித்தார்… திருத்தினார்… டைப் செய்தார்… நறுக்கென்று நாலே வரியில் அமைய வேண்டுமே? சிந்தித்து கொண்டே இருந்தார். மீண்டும் அழித்து மீண்டும் டைப்பினார். இறுதியில் அவர் நினைத்த வடிவம் வந்த போது.. பல ஆயிரம் செகண்ட் கடந்து போயிருந்தது.

சேறு!
   நூறு கோடி ரூபாய் ஊழல்! சிரித்துக் கொண்டே கைதானதை நாளிதழ் பேனர்கள் படமெடுத்து தொங்க விட்டுக் கொண்டிருந்தன. வெக்கமில்லாம சிரிச்சுக்கிட்டிருக்கான் பார்!     பொறுமிக் கொண்டிருக்கும் போதே சாலையில் தேங்கியிருந்த சேற்றை வாரி அந்த பேனர் மீது அதுவும் சரியாக மந்திரி உருவத்தின் மீது அடித்து சென்றது லாரி. உன்னால முடியறது கூட எங்களால முடியாது என்று நொந்து கொண்டான் ஏழை பொது ஜனம்.

புரட்சி!
 பசுமைப் புரட்சியை பற்றி பாடத்தில் படித்து கொண்டிருந்த குழந்தையின் வீடு விவசாய நிலத்தை விற்று வந்த வருமானத்தை கொண்டு கட்டப்பட்டு இருந்ததை பாவம் அந்த குழந்தை அறிய வில்லை!

காதல் கல்யாணம்!
      கணேஷிம்- கவிதாவும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பால் ஓடிப்போக கூட நின்று உதவி ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணி வைத்த நண்பர்கள் உதவி ஏதும் அவர்கள் கருத்து வேறுபாடால் சண்டை போட்டு பிரிந்து விவாகரத்து செய்து கொண்டபோது  தேவைப்படவில்லை.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. நொடிக்கதைகள் அனைத்தும் ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. நீங்கள் ஒரு கற்பனை வங்கி!

    ReplyDelete
  3. அனைத்தும் ஸூப்பர் நண்பரே தொடருங்கள்...

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை... உங்கள் சிந்தனைகளுக்கு பாராட்டுகள்...

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா

    அருமையாக உள்ளது இரசித்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அன்புள்ள அய்யா,

    நொடிக்கதைகள் அனைத்தும் நீண்ட நேரம் சிந்தனையைத் தூண்டும் பெரிய உண்மைகளைக் கூறும் உன்னதக் கதைகள்.

    நன்றி.

    ReplyDelete
  7. அருமை
    அருமை
    ரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  8. ஒரு பாராவிலே...ஒரு கதை என்று தலைப்பு வைத்திருக்கலாமோ... அருமை நண்பரே!

    ReplyDelete
  9. நொடிக்கதை எல்லாம் அருமை ரசித்தேன்.

    ReplyDelete
  10. \\இறுதியில் அவர் நினைத்த வடிவம் வந்த போது.. பல ஆயிரம் செகண்ட் கடந்து போயிருந்தது.\\ அந்நாளும் படிக்கும் பலாயிரம் பேரோட நேரம் மிச்சமாகப் போகிறதே!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!