நண்பனா?... டிரைவரா?

நண்பனா?... டிரைவரா?

அலுவலகத்தில் இருந்து அசதியாக திரும்பி வந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த போது என்னருகே அந்த புத்தம் புதிய மாருதி ஸ்விப்ட் வந்து நின்றது. கண்ணாடியை இறக்கி, டேய்! ரமேஷ்! வாடா! வந்து ஏறிக்கோ!  என்றான் கோபால்.

  கோபால் சொந்தமாக ஓர் நிறுவனத்தை நடத்தி வருகிறான் என்று தெரியும். பால்ய நட்பு இன்று வரை தொடர்கிறது. ஆனால் சந்தித்து சிலமாதங்கள் ஆகிவிட்டது. இப்போதுதான் புதிதாக கார் வாங்கி இருக்கிறான் போலும். என்னை எதேச்சையாக இங்கு சந்தித்து லிப்ட் கொடுக்கிறான். இத்தனைக்கும் அவன் வீடு என் வசிப்பிடம் அருகில் இல்லை. என்னை டிராப் செய்துவிட்டு திரும்பிப் போகவேண்டும்.

   இத்தனை இருந்தும் கூப்பிடுகிறான் என்றால் பெரிய மனசு அவனுக்கு இருக்கவேண்டும். காரின் பின் கதவை திறந்து கொண்டு பின் சீட்டில் அமரப்போனேன். அங்கே இன்னொரு நண்பரும் இருந்தார். அவர் நகர்ந்து அமர  நீ வேண்டுமானால் முன்னே வந்துவிடேன்! என்றான் கோபால்.

   பரவாயில்லை கோபால்! நாங்க இங்கேயே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்! நிறைய தாராளமா இடம் இருக்கு! சார் கூட பேசிட்டு வந்தா எனக்கும் பொழுது போகும்! என்றார் உள்ளே இருந்த நண்பர் சிவா.

   நானும் கோபாலும் கல்லூரி கால நண்பர்கள்! சிவா கோபால் வீட்டருகே வசிப்பவர். அங்கு போகவருகையில் பழக்கம். கார் புறப்பட்டதும் நாங்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். சென்னை மாநகர நெரிசலில் காரில் பயணிப்பது அவ்வளவு ஒன்றும் சுகமாக இல்லைதான். மெதுவாக ஊர்ந்த கார் நெரிசல்களில் சிக்கித்திணறி விடுபட்டு புறநகர் பகுதி வந்ததும் விரைவு எடுத்தது.

   ஏறக்குறைய ஒரு மணிநேரம் கடந்து இருக்கும். நானும் சிவாவும் பேசியபடியே வந்தோம். இடையில் கோபால் பேசும் போது கூட ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டு சிவாவோடு பேச்சை தொடர்ந்தேன். கோபாலின் முகம் வாடிப்போய் இறுக்கமாக இருந்தது.

   என்னுடைய இல்லம் அருகே வண்டியை நிறுத்தினான் கோபால். வா! கோபால்! ஒரு கப் காபி சாப்பிட்டு போகலாம்! உனக்கும் நெரிசலில் வண்டி செலுத்தி கொஞ்சம் டயர்டாக இருக்கும்! என்று அழைத்தேன்.

   கோபால் கோபமாக என்னை முறைத்தான். ரமேஷ்! என்னை இப்படி இன்ஸல்ட் பண்ணுவேண்ணு எதிர்பார்க்கலை! நீங்க ரெண்டுபேரும் பின்  சீட்டுல அமர்ந்திட்டு என்னை டிரைவர் ஆக்கீட்டீங்க இல்லே! நண்பனா என்னோட முன் சீட்டுல  உட்கார்ந்து பேசி வந்திருக்கலாம் இல்லையா? இப்போ டிரைவருக்கு எதுக்குப்பா உன் காபி? என்றான்.

   அவன் முகம் வியர்த்துப் போய் கோபத்தில் சிவப்பாய் தகித்தது. சிவா ஒன்றும் பதில் பேசமுடியாமல் தவிக்க,  நான் கையமர்த்தினேன்.

   கோபால்! உன்னோட நன்மைக்குத்தான் நான் முன் சீட்டுல உக்காரலை! சிட்டியிலே ஹெவி டிராபிக் அவர்ஸ்ல நாம வந்தோம். நான் உன் கூட முன் சீட்டுல உட்கார்ந்து பேசிக்கிட்டு வந்தா உன்னோட கவனம் சிதறும். பாதையில் கவனம் இல்லாம போச்சுன்னா விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு. புது கார்! புதுசா டிரைவிங் பழகி இருக்கே!  நான் பேச்சுக் கொடுத்து உன்னோட கவனம் சிதறி விபத்து எதுவும் நடந்துட கூடாதுன்னுதான் பின் சீட்டுல உட்கார்ந்தேன்! நீயா பேச்சு கொடுத்த போதும் அளவா பதில் சொல்லி கட் பண்ணிட்டேன். நான் எப்பவுமே உன்னோட நன்மைக்குக்குதான் யோசிப்பேன் நீதான் தப்பா புரிஞ்சிக்கிட்டே !

   கோபால் முகத்தில் ஓர் தெளிவு தெரிந்தது. சிவா நிம்மதி பெருமூச்சு விட்டார். சாரிடா! ரமேஷ்! அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டேன்!. என்றார் கோபால்.

    பரவாயில்லே! இப்ப ஒரு கப் காபி சாப்பிடலாம் இல்லையா?
தாரளமா! என்றபடி புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் கோபால்.

கதைக்கான கரு: சென்னைப்பித்தன் ஐயா அவர்கள். ஐயாவுக்கு மிக்க நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை ரசதித்தேன் நண்பரே...

    ReplyDelete
  2. கோபாலின் மனம் புரிகிறது..நல்ல கதை

    ReplyDelete
  3. கதை அருமை சகோ!
    வாழ்த்துக்கள்!

    என் தனிப்பட்ட கருத்து ஒன்றைச் சொல்கிறேன் சகோ!..

    //புது கார்! புதுசா டிரைவிங் பழகி இருக்கே! நான் பேச்சுக் கொடுத்து உன்னோட கவனம் சிதறி விபத்து எதுவும் நடந்துட கூடாதுன்னுதான் பின் சீட்டுல உட்கார்ந்தேன்!//

    புதுக் கார் சரி அவரும் புதுசா டிரைவிங் பழகியவர் என்னும்போது அவர் பக்கத்தில இருந்து பேசினாலும் பின்னால் இருந்து உங்கள் நண்பருடன் பேசினாலும் அவரின் கவனம் கதைச் சுவாரஸ்யத்தில் திரும்பிவிடும்.
    இதனாலும் ஆபத்தினைச் சந்திக்க வாய்ப்புண்டு அல்லவா!

    ஆகவே வண்டி செலுத்துபவர் அப்போதுதான் சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றவராயின் மிக மிகக் கவனமாக இருத்தல் எப்பவும் நல்லதே!

    இது இங்கே வெளிநாட்டில் புதிதாக லைசென்ஸ் பெற்றவர்கள்
    தமக்கு இவைகூட கவனச் சிதறலைத் தருமெனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுவும் யதார்த்தமே!
    என் கருத்து யாரையும் நோகடிக்கும் நோகமற்றது.
    நன்றி!

    ReplyDelete
  4. நட்பின் வெளிப்பாடும் அதே சமயம் முன்னெச்சரிக்கையும் மிக அருமையாக வெளிப்பட்டுள்ளது. கார் வைத்திருப்போருக்கும், இவ்வாறாகப் பயணிப்போருக்கும் பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  5. பாடம் சொல்லும் அருமையான கதை

    ReplyDelete
  6. வணக்கம் தளீர்,
    தங்கள் பங்கு அருமை, நல்ல நட்பு.
    வாழ்த்துக்கள், நன்றி.

    ReplyDelete
  7. கார் எனும்போது முன்னால் அமர்ந்தாலென்ன பின்னால் அமர்ந்தாலென்ன? கண்ணாடிகள் மூடியிருக்கையில் (பொதுவாக ஏசி போட்டுக்கொண்டுதான் எல்லாரும் பயணிக்கிறார்கள் என்பதால்) யார் பேசினாலும் சப்தம் அதிகமாகத்தான் கேட்கும்....

    ReplyDelete
  8. நல்ல கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  9. செய்தி சொல்லும் கதை நன்று
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சென்னை பித்தன் ஐயா
    அவர்களின் கதைக்கு கதை
    அருமை நண்பரே
    நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!