சாதனைபெண் டுட்டி சந்த்! உவேசா சிலேடை! கதம்பசோறு!

கதம்ப சோறு!

சுவாதி கொலை!

        நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் அதிகாலை வேளையில் பலர் முன்னிலையில் துடிதுடிக்க கொல்லப்பட்டிருக்கிறார் சுவாதி. ரயில்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறம் இருக்க ஒருவர் கூட இதை தடுக்கவோ கொலையாளியை விரட்டி பிடிக்கவோ முனையவில்லை என்பது தமிழ்நாட்டில் மனிதாபிமானம் செத்துப்போனதை காட்டுகிறது. இதற்கிடையில் பேஸ்புக்கில் சிலர் இறந்த பெண்ணிண் ஜாதியை காரணம் காட்டி அவர்கள் திமிர் பிடித்தவர்கள் வருந்த வேண்டாம் ஜாதி மோதலை உருவாக்கி வருகின்றனர். ஒய். ஜி மகேந்திராவும் தன் பங்கிற்கு முஸ்லிம் நபர்தான் கொலை செய்தது என்று ஒரு பெயரைச் சொல்லி பின்னர் நான் சொல்லவில்லை என்று பல்டி அடிக்கின்றார். பட்டப்பகலில் ஒரு கொலை நடந்திருக்கிறது. பலர் கூடும் இடத்தில் நடந்திருக்கிறது. மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதை பேசாமல் இப்படி ஜாதிய நோக்கோடு இந்த கொலை பேசப்படுவது ஆரோக்கியமானது இல்லை!

 கெஜ்ரிவால்- மோடி மோதல்!

     டெல்லியில் ஆட்சியை பிடித்தாலும் அர்விந்த் கெஜ்ரிவால் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையில்தான் இருக்கிறார். இந்திய தலைநகர் என்பதால் சிறப்பு அந்தஸ்தில் இருக்கும் டெல்லி மாநிலத்தை நிர்வகிப்பதில் மாநிலத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது. துணை முதல்வர் உட்பட பல எம்.எல்.ஏக்களை கைது செய்து விடுவித்து உள்ளனர். இந்த மோதல் தொடருமாயின் மாநிலத்திற்கு அது நன்மையளிக்காது. அதே சமயம் தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை இப்படி மோதல் போக்குடன் நடந்து கொள்வது மத்திய அரசுக்கு உகந்தது இல்லை.

ஐரோப்பன் யூனியனில் இருந்து பிரிட்டன் விலகல்!
   ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறியது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது பாதிக்கும் மெற்பட்டோர் இந்த விலகல் முடிவை ஆதரித்ததால் பிரிட்டன் பிரதமர் கேமரூன் பதவி விலக இருக்கிறார். அவர் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்பினார். தெற்காசியாவில் பொது நாணயமாக ரூபாயை அறிவிக்க வேண்டும் ஒரு கோரிக்கை இருந்தது. யூரோவின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்த கோரிக்கை வலுவிழந்து உள்ளது. பிரிட்டன் விலகலால் பங்கு சந்தைகளில் 140 லட்சம் கோடிகள் இழப்பை சந்தித்தது கவனித்தக்க ஒன்று.

சாதனைப் பெண் டுட்டி சந்த்!

   ஒலிம்பிக் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா தகுதிபெற்றுள்ளது. இந்த சாதனையை படைத்த பெருமைக்குரியவர் டுட்டி சந்த். கஜகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச தடகளப்போட்டியில் நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.32 விநாடிகளில் எட்டினால் ஒலிம்பிக் வாய்ப்பை பெறலாம் என்ற நிலையில் கலந்துகொண்ட டுட்டிசந்த் நூறு மீட்டர் தூரத்தை 11.30 விநாடிகளில் கடந்து முடித்தார்.  இதன் மூலம் பி.டி உஷாவிற்கு பிறகு ஒலிம்பிக் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் முதல் வீராங்கணை என்ற பெருமையை பெற்றார் டுட்டிசந்த். இந்த போட்டியில் பைனலில் 11.24 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும் வென்ற டுட்டி சந்த் தனது சொந்த தேசிய சாதனையையும் தகர்த்தார்.

விஷால் வரலட்சுமி காதலா?

     நடிகர் சங்கத் தேர்தலில் சரத் குமாரை எதிர்த்து போட்டியிட்டாலும் அவரது மகல் வரலஷ்மியோடு காதலில் மோதல் இல்லாமல் உள்ளாராம் விஷால். விழாக்களில் இணைந்து காணப்படும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக்கொள்ளப்பட்டு வரும் நிலையில் டிவிட்டரில் இருவரும் இணைந்திருப்பது போன்ற படம் வெளியாக ரசிகர்கள் கல்யாணம் ஆகிவிட்டதா? என்றும் காதலிக்கிறீர்களா? என்று சரமாரியாக கேள்விக்கணைகள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விஷால் அந்த படமே உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும் என்று மழுப்பலாக பதில் தெரிவித்தாலும் விரைவில் இருவரும் கைகோர்ப்பார்கள் என்று அவர்களது ரசிகர்கள் நம்புகின்றனர்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
   மழைக்காலத்தில் ஜன்னல் கதவுகள் சட்டத்தோடு ஒட்டிக் கொண்டு திறக்க சிரமமாக இருக்கும் சிறிது கோல மாவை உப்புத்தூளுடன் ஜன்னல் விளிம்பில் தூவினால் திறக்க இலேசாக இருக்கும்.

மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் பாலில் மஞ்சள்தூள், சுக்குத்தூள் சிறிதளவு போட்டு குடித்துவர மூட்டுவலி குணமாகும்.

மாதவிடாய் வயிற்றுவலி பிரச்சனை உள்ளவர்கள் மாதவிடாய் ஆவதற்கு ஒருவாரம் முன்பிருந்து தினமும் காலையில் வெறும்வயிற்றில் வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து விழுங்கினால் வயிற்றுவலி பிரச்சனை வராது,

சிங்கில் பாத்திரங்களை தேய்க்கும் போது நாளடைவில் அந்த இடம் சொரசொரப்பாகிவிடும். இதை தவிர்க்க அங்கு ரப்பர் ஷீட் போட்டு அதன் மீது பாத்திரங்களை வைத்து துலக்கினால் சத்தமும் வராது. இடமும் தேயாது.

சப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும் போது மஞ்சள் வாழைப்பழத்தை சேர்த்து பிசையவும். சப்பாத்தி மிருதுவாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.

கிச்சன் கார்னர்!
  ரெடி தோசை!
    கோதுமை 2 கப், புழுங்கல் அரிசி 1 கப், பச்சரிசி 1 கப்  உ.பருப்பு ¼ கப் வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன். இவற்றை நன்கு சுத்தம் செய்து மாவு மிஷினில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
   தோசை அவசரமாக தேவைப்படும் நேரத்தில் ஒரு மணி நேரம் முன்பாக இந்த பொடியை தேவையான அளவு நீரில் கரைத்து வைத்து விட வேண்டும். பின்னர் மாவுடன்  புளித்த மோர், உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து தோசை வார்த்து எடுக்கவும்.
    குறிப்பு உதவியவர்: கே.ஆர் மோகனா, ஹரியானா ( பழைய மங்கையர்மலரில் இருந்து)

மெஸ்ஸி ராஜினாமா!

    கோபா கோப்பை கால்பந்து தொடர் இறுதி ஆட்டத்தில் சிலியிடம் தோற்று வெளியேறியது அர்ஜெண்டினா. அந்த சோகம் தீர்வதற்குள் தனது கேப்டன் பதவியை துறந்தார் மெஸ்ஸி. முக்கியமான நேரத்தில் தனக்கு வந்த ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பையும் வீணாக்கிய  அவர்  மூன்று முறை முக்கிய தொடர்களில் அர்ஜெண்டினா அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றும் ஒருமுறை கூட  வெற்றி பெற வைக்கத் தவறினார். இந்த சோகத்தில் தனது ராஜினாமாவை அறிவித்தார் மெஸ்ஸி.

படித்து ரசித்தது:

 ஒரு முறை சேதுபதி மன்னரை அவரது மாளிகையில் சந்திக்கச் சென்றார் உ.வே. சாமிநாதையர். அப்போது மன்னர் வெளியில் சென்றிருந்தார். அங்கு மன்னரை சந்திக்க வருவோர் அமர்வதற்கு ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. அதில் அமர்ந்து காத்திருந்தார் உ.வே. சா.
   தனக்காக தமிழறிஞர் காத்திருப்பதை அறிந்து அவசர அவசரமாக அவைக்கு வந்த சேதுபதி மன்னர்  ஐயரை வணங்கினார். பின்னர் தன்னுடைய ஆசனத்தில் அமராமல் ஐயர் அமர்ந்திருந்த ஆசனத்தின் பக்கத்தில் அமர்ந்தார். மன்னர் தன்னுடன் அமர்ந்தது கண்டு மகிழ்ந்த உ.வே.சா  சமஸ்தான அதிபதி அவர்களே! எனக்கு சம ஸ்தானம் தந்தீர்கள் மகிழ்ச்சி! என்றார். மன்னரும் புரிந்துகொண்டு சிரித்தார்.  பின்னர் நெடுநேரம் அளவளாவினர். மன்னர் தன் கைக்கெடிகாரத்தை பார்த்தார். குறிப்பறிந்த ஐயர் அவரிடம் ‘போது மானது. எனவே போதுமானது.  போது( பொழுது) என்ற வார்த்தை சிலேடையை மன்னர் மட்டுமல்ல சபையோரும் மிகவும் ரசித்தனர்.
(பழைய வாரமலர் திண்ணை பகுதியில் படித்தது)

 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னுட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சுவாதி கொலையை அரசியலாக்குவது ஜாதிப்பிரச்சினையாக்குவது வேதனையான விடயம்

    ReplyDelete
  2. நண்பர் கில்லர்ஜியை வழிமொழிகின்றேன்

    ReplyDelete
  3. கொலையும் அரசியல் இங்கே..... வேதனை....

    ReplyDelete
  4. டுட்டி சந்துக்குப் பாராட்டுகள். டிப்ஸ் சூப்பர்.

    ReplyDelete
  5. சமீபத்தில் வந்த எல்லா செய்திகளையும் அடக்கி ஒரு பதிவு போட்டிருக்கிறீர்கள்.
    சென்னை பாதுகாப்பில்லாத நகரமாக மாறிவருகிறது என்பது வருத்தமான விஷயம். கொலையாளி சுதந்திரமாகத் திரிவது எந்தவிதத்திலும் சரியல்ல.
    டுட்டி சந்த் போல இன்னும் நிறைய விளையாட்டு வீரர்கள் வரவேண்டும்.
    விஷால் திருமணச் செய்தி சுவை.
    கோதுமை மாவில் எதையாவது போட்டுக் கலந்தால் அடுத்தநாள் இருக்காது. சப்பாத்தி கெட்டுவிடும்.
    என் சின்னப்பேரன் மெஸ்ஸியின் ராஜினாமாவைக் கேட்டு ரொம்பவும் வருத்தப்பட்டான்.
    உ.வெ.சா. வின் சிலேடை மிகவும் ரசித்தேன்.
    நல்ல கலவை உங்கள் கதம்பம். பாராட்டுகள்!

    ReplyDelete
  6. கொலை பற்றி நிறைய சொல்லலாம்...அரசியல்தான் எல்லாமே

    டுட்டிசந்துக்குப் பாராட்டுகள். டிப்ஸ் அருமை...

    படித்ததில் பிடித்தது அருமை...நல்ல சிலேடை ...ரசித்தோம்.

    கீதா:மேற் சொன்னக் கருத்துடன் அந்தத் தோசை மாவு நான் எங்கள் வீட்டில் ட்ரையல் அண்ட் எரர் பார்த்து இதே அளவில் ஆனால் கொஞ்சம் ரவையும் சேர்த்து பொடித்து தாளித்தும் கலந்து கணவருக்கும், மகனுக்கும் கொடுத்து விடுவதுண்டு அவர்கள் அங்கு புளித்த தயிரில் கலந்து தோசை செய்து கொள்வார்கள். இது போன்று சாதா தோசைக்கும் செய்து கொடுப்பதுண்டு. மோர்க்குழம்பு பொடியும் செய்து கொடுத்திருக்கிறேன். அதைப் பேஸ்ட்டாகவும் செய்து கொடுத்துள்ளேன். தயிர் கலந்து லைட்டாகச் சூடு செய்து கொண்டால் போதும். சுவையும் நன்றாகவே இருக்கிறது.

    நல்ல கதம்பம் சுரேஷ்

    ReplyDelete
  7. இறந்தவருக்காக அனுதாப படுவதை விடுத்து, தாறுமாறாக பேசுவது அநாகரிகத்தின் உச்சம்

    ReplyDelete
  8. தில்லி ஒரு மாநிலம் அல்ல. யூனியன் பிரதேசம். அதிலும் நாட்டின் தலைநகர். அதற்கென்று சட்ட, திட்டங்கள் தனியானது. இதுவரை இருந்த முதல் மந்திரிகள் அனைவரும் அந்தச் சட்ட, திட்டங்களுக்குக் கட்டுப்பட்டே ஆட்சி செய்தனர். கெஜ்ரிவால் இதை மனதில் வைத்துக் கொண்டால் போதும்!

    ReplyDelete
  9. கெஜ்ரிவாலுக்குத் தூக்கம் வரவில்லை என்றாலும் மோதி தான் காரணம் என்பார்! எதற்கெடுத்தாலும் பிரதமரைக்குறை கூறித் தூற்றுவதைத் தன் முக்கியக் கடமையாக வைத்திருக்கிறார். அதை நிறுத்திவிட்டு நகரின் முன்னேற்றத்தைக் கவனித்தாலே போதும்!

    ReplyDelete
  10. கதம்ப மாலை நன்று

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!